உபமன்யு மாமுனிவர் போற்றும் ஆடி சுவாதி நாயகன்:

தெய்வச் சேக்கிழார் அருளியுள்ள பெரிய புராணம் சுந்தரரில் துவங்கி சுந்தரரிலேயே நிறைவுறுகின்றது. இனி இப்பதிவில் சுந்தரனார் தொடர்பான பெரிய புராணத் துவக்க நிகழ்வுகளை சிந்தித்து மகிழ்வோம்,

(1)
திருக்கயிலை மலையடிவாரத்தில், எவரொருவராலும் இத்தன்மையர் என்றறியவொண்ணா சிவபரம்பொருளை இடையறாது தியானிக்கும் பெருஞ்சிறப்பினை உடைய உபமன்யு முனிவர், சிவயோகியர் திருக்கூட்டத்தின் நடுநாயகமாய் எழுந்தருளி இருக்கின்றார்,  

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 23)
அன்ன தன்திருத் தாழ்வரையின் இடத்து
இன்ன தன்மையன் என்றறியாச் சிவன்
தன்னையே உணர்ந்(து) ஆர்வம் தழைக்கின்றான்
உன்னரும் சீர் உபமன்னியமுனி

(2)
இம்மாமுனிவர், யாதவ குலத் தோன்றலாகவும்; துவாரகை வேந்தராகவும்; கீதாச்சாரியனாகவும் விளங்கியருளும் மாபாரதக் கண்ணனுக்கு சிவதீட்சை அளித்தருளி, சிவசகஸ்ரநாமத்தையும் உபதேசித்து அருளிய பெரியர். நான்மறை முதல்வரான சிவமூர்த்திக்கான திருத்தொண்டில் ஆதிஅந்தமற்ற தனிச்சிறப்போடு விளங்கும் பெற்றியர்,

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 24)
யாதவன் துவரைக்(கு) இறையாகிய
மாதவன்முடி மேலடி வைத்தவன்
பூத நாதன் பொருவரும் தொண்டினுக்கு
ஆதியந்தம் இலாமை அடைந்தவன்

(3)
அவ்வேளையில் அங்கு ஓராயிரம் கதிரவர்கள் சேர்ந்தாற்போல் பேரொளிப் பிழம்பொன்று தோன்றக் கண்ட அம்முனிவோர்கள் 'இதென்ன அதிசயம்' என்று வியக்கின்றனர், 

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 26)
அங்கண் ஓரொளி ஆயிர ஞாயிறு
பொங்கு பேரொளி போன்றுமுன் தோன்றிடத்
துங்க மாதவர் சூழ்ந்திருந்தார்எலாம்
இங்கிதென் கொல் அதிசயம் என்றலும்

(4)
பிறைமதிப் பரம்பொருளின் திருவடிகளை இடையறாது சிந்திக்கும் தவ மேன்மையினால் அவ்வொளியின் மூலத்தை உணரப் பெறும் உபமன்யு முனிவர், 'நாவலூர் வேந்தரான வன்தொண்டப் பெருந்தகையார் தம்முடைய அவதாரம் நிறைவுற்றுத் திருவருளால் மீளவும் திருக்கயிலைக்கு எழுந்தருளி வருகின்றார்' என்று அறிவிக்கின்றார், 

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 27)
அந்தி வான்மதி சூடிய அண்ணல்தாள்
சிந்தியா உணர்ந்(த) அம்முனி தென்திசை
வந்த நாவலர் கோன்புகழ் வன்தொண்டன்
எந்தையார் அருளால் அணைவான் என

(5)
கண்ணருவி பாய, அவ்வொளி தோன்றும் திசை நோக்கித் தொழும் உபமன்யு முனிவரின் செயல் குறித்து அம்முனிவர்கள் அதிசயமுற்று வினவுகின்றனர், 

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 28)
கைகள் கூப்பித் தொழுதெழுந்(து) அத்திசை
மெய்யில் ஆனந்த வாரி விரவிடச்
செய்ய நீள்சடை மாமுனி செல்வுழி
ஐயம் நீங்க வினவுவோர் அந்தணர்

(6)
'ஐய, ஆதிமுதற் பொருளான சிவமூர்த்தியின் திருவடிகளன்றிப் பிறிதொருவரைத் தொழாத நியமமுடைய நீங்கள் இத்தன்மையில் தொழும் காரணம் யாதோ? என்று பணிந்து வினவ, உபமன்யு முனிவரும், 'முக்கண்ணுடை அண்ணலைத் தம்முடைய உள்ளத்தில் அளப்பரிய காதலுடன் இடையறாது போற்றிவரும் நம்பியாரூர் நம் அனைவராலும் தொழப்பெறும் தன்மையர்' என்றுரைத்துத் தம்பிரான் தோழர் எழுந்தருளி வரும் அத்திருக்காட்சியைப் பணிகின்றார்,  

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 29)
சம்புவின் அடித்தாமரைப் போதலால்
எம்பிரான் இறைஞ்சாய் இஃதென் எனத்
தம்பிரானைத்தன் உள்ளம் தழீஇஅவன்
நம்பியாரூரன் நாம்தொழும் தன்மையான்

No comments:

Post a Comment