திருஞானசம்பந்தரின் அவதார இரகசியம்:

சீகாழித் தோன்றலான நம் ஞான சம்பந்த வள்ளலைப் பொதுவில் முருகப் பெருமானின் அவதாரமாகவே போற்றும் சைவ சமய மரபு குறித்து இப்பதிவில் சிந்தித்துத் தெளிவுறுவோம்.

(1)
முதற்கண் சம்பந்த மூர்த்தியின் அவதார இரகசியத்தை அவர்தம் திருப்பாடல் வரிகளைக் கொண்டே அறிந்துணர முற்படுவோம். பின்வரும் திருப்பாடலில் 'மறக்குமாறிலாத என்னை மையல் செய்(து) இம்மண்ணின் மேல் பிறக்குமாறு காட்டினாய்' என்றருளிச் செய்கின்றார் காழி வேந்தர்,  

('வரைத்தலைப் பசும்பொனோடு' என்று துவங்கும் திருத்துருத்தி தேவாரம் - திருப்பாடல் 5)
துறக்குமா சொலப்படாய் துருத்தியாய்; திருந்தடி
மறக்குமாறிலாத என்னை மையல் செய்திம் மண்ணின்மேல்
பிறக்குமாறு காட்டினாய் பிணிப்படும் உடம்புவிட்(டு)
இறக்குமாறு காட்டினாய்க்(கு) இழுக்குகின்ற(து) என்னையே

சிவபரம்பொருளின் குமார வடிவமே அறுமுகக் கடவுளெனும் சத்தியத்தைக் (கச்சியப்ப சிவாச்சாரியார் அருளியுள்ள) கந்தபுராணத்தின் பல்வேறு திருப்பாடல்கள் நமக்கு அறிவிக்கின்றன. ஆதலின் மேற்குறித்துள்ள காழிப் பிள்ளையாரின் அற்புதப் பிரகடனத்தை ஒருபொழுதும் அறுமுகக் கடவுளின் திருவாக்காகக் கொள்ளுதல் ஏற்புடையதன்று. சிவஞானப் பெருநிலையில் விளங்கியிருந்த ஒரு ஜீவான்மா இறைவரிடம் உரிமையோடு 'என்னை ஏன் இப்பிறவியில் ஆழ்த்தினாய்' என்று வினவுமுகமாகவே சிவஞானச் செல்வரின் இக்கூற்று அமைந்துள்ளது.

(2)
இனி நம் தெய்வச் சேக்கிழாரின் திருவாக்கும் சீகாழி அண்ணலின் அருளிச் செயலோடு ஓத்திருத்தலைக் காண்போம். 'திருவடி மறவாத் தன்மையில் விளங்கியிருந்த ஆன்மா ஒன்றினைச் சிவமூர்த்தி ஞானசம்பந்த மூர்த்தியாக அவதரிக்கச் செய்தருளினார்' என்ற பின்வரும் திருப்பாடலில் சேக்கிழார் பெருமானார் பதிவு செய்து போற்றுகின்றார்,

(பெரிய புராணம்: திருஞானசம்பந்தர் புராணம்: திருப்பாடல் 55)
பண்டு திருவடி மறவாப் பான்மையோர் தமைப் பரமர்
மண்டுதவ மறைக்குலத்தோர் வழிபாட்டின் அளித்தருளத்
தொண்டின்நிலை தரவருவார் தொடர்ந்த பிரிவுணர்வொருகால்
கொண்டெழலும் வெருக்கொண்டாற் போல்அழுவார் குறிப்பயலாய்

'திருவடி மறவாத தன்மை' எனும் சொற்பிரயோகமும் உயிர் வர்க்கத்துக்கு மட்டுமே பொருந்தக் கூடியவொன்று, பரம்பொருள் வடிவினரான குமாரக் கடவுளுக்கு அன்று. 

(3)
எனில் மேருமலையினும் மேம்பட்ட தவமுடைய நம் அருணகிரிப் பெருமான் எண்ணிறந்த திருப்புகழ் திருப்பாடல்களில், ஞானசம்பந்த மூர்த்தியின் திருஅவதார நிகழ்வுகளை முருகப் பெருமானின் திருச்செயல்களாகவே போற்றியுள்ளாரே?' எனும் கேள்வியும் உடனெழுவது இயல்பே. 

இதற்கான விளக்கத்தினை நாம் ஆய்ந்தறிய முனைகையில், அவ்விளக்கமானது ஞானசம்பந்தரின் திருவாக்கு; தெய்வச் சேக்கிழாரின் திருவாக்கு; அருணகிரியாரின் திருவாக்கு ஆகிய மூன்றிற்கும் முரணின்றி அமைந்திருத்தல் மிகமிக அவசியம். 

பரம குருநாதரான நம் வாரியார் சுவாமிகள் 'அறுமுகக் கடவுளின் சாரூப முத்தி பெற்றுத் திருக்கயிலையில் திருத்தொண்டாற்றி வரும் முத்தான்மா ஒருவரையே சிவபெருமான் ஞானசம்பந்தராக இப்புவிமிசை அவதரிக்கச் செய்கின்றார்' என்றும், 'இதன் பொருட்டே அருணகிரிநாதர் உள்ளிட்ட அருளாளர்கள், உபச்சார மார்க்கமாகச் சம்பந்தச் செல்வரின் செயல்களை முருகப் பெருமானின் மீது ஏற்றிப் பாடியுள்ளனர்' என்றும் இதன் நுட்பத்தினைத் தெளிவுறுத்துகின்றார். 

(4)
மற்றொரு கோணம், பூரண சிவஞானம் சித்திக்கப் பெறாத ஆன்மாக்களிடம் பாலில்படுநெய் போலும் எழுந்தருளியுள்ள இறைவன், மலபரிபாகம்; சத்தினிபாதம் நிகழ்ந்தேறப் பெற்றுள்ள உத்தம ஆன்மாக்களிடம் மிக விளக்கமாய் எழுந்தருளி இருக்கின்றான். ஆதலின் சிவஞானப் பெருநிலையிலுள்ள நம் அருணகிரிப் பெருமான் ஒவ்வொருமுறை ஞானசம்பந்த மூர்த்தியை அகக் கண்களில் தரிசிக்கையிலும், அம்மூர்த்தியின் திருவுள்ளத்தில் மிக விளக்கமாய் எழுந்தருளியுள்ள அறுமுகக் கடவுளின் தரிசனமும் ஒருசேர அனுபவமாகின்றது. 

(5)
'ஞானசம்பந்தப் பெருமான் பசு வர்க்கமாகிய நம்முள் ஒருவர்' என்று அறிந்தும் உணர்ந்தும் அனுபவிப்பதே ரசமான; சுவையான; அற்புதமான அனுபவம். சீர்காழிச் செல்வர் திருத்தொண்டர்களின் தனிப்பெரும் தலைவர், பதியாகிய சிவபரம்பொருளோடு நம்மை இணைப்பிக்கும் தெய்வீகப் பாலமாய்த் திகழ்பவர் (சிவ சிவ)!!!.

No comments:

Post a Comment