சுந்தரர் (சங்கிலியாரின் தெய்வத்தன்மை குறித்த அரிதான பெரியபுராணக் குறிப்புகள்):

(1)
சங்கிலியார், மானிட வரம்புக்கு உட்படாத திருமேனிப் பொலிவுடனும், அதீத தெய்வத்தன்மை பொருந்திய குணநலன்களுடனும் இனிது வளர்ந்து மங்கைப் பருவமும் எய்துகின்றார். ஒரு சமயம் அவர்தம் பெற்றோர் 'இத்தகு மேம்பட்ட நிலையில் நம் மகள் விளங்குகின்றனளே, விரைவில் இவளுக்கு மணமுடிப்போம்' என்று உரையாடுவதைச் சங்கிலியார் கேட்கின்றார்.

(2)
'ஆ! இத்திருமணப் பேச்சு பொருந்தாத ஒன்றன்றோ! 'எந்தை சிவபெருமானின் அடித்தொண்டர் ஒருவர்க்கே அடியவள் உரிமையானவள்' என்று ஆழ்மனதில் ஐயமின்றி உணர்கின்றேன். இந்நிலையில் இவர்களின் இச்செயலால் யாது நேருமோ - அறியேன்' என்று அயர்வுற்று உணர்விழந்து நிலமிசை வீழ்கின்றார்,

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம் - திருப்பாடல் 211)
தாயரோடும் தந்தையார் பேசக் கேட்ட சங்கிலியார்
ஏயும் மாற்றம் அன்றிது; எம்பெருமான் ஈசன் திருவருளே
மேய ஒருவர்க்குரிய(து) யான் வேறென் விளையும் என வெருவுற்று
ஆய உணர்வு மயங்கிமிக அயர்ந்தே அவனிமிசை விழுந்தார்

(3)
புதல்வியின் மன நிலையறியும் பெற்றோர் யாது செய்வதெனத் திகைக்கின்றனர். இந்நிலையில் இவர்களின் குடிப்பிறப்போடு ஒத்திருந்த இளைஞன் ஒருவன், தன்னுடைய சார்பில் சிலரைச் சங்கிலியாரின் இல்லத்தினருடன் மணம்பேசி வருமாறு அனுப்புவிக்கின்றான். அவர்கள் சென்று மீளுமுன்னரே அந்த இளைஞனுக்கு மரணம் சம்பவிக்கின்றது. 

(4)
அச்செய்தியினைக் கேள்வியுறும் சங்கிலியாரின் பெற்றோர், 'நம் மகளின் தெய்வத் தன்மையினை அறிந்தோர் இனியும் இவளைப் பற்றிப் பிறிதொன்றினைப் பேசத் துணிய மாட்டார். ஆதலின் சிவபரம்பொருளின் திருவடிப் பெருமையல்லால் மற்றொன்றினைப் பேசாத இவளின் எண்ணப்படி விட்டு விடுவதே செய்யத் தக்கது' என்று தெளிகின்றனர். சுற்றத்தினரும் உடன்வர, (தங்கள் ஊரான 'ஞாயிறு; எனும் தலத்திலிருந்து 20 கி.மீ தொலைவிலுள்ள) ஒற்றியூருக்குப் புதல்வியை அழைத்துச் செல்கின்றனர். 

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம் - திருப்பாடல் 217)
அணங்கேயாகும் இவள்செய்கை அறிந்தோர் பேச அஞ்சுவரால்
வணங்கும் ஈசர் திறமன்றி வார்த்தை அறியாள் மற்றொன்றும்
குணங்களில் அவையாம்; இனிஇவள் தான் குறித்தபடியே ஒற்றிநகர்ப்
பணங்கொள் அரவச் சடையார் தம்பால் கொண்டணைவோம் எனப்பகர்வார்

(5)
ஒற்றியூர் ஆலயத்தில் படம்பக்கப் பரம்பொருளைப் பணிந்து, ஆலயத்திற்கருகிலேயே கன்னி மாடமொன்று செய்வித்து, அதற்குத் தக்கதான சூழலையும் செல்வத்தையும் அமைத்துப் பின்னர் சங்கிலியாரின் திருவடியை வணங்குகின்றார் ஞாயிறு கிழார்,

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம் - திருப்பாடல் 220)
சென்னி வளர்வெண் பிறையணிந்த சிவனார் கோயிலுள் புகுந்து
துன்னும் சுற்றத்தொடும் பணிந்து தொல்லைப் பதியோர் இசைவினால்
கன்னிமாட மருங்கமைத்துக் கடிசேர் முறைமைக் காப்பியற்றி
மன்னும் செல்வம் தகவகுத்துத் தந்தையார் வந்தடி வணங்கி

(குறிப்பு: 'மகளேயாயினும் இவள் நம்பொருட்டு தோன்றியவள் அல்லள், தெய்வ நாடமொன்றிற்காக மண்மிசை அவதரித்துள்ள நங்கையிவள்' எனும் தெளிவான புரிதலால், 'சிவனடியவள்' எனும் கோணத்தில் சிவஞானச் செல்வியாரான சங்கிலியாரின் திருவடி தொழுகின்றார்) 

(6)
'அம்மையே! நாங்கள் உனக்கு பணி செய்திருக்க, இக்கன்னி மாடத்தில் இனிது உறைந்து, ஒற்றியூருறைப் பரம்பொருளுக்குத் தொண்டு புரிந்து வருவீர்' என்று சுற்றத்தினருடன் மீண்டுமொரு முறை சங்கிலியாரை வணங்குகின்றார். பின்னர் மகளாரின் பிரிவினைத் தாங்கவொண்ணாதவராய்க் கண்களில் நீர் அருவியாய்ப் பொழிய, அவ்விடத்தினின்றும் நீங்கிச் செல்கின்றார், 

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம் - திருப்பாடல் 221)
யாங்கள் உமக்குப் பணிசெய்ய ஈசற்கேற்ற பணிவிரும்பி
ஓங்கு கன்னி மாடத்தில் உறைகினறீர் என்றுரைக்கின்றார்
தாங்கற்கரிய கண்கள்நீர்த் தாரை ஒழுகத் தரியாதே
ஏங்கு சுற்றத்தொடும் இறைஞ்சிப் போனார் எயில்சூழ் தம்பதியில்

No comments:

Post a Comment