சுந்தரர் (சேரமான் பெருமாள் நாயனாரின் திருக்கயிலை யாத்திரை):

(1)
சுந்தரர் திருக்கயிலைக்கு எழுந்தருளிச் செல்வதனைத் திருவருட் குறிப்பினால் அறியப் பெறும் சேரமான் பெருமாள் நாயனார், புரவியொன்றின் மீதேறிக் காற்றினும் கடிய வேகத்தில் திருஅஞ்சைக்களத்தைச் சென்று சேர்கின்றார். விண்மிசை மெய்த்தொண்டரான ஆரூரர் அயிராவணத்தில் ஆரோகணித்துச் செல்வதைக் கண்ணுற்றுத் தோழரின் பிரிவைத் தரிக்கவொண்ணாதவராய்ப் பரியினை விரைந்து செலுத்துகின்றார்,  

(வெள்ளானைச் சருக்கம் - திருப்பாடல் 35)
சேரர் தம்பிரான் தம்பிரான் தோழர்தம் செயலறிந்(து) அப்போதே
சார நின்றதோர் பரியினை மிசைக்கொண்டு திருஅஞ்சைக்களம் சார்வார்
வீர வெண்களிறு உகைத்துவிண் மேற்செலும் மெய்த்தொண்டர் தமைக்கண்டார்
பாரில் நின்றிலர் சென்றதம் மனத்தொடு பரியும்முன் செலவிட்டார்

(2)
தம்பிரான் தோழருடன் தாமும் திருக்கயிலை செல்லும் உளக் குறிப்புடன், சிவாகம நெறிநின்று பலகாலும் ஓதிய திருப்பஞ்சாட்சர மந்திரத்தை அப்புரவியின் செவியில் ஓத, அச்சிறப்பினால் அக்குதிரையானது விண்ணில் எழும்பிப் பாய்ந்து, வெள்ளை யானையில் எழுந்தருளிச் செல்லும் நம்பியாரூரரை வலமாய்ச் சென்று வணங்கியவாறு, வன்தொண்டரின் முன்னாகச் செல்கின்றது, 

(வெள்ளானைச் சருக்கம் - திருப்பாடல் 36)
விட்ட வெம்பரிச் செவியினில் புவிமுதல் வேந்தர்தாம் விதியாலே
இட்டமாம்சிவ மந்திரம் ஓதலின் இருவிசும்பெழப் பாய்ந்து
மட்டலர்ந்த பைந்தெரியல் வன்தொண்டர்மேல் கொண்ட மாதங்கத்தை
முட்ட எய்திமுன் வலம்கொண்டு சென்றது மற்றதன் முன்னாக

No comments:

Post a Comment