சுந்தரர் (சேரமான் நாயனாரின் அரண்மனையிலொரு மாகேஸ்வர பூஜை):

சேரமான் நாயனார் திருவாரூரிலிருந்து கொடுங்களூருக்குத் தம்முடன் பயணித்து வந்திருந்த சுந்தரருக்கு முதலில் திருஅஞ்சைக்கள ஆலயத்தைத் தரிசனம் செய்வித்துப் பின் விழாக் கோலம் பூண்டிருந்த தம்முடைய அரண்மனைக்கு அழைத்துச் செல்கின்றார். நம்பிகளை அரியணையில் அமர்வித்து, பொற்கலசத்திலுள்ள நன்னீரினை அவர்தம் தேவியர் ஏந்தி வார்க்க, நம்பியாரூரரின் பிறவிப் பிணி போக்கும் திருவடிகளைத் தாமே விளக்கத் துவங்குகின்றார் (சேரர்கோனின் தேவியரைத் தெய்வச் சேக்கிழார் முதன்முதலில் அறிமுகப்படுத்தும் பகுதியிது என்பது குறிப்பிடத் தக்கது).

தம்பிரான் தோழர் தம் திருவடிகளை உள்வாங்கிக் கொண்டு 'இச்செயல் கூடாது' என்றருளிச் செய்ய,  'கார்கொண்ட கொடைக் கழறிற்றறிவார்க்கும் அடியேன்' என்று நம்பிகளால் போற்றப் பெறும் பெரும்தவமுடைய நம் சேரமான் நாயனார் நிலத்தில் உடல் தோய நம்பிகளின் திருமுன்பு வீழ்ந்து பணிந்து, 'தம்மீது கொண்டுள்ள அன்பின் முறைமையினால் அடியவன் புரியும் பூசனைகள் யாவற்றையும் மறுக்காது ஏற்றருள வேண்டும்' என்று அகம் குழைந்து விண்ணப்பிக்கின்றார்.   

(சேரமான் பெருமாள் நாயனார் புராணம்: திருப்பாடல் 151):
செம்பொற் கரக வாசநீர் தேவி மார்கள் எடுத்தேந்த
அம்பொற் பாதம் தாம் விளக்கியருளப் புகலும் ஆரூரர்
தம்பொன் தாளை வாங்கிஇது தகாதென்றருளத் தரணியில்வீழ்ந்து 
எம் பெற்றிமையால் செய்தன ஈங்கெல்லாம் இசைய வேண்டுமென

சுந்தரர், அன்பினால் நெகிழ்ந்துருகிக் கண்ணீர் மல்க நின்றிருக்கும் சேரனாரின் விண்ணப்பித்தினை மறுக்க இயலாதவராய், சேரர்கோன் முறைமைப்படி புரிந்திருந்த பூசனைகள் யாவையும் கண்ட வண்ணமிருக்கின்றார். பின்னர் சேரனாருடன் திருவமுது செய்து மகிழ்கின்றார். 

(சேரமான் பெருமாள் நாயனார் புராணம்: திருப்பாடல் 152):
பெருமாள் வேண்ட எதிர்மறுக்க மாட்டார் அன்பின் பெருந்தகையார்
திருமா நெடுந்தோள் உதியர்பிரான் செய்த எல்லாம் கண்டிருந்தார்
அருமானங்கொள் பூசனைகள் அடைவே எல்லாம் அளித்ததற்பின்
ஒருமாமதி வெண்குடை வேந்தருடனே அமுது செய்துவந்தார்

பின்னர் அற்புத அற்புதமான ஆடல் பாடல்கள்; இசை மற்றும் எண்ணிறந்த வினோதமூட்டும் கலை நிகழ்ச்சிகளைக் காலங்கள் தோறும் நிகழுமாறு செய்தும், நறுமணம் வீசும் குளிர்ந்த சோலைகளில் அமர்வித்தும் ஆளுடைய நம்பிகளை மகிழ்வித்து உள்ளம் உவக்கின்றார் சேரமான் நாயனார். 

(சேரமான் பெருமாள் நாயனார் புராணம்: திருப்பாடல் 154):
பாடல் ஆடல் இன்னியங்கள் பயிறன் முதலாம் பண்ணையினில்
நீடும் இனிய விநோதங்கள் நெருங்கு காலம்தொறும் நிகழ
மாடு விரைப் பூந்தரு மணம்செய் ஆராமங்கள் வைகுவித்ததுக்
கூட முனைப்பாடியர் கோவைக் கொண்டு மகிழ்ந்தார் கோதையார்

No comments:

Post a Comment