சுந்தரர் (திருக்கயிலைக்கு ஒரு அற்புத அழைப்பு):

சுந்தரர், திருஅஞ்சைக்களத் திருக்கோயிலில், 'தலைக்குத் தலைமாலை' எனும் திருப்பதிகத்தினால் சிவமூர்த்தியைப் போற்றி செய்து, தம்முடைய அவதாரத்தினை நிறைவுறச் செய்தருளுமாறு விண்ணப்பிக்கின்றார். 

திருக்கயிலையில் உமையம்மையோடு வீற்றிருந்த முக்கண் முதல்வர் திருவுள்ளம் கனிந்து, பிரமன் உள்ளிட்ட தேவர்களிடம், 'நம் பால் ஒருமையுற்ற சிந்தையுடைய நம்பியாரூரனை வெள்ளை யானையில் ஏற்றுவித்து உடன் இங்கு அழைத்து வருவீர்' என்று கட்டளையிட்டு அருள் புரிகின்றார். 

(வெள்ளானைச் சருக்கம் - திருப்பாடல் 31):
மன்றலம்தரு மிடைந்த பூங்கயிலையின் மலை வல்லியுடன்கூட
வென்றி வெள்விடைப் பாகர்தாம் வீற்றிருந்தருளிய பொழுதின்கண்
ஒன்று சிந்தைநம் ஊரனை உம்பர் வெள்ளானையில் உடன்ஏற்றிச்
சென்று கொண்டிங்கு வாருமென்று அயன்முதல் தேவர்கட்கருள் செய்தார்

('மேற்குறித்துள்ள திருப்பாடலில் இறைவர் அருளிச் செய்யும் வெள்ளை யானை, ஈராயிரம் தந்தமுடைய 'அயிராவணம்' எனும் திருநாமம் கொண்டது, அம்மையப்பரும்; விநாயக மூர்த்தியும்; குமாரக் கடவுளும் மட்டுமே எழுந்தருளிச் செல்லும் அளவிலாப் பெருமை பொருந்தியது இக்களிறு, தேவேந்திரனுடைய ஐராவதத்தினின்றும் வேறுபட்ட நிலையில் விளங்குவது' என்று தெளிவுறுத்துவார் நம் வாரியார் சுவாமிகள்). 

மேற்குறித்துள்ள திருப்பாடலில் "அயன்முதல் தேவர்கட்கருள் செய்தார்" என்று நான்முகக் கடவுள் மற்றும் தேவர்களுக்கு ஆணையிட்ட நிகழ்வினைக் குறித்துள்ள நம் சேக்கிழார் பெருமான், பின்வரும் அதற்கடுத்த திருப்பாடலில், பாற்கடல் வாசரான ஸ்ரீமகாவிஷ்ணுவும் உடன் சென்ற அற்புதக் குறிப்பினை, 'வான நாடர்கள் அரிஅயன் முதலினோர் வணங்கிமுன் விடைகொண்டு' எனும் முதல் வரியில் பதிவு செய்கின்றார். மும்மூர்த்திகளில் இருவரும்; தேவேந்திரனும்; எண்ணிறந்த தேவர்களும், சுந்தரரை எதிர்கொண்டழைக்க அயிராவணத்துடன் திருஅஞ்சைக்களத்தினைச் சென்றடைகின்றனர். நிலத்தில் தத்தமது பாதங்கள் பொருந்துமாறு திருக்கோயிலை வலமாய் வந்து வணங்கியவாறு, திருவாயிலுக்கருகில் சென்று அணைகின்றனர். 

(வெள்ளானைச் சருக்கம் - திருப்பாடல் 32):
வான நாடர்கள் அரிஅயன் முதலினோர் வணங்கிமுன் விடைகொண்டு
தூநலம்திகழ் சோதி வெள்ளானையும் கொண்டு வன்தொண்டர்க்குத்
தேனலம்புதண் சோலைசூழ் மகோதையில் திருஅஞ்கைக்களம் சேரக்
கால் நிலம்கொள வலம்கொண்டு மேவினார் கடிமதில் திருவாயில்

அச்சமயத்தில் வழிபாடு முடித்துத் திருவாயிலினின்றும் வெளிவரும் தம்பிரான் தோழரை எதிர்கொள்ளும் தேவர் குழாம், 'திருக்கயிலைப் பரம்பொருள் தம்மை இவ்வெள்ளானையில் அழைத்து வருமாறு ஆணையிட்டு அருளினார்' என்று தெரிவித்து, வன்தொண்டரைப் பெரிதும் போற்றிப் பணிகின்றனர். நாவலூர் மன்னர், பிறைமதிப் பெம்மானின் கட்டளை என்றலுமே, அகம் குழைந்துக் கண்ணீர் பெருக்கி, செயலொன்றும் அறியாதவராய் எதிர்வணங்கி இறைவரின் அருளாணையை சிரமேற்கொள்கின்றார் (சிவ சிவ). 

No comments:

Post a Comment