சுந்தரர் (திருவெண்பாக்கத்தில் ஊன்றுகோல் பெறுதல்):

(1)
சுந்தரனாருக்கு ஒற்றியூர் எல்லையில் கண்பார்வை மறைகின்றது. அந்நிலையிலேயே பயணித்துத் திருமுல்லைவாயிலைப் போற்றிப் பின்னர் திருவெண்பாக்கத்தினை வந்தடைகின்றார். அப்பதியிலுள்ள அடியவர்கள் எதிர்கொண்டு வணங்க, அப்பெருமக்களை எதிர்வணங்கியவாறே அங்குள்ள சிவாலயத்தைச் சென்று சேர்கின்றார்,

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம் - திருப்பாடல் 278)
..
வண்டுலா மலர்ச் சோலைகள் சூழ்ந்து
மாட மாளிகை நீடு வெண்பாக்கம்
கண்ட தொண்டர்கள் எதிர்கொள வணங்கி
காயும் நாகத்தர் கோயிலை அடைந்தார்

(2)
திருக்கோயிலை வலமாய் வந்து உச்சி கூப்பிய கையினராய் ('குவித்த கை தலைமேற்கொண்டு') அங்கு எழுந்தருளியுள்ள ஊன்றீஸ்வரப் பரம்பொருளிடம் சிறிதேனும் ஆறுதல் மொழிகளைப் பெறும் குறிப்புடன், 'பெருமானே! நீர் இவ்விடத்து மகிழ்வுடன் எழுந்தருளி உள்ளீரோ' என்று தவிப்புடன் வினவுகின்றார். 

வெண்பாக்க இறைவரோ 'நாம் இங்கு தான் இருக்கின்றோம், இனி நீ போகலாம்' ('உளோம் போகீர்') என்று இணக்கமில்லாத தொனியில் அருளிச் செய்து, ஊன்றுகோல் ஒன்றினையும் அருளுகின்றார்.

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம் - திருப்பாடல் 279)
அணைந்த தொண்டர்களுடன் வலமாக அங்கண் நாயகர் கோயில் முன்னெய்திக்
குணங்களேத்தியே பரவி அஞ்சலியால் குவித்த கைதலை மேற்கொண்டு நின்று
வணங்கி நீர்மகிழ் கோயிலுளீரே என்ற வன்தொண்டர்க்(கு) ஊன்றுகோலருளி
இணங்கிலா மொழியால் உளோம் போகீர் என்றியம்பினார் ஏதிலார் போல

(3)
அயலார் போன்ற இறைவரின் இந்த அணுகுமுறையைச் சற்றும் தரிக்கவொண்ணாத நாவலூர் மன்னவனார் உளமிக வெதும்பி, 'உளோம் போகீர் என்றானே' என்று பாடுகின்றார்,     

(சுந்தரர் தேவாரம் - திருவெண்பாக்கம் - திருப்பாடல் 1)
பிழையுளன பொறுத்திடுவர் என்றடியேன் பிழைத்தக்கால்
பழியதனைப் பாராதே படலம் என்கண் மறைப்பித்தாய்
குழைவிரவு வடிகாதா கோயில்உளாயே என்ன
உழையுடையான் உள்ளிருந்து உளோம் போகீர் என்றானே!!!

(4)
திருப்பதிகம் நிறைவுற்ற பின்னர் இறைவரிடமிருந்து வேறெந்த குறிப்பும் வெளிப்படாத தன்மையினால், 'இவ்விடத்தே இறைவரின் அருள் இவ்வளவே போலும்' என்று வருந்தி, அங்குள்ள அடியவர்களிடம் வணங்கி விடைபெற்று, மேலும் பயணத்தைத் தொடர்கின்றார் வன்தொண்டனார், 

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம் - திருப்பாடல் 281)
முன்னின்று முறைப்பாடு போல்மொழிந்த மொழிமாலைப்
பன்னும்இசைத் திருப்பதிகம் பாடியபின் பற்றாய
என்னுடைய பிரானருள் இங்(கு) இத்தனை கொலாமென்று
மன்னுபெரும் தொண்டருடன் வணங்கியே வழிக்கொள்வார்

No comments:

Post a Comment