சுந்தரர் (திருநந்திதேவர் சேரமான் நாயனாரை அழைத்து வருதல்):

தம்பிரான் தோழரும் சேரமான் நாயனாரும் திருக்கயிலையின் தெற்கு வாயிலைக் கடந்து உட்செல்ல, இறைவரின் அருளாணை இல்லாமையினால் சேரனார் திருஅணுக்கன் வாயிலில் தடையுற்று நிற்க நேரிடுகின்றது. 

வன்தொண்டர் உட்சென்று திருக்கயிலைப் பரம்பொருளைப் பணிந்து போற்றித் தொழுது, சேரனார் மணிவாயிலில் நின்றிருப்பதனை விண்ணப்பிக்க, மேருமலையினை வில்லாகக் கொண்டருளும் முதல்வரும் 'சேரரை இவ்விடம் அழைத்து வருக' என்று திருநந்திதேவரைப் பணித்தருள்கின்றார். மணிவாயிலில் திருநந்திதேவர் இறைவரின் அருளாணையைத் தெரிவிக்க, சேரனார் கயிலையுறைக் கடவுளின் திருவடிகளைத் தொழுதுய்ய விரைகின்றார், 

(வெள்ளானைச் சருக்கம் - திருப்பாடல் 44):
நின்ற வன்தொண்டர் நீரணி வேணியர் நிறைமலர்க் கழல்சாரச்
சென்று சேரலன் திருமணி வாயிலின் புறத்தினன் எனச்செப்பக்
குன்ற வில்லியார் பெரிய தேவரைச் சென்று கொணர்கென அவரெய்தி
வென்றி வானவர்க்(கு) அருளிப்பாடு எனஅவர் கழல்தொழ விரைந்தெய்தி

(குறிப்பு: 'பெரிய தேவர்' என்று திருநந்திதேவரைத் தெய்வச் சேக்கிழார் குறித்துள்ளது அற்புதச் சொல்லாடல்)

No comments:

Post a Comment