சுந்தரர் (பெரிய புராணத்தில் சுந்தரர் வரலாறு இடம்பெறும் பகுதிகள்):

திருமலைச் சருக்கத்தோடு கூடிய 73 பகுதிகளைக் கொண்ட பெரிய புராணம் சுந்தரரில் துவங்கி சுந்தரரில் முடிவுறுகிறது (முதலில் வெள்ளானைச் சருக்கம்; பின்னர் சுந்தரர் நீங்கலாக 62 நாயான்மார்கள்; 9 தொகையடியார்கள் ஆகியோருக்கு ஓரோர் பகுதி; இறுதியில் நிறைவுப் பகுதியான வெள்ளானைச் சருக்கம்). 

திருத்தொண்டர் புராணத்தின் காவிய நாயகர் நம் சுந்தர மூர்த்தி சுவாமிகளே. ஆதலின் வன்தொண்டரின் திருப்பெயர் கொண்ட ஒரு தனிப்பகுதி என்பதில்லாமல், பின்வரும் 7 பிரதானப் பகுதிகளில் தம்பிரான் தோழரின் வரலாற்றினைத் தெய்வச் சேக்கிழார் விவரித்துப் போற்றுகின்றார்.

(திருமலைச் சருக்கம்): 
நம்பியாரூரர் அவதார நோக்கத்தில் துவங்கி, திருமண நிகழ்வில் தடுத்தாட்கொள்ளப் பெறுதல்; திருவதிகையில் திருவடி தீட்சை, சிதம்பர தரிசனம்; சீர்காழி எல்லையில் சிவ தரிசனம்; திருவாரூரில் தம்பிரான் தோழராதல்; பரவையாருடனான திருமணம் ஆகிய நிகழ்வுகளில் பயணித்துப் பின்னர் தேவாசிரியன் மண்டபத்தில் திருத்தொண்டர் தொகையினை அருளிச் செய்யும் நிகழ்வு வரையில் இப்பகுதி விவரிக்கின்றது. 

(விறன்மிண்ட நாயனார் புராணம்): 
விறன்மிண்டனார் சுந்தரரின் மீது முனிவு கொள்ளுதல்; பின்னர் வன்தொண்டர் அருளிச் செய்த திருத்தொண்டர் தொகையினைச் செவிமடுத்து அகமிகக் குளிர்ந்து வன்தொண்டரை வாழ்த்துதல்' முதலிய அரிய நிகழ்வுகள் (11 திருப்பாடல்களைக் கொண்ட) இப்புராணத்தில் மட்டுமே பேசப் பெறுகின்றது. 

(சோமாசி மாற நாயனார் புராணம்) 
சோமாசி மாற நாயனார் சுந்தரருடன் பெருநட்பு பேணிய அரியதொரு குறிப்பு (6 திருப்பாடல்களைக் கொண்ட) இப்பகுதியில் மட்டுமே பேசப் பெறுகின்றது. 

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்):
குண்டையூரிலுள்ள நெல்மலைகளைச் சிவகணங்கள் திருவாரூரில் சேர்ப்பிக்கும் நிகழ்வில் துவங்கி, புகலூரில் பொன் பெறுதல்; முதுகுன்ற ஆற்றிலிட்டுத் திருவாரூர் குளத்தில் பொன்னை எடுத்தல்; இருவேறு தலங்களில் இறைவரால் பசி நீங்கப் பெறுதல்; ஒற்றியூரில் சங்கிலியாருடன் திருமணம்; கண் பார்வை மறைதல்; காஞ்சி  மற்றும் திருவாரூரில் இழந்த கண் பார்வையைப் பெற்று மகிழ்தல்; பரவையாரிடம் சிவபெருமான் தூது; கலிக்காம நாயனார் முனிவு கொண்டு பின்னர் நட்பு பாராட்டுதல்; கலிக்காமருடன் திருப்புன்கூர் தல தரிசனம் முதலிய பிரதான நிகழ்வுகள் இப்பகுதியில் பேசப்பெறுகின்றன. 

(சேரமான் பெருமாள் நாயனார் புராணம்):
சேரமான் பெருமாள் நாயனார் அறிமுகப் படலத்தில் துவங்கி, சேரனாருக்கு இறைவர் சுந்தரரை அறிவித்தல்; சேரர்கோன் சுந்தரரோடு நட்பு பாராட்டுதல்; சுந்தரரோடு திருத்தல யாத்திரை; வன்தொண்டர் சேரனாருடன் அஞ்சைக்களம் செல்லுதல்; அஞ்சைக்கள தரிசனம்; திருவாரூருக்கு மீள வருதல்; திருமுருகன்பூண்டியில் வேடர் பரி நிகழ்வு முதலிய பிரதான நிகழ்வுகளை இப்பகுதி விவரிக்கின்றது. 

(பெருமிழலைக் குறும்ப நாயனார் புராணம்)
சுந்தரரின் சமகாலத்து நாயனார். 'வன்தொண்டரை அகக் கண்களால் மட்டுமே தரிசித்து அவரைத்தம் ஞானகுருவெனக் கொண்டு போற்றி, தம்பிரான் தோழருக்கு ஒரு நாள் முன்னரே திருக்கயிலை ஏகிய' அற்புத நிகழ்வு இப்புராணத்தில் மட்டுமே பேசப் பெறுகின்றது. 

(வெள்ளானைச் சருக்கம்):
சுந்தரர் 2ஆம் அஞ்சைக்கள யாத்திரையில் துவங்கி, முதலை வாயியினின்றும் மாண்ட பிள்ளையை மீண்டெழச் செய்தல்; சேரர்கோன் அரண்மையில் தங்கியிருத்தல்; அவதார நிறைவிற்காக இறைவரிடம் விண்ணப்பித்தல்; வெள்ளை யானையில் திருக்கயிலை யாத்திரை; சேரர்கோனுடன் திருக்கயிலைப் பதம் பெற்று மகிழ்தல்; ஆகிய பிரதான நிகழ்வுகள் இப்பகுதியில் விவரிக்கப் பெறுகின்றன. 

உபமன்யு மாமுனிவர் போற்றும் ஆடி சுவாதி நாயகன்:

தெய்வச் சேக்கிழார் அருளியுள்ள பெரிய புராணம் சுந்தரரில் துவங்கி சுந்தரரிலேயே நிறைவுறுகின்றது. இனி இப்பதிவில் சுந்தரனார் தொடர்பான பெரிய புராணத் துவக்க நிகழ்வுகளை சிந்தித்து மகிழ்வோம்,

(1)
திருக்கயிலை மலையடிவாரத்தில், எவரொருவராலும் இத்தன்மையர் என்றறியவொண்ணா சிவபரம்பொருளை இடையறாது தியானிக்கும் பெருஞ்சிறப்பினை உடைய உபமன்யு முனிவர், சிவயோகியர் திருக்கூட்டத்தின் நடுநாயகமாய் எழுந்தருளி இருக்கின்றார்,  

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 23)
அன்ன தன்திருத் தாழ்வரையின் இடத்து
இன்ன தன்மையன் என்றறியாச் சிவன்
தன்னையே உணர்ந்(து) ஆர்வம் தழைக்கின்றான்
உன்னரும் சீர் உபமன்னியமுனி

(2)
இம்மாமுனிவர், யாதவ குலத் தோன்றலாகவும்; துவாரகை வேந்தராகவும்; கீதாச்சாரியனாகவும் விளங்கியருளும் மாபாரதக் கண்ணனுக்கு சிவதீட்சை அளித்தருளி, சிவசகஸ்ரநாமத்தையும் உபதேசித்து அருளிய பெரியர். நான்மறை முதல்வரான சிவமூர்த்திக்கான திருத்தொண்டில் ஆதிஅந்தமற்ற தனிச்சிறப்போடு விளங்கும் பெற்றியர்,

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 24)
யாதவன் துவரைக்(கு) இறையாகிய
மாதவன்முடி மேலடி வைத்தவன்
பூத நாதன் பொருவரும் தொண்டினுக்கு
ஆதியந்தம் இலாமை அடைந்தவன்

(3)
அவ்வேளையில் அங்கு ஓராயிரம் கதிரவர்கள் சேர்ந்தாற்போல் பேரொளிப் பிழம்பொன்று தோன்றக் கண்ட அம்முனிவோர்கள் 'இதென்ன அதிசயம்' என்று வியக்கின்றனர், 

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 26)
அங்கண் ஓரொளி ஆயிர ஞாயிறு
பொங்கு பேரொளி போன்றுமுன் தோன்றிடத்
துங்க மாதவர் சூழ்ந்திருந்தார்எலாம்
இங்கிதென் கொல் அதிசயம் என்றலும்

(4)
பிறைமதிப் பரம்பொருளின் திருவடிகளை இடையறாது சிந்திக்கும் தவ மேன்மையினால் அவ்வொளியின் மூலத்தை உணரப் பெறும் உபமன்யு முனிவர், 'நாவலூர் வேந்தரான வன்தொண்டப் பெருந்தகையார் தம்முடைய அவதாரம் நிறைவுற்றுத் திருவருளால் மீளவும் திருக்கயிலைக்கு எழுந்தருளி வருகின்றார்' என்று அறிவிக்கின்றார், 

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 27)
அந்தி வான்மதி சூடிய அண்ணல்தாள்
சிந்தியா உணர்ந்(த) அம்முனி தென்திசை
வந்த நாவலர் கோன்புகழ் வன்தொண்டன்
எந்தையார் அருளால் அணைவான் என

(5)
கண்ணருவி பாய, அவ்வொளி தோன்றும் திசை நோக்கித் தொழும் உபமன்யு முனிவரின் செயல் குறித்து அம்முனிவர்கள் அதிசயமுற்று வினவுகின்றனர், 

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 28)
கைகள் கூப்பித் தொழுதெழுந்(து) அத்திசை
மெய்யில் ஆனந்த வாரி விரவிடச்
செய்ய நீள்சடை மாமுனி செல்வுழி
ஐயம் நீங்க வினவுவோர் அந்தணர்

(6)
'ஐய, ஆதிமுதற் பொருளான சிவமூர்த்தியின் திருவடிகளன்றிப் பிறிதொருவரைத் தொழாத நியமமுடைய நீங்கள் இத்தன்மையில் தொழும் காரணம் யாதோ? என்று பணிந்து வினவ, உபமன்யு முனிவரும், 'முக்கண்ணுடை அண்ணலைத் தம்முடைய உள்ளத்தில் அளப்பரிய காதலுடன் இடையறாது போற்றிவரும் நம்பியாரூர் நம் அனைவராலும் தொழப்பெறும் தன்மையர்' என்றுரைத்துத் தம்பிரான் தோழர் எழுந்தருளி வரும் அத்திருக்காட்சியைப் பணிகின்றார்,  

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 29)
சம்புவின் அடித்தாமரைப் போதலால்
எம்பிரான் இறைஞ்சாய் இஃதென் எனத்
தம்பிரானைத்தன் உள்ளம் தழீஇஅவன்
நம்பியாரூரன் நாம்தொழும் தன்மையான்

சுந்தரர் (கயிலையில் தோன்றிய காதலும், அவதார நோக்கமும்):

(1)
திருக்கயிலையில், சிவசாரூபம் பெற்றிருந்த உத்தமத் தொண்டரொருவர், சிவபரம்பொருள் சூடியருளும் திருமாலையினைத் தொடுத்தல்; அம்பிகை பாகனாருக்கு அருகில் திருநீற்றுப் பேழை தாங்கி நிற்றல் முதலிய அணுக்கத் தொண்டுகளைப் புரிந்து வருகின்றார்,     

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 31)
உள்ள வண்ணம் முனிவன் உரைசெய்வான்
வெள்ள நீர்ச்சடை மெய்ப் பொருளாகிய
வள்ளல் சாத்தும் மதுமலர் மாலையும்
அள்ளும் நீறும் எடுத்தணைவான் உளன்

(2) 
'ஆலால சுந்தரர்' எனும் திருநாமமுடைய அவர், திருமாலைத் தொண்டிற்கான மலர்களைக் கொய்துவரும் பொருட்டு திருக்கயிலைச் சாரலிலுள்ள நந்தவனமொன்றிற்குச் செல்கின்றார், 

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 32)
அன்னவன் பெயர் ஆலால சுந்தரன்
முன்னம் ஆங்கொரு நாள் முதல்வன் தனக்கு
இன்னவாம்எனும் நாள்மலர் கொய்திடத்
துன்னினான் நந்தனவனச் சூழலில்

(3)
அங்கு சுந்தரர் வரு முன்னமே; நால்வேதத் தலைவியாரான உமையன்னைக்கு அணுக்கத் தொண்டு புரிந்து வரும், அழகும் திருவும் பொலிந்து விளங்கும் பாவையர் இருவர் வருகை புரிகின்றனர்,  

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 33)
அங்கு முன்னெமை ஆளுடை நாயகி
கொங்கு சேர்குழல் காமலர் கொய்திடத்
திங்கள் வாள்முகச் சேடியர் எய்தினார்
பொங்குகின்ற கவினுடைப் பூவைமார்

(4)
கமலினி; அனிந்திதை எனும் திருநாமமுடைய அவ்விரு தேவியரும் அங்கு மலர் பறித்திருக்கையில், கயிலைப் பரம்பொருளான சிவமூர்த்தியின் திருவருள் ஏவ, 

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 34)
அந்தமில்சீர் அனிந்திதை ஆய்குழல்
கந்த மாலைக் கமலினி என்பவர்
கொந்து கொண்ட திருமலர் கொய்வுழி
வந்து வானவர் ஈசர் அருளென

(5)
மாதவம் செய்த தென்திசை உய்வு பெற்றுச் சிறக்கவும்; ஒப்புவமையில்லா திருத்தொண்டர் தொகை எனும் பனுவலை அருளிச் செய்யவும், ஆலால சுந்தரரின் கண்களும் கருத்தும் கணநேரம் அம்மாதரின் பால் செல்கின்றது. அவ்விரு பாவையரின் காதல் பார்வையும் அணுக்கத் தொண்டரின் மீது பொருந்துகின்றது,

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 35)
மாதவம் செய்த தென்திசை வாழ்ந்திடத்
தீதிலாத் திருத்தொண்டத் தொகைதரப்
போதுவார்அவர் மேல்மனம் போக்கிடக்
காதல் மாதரும் காட்சியில் கண்ணினார்

(6)
சுந்தரனார், மறுகணமே தன்னிலை உணர்ந்து, மலர் பறித்து மீண்டு ஆலமுண்டருளும் அண்ணலின் திருமுன்னர் சென்று தொழுகின்றார். பிறைமதிப் பரம்பொருளும் 'சுந்தரா! மாதர் மேல் மனம் வைத்தாய், ஆதலின் தென்னக பூமியில் பிறந்து அம்மாதருடன் காதலால் அணைவாய்' என்று கட்டளையிட்டு அருள் புரிகின்றார், 

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 37)
ஆதி மூர்த்தி அவன்திறம் நோக்கியே
மாதர் மேல்மனம் வைத்தனை தென்புவி
மீது தோன்றிஅம் மெல்லியலாருடன்
காதல் இன்பம் கலந்(து) அணைவாய்என

(7)
'மன்மத தகனம் நிகழ்ந்தேறிய திருக்கயிலையில் காமமெனும் உணர்வு தோன்ற வாய்ப்பேயில்லை' என்று நம் வாரியார் சுவாமிகள் தெளிவுறுத்துவார். மேற்குறித்துள்ள 34ஆம் திருப்பாடலின் இறுதியில் 'ஈசர் அருளென' என்று தெய்வச் சேக்கிழார் குறித்துள்ளமையால், 'இச்செயல் சிவமூர்த்தியின் திருவருள் ஏவலால் நிகழ்ந்தேறியுள்ளது' என்பது தெளிவு ('ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே' என்பார் நம் அப்பர் அடிகள்).  

சுந்தரர் (வித்தகம் பேச வேண்டாம் பணிசெய்ய வேண்டும்):

திருமண நிகழவில் ஓலை காட்டி ஆட்கொள்ள, முதிய வேதியராய் எழுந்தருளி வந்த சிவபரம்பொருளிடம் நம் சுந்தரனார் பற்பல வாதங்களை முன்வைத்து வாதிட்டு, 'மறையவர் பித்தரோ?' என்று வெகுண்டுரைக்கின்றார், 

(1)

வேதியராய் வந்த விமலரோ 'நீ பித்தன்; பேயன் என்று யாது கூறி இகழ்ந்தாலும் அதனைக் கருத்தில் கொள்ளேன். எவ்வகையாலும் எம்மை நீ அறிந்துணரவில்லை, ஆதலின் உன் வித்தகப் பேச்சினை விடுப்பாய். எமக்குத் தொண்டு புரிவதொன்றே இனி நீ செய்யத் தக்கது' என்றருளிச் செய்கின்றார். 
-
(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 187)
பித்தனுமாகப் பின்னும் பேயனுமாக நீயின்று
எத்தனை தீங்கு சொன்னாய் யாது மற்றவற்றால் நாணேன்
அத்தனைக்(கு) என்னை ஒன்றும் அறிந்திலையாகில் நின்று
வித்தகம் பேச வேண்டாம் பணிசெய வேண்டும் என்றார். 

('இறைவர் அறிவித்தாலன்றி ஆன்மாக்கள் யாதொன்றையும் அறிந்துணர இயலாது' என்பதும் 'திருத்தொண்டின் மூலமே சிவமாகிய பரம்பொருளின் திருவருளைப் பெற இயலும்' என்பதும் இத்திருப்பாடலில் பொதிந்துள்ள அரிய நுட்பங்கள்) 

(2)

(வெண்ணெய்நல்லூர் இறைவர் கொணர்ந்திருந்த அடிமை சாசன ஓலையில் இடம்பெற்றிருந்த அற்புத வாசகங்கள்)
-
(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 205)
அருமறை நாவல் ஆதிசைவன் ஆரூரன் செய்கை
பெருமுனி வெண்ணெய் நல்லூர்ப் பித்தனுக்(கு) யானும் என்பால்
வருமுறை மரபுளோரும் வழித்தொண்டு செய்தற்(கு) ஓலை
இருமையால் எழுதி நேர்ந்தேன் இதற்கிவை என்எழுத்து.

சுந்தரர் (பித்தா பிறைசூடீ பெருமானே அருளாளா)

வெண்ணெய்நல்லூர் வழக்காடு மன்றத்தில் வென்று சுந்தரரை அடிமை கொள்ளும் சிவமூர்த்தி, தன் வசிப்பிடத்தைக் காண்பிப்பதாகக் கூறியவாறு முன்செல்ல, அனைவரும் இறைவரைத் தொடர்ந்து செல்கின்றனர். ஆலய வளாகத்துள் புகுந்து இறைவர் திருவுருவம் மறைத்தருள, சுந்தரனார் மட்டும் ஆலயத்துள் முன்னேறிச் செல்கின்றார். முதியவரைக் எங்குமே காணாது ஆரூரர் திகைப்புற்று நின்றிருக்க, வெண்ணெய்நல்லூர் மேவும் ஆதிப் பரம்பொருள் உமையம்மையாருடன் விண்மிசை ரிஷப வாகனத்தில் எழுந்தருளித் தோன்றுகின்றார்.

(1)
'சுந்தரா! முன்னமே நீ நமக்குத் தொண்டன், நமது கட்டளையால் இப்புவி மீது தோன்றினாய். தக்கதொரு தருணத்தில் நாமே வந்து உனைத் தடுத்தாட்கொண்டோம்' என்றருள் புரிகின்றார்,
-
(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 213)
முன்புநீ நமக்குத் தொண்டன் முன்னிய வேட்கை கூரப்
பின்புநம் ஏவலாலே பிறந்தனை மண்ணின் மீது
துன்புறு வாழ்க்கை நின்னைத் தொடர்வறத் தொடர்ந்து வந்து
நன்புல மறையோர் முன்னர் நாம் தடுத்தாண்டோம் என்றார்

(2)
இறைவரின் அமுதமாம் திருவாக்கினைச் செவிமடுக்கும் சுந்தரர், தாய்ப்பசுவின் குரல் கேட்ட கன்று போல் கதறுகின்றார். உடலெங்கும் புளகமுற; அன்பின் மிகுதியால் விதிர்விதிர்த்து உச்சி கூப்பிய கையினராய், 'அம்பலத்தாடும் ஐயனே, நீரா அடியேனை வலிய வந்து ஆட்கொண்டது?' என்று விண்ணப்பித்துப் பணிகின்றார், 
-
(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 214)
என்றெழும் ஓசை கேளா ஈன்றஆன் கனைப்புக் கேட்ட
கன்றுபோல் கதறி நம்பி கரசரணாதி அங்கம் 
துன்றிய புளகமாகத் தொழுதகை தலைமேலாக
மன்றுளீர் செயலோ வந்து வலிய ஆட்கொண்ட(து) என்றார்

(3)
மதி சூடும் அண்ணலார் 'நம்மோடு வன்மையான சொற்களால் வாதிட்டமையால் வன்தொண்டன் எனும் நாமம் பெற்றாய்! நமக்கு விருப்பமான அர்ச்சனை பாடல்களேயாம், ஆதலின் நம்மைச் சொற்றமிழால் பாடுக' என்றருளிச் செய்கின்றார். 

(4)
வன்தொண்டனார் கண்ணருவி பாய, 'வேதியனாய் எமை வழக்கில் வென்று, முந்தைய உணர்வினையும் அளித்து; அரியதொரு முறையில் ஆட்கொண்டருளிய அருட்பெரும் சுடரே! நாயினேன் உம்முடைய குணப்பெரும்கடலினை எங்கனம் உணர்ந்து யாது சொல்லி பாடுவேன்' என்று அகம் குழைந்துருகி விண்ணப்பிக்கின்றார்,
-
(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 218)
வேதியனாகி என்னை வழக்கினால் வெல்ல வந்த
ஊதியம் அறியாதேனுக்(கு) உணர்வு தந்(து) உய்யக் கொண்ட
கோதிலா அமுதே இன்றுன் குணப்பெரும் கடலை நாயேன்
யாதினை யறிந்(து) என் சொல்லிப் பாடுகேன் எனமொழிந்தார்

(5)
அம்பிகை பாகத்து அண்ணலும், 'முன்பு நமைப் பித்தனென்று அழைத்தனையே, அதனையே நம் நாமமாக அமைத்துப் பாடுவாய்' என்று அடியெடுத்துக் கொடுத்தருள, நாவலூர் வேந்தரும் இறைவரின் திருவாக்கினைச் சிரமேற் கொண்டு, தன்வயமற்ற நிலையில் பாடத் துவங்குகின்றார், 
-
(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 219)
அன்பனை அருளின் நோக்கி அங்கணர் அருளிச் செய்வார்
முன்பெனைப் பித்தனென்றே மொழிந்தனை ஆதலாலே
என்பெயர் பித்தனென்றே பாடுவாய் என்றார் நின்ற
வன்பெரும் தொண்டர் ஆண்ட வள்ளலைப் பாடலுற்றார்
-
(திருவெண்ணெய்நல்லூர் தேவாரம் - திருப்பாடல் 1)
பித்தா பிறைசூடீ பெருமானே அருளாளா
எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர் அருட்துறையுள்
அத்தா உனக்காளாய் இனிஅல்லேன் எனலாமே.

சுந்தரர் (திருவதிகை எல்லையில் திருவடி தீட்சை):

(1)
சுந்தரர் தில்லையை நோக்கிப் பயணித்துச் செல்லுகையில், கடலூர் மாவட்டத்திலுள்ள திருவதிகையின் எல்லையை அடைகின்றார். அப்பொழுது அந்திப் பொழுது, நாவுக்கரசு சுவாமிகள் திருவதிகைப் பரம்பொருளால் தடுத்தாட்கொள்ளப் பெற்ற புண்ணியப் பதி ஆதலின் அதனுள் பாதம் பதிக்கவும் அஞ்சி, எல்லையிலுள்ள 'சித்தவடம்' எனும் திருமடமொன்றில் தங்குகின்றார். 

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல்  229)
உடைய அரசு உலகேத்தும் உழவாரப் படையாளி
விடையவர்க்குக் கைத்தொண்டு விரும்புபெரும் பதியைமிதித்து 
அடையும் அதற்கஞ்சுவன் என்று அந்நகரில் புகுதாதே
மடைவளர்தண் புறம்பணையில் சித்தவடமடம் புகுந்தார்.

(குறிப்பு):
மேற்குறித்துள்ள திருப்பாடலில் 'அப்பர் அடிகள் கைத்தொண்டு புரிந்துள்ள காரணத்தால்' எனும் குறிப்பிற்கு 'சுவாமிகள் சூலை நீங்கிப் பேரருள் பெற்றுள்ள தலம்' என்றே பொருள் கொள்ளுதல் சிறப்பு. ஏனெனில் அப்பர் சுவாமிகள் கைத்தொண்டு புரிந்திருந்த எண்ணிறந்த திருத்தலங்களுக்கு நம் சுந்தரனார் யாத்திரை மேற்கொண்டு தரிசித்துள்ளது தெளிவு.   

(2)
அதிகை மேவும் ஆதி மூர்த்தியைக் காதலுடன் உளத்தில் நினைந்தவாறு துயில் கொள்ள முனைகின்றார் நம்பியாரூரர். வீரட்டானேஸ்வரப் பரம்பொருள் கிழ வேதியரின் திருவடிவில் அங்கு எழுந்தருளி வந்து, பிறிதொருவர் அறியா வண்ணம் அம்மடத்துள் துயில்பவர் போல் திருக்கோலம் பூண்டு, வன்தொண்டரின் சென்னிமிசை தன் திருவடி மலர்களைப் பதித்துப் பேரருள் புரிகின்றார். 

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல்  231)
அதுகண்டு வீரட்டத்து அமர்ந்தருளும் அங்கணரும்
முதுவடிவின் மறையவராய் முன்னொருவர் அறியாமே
பொதுமடத்தினுள் புகுந்து பூந்தாரான் திருமுடிமேல் 
பதும மலர்த்தாள் வைத்துப் பள்ளிகொள்வார் போல் பயின்றார்.

(3)
துணுக்குற்று எழும் சுந்தரனார் 'வேதியப் பெரியவரே! எதன் பொருட்டு உம்முடைய அடிகளை என் தலை மீது வைக்கின்றீர்' என்று வினவ, அதிகை முதல்வரோ 'அப்பனே! வயது முதிர்ந்த காரணத்தினால் இவ்வாறு நிகழ்ந்தது போலும்' என்றருளிச் செய்கின்றார். ஆரூரர் பிறிதொரு இடத்திற்குச் சென்று துயில் கொள்ள முனைய, மதிசூடும் அண்ணலார் அவ்விடத்தும் சென்று ஆரூரரின் சென்னி மீது தன் திருவடி மலர்களைச் சூட்டி அருள் புரிகின்றார்.   

(4)
விரைந்தெழும் சுந்தரனார் 'இவ்விதம் என்னைப் பலகாலும் மிதிக்கின்ற நீர் யார்?' என்று உறுதிபட வினவ, கங்கையைச் சடையில் மறைத்தருளும் கண்ணுதற் கடவுளோ 'நம்மை அறிந்திலையோ?' என்றருளித் தன் திருவுருவம் மறைக்கின்றார். 

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல்  233)
அங்குமவன் திருமுடிமேல் மீண்டும்அவர் தாள்நீட்டச்
செங்கயல்பாய் தடம்புடைசூழ் திருநாவலூராளி
இங்கென்னைப் பலகாலும் மிதித்தனை நீ யார்என்னக்
கங்கைசடைக் கரந்த பிரான் அறிந்திலையோ எனக் கரந்தான்

(5)
முதியவராய் வந்தது மறை முதல்வரே என்றுணரும் நாவலூர் வேந்தர் 'பிறைமதிப் பரம்பொருளே, ஆலமுண்ட அண்ணலே, 'என்றேனும் உன் திருவடிகளை அடியவனின் சென்னி மீது சூட்டியருள மாட்டாயா' எனும் பெருவிருப்புடன் வாழ்ந்திருந்த அடிநாயேன், அவ்வருட் செயலை நீயின்று புரிய வருகையில் உணராது இருந்தேனே' என்று உளமுருகப் பாடுகின்றார்,
-
(திருவதிகை: சுந்தரர் தேவாரம் - முதல் திருப்பாடல்)
தம்மானை அறியாத சாதியார்உளரே,
சடைமேற்கொள் பிறையானை; விடைமேற்கொள் விகிர்தன்,
கைம்மாவின் உரியானைக் கரிகாட்டில் ஆடல்
உடையானை; விடையானைக் கறைகொண்ட கண்டத்து
தம்மான்தன் அடிக்கொண்டென் முடிமேல்வைத்திடும்என்னும்
ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன்,
எம்மானை; எறிகெடில வடவீரட்டானத்து
உறைவானை; இறைபோதும் இகழ்வன்போல் யானே!!!

சுந்தரர் (சீர்காழி எல்லையில் சிவ தரிசனம்):

(1)
சுந்தரர், திருவாரூர் செல்லும் வழியில் சீர்காழியின் எல்லையை அடைகின்றார். ஞானசம்பந்த மூர்த்தி அம்மையப்பரின் பேரருளைப் பெற்றுள்ள புண்ணியப் பதி ஆதலின் அதனுள் பாதம் பதிக்கவும் அஞ்சி, எல்லையை வணங்கியவாறு வலமாகச் செல்லுகையில், திருத்தோணிபுர இறைவர் திருநிலை நாயகி அம்மையுடன் எதிர்க்காட்சி அளித்தருள்கின்றார், 

(பெரிய புராணம் திருமலைச் சருக்கம் - பாடல் 258):
பிள்ளையார் திருஅவதாரம் செய்த பெரும்புகலி
உள்ளுநான் மிதியேன் என்று ஊரெல்லைப் புறம்வணங்கி
வள்ளலார் வலமாக வரும்பொழுதின் மங்கைஇடம்
கொள்ளு மால்விடையானும் எதிர்காட்சி கொடுத்தருள!!!

(2)
வன்தொண்டனார், பெருகும் அன்புடன்; கண்ணருவி பாய, உச்சி கூப்பிய கையினராய் அம்பிகை பாகத்து அண்ணலைப் பணிந்து, 'திருக்கயிலையில் எழுந்தருளியுள்ள அதே திருக்கோலத்தில் திருத்தோணிபுர இறைவரை இவ்விடத்தே கண்டு கொண்டேன்' என்று செந்தமிழப் பாமாலையால் போற்றி செய்கின்றார், 

(திருமலைச் சருக்கம் - பாடல் 259):
மண்டிய பேரன்பினால் வன்தொண்டர் நின்றிறைஞ்சித்
தெண்திரை வேலையில் மிதந்த திருத்தோணி புரத்தாரைக்
கண்டுகொண்டேன் கயிலையினில் வீற்றிருந்த படியென்று
பண்டரும் இன்னிசை பயின்ற  திருப்பதிகம் பாடினார்.

(சுந்தரர் தேவாரம் - சீர்காழி - முதல் திருப்பாடல்)
சாதலும் பிறத்தலும் தவிர்த்தெனை வகுத்துத்
தன்னருள் தந்த எம்தலைவனை; மலையின்
மாதினை மதித்தங்கோர் பால்கொண்ட மணியை
வருபுனல் சடையிடை வைத்த எம்மானை
ஏதிலென் மனத்துக்கோர் இரும்புண்ட நீரை
எண்வகை ஒருவனை; எங்கள் பிரானை
காதில் வெண்குழையனைக் கடல்கொள மிதந்த
கழுமல வளநகர்க் கண்டு கொண்டேனே!!

(3)
இவ்விடத்தில் ஒரு நுட்பம், முன்னர் நாவுக்கரசு சுவாமிகள் மீதிருந்த பெருமதிப்பினால் திருவதிகையில் பாதம் பதிக்காது எல்லையிலேயே தங்கியிருந்த சுந்தரனாருக்கு இறைவர் முதிய வேதியரொருவரின் வடிவில் எழுந்தருளி வந்து திருவடி தீட்சை நல்கியருளினார். இம்முறையும், சம்பந்தமூர்த்தி மீதுள்ள அதீத பக்தியினால் சீகாழி நகருள் புகாது வலமாய் வணங்கிச் செல்லும் வன்தொண்டருக்குத் தோணிபுர இறைவர் எதிர்க்காட்சி தந்தருள் புரிகின்றார். 

'மெய்யடியார் மீது பக்தியும் ஈடுபாடும் கொண்டொழுகினால் சிவமூர்த்தி திருவுள்ளம் மிக மகிழ்ந்து, நம்மைத் தேடி வந்து விசேஷமாய் அருள் புரிவார்' என்பதே இந்நிகழ்வுகள் நமக்குணர்த்தும் நுட்பம் (தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே)!!!!

சுந்தரர் (முதல் தில்லை தரிசன அனுபவம்; திருவாரூக்கு அழைப்பு):

தம்பிரான் தோழர் மூன்று வெவ்வேறு சமயங்களில் தில்லைப் பரம்பொருளைத் தரிசித்துப் பரவியுள்ளதாக தெய்வச் சேக்கிழார் பதிவு செய்கின்றார். இனி இப்பதிவில் முதல் தரிசன அனுபவ நிகழ்வினைச் சிந்தித்து மகிழ்வோம்.

(1)
சுந்தரர் தில்லைத் திருத்தலத்தின் எல்லையை வணங்கியவாறே நகருக்குள் செல்கின்றார், வழிதோறுமுள்ள திருநந்தவனங்களை வணங்கியவாறு வடக்குத் திருவாயிலை அடைகின்றார். அங்கு அடியவர்கள் மகிழ்ந்து எதிர்கொள்ள, 'எவர் எவரை முதலில் வணங்கினர் என்றறிய இயலாத தன்மையில் இரு பாலாரும் எதிர் வணங்கி மகிழ்கின்றனர்' என்று இனிமையாய்ப் பதிவு செய்கின்றார் தெய்வச் சேக்கிழார். 

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல்  244)
அன்பின் வந்தெதிர் கொண்ட சீரடியார்
    அவர்களோ நம்பியாரூரர்  தாமோ
முன்(பு) இறைஞ்சினர் யாவரென்(று) அறியா
    முறைமையால் எதிர்வணங்கி மகிழ்ந்து
பின்பு கும்பிடும் விருப்பினில் நிறைந்து
    பெருகு  நாவல் நகரார் பெருமானும்
பொன்பிறங்கு மணி மாளிகை நீடும்
    பொருவிறந்த திருவீதி புகுந்தார்

(2)
கூத்தர் பிரானைத் தரிசிக்கும் பெருவிருப்புடன் வேதஒலியும்; வேள்விப் புகையும் நிறைந்து விளங்கும் திருவீதியினை வணங்கிப் போற்றியவாறு மேலும் முன்னேறிச் செல்கின்றார். அதீத அன்பினால் முற்றிலும் நெகிழ்ந்துருகிய உள்ளமும்; உச்சி கூப்பிய கரங்களுமாய் அணுக்கன் வாயிலுள் புகுந்து, அம்பலவாணரின் திருமுன்புள்ள திருக்களிற்றுப்படிகளின் அருகே வீழ்ந்து வணங்கியெழுகின்றார்.

(3)
'மெய்; வாய்; கண்; மூக்கு; செவி' எனும் ஐம்புலன்களின் ஞானம் முழுவதையும் கண்களே கொள்ள, 'மனம்; புத்தி; சித்தம்; அகங்காரம்' எனும் நான்கு கரணங்களும் சித்தம் ஒன்றிலேயே ஒடுங்கி நிற்க, 'சத்வ; ரஜோ; தமோ' எனும் முக்குணங்களும் சாத்வீகத்தில் நிலைத்து நிற்க, ஒருமையுற்றுத் தில்லைப் பரம்பொருளின் பேரானந்தத் திருக்கூத்தினைத் தரிசித்து, அதனால் விளைந்த பேரின்ப வெள்ளத்துள் திளைத்துச் சிவானந்தம் எய்துகின்றார் (சேக்கிழார் பெருமானார் அல்லாது பிறிதொருவரால் இந்நிலையை விவரித்து விடவும் இயலுமோ?)

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல்  252)
ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள; அளப்பரும் கரணங்கள் நான்கும்
சிந்தையேஆகக் குணமொரு மூன்றும் திருந்து சாத்துவிகமேஆக
இந்துவாழ் சடையான் ஆடும்ஆனந்த எல்லையில் தனிப்பெரும் கூத்தின்
வந்த பேரின்ப வெள்ளத்துள் திளைத்து மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்

(4)
'மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே' என்பது அப்பர் சுவாமிகளின் தில்லை அனுபவம், அதே நிலை நம் வன்தொண்டருக்கும் இங்கு எய்துகின்றது. 'ஐயனே! உன் அற்புதத் திருநடத்தினை இவ்வகையில் தரிசித்து வழிபாடு செய்தற்குப் பேருபகாரம் புரிந்த இம்மானிடப் பிறவியே அடியேனுக்கு பெருநிறைவையும்; மேலான இன்பத்தையும் அளிப்பதாக இருக்கின்றது' என்று நெகிழ்ந்து பாமாலையொன்றினால் கூத்தர் பிரானைப் போற்றி செய்கின்றார்,

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 253)
தெண்ணிலா மலர்ந்த வேணியாய் உந்தன் திருநடம் கும்பிடப் பெற்று
மண்ணிலே வந்த பிறவியே எனக்கு வாலிதாம் இன்பமாம் என்று
கண்ணில்ஆனந்த அருவிநீர் சொரியக் கைம்மலர் உச்சிமேற் குவித்துப்
பண்ணினால் நீடி அறிவரும் பதிகம் பாடினார் பரவினார் பணிந்தார்
-
(குறிப்பு: சுந்தரனார் இச்சமயத்தில் அருளிச் செய்த திருப்பதிகம் நமக்கின்று கிடைக்கப் பெறவில்லை)

(5)
நெகிழ்வான அத்தருணத்தில் சிற்சபேசப் பரம்பொருள் விண்ணொலியாய் 'அன்பனே, நமது திருவாரூருக்கு வருக' என்றருளிச் செய்கின்றார்,

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல்  254)
தடுத்துமுன் ஆண்ட தொண்டனார் முன்பு
    தனிப்பெரும் தாண்டவம் புரிய
எடுத்த சேவடியார் அருளினால் தரளம்
    எறிபுனல் மறிதிரைப் பொன்னி
மடுத்தநீள் வண்ணப் பண்ணை ஆரூரில்
    வருகநம் பாலென வானில்
அடுத்த போதினில் வந்தெழுந்ததோர் நாதம்
    கேட்டலும் அதுஉணர்ந்(து) எழுந்தார்.


சுந்தரர் (திருவாரூரில் இறைவர் ஆணையாலோர் அற்புத வரவேற்பு):

சுந்தரர் திருவாரூருக்குப் பயணித்துச் செல்லுகையில், அடியவர்களை வரிசைப்படுத்தித் தொகுக்கும் ஒப்புமையில்லா 'திருத்தொண்டர் தொகையினை' நம் சுந்தரனார் பாடவிருக்கும திருத்தலமாதலால், தியாகேசப் பரம்பொருள் ஆரூர் அன்பர்களின் கனவில் தோன்றி 'ஆராத காதலால் நாமழைக்க வரும் ஆரூரனை மகிழ்வுடன் சென்று எதிர்கொள்வீர்' என்று கட்டளையிட்டு அருள் புரிகின்றார். 

(திருமலைச் சருக்கம் - பாடல் 264):
தேராரும் நெடுவீதித் திருவாரூர் வாழ்வார்க்கு
ஆராத காதலின்நம் ஆரூரன் நாமழைக்க
வாராநின்றான்அவனை மகிழ்ந்தெதிர் கொள்வீரென்று
நீராரும் சடைமுடிமேல்  நிலவணிந்தார் அருள்செய்தார்

துயிலெழும் அன்பர்கள், தனிப்பெரும் தெய்வமான ஆரூர் இறைவரே இவ்விதம் எழுந்தருளி வந்து திருத்தொண்டர் ஒருவரை எதிர்கொள்ளுமாறு அருளுவாராயின் இனி அச்சுந்தரனாரே நாம் போற்றித் தொழுதற்குரிய தலைவராவார் என்று வியந்து போற்றி, விண்ணுலகமே இறங்கி வந்ததென்று எண்ணுமாற் போல் அந்நகரினை அலங்கரிக்கத் துவங்குகின்றனர். 

(திருமலைச் சருக்கம் - பாடல் 265):
தம்பிரான்அருள்செய்யத் திருத்தொண்டர்அது சாற்றி
எம்பிரானார் அருள்தான் இருந்த பரிசிதுவானால்
நம்பிரானார்ஆவார் அவரன்றே எனு(ம்) நலத்தால்
உம்பர் நாடிழிந்ததென எதிர்கொள்ள உடனெழுந்தார்.

திருவீதிகள் தோறும் நீண்ட பெரிய கொடிகளோடு கூடிய மாவிலைத் தோரணங்களை அமைத்து, பாக்கு; வாழை மரங்களை நாட்டி, நிறைகுடங்களையும்; நெடிய அழகிய திருவிளக்குகளையும் வாயில்கள் தோறும் வரிசையாய் விளங்கச் செய்து, திண்ணைகளை சந்தனக் குழம்பால் மெழுகி, நறுமணம் மிக்க நன்னீரினை எங்கும் தெளித்துக் கோலமிட்டு, நீண்ட மலர்ப் பந்தல்களை ஆங்காங்கே அழகுற அமைத்து, பேரிகை முதலிய வாத்தியங்கள் முழங்க, மங்கல இசைப் பாடல்களைப் பாடியவாறும், மகளிர் மேடைகள் தோறும் நடனம் புரியும் நிலையிலும் சென்று வன்தொண்டரை எதிர் கொண்டு வணங்குகின்றனர்.  

சுந்தரரும் அத்திருக்கூட்டத்தினரை வணங்கி மகிழ, அந்நிலையிலேயே 'எம்மையும் ஆள்வரோ கேளீர்?' எனும் வினாக்குறிப்புடன் கூடிய திருப்பதிகத்தால் ஆரூர் மேவும் ஆதி மூர்த்தியைப் போற்றியவாறே திருவீதிகளில் முன்னேறிச் செல்கின்றார், 

(திருமலைச் சருக்கம் - பாடல் 269):
வந்தெதிர் கொண்டு வணங்குவார்முன் வன்தொண்டர் அஞ்சலி கூப்பி வந்து
சிந்தை களிப்புற வீதியூடு செல்வார் திருத்தொண்டர் தம்மை நோக்கி
எந்தைஇருப்பதும் ஆரூர்அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் என்னும்
சந்த இசைப்பதிகங்கள்  பாடித் தம்பெருமான் திருவாயில் சார்ந்தார்

(சுந்தரர் தேவாரம்: திருவாரூர்: முதல் திருப்பாடல்)
கரையும் கடலும் மலையும் காலையும் மாலையும் எல்லாம்
உரையில் விரவி வருவான் ஒருவன் உருத்திரலோகன்,
வரையின் மடமகள் கேள்வன், வானவர் தானவர்க்கெல்லாம்
அரையன், இருப்பதும் ஆரூர், அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்

சுந்தரர் (திருவாரூரில் தோன்றும் முதற்காதல் - பரவையாருடன் ஓர் அற்புதச் சந்திப்பு):

(1)
சுந்தரர் தியாகேசர் திருக்கோயிலில் புற்றிடம் கொண்ட புராதனரைத் தரிசித்துப் போற்றி ஆலயத்தினின்றும் வெளிப்பட்டு வருகையில், திருக்கயிலையில் முன்னர் எய்தியிருந்த வினைத்தொடர்பு கூட்டுவிக்க, அழகே ஒரு திருவடிவென ஆலயத்துள் செல்லும் பரவையாரைக் காண்கின்றார், 

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 285)
புற்றிடம் விரும்பினாரைப் போற்றினர் தொழுது செல்வார்
சுற்றிய பரிசனங்கள் சூழ ஆளுடைய நம்பி
நற்பெரும் பான்மை கூட்ட நகை பொதிந்திலங்கு செவ்வாய்
விற்புரை நுதலின் வேற்கண் விளங்கிழை அவரைக் கண்டார்

(2)
'இவள் கற்பக மரத்தின் பூங்கொம்போ, காமன்தன் பெருவாழ்வோ, புண்ணியங்களின் உறைவிடமோ' என்று பலவாறு எண்ணி ஆரூரர் அதிசயிக்கின்றார்,

(குறிப்பு: உலகியலில் எவரொருவர்க்கும் பொதுவில் தோன்றும் காதலுணர்வோடு இந்நிகழ்வினைப் பொருத்திப் பார்ப்பது ஏற்புடையதன்று. தம்பிரான் தோழனார் இறுதியாய் 'இவள் சிவன்அருளோ' என்று வியப்பது அவர்தம் உள்ளத்தெழுந்த காதலின் தெய்வீகத் தன்மையைப் பறைசாற்றுகின்றது),

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 286) 
கற்பகத்தின் பூம்கொம்போ காமன்தன் பெருவாழ்வோ
பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ புயல்சுமந்து
விற்குவளை பவளமலர் மதிபூத்த விரைக்கொடியோ
அற்புதமோ சிவனருளோ அறியேன் என்றதிசயித்தார்

(3)
ஆரூர் மேவும் அற்புதக் கடவுளின் திருவருளால், திருவருள் சார்பன்றிப் பிறிதொன்றினைச் சிந்தித்தறியாத பரவையாரும், முந்தைய ஊழானது கூட்டுவிக்க, காண்போர் வியந்து போற்றும் தோற்றப் பொலிவினையுடைய நாவலூர் வேந்தரைக் கண்டு உளம் விரும்புகின்றார், 

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 288) 
தண்தரள மணித்தோடும் தகைத்தோடும் கடைபிறழும்
கெண்டைநெடும் கண்வியப்பக் கிளரொளிப் பூணுரவோனை
அண்டர்பிரான் திருவருளால் அயலறியா மனம்விரும்பப்
பண்டைவிதி கடைகூட்டப் பரவையாரும் கண்டார்

(4)
'முன்தோன்றி நிற்கும் இவர் அழகிற்கொரு இலக்கணமாய் விளங்கும் அறுமுகக் கடவுளோ?, மன்மதனாரோ? அல்லது செஞ்சடை அண்ணலான தியாகேசப் பரம்பொருளின் திருவருளைப் பூரணமாய்ப் பெற்றவரோ?, என் மனதினை இவ்விதமாய்க் கலங்கச் செய்யும் இவர் யாரோ? என்று பரவையார் நெகிழ்ந்துருகுகின்றார்,   

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 290) 
முன்னே வந்தெதிர்தோன்றும் முருகனோ பெருகொளியால்
தன்னேரில் மாரனோ தார்மார்பின் விஞ்சையனோ
மின்னேர் செஞ்சடை அண்ணல் மெய்யருள் பெற்றுடையவனோ
என்னேஎன் மனம்திரித்த இவன்யாரோ எனநினைந்தார்

(5)
நம்பியாரூரர் அருகிருந்த அன்பர்களிடம் 'கொடி போலும் இடையுடைய இப்பெண்ணின் நல்லாள் யார்? என்று வினவ, அவர்களும், 'இந்நங்கையின் நாமம் பரவையார், விண்ணவர்களும் நெருங்கிச் சேர்தற்கு அரிதான தன்மையர்' என்று புகல்கின்றனர்,

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 290) 
வன்தொண்டர் அதுகண்டுஎன் மனம்கொண்ட மயிலியலின்
இன்தொண்டைச் செங்கனிவாய் இளங்கொடிதான் யார்என்ன
அன்றங்கு முன்நின்றார் அவர்நங்கை பரவையார்
சென்(று) உம்பர் தரத்தார்க்கும் சேர்வரியார் எனச் செப்ப

சுந்தரர் (பரவையாரை வேண்டி ஆரூர் இறைவரிடம் விண்ணப்பித்தல்)

சுந்தரர் திருவாரூர் திருக்கோயிலில் வன்மீகநாதப் பரம்பொருளை வழிபட்டு ஆலயத்தினின்றும் வெளிவருகையில், ஆலயத்துள் செல்லும் பரவையாரைக் கண்டு காதல் கொள்கின்றார். 

(1)
திருவுடைப் பரவையாரின் தோற்றப் பொலிவு குறித்து பலவாறு எண்ணி அதிசயித்து, பண்டைய வினைத் தொடர்பினால் எய்தியுள்ள காதல் உணர்வினால் கட்டுண்டு, 'எனை ஆளுடைய இறைவர்பால் சென்று இவளை வேண்டிப் பெறுவேன்' என்றெண்ணியவாறு, பரவையார் சந்திப்பினால் ஏற்பட்டிருந்த உள மகிழ்வுடன் மீளவும் ஆலயத்துள் செல்கின்றார்,  

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 295) 
என்றினைய பலவு நினைந்(து) எம்பெருமான் அருள்வகையால் 
முன்தொடர்ந்து வரும்காதல் முறைமையினால் தொடக்குண்டு
நன்றெனை ஆட்கொண்டவர்பால் நண்ணுவன் என்றுள் மகிழ்ந்து
சென்றுடைய நம்பியும்போய்த் தேவர்பிரான் கோயில்புக

(2)
சுந்தரனார் பூங்கோயில் எனும் திருக்கருவறையைச் சென்று சேர்வதற்குள், பரவையார் புற்றிடம் கொண்ட புராதனரை வழிபட்டுப் பிறிதொரு வாயிலின் வழியே சென்று விடுகின்றார். வன்தொண்டனார் மென்மேலும் பெருகிவரும் காதலுணர்வினால் உந்தப்பட்டு, ஆரூர் மேவும் அண்ணலாரிடம் பரவையாரைத் தந்தருளுமாறு வேண்டித் தொழுகின்றார்,  

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 296) 
பரவையார் வலங்கொண்டு பணிந்தேத்தி முன்னரே
புரவலனார் கோயிலினின் ஒருமருங்கு புறப்பட்டார்
விரவுபெரும் காதலினால் மெல்லியலார் தமைவேண்டி
அரவின் ஆரம்புனைந்தார் அடிபணிந்தார் ஆரூரர்

சுந்தரர் (திருவாரூர் திருக்கோயிலுள் காதலியாரைத் தேடிச் செல்லுதல்):

சுந்தரர் ஆரூர் ஆலயத்தினின்றும் வெளிவருகையில், திருக்கோயிலுள் செல்லும் பரவையாரைக் கண்டு காதல் கொள்கின்றார். மீண்டுமொரு முறை ஆலயத்துள் சென்று தியாகேசப் பரம்பொருளிடம் பரவையாரைத் தந்தருளுமாறு விண்ணப்பிக்கின்றார்.

(1)
பின் கருவறையினின்றும் நீங்கி 'என் இன்னுயிரோடு கலந்த அன்னமாகிய பரவை எவ்வழியே சென்றாள்' என்று ஆலய வளாகத்துள் தேட முனைகின்றார், 

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 297) 
அவ்வாறு பணிந்தேத்தி அணியாரூர் மணிப்புற்றின்
மைவாழும் திருமிடற்று வானவர்பால் நின்றும்போந்து
எவ்வாறு சென்றாள்என் இன்னுயிராம் அன்னமெனச்
செவ்வாய்வெண் நகைக்கொடியைத் தேடுவாராயினார்

(2)
வன்தொண்டனார் காதலியாரைத் தேடிச் சென்ற அரியதோர் நிகழ்வினைப் பின்வரும் 3 திருப்பாடல்களில் விவரித்துப் போற்றுகின்றார் தெய்வச் சேக்கிழார், 

வினைகளை வேரறுத்தருளும் சிவபெருமானின் மீது மட்டுமே அன்பு பூண்டிருந்த என் உள்ளத்தில், அதற்கு இணையானதோர் பெருவிருப்பினைத் தோன்றுமாறு செய்து; என் சிந்தையையும் தன்வயமாக்கிய, திருவருள் வடிவினளாகிய அப்பரவை எவ்வழியே சென்றாள்?  

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 298) 
பாசமாம் வினைப் பற்றறுப்பான் மிகும்
ஆசை மேலுமொர்ஆசை அளிப்பதோர்
தேசின் மன்னிஎன் சிந்தை மயக்கிய
ஈசனார் அருள் எந்நெறிச் சென்றதே

(3)
விண்ணோர் நாயகரான ஆரூர் முதல்வரின் திருவடிகளையன்றிப் பிறிதொன்றினை விரும்பியறியாத என் உள்ளத்தில், நிலையிலாத விருப்பமொன்றினைத் தோற்றுவித்து வாட்டமுறச் செய்து, கற்பகக் கோடிபோலும் கடந்து சென்ற, திருவருள் வடிவினளாகிய அப்பரவை எவ்வழியே சென்றாள்?  

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 299) 
உம்பர் நாயகர் தம்கழல் அல்லது
நம்புமா(று) அறியேனை நடுக்குற
வம்பு மால்செய்து வல்லியின் ஒல்கிஇன்று
ஈசனார் அருள் எந்நெறிச் சென்றதே

(4)
வினைத்தொடர்பினால் பிறவியையும், பின்னர் முத்தியையும் நல்கியருளும் ஆரூர் அண்ணலாரின் திருவடிகளை மட்டுமே காதலுடன் போற்றிவந்த என் சிந்தையில் மயக்கத்தைத் தோற்றுவித்து, மானைப் போலும் விழித்துக் காதலுணர்வைப் பன்மடங்கு பெருகுவித்த, திருவருள் வடிவினளாகிய அப்பரவை எவ்வழியே சென்றாள்?      

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 300) 
பந்தம் வீடு தரும் பரமன் கழல்
சிந்தை ஆர்வுற உன்னுமென் சிந்தையை
வந்து மால்செய்து மானெனவே விழித்து
எந்தையார் அருள் எந்நெறிச் சென்றதே

(5)
இவ்வாறு மாதவச் செல்வியான பரவையாரைத் தேடியவாறே தேவாசிரியன் மண்டபத்தைச் சென்று சேர்கின்றார் தம்பிரான் தோழனார், 

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 301) 
என்று சாலவும் ஆற்றலர் என்னுயிர்
நின்ற(து) எங்கென நித்திலப் பூண்முலை
மன்றல் வார்குழல் வஞ்சியைத் தேடுவான்
சென்று தேவாசிரியனைச் சேர்ந்தபின்

சுந்தரர் (இறைவர் ஆரூர் வாழ் அடியவர்களின் கனவில் தோன்றி அருள்புரிதல்):

சுந்தரரும் பரவையாரும் (அன்றைய பகற்பொழுதில்) சந்தித்த கணமுதலே பிரிவுத் துயரால் பெரிதும் வாடியிருக்க, அவ்விருவரையும் திருக்கயிலையிலினின்றும் நீங்கி இப்புவியில் தோன்றுமாறு முன்னர் அருளியிருந்த தியாகேசப் பரம்பொருள் அன்றிரவே ஆரூர் அடியவர்களின் கனவில் எழுந்தருளிச் சென்று, 'இன்றே ஆரூரனுக்கும் பரவைக்கும் மணம் புரிவிப்பீர்' என்று கட்டளையிட்டு அருள் புரிகின்றார்,
-
(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 324) 
என்றின்னனவே பலவும் புகலும் இருளார் அளகச் சுருளோதியையும்
வன்தொண்டரையும் படிமேல் வரமுன்பு அருள்வான் அருளும் வகையார் நினைவார்
சென்(று) உம்பர்களும் பணியுசெல்வத் திருவாரூர்வாழ் பெருமான் அடிகள்
அன்(று) அங்கவர் மன்றலைநீர் செயுமென்று அடியார் அறியும் படியால் அருளி

சுந்தரர் (வைதீக மண வேள்வியில் பரவையாரின் கரம் பற்றுதல்):

தெய்வீகக் காதலர் இருவரின் பிரிவுத் துயராகிய இருளும், இரவுப் பொழுதின் இருளும் ஒருசேர நீங்குமாறுப் புலர்ந்த அன்றைய காலைப் பொழுதில், ஆரூர் வாழ் அடியவர்கள் தியாகேசப் பெருமானின் திருவருளை வியந்து போற்றியவாறு, நாவலூர் வேந்தரான சுந்தரர் மகிழும் வண்ணம், பரவையாருடனான திருமண வேள்வியினைச் சிறப்புற நிகழ்த்தி மகிழ்கின்றனர், 

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 326):
காமத் துயரில் கவல்வார் நெஞ்சில் கரையில் இருளும் கங்குற் கழிபோம்
யாமத்(து) இருளும் புலரக் கதிரோன் எழுகாலையில் வந்தடியார் கூடிச்
சேமத் துணையாம் அவர் பேரருளைத் தொழுதே திருநாவலர்கோன் மகிழத்
தாமக் குழலாள் பரவை வதுவை தகுநீர்மையினால் நிகழச் செய்தார்

சுந்தரர் (விறன்மிண்ட நாயனாரின் கோபமும், அதனால் வெளிப்பட்ட பிரகடனமும்):

(1)
சுந்தரர் ஆரூர் மேவும் ஆதிமூர்த்தியை வழிபடும் பெருவிருப்புடன் தியாகேசர் திருக்கோயிலுக்குச் செல்கின்றார். எண்ணிறந்த அடியவர் பெருமக்கள் குழுமியிருந்த தேவாசிரியன் மண்டபத்தைக் கடந்து செல்லுகையில், 'இத்தொண்டர்களுக்கு அடியவனாகும் பெரும்பேறு என்று கிட்டுமோ? என்று பெருநெகிழ்ச்சியுடன் உளத்துள் தொழுதவாறே பூங்கோயில் கருவறை நோக்கி முன்னேறிச் செல்கின்றார். 

(2)
அச்சமயம் அம்மண்டபத்தில் அடியவர்களின் நடுவே கொலு வீற்றிருந்த, 'அடியவர்களைத் தொழுத பின்னரே சிவமூர்த்தியை வணங்குதல் வேண்டும்' எனும் கொள்கை உறைப்புடைய விறன்மிண்ட நாயனார் 'ஆ! இச்சுந்தரர் இங்குள்ள அடியவர் திருக்கூட்டத்தினரை அருகாமையில் வந்து வணங்காமல், ஒருவாறு ஒதுங்கி செல்வதோ? இங்கனமாயின் வன்தொண்டரெனும் இவர் இக்கணமுதல் அடியவர் திருக்கூட்டத்தினின்றும் நீங்கியிருக்கட்டும்' என்று உறுதிபடப் புகல்கின்றார், 
-
(விறன்மிண்ட நாயனார் புராணம் - திருப்பாடல் 7):
திருவார் பெருமை திகழ்கின்ற தேவாசிரியனிடைப் பொலிந்து
மருவா நின்ற சிவனடியார் தம்மைத் தொழுது வந்தணையா(து)
ஒருவா(று) ஒதுங்கும் வன்தொண்டன் புறகென்(று) உரைப்பச் சிவனருளால் 
பெருகா நின்ற பெரும்பேறு பெற்றார் மற்றும் பெறநின்றார்
-
(குறிப்பு: 'அடியார்கள் மீது கொண்ட அதீத பக்தியால், வன்தொண்டர் இத்திருக்கூட்டத்திற்குப் புற(கு) என்றுரைத்து, திருவருளால் பெருகும் பெரும் பேற்றினை விறன்மிண்ட நாயனார் பெற்றார்' என்று தெய்வச் சேக்கிழார் போற்றியிருப்பது நெகிழ்விக்கும் தனித்துவச் சொல்லாடலாகும்)

(3)
மேன்மைமிகு அடியவர்கள் மேல் பூண்டிருந்த பக்திநெறியால் விறன்மிண்டரின் கோபம் அடுத்ததாக ஆரூர் மேவும் இறைவரின்பால் திரும்புகின்றது. 'இத்தன்மையரான வன்தொண்டரை ஆட்கொண்டு; ஆதரித்து; தோழமை பேணும் தகைமையினால் பிறைசூடும் அச்சிவ பரம்பொருளாரும் இச்சமயத்தினின்று இனி விலகியிருக்கட்டும்' என்று சிவஞான நிலையில் அரியதொரு பிரகடனம் செய்கின்றார்,  
-
(விறன்மிண்ட நாயனார் புராணம் - திருப்பாடல் 8):
சேணார் மேருச் சிலைவளைத்த சிவனார் அடியார் திருக்கூட்டம்
பேணா(து) ஏகும் ஊரனுக்கும் பிரானாம் தன்மைப் பிறைசூடிப்
பூணார்அரவம் புனைந்தார்க்கும் புறகென்(று) உரைக்க மற்றவர்பால் 
கோணா அருளைப் பெற்றார் மற்றினியார் பெருமை கூறுவார்
-
(குறிப்பு: இத்திருப்பாடலிலும், 'சிவபெருமானும் இத்திருக்கூட்டத்திற்குப் புறகு' என்றுரைத்த தன்மையினால் சிவபரம்பொருளின் திருவருளைப் பரிபூரணமாய்ப் பெற்றார் விறன்மிண்டனார்' என்று தெய்வச் சேக்கிழார் போற்றியிருப்பது நம் உள்ளத்தைக் கசிவிக்க வல்லது)

(4)
பின்வரும் திருப்பாடலில், 'தம்பிரான் தோழரான நம் சுந்தரனார் ஒப்புவமையில்லா திருத்தொண்டர் தொகையினை அருளிச் செய்வதற்குக் காரணர் விறன்மிண்ட நாயனாரே' என்று சேக்கிழார் பெருமானார் போற்றுகின்றார்.
-
(விறன்மிண்ட நாயனார் புராணம் - திருப்பாடல் 11):
வேறு பிறிதென் திருத்தொண்டத் தொகையால் உலகு விளங்கவரும்
பேறு தனக்குக் காரணராம் பிரானார் விறன்மிண்டரின் பெருமை
கூறும் அளவெம் அளவிற்றே அவர்தாள் சென்னி மேற்கொண்டே
ஆறை வணிகர் அமர்நீதி அன்பர் திருத்தொண்(டு) அறைகுவாம்

(5)
11 திருப்பாடல்களைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் விறன்மிண்ட நாயனார் புராணத்தில், விறன்மிண்டப் பெருந்தகையாரை 'எல்லை தெரிய ஒண்ணாதார்' என்று 4ஆம் திருப்பாடலிலும், 'நிகர்ஒன்றில்லாதார்' என்று 6ஆம் திருப்பாடலிலும் போற்றி மகிழ்கின்றார் தெய்வச் சேக்கிழார்.

சுந்தரர் (திருத்தொண்டர் தொகை பாட சிவபெருமான் அடியெடுத்துக் கொடுத்து அருள் புரிதல்):

சுந்தரனார் ஒரு சமயம் தியாகேசர் திருக்கோயிலுள், எண்ணிறந்த அடியவர்கள் கூடியிருந்த தேவாசிரியன் மண்டபத்தைக் கடந்து செல்லுகையில், 'இத்தொண்டர்களுக்கு அடியவனாகும் பெரும்பேறு என்று கிட்டுமோ? என்று உளத்துள் தொழுதவாறே பூங்கோயில் கருவறை நோக்கி முன்னேறிச் செல்கின்றார். 

(1)
மூலக் கருவறையில் இறைவரின் திருமுன்பு சென்று தொழும் வன்தொண்டரின் முன்னர், கோடி சூர்ய பிரகாசத்துடன் தியாகேசப் பரம்பொருள் வெளிப்பட்டுத் தோன்றுகிறார்,

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 336)
அடியவர்க்(கு) அடியனாவேன் என்னும் ஆதரவு கூரக்
கொடிநெடும் கொற்ற வாயில் பணிந்துகை குவித்துப் புக்கார்
கடிகொள் பூங்கொன்றை வேய்ந்தார் அவர்க்கெதிர் காணக் காட்டும்
படிஎதிர் தோன்றி நிற்கப் பாதங்கள் பணிந்து பூண்டு

(2)
பூங்கோயில் மேவும் புராதனர், தன் திருவடிகளைப் போற்றி நிற்கும் நம்பிகளின் உள்ளக் குறிப்புணர்ந்து, அடியவர்களின் வழித்தொண்டுச் சிறப்பினை வன்தொண்டருக்கு முதற்கண் உணர்வித்துப் பின்னர் 'சுந்தரா! நமது அடியவர்களின் பெருமையினை மேலும் கேட்பாய்' என்றருளிச் செய்கின்றார், 

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 341)
இன்னவாறேத்து நம்பிக்(கு) ஏறுசேவகனார் தாமும்
அந்நிலை அவர்தாம் வேண்டும் அதனையே அருள வேண்டி
மன்னுசீர் அடியார் தங்கள் வழித்தொண்டை உணர நல்கிப்
பின்னையும் அவர்கள் தங்கள் பெருமையை அருளிச் செய்வார்

(3)
அடிமைத் திறம் பூண்டொழுகும் தன் தோழருக்கு ஒப்புவமையிலா அடியவர் பெருமக்களின் மேன்மையினை அறிவித்தருளும் நான்மறை நாயகர் 'இத்தன்மையரான நம் தொண்டர்களைச் சென்று நீ அடைவாய்' என்றருளிச் செய்கின்றார்,

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 342)
பெருமையால் தம்மை ஒப்பார் பேணலால் எம்மைப் பெற்றார்
ஒருமையால் உலகை வெல்வார் ஊனமேல் ஒன்றும் இல்லார்
அருமையாம் நிலையில் நின்றார்அன்பினால் இன்பம்ஆர்வார்
இருமையும் கடந்து நின்றார் இவரைநீ அடைவாய் என்று

(4)
இறைவரின் அமுத மொழி கேட்கப் பெறும் நம்பிகளும் 'குற்றமற்ற பெருநெறியினை இன்றே நான் பெற்றேன்' என்று திருவடி தொழுது நெகிழ்கின்றார். மதி சூடும் அண்ணலாரும், 'இனி நம் அடியவர்களை சென்று முறைமையாக வணங்கி, குற்றமிலா மெய்மையான பாமாலையொன்றினால் போற்றுவாய்' என்று பணித்தருள்கின்றார், 

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 343) 
நாதனார் அருளிச் செய்ய நம்பியாரூரர் நானிங்கு
ஏதம்தீர் நெறியைப் பெற்றேன் என்றெதிர் வணங்கிப் போற்ற
நீதியால்அவர்கள் தம்மைப் பணிந்துநீ நிறைசொல் மாலை
கோதிலா வாய்மையாலே பாடென அண்ணல் கூற

(5)
பரவையார் கேள்வனார் பிறைமதிப் பரம்பொருளைப் பணிந்து, 'ஐயனே, வரம்பிலா சீர்மை பொருந்திய உம்முடைய அடியவர்களின் மேன்மையினை எங்கனம் வகுத்துணர்ந்து பாடுவேன்? எவ்விதத்திலும் அதற்குத் தகுதியற்ற எளியேனுக்கு நீரே மேன்மையான அப்பெரு ஞானத்தினை அளித்தருளல் வேண்டும்' என்று விண்ணப்பிக்கின்றார்,

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 344) 
தன்னை ஆளுடைய நாதன் தான்அருள் செய்யக் கேட்டுச்
சென்னியால் வணங்கி நின்ற திருமுனைப்பாடி நாடர்
இன்னவாறின்ன பண்பென்(று) ஏத்துகேன் அதற்(கு) யானார்
பன்னு பாமாலை பாடும் பரிசெனக்கருள் செய்என்ன

(6)
அம்பிகை பாகத்து அண்ணலாரும் உலகெலாம் உய்வு பெறுமாறு தன் திருவாக்கினால், 'தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் - என்று துவங்கி, எல்லையிலா புகழுடைய நம் தொண்டர்களைப் பாடுவாய்' என்று பேரருள் புரிந்து மறைகின்றார், 

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 345) 
தொல்லை மால்வரை பயந்த தூயாள்தன் திருப்பாகர்
அல்லல் தீர்ந்துலகுய்ய மறையளித்த திருவாக்கால்
தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்என்று
எல்லையில் வண்புகழாரை எடுத்திசைப்பா மொழிஎன்றார்

சுந்தரர் (திருத்தொண்டர் தொகையினால் அடியவர்களைப் போற்றிப் பணிதல்):

திருவாரூர் ஆலயக் கருவறையில் புற்றிடம் கொண்ட புராதனர் சுந்தரருக்குத் 'தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்' என்று அடியெடுத்துக் கொடுத்தருளி, 'அடியவர்களைப் போற்றும் குற்றமற்ற பனுவலொன்றைப் பாடுவாய்' என்றருள் புரிந்து மறைகின்றார்,

(1)
தியாகேசப் பரம்பொருளின் கட்டளையைச் சிரமேற்கொண்டு வன்தொண்டனார் தேவாசிரியன் மண்டபத்திற்குச் செல்கின்றார். தொலைவிலிருந்தே அங்கு கொலு வீற்றிருந்த அடியவர் பெருமக்களைப் பன்முறை வீழ்ந்தெழுந்து தொழுகின்றார். பின்னர் அருகாமையில் சென்று பணிவுடன் வணங்கியவாறே, 'சுந்தரருக்கு சமகாலத்திலும்; அவர் காலத்திற்கு முன்னரும் தோன்றியிருந்த 60 நாயன்மார்களைப் பட்டியலிட்டு, அப்பெருமக்கள் ஒவ்வொருவருக்கும் தன்னை அடியவனாகச் சமர்ப்பிக்கும் ஒப்புவமையில்லா திருத்தொண்டர் தொகையினை அருளிச் செய்கின்றார், 

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 347)
தூரத்தே திருக்கூட்டம் பலமுறையால் தொழுதன்பு
சேரத் தாழ்ந்தெழுந்(து) அருகு சென்றெய்தி நின்றழியா
வீரத்தார் எல்லார்க்கும் தனித்தனி வேறடியேன் என்று
ஆர்வத்தால் திருத்தொண்டத்தொகைப் பதிகம் அருள்செய்தார்

(திருத்தொண்டர் தொகை - திருப்பாடல் 1)
தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
திருநீல கண்டத்துக் குயவனார்க்கு அடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
இளையான்தன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன்
விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற்கு அடியேன்
அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக்கு அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே!!!

(2)
பின்னர் 11ஆம் நூற்றாண்டில் திருநாரையூரில் அவதரித்த நம்பியாண்டார் நம்பிகள், சுந்தரர் அருளிச் செய்துள்ள 60 நாயன்மார்களோடு, சுந்தரனார் மற்றும் அவர்தம் பெற்றோரான (திருத்தொண்டின் திறம் பேணிநின்ற) சடையனார் மற்றும் இசைஞானியார் ஆகியோரையும் அப்பட்டியலில் இணைத்து, நாயன்மார்களை 63ஆக தொகுத்து, 'திருத்தொண்டர் திருவந்தாதி' எனும் பனுவலை அருளிச் செய்கின்றார்.

சுந்தரர் (திருவாரூரில் நெல்மலைகளைக் குவித்த சிவ பூத கணங்கள்):

வேளாண் மரபினரான 'குண்டையூர் கிழார்' என்பார் சுந்தரரின் மீது அதீத அன்பும் பக்தியும் பூண்டொழுகி வரும் பண்பினர். தம்பிரான் தோழருக்கு நாள்தோறும் திருவமுது அமைக்கும் பொருட்டு, செந்நெல்; பருப்பு வகைகள்; சர்க்கரை முதலிய பல்வேறு வளங்களை பன்னெடு நாட்களாய் இடையறாது பரவையாரின் திருமாளிகைக்கு அனுப்புவிக்கும் திருத்தொண்டினைப் புரிந்து வருகின்றார்.  

ஒரு சமயம் மழையின்மையால் விளைச்சல் பெரிதும் குன்ற, போதுமான உணவுப் பொருட்களை அனுப்ப இயலாது போகின்றது. திருத்தொண்டு தடையுற்றதால் பெரிதும் வருந்தி, உணவும் உட்கொள்ளாது தாங்கொணாத் துயருடன் துயில் கொள்ளும் கிழாரின் கனவினில் தோன்றும் சிவபெருமான் 'சுந்தரனுக்கு அளிக்கும் பொருட்டு உனக்கு நெல் தந்தோம்' என்றருளிச் செய்கின்றார். சிவமூர்த்தியின் ஏவலால், குபேரன் குண்டையூர் முழுவதும் நெல்மலைகளைக் கொணர்ந்துக் குவிக்கின்றார். 

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 14):
ஆரூரன் தனக்குஉன்பால் நெல்தந்தோம் என்றருளி
நீரூரும் சடைமுடியார் நிதிக்கோமான் தனைஏவப்
பேரூர் மற்றதன்எல்லை அடங்கவும்நெல் மலைப்பிறங்கல்
காரூரும் நெடுவிசும்பும் கரக்க நிறைந்தோங்கியதால்.

பொழுது புலர்ந்ததும் நெற்குவியல்களைக் கண்டுப் பெரிதும் வியக்கும் கிழார் சுந்தரருக்கு இதனைத் தெரிவிக்கத் திருவாரூருக்கு விரைகின்றார். கிழார் வருமுன்பே தியாகேச மூர்த்தி அறிவிக்க நடந்தவையறியும் சுந்தரரும் குண்டையூரை நோக்கிப் பயணித்துச் செல்கின்றார். தம்பிரான் தோழரை எதிர்கொண்டு வணங்கும் கிழார் 'அடியவன் உமக்கு புரிந்து வந்த திருத்தொண்டின் பொருட்டு அண்டர் நாயகர் அருளியுள்ள நெல்மலைகள் மனிதரால் எடுக்கவொண்ணாதது' என்று விண்ணப்பிக்கின்றார். 
சுந்தரனார் 'குளிர்பிறை சூடும் நம் இறைவர் இவ்விதம் அருளியுள்ளது உங்கள் பாலுள்ள கருணையினால் அன்றோ' என்று கிழாரை இனிய மொழிகளால் சிறப்பித்து அவருடன் குண்டையூர் சென்று நெல்மலைகளைக் கண்ணுற்று வியக்கின்றார். அருகிலுள்ள கோளிலி ஆலயம் சென்று 'பெருமானே, வாள் போலும் கண்களையுடைய பரவை வாடி வருந்தாத வண்ணம் குண்டையூரில் சில நெற்கதிர்களைப் பெற்றேன், அதனைத் திருவாரூரில் சேர்ப்பிக்கக் கட்டளையிட்டு அருள்வாய். அனுதினமும் உன் திருவடிகளையே இடையறாது வணங்கிப் போற்றும் தொழிலையுடைய அடியவனுக்கு உனையன்றிப் பிறிதொரு புகலிடமும் உண்டோ ஐயனே!' என்று திருப்பதிகத்தால் போற்றுகின்றார்.

நீள நினைந்தடியேன் உனை நித்தலும் கைதொழுவேன்
வாளன கண்மடவாள் அவள்வாடி வருந்தாமே
கோளிலி எம்பெருமான் குண்டையூர்ச்சில நெல்லுப் பெற்றேன்
ஆளிலை எம்பெருமான் அவைஅட்டித் தரப்பணியே.
கோளிலி மேவும் கண்ணுதற் கடவுள் அசரீரியாய் 'இன்றிரவு நமது பூதங்கள் இந்நெல் மலைகளைத் திருவாரூர் முழுவதும் நிறையுமாறு குவிக்கும்' என்றருளிச் செய்கின்றார். மறு நாள் திருவாரூர் முழுவதிலும் குவிந்துள்ள நெல் மலைகளைக் கண்டு வியக்கும் பரவையார் திருவருட் திறத்தினை வியந்துப் போற்றி, அவரவர் இல்லத்தின் எல்லையிலுள்ள நெற்கதிர்களை அவரவர்களே கொள்ளுமாறு பறையறிவிக்கின்றார். பின் மாளிகையுள் சென்று, இவ்வற்புதங்கள் யாவிற்கும் மூல காரணமான, கணவனாரான தம்பிரான் தோழரின் திருவடிகளைப் பணிந்துப் போற்றுகின்றார், 

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 29):
அணியாரூர் மறுகதனில் ஆள்இயங்கப் பறையறைந்த
பணியாலே மனைநிறைத்துப் பாங்கெங்கும் நெற்கூடு
கணியாமல் கட்டிநகர் களிகூரப் பரவையார்
மணியாரம் புனைமார்பின் வன்தொண்டர் தமைப்பணிந்தார்.

சுந்தரர் (திருப்புகலூரில் செங்கற்கள் செம்பொன் கட்டிகளாக மாறுதல்):

சுந்தரரின் திருத்துணைவியாரான பரவையார் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருநாளன்று, எண்ணிறந்த அடியவர்களுக்குத் திருவமுது செய்வித்துப் பின் அவர்கட்கு வேண்டுவன அளித்தலாகிய நியமத்தினைப் பூண்டிருந்தார். அந்நிகழ்விற்குப் பொன் வேண்டிப் பெறுதற் பொருட்டு, அடியவர்களும் உடன்வரத் திருப்புகலூர் தலத்திற்குச் செல்கின்றார் வன்தொண்டனார் (குறிப்பு: இது பரவையார் கேள்வரின் 2வது புகலூர் யாத்திரை, 'முதன்முதலில் திருவாரூருக்கு வருகை புரியும் முன்னரே சுந்தரர் புகலூரைத் தரிசித்துள்ள நிகழ்வினை' திருமலைச் சருக்கத்தில் தெய்வச் சேக்கிழார் பதிவு செய்துள்ளார்). 

ஆலயத்துள் புகுந்து; திருச்சன்னிதியினை வலம் வந்து அருவுருவத்தில் எழுந்தருளியுள்ள அக்னிபுரீஸ்வரப் பரம்பொருளைக் கண்களாரத் தரிசித்துத் திருமுன்பு வீழ்ந்து பணிகின்றார். இதுகாறும் வழியடிமைத் தொண்டு புரிந்து வந்திருந்த தன்மையினால் எழுந்த அதீத காதலன்பில் மூழ்கித் திளைக்கின்றார், பொன் வேண்டும் குறிப்புடன் பாமாலையொன்றினால் போற்றிப் பரவுகின்றார் (இத்திருப்பதிகம் நமக்கின்று கிடைக்கப் பெறவில்லை),

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 47):
சென்று விரும்பித் திருப்புகலூர்த் தேவர் பெருமான் கோயில்மணி
முன்றில் பணிந்து வலம்கொண்டு முதல்வர் முன்பு வீழ்ந்திறைஞ்சித்
தொன்று மரபின் அடித்தொண்டு தோய்ந்த அன்பில் துதித்தெழுந்து
நின்று பதிக இசைபாடி நினைந்த கருத்து நிகழ்விப்பார்

இறைவரிடமிருந்து குறிப்பேதும் தோன்றாமையால் வன்தொண்டனார் கருவறையினின்றும் நீங்கி, உடன்வந்த அடியவர்களுடன் திருமடம் செல்லாது; ஆலய முன்றிலைச் சென்றடைகின்றார். அச்சமயத்தில் திருவருட் செயலால் தம்பிரான் தோழரின் மலர்க்கண்களில் துயில் பொருந்தி நிற்க, அங்கேயே சிறிது ஓய்வு கொள்ள முனைகின்றார். திருப்பணிக்கென அடுக்கியிருந்த செங்கற்கள் சிலவற்றை எடுத்து, அதன் மீது பட்டால்ஆன தன் மேலாடையை விரித்துத் துயில் கொள்கின்றார். 

சிறிது நேரத்தில் உறக்கம் நீங்கியெழுகையில், தலையணையாக வைத்திருந்த செங்கற்கள் யாவும் செம்பொன் கட்டிகளாகத் திகழ்வதைக் கண்ணுறுகின்றார், திருவருள் திறத்தினை வியந்து போற்றிப் பணிகின்றார். 
(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 50):
சுற்றுமிருந்த தொண்டர்களும் துயிலும் அளவில் துணைமலர்க்கண்
பற்றும் துயில் நீங்கிடப் பள்ளிஉணர்ந்தார் பரவை கேள்வனார்
வெற்றி விடையார் அருளாலே வேமண் கல்லே விரிசுடர்ச் செம்
பொன்திண் கல்லாயின கண்டு புகலூர் இறைவர் அருள்போற்றி.

'தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும்' எனும் திருப்பதிகத்தினால் புகலூர் மேவும் புண்ணியரின் பேரருட் திறத்தினைப் போற்றிப் பரவுகின்றார்,

(சுந்தரர் தேவாரம்: முதல் திருப்பாடல்):
தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும் சார்கினும் தொண்டர் தருகிலாப்
பொய்ம்மையாளரைப் பாடாதே; எந்தை புகலூர் பாடுமின் புலவீர்காள்
இம்மையே தரும்; சோறும் கூறையும் ஏத்தலாம்; இடர் கெடலுமாம்
அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.

சுந்தரர் (திருப்பனையூரில் நடனக் கோல தரிசனம்):

(1)
முப்புரி நூல் மார்பரான சுந்தரனார், திருப்புகலூரில் இறைவர் அருளிய செம்பொன் கட்டிகளைப் பரிசனங்கள் சுமந்து வர, அடியவர்களும் உடன் வர, காவிரியின் தென்கரைத் தலமான திருப்பனையூரைச் சென்றடைகின்றார்,

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 52):
பதிகம் பாடித் திருக்கடைக்காப்பணிந்து பரவிப் புறம்போந்தே
எதிரில்இன்பம் இம்மையே தருவார் அருள் பெற்றெழுந்தருளி
நிதியின் குவையும் உடன்கொண்டு நிறையும் நதியும் குறைமதியும்
பொதியும் சடையார் திருப்பனையூர் புகுவார் புரிநூல் மணிமார்பர்

(2)
சிவாலயத்தை நெருங்குகையில் திருப்பனையூர் முதல்வர் விண்மிசை எழுந்தருளி, திருமுடியில் பிறைமதியும் நதியுமாய்; திருநீறு துலங்கும் திருமேனியுடன்; திருச்செவிகளில் குழை தோடுகள் அணி செய்திருக்கத் திருநடக் கோலம் காண்பித்துப் பேரருள் புரிகின்றார். நம்பிகள் அகம் குழைந்துருகிப் பெருகும் காதலுடன் நிலமிசை வீழ்ந்து பணிந்து, காண்பதற்கரிய அத்திருக்கோலத்தைப் பாடல்கள் தோறும் சிறப்பித்து 'அவரே அழகியரே' எனும் பாமாலையால் ஆலமுண்ட அண்ணலைப் போற்றி செய்கின்றார்,

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 53):
செய்ய சடையார் திருப்பனையூர்ப் புறத்துத் திருக்கூத்தொடும் காட்சி
எய்த அருள எதிர் சென்றங்கெழுந்த விருப்பால் விழுந்திறைஞ்சி
ஐயர் தம்மை அரங்காடவல்லார் அவரே அழகியரென்று 
உய்ய உலகு பெறும்பதிகம் பாடி அருள் பெற்றுடன் போந்தார்

(சுந்தரர் தேவாரம்: திருப்பனையூர் - திருப்பாடல் 1):
மாட மாளிகை கோபுரத்தொடு மண்டபம் வளரும் வளர்பொழில்
பாடல் வண்டறையும் பழனத் திருப்பனையூர்த் 
தோடு பெய்தொரு காதினில் குழை தூங்கத் தொண்டர்கள் துள்ளிப் பாடநின்று 
ஆடுமாறு வல்லார் அவரே அழகியரே!!!

சுந்தரர் (திருவீழிமிழலைக்கு நடைக்காவண வரவேற்பு):

சுந்தரர் (திருவாரூருக்கு அருகிலுள்ள) நன்னிலத்தில் எழுந்தருளியுள்ள மதுவனேஸ்வரப் பரம்பொருளைத் தரிசித்துப் போற்றி அங்குள்ள திருமடமொன்றில் தங்கியிருக்கின்றார். திருவீழிமிழலை வாழ் அந்தணர்கள், வீழிமிழலையிலிருந்து நன்னிலம் வரையிலான பாதை முழுமைக்கும் (சுமார் 12 கி.மீ) நடைப்பாவாடையிட்டு, இருமருங்கிலும் ஆங்காங்கே வாழை;கமுகுகளை நிரைநிரையாக நாட்டி, தோரணங்களால் அலங்கரித்துப் பின் நன்னிலத்தில் தம்பிரான் தோழரை எதிர்கொண்டு வணங்கிப் போற்றியவாறு வீழிமிழலைக்கு அழைத்துச் செல்கின்றனர்.  

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 57):
பாடிஅங்கு வைகியபின் பரமர் வீழி மிழலையினில்
நீடு மறையால் மேம்பட்ட அந்தணாளர் நிறைந்தீண்டி
நாடு மகிழ அவ்வளவும் நடைக்காவணம் பாவாடையுடன்
மாடு கதலி பூகநிரை மல்க மணித்தோரண நிரைத்து

அங்கு பாற்கடல் வாசரான ஸ்ரீமகாவிஷ்ணு காதலோடு சிவபூஜைக்கென விண்ணினின்றும் கொணர்ந்த ஒப்புவமையில்லா விண்ணிழி விமானத்தினை முதலில் பணிந்துப் பின் தெய்வங்களும் உணர்தற்கரிய மிழலை இறையவரை உளமுருகத் தரிசித்து, அற்புதத் திருப்பதிகம் ஒன்றினால் சிவமூர்த்தியின் அருள் பெற்றோரைத் திருப்பாடல்கள் தோறும் குறிப்பிட்டுப் பின் 'அடியேனுக்கும் அருளுதீரே' என்று நயமாக விண்ணப்பித்துப் போற்றுகின்றார், 

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 58):
வந்து நம்பி தம்மை எதிர்கொண்டு புக்கார் மற்றவரும் 
சிந்தை மலர்ந்து திருவீழிமிழலை இறைஞ்சிச் சேண்விசும்பின்
முந்தை இழிந்த மொய்யொளிசேர் கோயில்தன்னை முன்வணங்கிப்
பந்தமறுக்கும் தம்பெருமான் பாதம் பரவிப் பணிகின்றார்.

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 59):
படங்கொள் அரவில் துயில்வோனும் பதுமத்தோனும் பரவரிய
விடங்கன் விண்ணோர் பெருமானை விரவும் புளகமுடன் பரவி
அடங்கல் வீழி கொண்டிருந்தீர் அடியேனுக்கும் அருளுமெனத்
தடங்கொள் செஞ்சொல் தமிழ்மாலை சாத்தியங்குச் சாருநாள்.

8ஆம் திருப்பாடலில் ஞானசம்பந்தருக்கும்; நாவுக்கரசு சுவாமிகளுக்கும், தமிழோடு இசைகேட்கும் பெருவிருப்பத்தால், வீழிமிழலையில் நாள்தோறும் படிக்காசு நல்கி அருள் புரிந்த அற்புத நிகழ்வினைப் பதிவு செய்து மகிழ்கின்றார்,   

(சுந்தரர் தேவாரம்: திருவீழிமிழலை: திருப்பாடல் 8):
பரந்த பாரிடம் ஊரிடைப் பலிபற்றிப் பாத்துணும் சுற்றமாயினீர்
தெரிந்த நான்மறையோர்க்கு இடமாய திருமிழலை 
இருந்து நீர்தமிழோடு இசைகேட்கும் இச்சையால் காசுநித்தல் நல்கினீர்
அருந்தண் வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுதிரே!!!

சுந்தரர் (மழபாடி தரிசனம் - கனவில் தோன்றிய கருணா மூர்த்தி):

சுந்தரனார் காவிரியின் தென்கரையிலுள்ள கண்டியூரைத் தொழுது, வடகரையிலுள்ள திருவையாறு தலத்தில் பணிந்துப் பின்னர் மீண்டும் தென்கரையிலுள்ள பூந்துருத்தி; திருவாலம்பொழில் தலங்களில் பணிந்தேத்தி அன்றைய இரவு ஆலம்பொழிலிலுள்ள திருமடமொன்றில் தங்கித் துயில் கொள்கின்றார். கண்ணுதற் கடவுள் கனவில் எழுந்தருளி வந்து 'மழபாடி வருவதற்கு நினைக்க மறந்தாயோ?' என்று அருள் புரிகின்றார். 

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 71):
தேவர் பெருமான் கண்டியூர் பணிந்து திருவையாறதனை
மேவி வணங்கிப் பூந்துருத்தி விமலர் பாதம் தொழுதிறைஞ்சிச்
சேவில் வருவார் திருவாலம்பொழிலில் சேர்ந்து தாழ்ந்திரவு
பாவு சயனத்தமர்ந்தருளிப் பள்ளி கொள்ளக் கனவின்கண்.

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 72):
மழபாடியினில் வருவதற்கு நினைக்க மறந்தாயோஎன்று
குழகாகியதம் கோலமெதிர் காட்டியருளக் குறித்துணர்ந்து
நிழலார் சோலைக் கரைப்பொன்னி வடபாலேறி நெடுமாடம்
அழகார் வீதி மழபாடி அணைந்தார் நம்பியாரூரர்.

தம்பிரான் தோழர் உளம் நெகிழ்ந்து மீண்டும் வடகரையிலுள்ள மழபாடி தலத்தினைச் சென்றடைகின்றார். அன்பர்கள் சூழ ஆலயத்துள் சென்று பாம்பணியும் பரம்பொருளை உடலெலாம் புளகமுற வீழ்ந்துப் பணிகின்றார். இவ்விடத்தில் ஒரு சிறு நுட்பம், உலகியலில், நமக்கு மிக நெருக்கமானவர்கள் குறித்த முக்கியமான நாளையோ; நிகழ்வையோ மறந்திருந்துப் பின் அவர்கள் சிறிது ஏமாற்றத்துடன் நமக்கதனை நினைவூட்டுகையில், தர்ம சங்கடத்துடன் மறந்ததற்கான காரணத்தினை ஒருவாறு விளக்க முனைந்துப் பின்னர் அவர்களின் மன வருத்தம் நீங்குமாறு முன்னினும் இரு மடங்காக மகிழ்வுறச் செய்து நாமும் உடன் சேர்ந்து மகிழ்வோம் அல்லவா?

இங்கு நம் சுந்தரனாரும் அதே நிலையில் மழபாடி முதல்வரின் திருச்சன்னிதியில் நின்று, 'பொன்போலும் மேனியனே, புலித்தோலினை அணிந்து மின்னல்போலும் ஒளி பொருந்திய செஞ்சடையில் கொன்றை சூடி அருளும் தலைவனே, உணர்ந்து அடைதற்கரிய மாமணியே, மழபாடியுள் அற்புதமாய் எழுந்தருளியுள்ள மாணிக்கமே, அடியேனுக்குற்ற தோழராகவும்; தாயாகவும்; தலைவராகவும்; இறைவராகவும்; யாவுமாகவும் விளங்கும் தன்மையனே, உனையன்றி இனி வேறெவரை நினைத்து விடப் போகின்றேன் ஐயனே? என்று கண்ணீர் பெருக்கித் திருப்பதிகத்தினால் போற்றுகின்றார், 

(சுந்தரர் தேவாரம் - திருமழபாடி - திருப்பாடல் 1)
பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே

ஒப்புவமையில்லாத திருப்பதிகம் என்றிதனைப் போற்றுகின்றார் தெய்வச் சேக்கிழார் ('தன்னேரில்லாப் பதிகமலர் சாத்தித் தொழுது').

சுந்தரர் (ஆனைக்காவிலொரு அற்புத தரிசனம்):

சுந்தரர், காவிரியின் வடகரையிலுள்ள மழபாடியைத் தொழுதுப் பின் திருவானைக்கா தலத்தினைச் சென்றடைகின்றார். எதிர்கொண்டு வணங்கிய திருத்தொண்டர்களை எதிர்வணங்கி ஆலயத்துள் சென்று, சிலந்தியும் வெள்ளை யானையும் வழிபாடு செய்த ஜம்புகேஸ்வரப் பரம்பொருளின் திருச்சன்னிதியினை அடைகின்றார்.  

உமையன்னை பணிந்தேத்திய அண்டர் நாயகரின் திருவடி மலர்களில் காதலொடு வீழ்ந்தெழுந்து, உடலெங்கும் புளகமுற, பெருநெகிழ்ச்சியினால் கண்ணருவி வெள்ளமெனப் பெருகித் திருமேனியெங்கும் வழிந்தோட, தன்வயமற்ற நிலையில் விம்மித் தொழுகின்றார், 

(ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - திருப்பாடல் 75):
செய்ய சடையார் திருவானைக்காவில் அணைந்து திருத்தொண்டர்
எய்த முன் வந்தெதிர் கொள்ள இறைஞ்சிக் கோயிலுள் புகுந்தே
ஐயர் கமலச் சேவடிக்கீழ் ஆர்வம் பெருக வீழ்ந்தெழுந்து
மெய்யு முகிழ்ப்பக் கண்பொழிநீர் வெள்ளம் பரப்ப விம்முவார்

'மறைகளாயின நான்கும்' என்று துவங்கும் திருப்பதிகத்தினால் ஆனைக்காவுடை ஆதியைப் போற்றி செய்கின்றார். ஆனைக்கா அண்ணலின் திருவடிகளைத் தொழும் அன்பர்கள் 'தன்னையும் ஆளாக உடையவர்' என்று திருப்பாடல்கள் தோறும் பணிந்தேத்திப் பரவுகின்றார், 

(சுந்தரர் தேவாரம் - திருவானைக்கா - திருப்பாடல் 1)
மறைகளாயின நான்கும் மற்றுள பொருள்களும் எல்லாத்
துறையும் தோத்திரத்திறையும் தொன்மையும் நன்மையும் ஆய
அறையும் பூம்புனல் ஆனைக்காவுடை ஆதியை நாளும்
இறைவன் என்றடி சேர்வார் எம்மையும் ஆளுடையாரே

7ஆம் திருப்பாடலில் சுவையான வரலாறொன்றினையும் பதிவு செய்கின்றார், சிவமூர்த்தியின் மீது அதீத பக்தி பூண்டிருந்த சோழ மன்னனொருவனின் முத்துமாலை காவிரியில் தவறி விழுந்து ஆற்றோடு சென்று விடுகின்றது. மனமிக வருந்தும் அவ்வேந்தன் ஆனைக்கா அண்ணலிடம், 'அடியவனின் ஆரத்தை ஏற்றருள் செய் ஐயனே' என்று வேண்ட, அவ்வாபரணத்தைத் திருமஞ்சனக் குடத்தில் புகுமாறு செய்து, திருமஞ்சன சமயத்தில் தன்னுடைய திருமுடியில் அதனை சூடிப் பேரருள் புரிந்த அருட்திறத்தினைப் போற்றுகின்றார். 

(சுந்தரர் தேவாரம் - திருவானைக்கா - திருப்பாடல் 7)
தாரமாகிய பொன்னித் தண்டுறை ஆடி விழுத்து
நீரில் நின்றடி போற்றி நின்மலா கொள்ளென ஆங்கே
ஆரம் கொண்டஎம் ஆனைக்காவுடை ஆதியை நாளும்
ஈரம் உள்ளவர் நாளும் எம்மையும் ஆளுடையாரே

சுந்தரர் (திருப்பாச்சிலாச்சிரமத்தில் வெகுண்டு முறையிட்டுப் பொன் பெறுதல்):

சுந்தரர் திருவானைக்காவைத் தொழுத பின்னர் திருப்பாச்சிலாச்சிரமம் எனும் தலத்தினைச் சென்றடைகின்றார். ஆலயத்தினை வலமாய் வணங்கி உட்சென்று பாச்சிலாச்சிரம இறைவரின் திருமுன்பு சென்று காதலுடன் பணிகின்றார், திருப்புகலூரில் முன்னர் வேண்டியது போலவே இவ்விடத்தும் பொன் வேண்டி விண்ணப்பிக்க, பிறைமதிப் பரம்பொருளோ பொருளேதும் அருளாதவராய்த் திருவிளையாடல் புரிகின்றார், 

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 79):
சென்று திருக்கோபுரம் இறைஞ்சித் தேவர் மலிந்த திருந்துமணி
முன்றில் வலங்கொண்டு உள்ளணைந்து முதல்வர் முன்பு வீழ்ந்திறைஞ்சி
நன்று பெருகும் பொருட்காதல் நயப்புப் பெருக நாதரெதிர்
நின்று பரவி நினைந்தபொருள் அருளாதொழிய நேர்நின்று.

மாறா அன்பும்; பொருள் பெறாத ஆற்றாமையும் ஒருசேர உள்ளத்திலெழத் தோழர் எனும் உரிமைப்பாட்டினால் உள்ளம் புழுங்கி, எலும்பும் கரைந்துருகுமாறு அங்குக் குழுமியிருந்த திருத்தொண்டர்களிடம் முறையிடும் பான்மையில் 'இவரலாது இல்லையோ பிரானார்' என்று திருப்பதிகம் பாடுகின்றார், 

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 80):
அன்பு நீங்கா அச்சமுடனடுத்த திருத்தோழமைப் பணியால் 
பொன்பெறாத திருவுள்ளம் புழுங்க அழுங்கிப் புறம்பொருபால்
முன்பு நின்ற திருத்தொண்டர் முகப்பே முறைப்பாடுடையார் போல்
என்பு கரைந்து பிரானார் மற்றிலையோ என்ன எடுக்கின்றார்.

'இப்பிறப்பு மட்டுமின்றி எழும் பிறவிகள் தோறும் வழித்தொண்டு புரிவேன்' என்று இறைவரிடம் முதலில் உறுதி கூறி விண்ணப்பித்துப் பின், இறையவர் ஒரு பித்தரே ஆகிலும்; தன்னை ஒரு பொருளாகக் கொள்ளாராயினும்; இப்பிறப்பில் அருளாது மறுமையில் மட்டுமே அருள்வாராகிலும்; பரிந்து ஒரு வார்த்தை பேசாராகிலும்; பொருளேதும் ஈயாராகிலும்; யாவர்க்கும் அருள் செய்துத் தனக்கு மட்டும் அருளாது போவாராகிலும்; யாவும் தருவதாகக் கூறி மெய்யர் போல் ஆட்கொண்டுப் பின் எதுவொன்றும் அருளாது பொய்யராய்ப் போவாராகிலும்; அரவம் சூடும் பண்பினர் ஆகிலும்; இடுகாட்டில் ஆடும் தன்மையர் ஆயினும்; எண்ணிறந்த முறை குறை கூறி முறையிட்டாலும் பிழை பொறுக்காது போவாராயினும், இவரன்றி அடியவனைப் பேணும் தலைவர் பிறிதொருவர் உளரோ? இல்லையென்றே உரைப்பேன்' என்று போற்றிப் பரவுகின்றார்.

(சுந்தரர் தேவாரம்: திருப்பாச்சிலாச்சிரமம் - திருப்பாடல் 1):
வைத்தனன் தனக்கே தலையும்என் நாவும் நெஞ்சமும் வஞ்சம்ஒன்றின்றி
உய்த்தனன் தனக்கே திருவடிக்கடிமை உரைத்தக்கால் உவமனே ஒக்கும்
பைத்த பாம்பார்த்தோர் கோவணத்தோடு பாச்சிலாச்சிராமத்தெம் பரமர்
பித்தரே ஒத்தோர் நச்சிலராகில் இவரலாது இல்லையோ பிரானார்!!!

'ஏசின அல்ல இகழ்ந்தன அல்ல' எனும் இறுதித் திருப்பாடல் வரி மூலம் 'இத்திருப்பாடல்களை ஏசும் பொருட்டோ; இகழும் பொருட்டோ பாடவில்லை' என்று தெளிவுறுத்துகின்றார். பாச்சிலாச்சிரமத்து இறைவர் சுந்தரனாரின் திருப்பாடல்களால் திருவுள்ளம் மிக மகிழ்ந்துப் பொற்குவைகளை அளித்து அருள் புரியத் தம்பிரான் தோழரும் அகமிக மகிழ்ந்துத் திருவருள் திறத்தினை வியந்து போற்றிப் பணிகின்றார்.

சுந்தரர் (திருப்பைஞ்ஞீலியில் கங்காளத் திருக்கோல தரிசனம்):

சுந்தரர், பாச்சிலாச்சிரமத்தில் இறைவரின் அருள் பெற்றுப் புறப்பட்டு காவிரிக்கு இருமருங்கிலுமுள்ள திருத்தலங்களைத் தரிசித்துப் பரவியவாறே, திருச்சி மாவட்டத்திலுள்ள காவிரியின் வடகரைத் தலமான திருப்பைஞ்ஞீலியைச் சென்றடைகின்றார் (நாவுக்கரசு சுவாமிகளுக்கு இத்தலத்துறை இறைவர் வேதியரின் வடிவில் பொதி சோறும் நீரும் அளித்து அருள் புரிந்துள்ளார்). வன்தொண்டர் ஆலயத்துள் புகுந்து, திருச்சுற்றினை வலமாய்ச் சென்று வணங்கி நிற்க, திருக்கருவறையில ஞீலிவனேஸ்வரப் பரம்பொருள் கங்காளத் திருவடிவம் காட்டிப் பேரருள் புரிகின்றார்.

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 83):
அப்பதி நீங்கி அருளினால் போகி ஆவின்அஞ்சாடுவார் நீடும்
எப்பெயர்ப் பதியும் இருமருங்கிறைஞ்சி இறைவர் பைஞ்ஞீலியை எய்திப்
பைப்பணி அணிவார் கோபுரம் இறைஞ்சிப் பாங்கமர் புடைவலம் கொண்டு
துப்புறழ் வேணியார்கழல் தொழுவார் தோன்று கங்காளரைக் கண்டார்!!!

சிவபெருமானின் 64 திருவடிவங்களுள் ஒன்றாகப் போற்றப் பெறுவது இக்கங்காளத் திருக்கோலம், இம்மூர்த்தி பிஷாடன வடிவத்தினின்றும் வேறுபட்டு விளங்கும் தன்மையர். வாமன மூர்த்தியின் முதுகெலும்பினைத் திருக்கரமொன்றில் தண்டமாக ஏந்தி, இடது திருப்பாதம் நன்கு ஊன்றியிருக்க, வலது திருப்பாதம் சற்றே வளைந்து நடப்பது போன்றிருக்க, புலியாடையொடும், திருமேனியெங்கிலும் பாம்பினை அணிந்தவாறும், நான்கு திருக்கரங்களொடும், பிக்ஷை பெறும் திருக்கோலத்திலும், எண்ணிறந்த பூதகணங்களும்; பெண்டிரும் சூழ்ந்திருந்துப் போற்றும் ஆச்சரியமான திருமேனி வடிவினர். 

தம்பிரான் தோழர் கங்காள மூர்த்தியைக் கண்ணருவி பெருகியோடத் தொழுதிறைஞ்சி, கங்காளருக்குப் பிக்ஷையிட வரும் மகளிர் அம்மூர்த்தியின் திருவடிவ காரணங்களை ஒவ்வொன்றாக வினவியவாறு போற்றும் தொனியில் 'காருலாவிய' எனும் பனுவலொன்றினை அமைத்துப் போற்றுகின்றார், 

(திருப்பைஞ்ஞீலி: சுந்தரர் தேவாரம்: திருப்பாடல் 1): 
காருலாவிய நஞ்சையுண்டிருள் கண்டர் வெண்தலையோடுகொண்டு 
ஊரெலாம் திரிந்தென் செய் ர்பலி ஓரிடத்திலே கொள்ளும் நீர்
பாரெலாம் பணிந்தும்மையே பரவிப் பணியும் பைஞ்ஞீலியீர்
ஆரமாவது நாகமோ சொலும் ஆரணீய விடங்கரே.

சுந்தரர் (காஞ்சிவாய்ப் பேரூரில் தில்லைத் திருக்காட்சி):

சுந்தரனார் கொங்கு தேசத்திலுள்ள காஞ்சிவாய்ப் பேரூரைச் சென்றடைகின்றார். ஆலயத்துள் புகுந்து, எதிர்கொள்ளும் அடியவர்களோடு திருச்சன்னிதியை வலமாய்ச் சென்று வணங்கியவாறு இறைவரின் திருமுன்பு செல்ல, பட்டீஸ்வரப் பரம்பொருள் தில்லைத் திருக்கோலம் காட்டிப் பேரருள் புரிகின்றார். தம்பிரான் தோழர் உச்சி கூப்பிய கையினராய்க் கண்ணருவி பாய, அம்பலவாணரின் பேரானந்தத் திருக்காட்சியினைக் கண்களாரத் தரிசிக்கின்றார்.  

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 89):
அத்திருப்பதியை அணைந்து; முன்தம்மை ஆண்டவர் கோயிலுள் புகுந்து
மெய்த்தவர் சூழ வலம்கொண்டு திருமுன் மேவுவார்; தம்மெதிர் விளங்க
நித்தனார் தில்லை மன்றுள் நின்றாடல் நீடியகோலம் நேர்காட்டக்
கைத்தலம் குவித்துக் கண்கள் ஆனந்தக் கலுழிநீர் பொழிதரக் கண்டார்

நிலமிசை வீழ்ந்துப் பணிந்து சிற்சபேச மூர்த்தியின் திவ்ய தரிசனத்தைக் கணநேரமும் பிரிய மாட்டாதவராய் உடனெழுந்து தொழுகின்றார். ஆடல் வல்லானின் மீதுள்ள காதலோ கரைகாணாது; என்பும் உருகுமாறு பல்கிப் பெருகிய வண்ணமிருக்கின்றது. புலன்களுக்கு எட்டாத சிவானந்தப் பெருவெள்ளத்தில் அமிழ்ந்துத் திளைக்கின்றார். 'சைவமுதல் தொண்டரான நம் நம்பிகள் பெருமானார் பெற்றுள்ள இவ்வரிய அனுபவத்தை யாரே விளக்கவல்லார்' என்று தெய்வச் சேக்கிழார் வியந்து போற்றுகின்றார்.  

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 90):
காண்டலும் தொழுது வீழ்ந்து உடனெழுந்து; கரையில்அன்பு என்பினை உருக்கப்
பூண்ட ஐம்புலனில் புலப்படா இன்பம் புணர்ந்து; மெய்யுணர்வினில் பொங்கத்
தாண்டவம் புரியும் தம்பிரானாரைத் தலைப்படக் கிடைத்தபின்; சைவ
ஆண்டகையாருக்கு அடுத்த அந்நிலைமை விளைவை யார் அளவறிந்து உரைப்பார்

ஒருவாறு தன்னிலை பெற்றவராய்ப் பேரூருறை முதல்வரின் தில்லைத் திருக்காட்சியைப் பாமாலையால் போற்றிப் பரவுகின்றார். விளக்கவொண்ணா அனுபவ நெகிழ்ச்சியில் மிகவும் தன்னிறைவு பெற்றவராய் 'பொற்சபை நாயகரின் அற்புதத் திருக்கோலத்தினை இந்நிலையில் தரிசிக்கப் பெற்ற பின்னர் இனிப்புறத்தே அடைவதற்குப் பிறிதொன்றும் உளதோ' என்று நெகிழ்ந்துருகுகின்றார். 

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 91):
அந்நிலை நிகழ்ந்த ஆரருள் பெற்ற அன்பனார்; இன்ப வெள்ளத்து
மன்னிய பாடல் மகிழ்ந்துடன் பரவி; வளம்பதி அதனிடை மருவிப்
பொன்மணி மன்றுள் எடுத்த சேவடியார் புரிநடம் கும்பிடப் பெற்றால்
என்னினிப் புறம்போய் எய்துவதென்று, மீண்டெழுந்தருளுதற்கு எழுவார்.

(குறிப்பு: சுந்தரனார் அருளிச் செய்துள்ள இப்பேரூர் திருப்பதிகம் நமக்கின்று கிடைக்கப் பெறவில்லை)

சுந்தரர் (கூடலையாற்றூர் தரிசனம் - வழித்துணையாய் வந்த இறைவர்):

சுந்தரர் திருமுதுகுன்றம் நோக்கிச் செல்லும் வழியில், கூடலையாற்றூர் தலத்தினைச் சேராதவராய் அதன் எல்லையைக் கடந்து மேலும் முன்னேறிச் செல்ல முனைகையில், ஆற்றூர் இறைவர் வேதியரின் திருவடிவு தாங்கி வன்தொண்டர் காணுமாறு எழுந்தருளி வருகின்றார். மறையவரை வணங்கி முதுகுன்றம் செல்லும் மார்க்கத்தினை வினவும் சுந்தரரிடம் இறையனார், 'கூடலையாற்றூருக்குச் செல்லும் வழி இதுவே' என்று பிறிதொரு மார்க்கத்தினைக் காண்பித்துப் பின் தாமே வழித்துணையாய் முன்னே செல்லத் துவங்குகின்றார்.   

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 101):
செப்பரும் பதியில் சேரார் திருமுதுகுன்றை நோக்கி
ஒப்பரும் புகழார் செல்லும் ஒருவழி உமையாளோடும்
மெய்ப் பரம்பொருளாய் உள்ளார் வேதியராகி நின்றார்
முப்புரி நூலும் தாங்கி நம்பியாரூரர் முன்பு

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 102):
நின்றவர் தம்மை நோக்கி நெகிழ்ந்த சிந்தையராய்த் தாழ்வார்
இன்றியாம் முதுகுன்றெய்த வழி எமக்கியம்பும் என்னக்
குன்ற வில்லாளியாரும் கூடலையாற்றூர் ஏறச்
சென்றது இவ்வழிதானென்று செல்வழித் துணையாய்ச் செல்ல.

மறுமொழியேதும் புகலாமல், மந்திரத்திற்குக் கட்டுப்பட்டாற் போன்று, கூப்பிய கரங்களோடு நான்மறை நாயகரைத் தொடரும் தம்பிரான் தோழர், சிறிது நேரத்தில் முன்னாகச் சென்றிருந்த அந்தணரைக் காணாது திகைப்புறுகின்றார், வழித்துணையாய் வந்தருளியது ஆற்றூர் மேவும் ஆதி மூர்த்தியே என்றுணர்ந்து உளம் நெகிழ்ந்து, 'அடிகள் இவ்வழி போந்த அதிசயம் அறியேனே' எனும் திருப்பதிகத்தினால் போற்றிப் பரவுகின்றார். 

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 103):
கண்டவர் கைகள் கூப்பித் தொழுதுபின் தொடர்வார்க் காணார்
வண்டலர் கொன்றையாரை வடிவுடை மழுவென்றேத்தி
அண்டர்தம் பெருமான் போந்த அதிசயம் அறியேனென்று
கொண்டெழு விருப்பினோடும் கூடலையாற்றூர் புக்கார்.

(சுந்தரர் தேவாரம் - கூடலையாற்றூர் - திருப்பாடல் 1)
வடியுடை மழுவேந்தி மதகரிஉரி போர்த்துப்
பொடியணி திருமேனிப் புரிகுழல் உமையோடும்
கொடியணி நெடுமாடக் கூடலையாற்றூரில்
அடிகள் இவ்வழிபோந்த அதிசயம் அறியேனே

சுந்தரர் (முதுகுன்றத்தில் பன்னீராயிரம் பொன் பெற்று ஆற்றிலிட்ட அற்புத நிகழ்வு):

சுந்தரர் கூடலையாற்றூரைத் தரிசித்துப் போற்றிய பின் திருமுதுகுன்றத்தினைச் சென்றடைகின்றார், ஆலயத்தினை வலமாக வந்து வணங்கி உட்புகுந்துத் திருச்சன்னிதியில் விருத்தகிரீஸ்வரப் பரம்பொருளைக் கண்களாரத் தரிசித்து, நிலமிசை வீழ்ந்துப் பணிந்துப் பின் பொன் வேண்டும் குறிப்புடன் 'நஞ்சியிடை' எனும் திருப்பதிகத்தினால், 'முதுகுன்றுறைப் பெருமானே, உம்மை மன வாக்கு காயங்களினால் வணங்கும் மெய்யடியார், தங்களது விண்ணப்பங்கள் உம்முடைய திருவருளால் இன்று கைகூடும்; நாளை சித்திக்கும் என்று எதிர்பார்ப்புடன் காத்திருந்துப் பின் அந்நிலையிலேயே இறந்தும் விட்டால் அதன் பின்னர் நீர் அவர்களுக்கு அருள்வதற்கு யாது உளது? ஆதலின் விரைந்து அருள் புரிவீர்' என்று நயம்பட விண்ணப்பித்துப் போற்றுகின்றார்.  

(திருமுதுகுன்றம் - சுந்தரர் தேவாரம்: திருப்பாடல் 1)
நஞ்சி இடைஇன்று நாளையென்று உம்மை நச்சுவார்
துஞ்சியிட்டால் பின்னைச் செய்வதென் அடிகேள்சொலீர்
பஞ்சியிடப் புட்டில் கீறுமோ பணியீர் அருள்
முஞ்சியிடைச்சங்கம் ஆர்க்கும் சீர்முதுகுன்றரே

முதுகுன்ற இறைவர் பொருளை அருளவிருக்கிறார் என்பதனைத் திருவருட் குறிப்பினால் உணரப் பெறும் தம்பிரான் தோழர் அகம் குளிர்ந்து, 'மெய்யை முற்றப் பொடிப் பூசியோர் நம்பி' எனும் மற்றுமொரு திருப்பதிகத்தினால் 'எழு பிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே' என்று போற்றுகின்றார், 

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 106):
நாதர்பால் பொருள்தாம் வேண்டி நண்ணிய வண்ணமெல்லாம்
கோதறு மனத்துள் கொண்ட குறிப்பொடும் பரவும் போது
தாதவிழ் கொன்றை வேய்ந்தார் தரஅருள் பெறுவார் சைவ
வேதியர் தலைவர் மீண்டும் மெய்யில் வெண்பொடியும் பாட

(திருமுதுகுன்றம் - சுந்தரர் தேவாரம்: திருப்பாடல் 1)
மெய்யை முற்றப்பொடிப் பூசியொர் நம்பி வேதம் நான்கும் விரித்தோதியொர் நம்பி
கையில் ஓர் வெண்மழு ஏந்தியொர் நம்பி கண்ணும் மூன்றுடையான் ஒரு நம்பி
செய்யநம் பிசிறு செஞ்சடை நம்பி திரிபுரம் தீயெழச் செற்றதோர் வில்லால்
எய்த நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே 

குளிர்பிறை அணிந்தருளும் செஞ்சடைக் கடவுள் வன்தொண்டரின் தீந்தமிழ்ப் பனுவல்களால் திருவுள்ளம் மிக மகிழ்ந்துப் பன்னீராயிரம் பொன்னினை அளித்தருள் புரிகின்றார். பெரிதும் மகிழும் சுந்தரனார் மீண்டுமொரு முறை நிலமிசை வீழ்ந்துப் பணிந்தெழுந்து, சிவலிங்கத் திருமேனிக்கு இன்னமும் அருகாகச் சென்று 'பெருமானே, தாம் அருளியுள்ள இப்பொற்குவியல்களைத் திருவாரூரிலுள்ளோர் யாவரும் அதிசயிக்குமாறு அவ்விடத்தில் வருவித்துத் தருதல் வேண்டும்' என்று விண்ணப்பிக்கின்றார். முதுகுன்றம் மேவும் மணிகண்டரும் விண்ணொலியாய் 'ஆரூரனே! இப்பொருளை இங்குள்ள மணிமுத்தாற்றிலிட்டுத் திருவாரூர்க் குளத்தில் பெற்றுக் கொள்வாய்' என்று அருள் புரிகின்றார்.  

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 108):
அருளும் இக்கனகமெல்லாம் அடியனேற்கு ஆரூருள்ளோர்
மருளுற வியப்ப அங்கே வரப்பெற வேண்டும் என்னத்
தெருளுற எழுந்த வாக்கால் செழுமணி முத்தாற்றிட்டிப்
பொருளினை முழுதும் ஆரூர்க் குளத்திற்போய்க் கொள்க என்றார்

சுந்தரர் (கானாட்டுமுள்ளூரில் எதிர்க்காட்சி):

ஆலயத்தினை அடையுமுன்னரே, அத்தலத்துறை இறைவர் (பிறிதொரு வடிவில் தோன்றாமல்) தன் சுயவடிவிலேயே திருக்காட்சி தந்தருளும் நிகழ்வினை 'எதிர்க்காட்சி' என்பர். வன்தொண்டருக்கு நான்கு திருத்தலங்களில் இவ்விதமான திருக்காட்சி கிடைக்கப் பெற்றுள்ளதாகப் பெரிய புராணம் பறைசாற்றுகின்றது, அவை முறையே சீர்காழித் தல எல்லையில்; திருப்பனையூர்; கானாட்டுமுள்ளூர் மற்றும் திருக்கோலக்கா. 

தம்பிரான் தோழர், தல யாத்திரையாகச் செல்லும் வழியில், காவிரியின் வடகரையிலுள்ள கானாட்டுமுள்ளூர் எனும் திருத்தலத்தினைச் சென்றடைகின்றார். சோலைகளால் சூழப்பெற்று, செந்நெற் பயிர்கள் விளைந்திருக்கும் பசுமையான வயல்களினூடே நடந்தவாறு அங்குள்ள சிவாலயம் நோக்கிச் செல்லுகையில், தல இறைவரான பதஞ்சலிநாதப் பரம்பொருள் எதிர்க்காட்சி தந்தருள் புரிகின்றார். நம்பியாரூரர் உளமுருகிப் பணிந்து 'கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே' எனும் பனுவலினால் மறைமுதல்வரைப் போற்றி செய்கின்றார்,

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 120):
கானாட்டுமுள்ளூரைச் சாரும் போது கண்ணுதலார் எதிர்காட்சி கொடுப்பக் கண்டு
தூநாள்மென் மலர்க்கொன்றைச் சடையார் செய்ய துணைப்பாத மலர்கண்டு தொழுதேனென்று
வானாளும் திருப்பதிகம் வள்வாய் என்னும் வண்தமிழின் தொடைமாலை மலரச் சாத்தித்
தேனாரும் மலர்ச்சோலை மருங்கு சூழ்ந்த திருஎதிர்கொள்பாடியினை எய்தச் செல்வார்

(சுந்தரர் தேவாரம்: கானாட்டுமுள்ளூர் - திருப்பாடல் 1)
வள்வாய மதிமிளிரும் வளர் சடையினானை 
மறையவனை; வாய்மொழியை வானவர் தம்கோனைப்
புள்வாயைக் கீண்டுலகம் விழுங்கி உமிழ்ந்தானைப்
பொன்னிறத்தின் முப்புரிநூல் நான்முகத்தினானை
முள்வாய மடல்தழுவி முடத்தாழை ஈன்று
மொட்டலர்ந்து விரைநாறு முருகுவிரி பொழில்சூழ்
கள்வாய கருங்குவளை கண்வளரும் கழனிக்
கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே!!!

சுந்தரர் (திருவாரூர் குளத்திலிருந்து எடுத்த பன்னீராயிரம் பொன்)

சுந்தரரும் பரவையாரும் திருவாரூரில் திருவருளால் மகிழ்ந்திருக்கும் நாட்களில், வன்தொண்டர் பரவையாரிடம் 'முதுகுன்றப் பெருமான் முன்னர் நமக்கருளிய நிதியங்களை மணிமுத்தாற்றிலிட்டேன், அதனை நம் துணைவராகிய திருவாரூர் இறைவரின் கமலாலயக் குளத்திலிருந்து, அப்பெருமானின் அருளால் எடுத்து வருதற்கு உடன் வருவாய்' என்றுரைக்கின்றார் ('துணைவர்' என்று உரிமையன்பினால் சுந்தரனார் குறிப்பது நெகிழ்விக்கும் சொல்லாடலன்றோ).  

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 127):
நாயனார் முதுகுன்றர் நமக்களித்த நன்னிதியம்
தூயமணி முத்தாற்றில் புகவிட்டேம் துணைவர்அவர்
கோயிலின் மாளிகை மேல்பால் குளத்தில் அவர்அருளாலே
போய்எடுத்துக் கொடுபோதப் போதுவாய் எனப்புகல

பரவையார் புன்முறுவலுடன் 'இது என்ன அதிசயம்' என்று வியப்புற, 'பரவையே! நம் பெருமானின் அருளால் அப்பொன்னினை எடுத்துனக்குத் தருவது ஒருக்காலும் பொய்க்காது' என்று உறுதி கூறிப் பூங்கோயில் மேவும் புராதனரைத் தரிசித்துப் போற்றி, ஆலயத்தினை வலமாய் வந்து மேற்குப் புறத்திலுள்ள திருக்குளத்தினை அடைகின்றார். பரவையாரைப் படித்துறையிலேயே இருத்திக் குளத்தினுள் இறங்கி, அப்பொழுது இட்டாற் போன்று பொற்குவியல்களைத் தேடத் துவங்குகின்றார்.   

சுந்தரரின் திருப்பாடலைக் கேட்கும் திருவுள்ளத்தால் இறைவர் பொன்னினைத் தந்தருளாமல் திருவிளையாடல் புரிகின்றார். அது கண்டு பரவையாரும் விளையாட்டாய்ச் சிறிது பரிகசிக்கும் தொனியில் 'ஆற்றிலிட்டுக் குளத்தில் தேடும் எம் தலைவரே, இறைவர் தமக்கருளும் தன்மையும் இதுவோ?' என்று புகலத் தம்பிரான் தோழரும் 'பொன்போலும் திருமேனியுடைய பரம்பொருளே, புலித்தோல் அணிந்தருளும் புண்ணியனே, முப்புரமெரித்தருளும் முதுகுன்ற முதல்வனே, இப்பரவையிடத்துத் தோன்றும் பரிகாசப் புன்னகை மாறுமாறுத் தாம் முன்னர் அறிவித்த வண்ணம் இவ்விடத்தில் பொற்குவியல்களை வருவித்துத் தந்தருள வேண்டும்' என்று உளமுருகப் பாடுகின்றார், 

(சுந்தரர் தேவாரம்: திருமுதுகுன்றம் - திருப்பாடல் 1)
பொன்செய்த மேனியினீர் புலித்தோலை அரைக்கசைத்தீர்
முன்செய்த மூஎயிலும் எரித்தீர் முதுகுன்றமர்ந்தீர்
மின்செய்த நுண்ணிடையாள் பரவைஇவள் தன்முகப்பே
என்செய்தவாறு அடிகேள் அடியேன் இட்டளம் கெடவே!!!

ஒரு சுவையான குறிப்பு, சுந்தரனார் நின்று பாடும் இடமோ தியாகேச மூர்த்தியின் ஷேத்திரத் திருக்குளத்தில் எனினும் போற்றிப் பாடுவதோ முதுகுன்றப் பரம்பொருளின் அருளினை வேண்டி, அளித்தவரிடமே முறையிட்டுப் பெறுவதன்றோ முறை! 8ஆம் திருப்பாடல் நிறைவுறும் வரையிலும் இறைவர் அருளாதிருக்க, அற்புதத் தன்மை வாய்ந்த 9ஆம் திருப்பாடலில் முதுகுன்ற இறைவரை ஆடல் வல்லானின் திருநாமத்தால் 'கூத்தா தந்தருளாய்' என்று விண்ணப்பித்துப் போற்றுகின்றார், 

(சுந்தரர் தேவாரம்: திருமுதுகுன்றம் - திருப்பாடல் 9)
ஏத்தாது இருந்தறியேன் இமையோர்தனி நாயகனே
மூத்தாய் உலகுக்கெல்லாம் முதுகுன்றம் அமர்ந்தவனே
பூத்தாரும் குழலாள் பரவையிவள் தன்முகப்பே
கூத்தா தந்தருளாய் கொடியேன் இட்டளம் கெடவே.

இறையனார் திருவுள்ளம் மிக மகிழ்ந்துப் பொன்னினைத் தருவித்தருள, முன்னர் முதுகுன்றப் பெருமானிடம் வேண்டியிருந்தது போலவே, திருவாரூர் வாழ் அன்பர்கள் யாவரும் 'இதென்ன அதிசயம், இத்தன்மையில் அருளைப் பெற்றோரும் உளரோ? ' என்று திருவருட் திறத்தினை வியந்து போற்றப் பெரு நிதியங்களைக் கரையில் கொணர்ந்து சேர்க்கின்றார் தம்பிரான் தோழர்.