திருநாவுக்கரசர் (எம்பிராட்டி திலகவதியாருக்கு அருளிய திருவதிகை இறைவர்):

எம்பிராட்டி திலகவதியார், சைவ நன்னெறிக்குரிய சின்னங்களைத் தரித்துக் கொண்டு, திருவதிகை திருக்கோயிலில் அலகிடுதல்; மெழுகிடுதல்; மலர் பறித்து வீரட்டான இறைவருக்கு மலர்மாலை தொடுத்தல் முதலிய திருத்தொண்டுகளைப் புரிந்து வரும் நிலையில், இளைய சகோதரரான மருள்நீக்கியார் புறச்சமயம் பேணியிருந்த செய்தியைக் கேள்வியுற்றுச் சொல்லொணாத் துன்பத்திற்கு உள்ளாகின்றார். 

(1)
அனுதினமும் வீரட்டானேஸ்வரப் பரம்பொருளின் திருமுன்பு சென்று தொழுது, 'ஐயனே, அடியேனை ஆட்கொண்டு அடிமை கொண்டருள்வது மெய்யெனில், அடியேனுக்குப் பின்தோன்றிய இளவலைப் பரசமய குழியினின்றும் மீட்டருளி ஆட்கொள்ள வேண்டும்' என்று உளமுருகி பலகாலம் விண்ணப்பம் செய்து வருகின்றார், 

(பெரிய புராணம்: திருநாவுக்கசர் புராணம் - திருப்பாடல் 46)
தூண்டுதவ விளக்கனையார் சுடரொளியைத் தொழுதென்னை
ஆண்டருளின் நீராகில் அடியேன்பின் வந்தவனை
ஈண்டுவினைப் பரசமயக் குழிநின்றும் எடுத்தருள
வேண்டுமெனப் பலமுறையும் விண்ணப்பம் செய்தனரால்

(2)
திருத்தொண்டின் நெறிபேணிச் செம்மையுற்றிருந்த அம்மையாரின் கனவில் அதிகை முதல்வர் எழுந்தருளித் தோன்றி, 'உன்னுடைய மனக் கவலையை ஒழிவாய், உன் உடன் பிறந்தவன் முற்பிறவியில் முனிவனாய் நமைஅடையப் பலகாலும் தவம் முயன்றவன், இனி அவனைச் சூலை தந்து ஆட்கொள்வோம்' என்றருளி மறைகின்றார், 

(பெரிய புராணம்: திருநாவுக்கசர் புராணம் - திருப்பாடல் 48)
மன்னு தபோதனியார்க்குக் கனவின்கண் மழவிடையார்
உன்னுடைய மனக்கவலை ஒழிநீ உன் உடன்பிறந்தான்
முன்னமே முனியாகி எமையடையத் தவம்முயன்றான்
அன்னவனை இனிச்சூலை மடுத்தாள்வம் என அருளி

(3)
முற்பிறவியில் சிவமாம் பரம்பொருளை அடைய மேற்கொண்டிருந்த அரியபெரிய தவத்தில் சிறுகுறையொன்று நேர்ந்திருந்த வினைத் தொடர்ச்சியினால், இப்புவி வாழ; திருத்தொண்டின் திறம் வாழ, அடியவர் திருக்கூட்டம் உய்வு பெற; சைவப் பெருஞ்சமயம் தழைத்தோங்க; பரம குருநாதராகப் பரிணமிக்க இருக்கும் நம் சுவாமிகளுக்கு இறைவர் சூலையாம் பெருவெப்பு நோயினை அருளுகின்றார்,  

(பெரிய புராணம்: திருநாவுக்கசர் புராணம் - திருப்பாடல் 49)
பண்டுபுரி நற்றவத்துப் பழுதின் அளவிறை வழுவும்
தொண்டரை ஆளத் தொடங்கும் சூலை வேதனை தன்னைக்
கண்தரு நெற்றியர் அருளக் கடும்கனல் போல் அடும்கொடிய
மண்டுபெரும் சூலைஅவர் வயிற்றினிடைப் புக்கதால்

திருநாவுக்கரசர் (திலகவதி அம்மையாரை வணங்கித் திருநீறு பெறுதல்)

சிவபெருமானின் திருவருளால் சமணப் பள்ளியிலிருந்த மருள்நீக்கியாரைச் சூலையாம் வெப்புநோய் பற்றுகின்றது. தாங்கொணாத வலியால் துடிக்கின்றார், செய்வதறியாது திகைத்துப் பதறுகின்றார். சமண மந்திரங்கள் ஒருசிறிதும் பலனளிக்கவில்லை. 'இனி சைவமாம் செந்நெறி சார்ந்தொழுகும் தமக்கையாரின் திருவடிகளைச் சேர்ந்து இத்துயரினின்று உய்வு பெறுவேன்' என்றெண்ணி, திருவதிகை நோக்கி இரவோடு இரவாக பயணித்து அம்மையாரின் திருமடத்தினைச் சென்றடைகின்றார். 

(1)
திருமேனி நிலத்தில் பொருந்த, அம்மையாரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி, 'நம்குலம் செய்த மாதவத்தின் பயனெனத் தோன்றிய அம்மையே, இனிச் சற்றும் தாமதியாது அடியேன் உற்ற இந்நோயினின்றும் உய்வு பெறும் மார்க்கத்தினை உரைத்து அருள் புரிவீர்' என்று விண்ணப்பிக்கின்றார். 

(பெரிய புராணம்: திருநாவுக்கசர் புராணம் - திருப்பாடல் 63)
வந்தணைந்து திலகவதியார் அடி மேலுற வணங்கி
நந்தமது குலம்செய்த நற்றவத்தின் பயன்அனையீர்
இந்தஉடல் கொடும்சூலைக் கிடைந்தடைந்தேன் இனிமயங்கா(து)
உய்ந்து கரையேறு நெறி உரைத்தருளும் எனஉரைத்து
(2)
சிவஞானச் சுடரான அம்மையார் தன் பாதங்களில் வீழ்ந்திருக்கும் இளைய சகோதரரை கருணையோடு நோக்குகின்றார். தனை அடிமை கொண்டருளும் திருவதிகைப் பரம்பொருளின் திருவருளை நினைந்து தொழுது, 'பரசமயக் குழியில் வீழ்ந்து பெரும் துயர் அடைந்துள்ளீர், இனி எழுவீர்' என்று அருளிச் செய்கின்றார், 

(பெரிய புராணம்: திருநாவுக்கசர் புராணம் - திருப்பாடல் 64)
தாளிணைமேல் விழுந்த அரும்தம்பியார் தமைநோக்கி
ஆளுடைய தம்பெருமான் அருள்நினைந்து கைதொழுது
கோளில் பரசமய நெறிக்குழியில் விழுந்தறியாது
மூளும் அரும்துயர் உழந்தீர் எழுந்திரீர் எனமொழிந்தார்
(3)
மருள்நீக்கியார் வலியால் நடுங்கியவாறே ஒருவாறு எழுந்து தொழுகின்றார். திருத்தொண்டின் திறத்தால் செம்மையுற்றிருந்த அம்மையார், 'நம் தலைவரான திருவதிகை முதல்வரின் திருவருள் கூடவிருக்கும் தருணம் இதுவே. தன் திருவடிகளைச் சரணமெனப் பற்றுவோரின் பிறவிப்பிணி போக்கியருளும் அப்பெருமானுக்கு இனி அடிமைத்திறம் பூண்டு பணிசெய்யக் கடவீர்' என்றருளிச் செய்கின்றார், 

(பெரிய புராணம்: திருநாவுக்கசர் புராணம் - திருப்பாடல் 65)
மற்றவ்வுரை கேட்டலுமே மருள்நீக்கியார் தாமும்
உற்றபிணி உடல்நடுங்கி எழுந்துதொழ; உயர்தவத்தோர்
கற்றை வேணியர் அருளே காணுமிது; கழலடைந்தோர்
பற்றறுப்பார் தமைப்பணிந்து பணிசெய்வீர் எனப்பணித்தார்

(4)
அம்மையாரின் கட்டளையை சுவாமிகள் சிரமேற்கொண்டு தொழுதவாறு நிற்கின்றார். அம்மையார் மீண்டுமொரு முறை திருவருளை நினைந்து, தம்பியாரை அதிகை ஆலயத்துள் இட்டுச் செல்ல முறைமைப்படுத்தும் முகமாக, சிவமூர்த்தியின் திருவெண்ணீற்றினை ஸ்ரீபஞ்சாட்சர மந்திரத்தை ஓதியவாறு அளிக்கின்றார், 

(பெரிய புராணம்: திருநாவுக்கசர் புராணம் - திருப்பாடல் 66)
என்றபொழு(து) அவர்அருளை எதிரேற்றுக் கொண்டிறைஞ்ச
நின்ற தபோதனியாரும் நின்மலன் பேரருள்நினைந்து
சென்று திருவீரட்டம் புகுவதற்குத் திருக்கயிலைக்
குன்றுடையார் திருநீற்றை அஞ்செழுத்தோதிக் கொடுத்தார்

(5)
சுவாமிகள் 'பெருவாழ்வு பெற்றேன்' என்று வணங்கி, அம்மையாரிடமிருந்து அத்தூய வெண்ணீற்றினைப் பெற்றுக் கொள்கின்றார். தன் திருமேனி முழுவதும் அதனை ஆர்வத்துடன் தரித்துக் கொண்டு, தனை உய்விக்க அதிகை ஆலயம் நோக்கி முன்செல்லும் அம்மையாரைப் பின்தொடர்ந்து செல்கின்றார். 

(பெரிய புராணம்: திருநாவுக்கசர் புராணம் - திருப்பாடல் 67)
திருவாளன் திருநீறு திலகவதியார் அளிப்பப்
பெருவாழ்வு வந்ததெனப் பெருந்தகையார் பணிந்தேற்றங்(கு)
உருவார அணிந்து தமக்(கு) உற்றவிடத்(து) உய்யுநெறி
தருவாராய்த் தம்முன்பு வந்தார்பின் தாம்வந்தார்

திருநாவுக்கரசர் (சூலை நீங்கப் பெற்று 'திருநாவுக்கரசு' எனும் திருநாமம் பெறுதல்):

சிவபெருமானின் திருவருளால் மருள்நீக்கியாருக்குச் சூலைநோய் வந்தெய்த, அதன் கடுமையைத் தாங்க இயலாதவராய்த் திருவதிகையிலுள்ள தமக்கையாரின் திருமடம் சென்று சேர்ந்து, அவர்தம் திருவடிகளில் வீழ்ந்து வணங்கித் தன்னைக் காத்தருளுமாறு வேண்டுகின்றார். திலகவதிப் பிராட்டியார் திருவருளைத் தொழுது, இளைய சகோதரருக்குத் திருநீறு அளித்துப் பின்னர் திருவதிகைப் பெருங்கோயிலிலுக்கு அழைத்துச் செல்கின்றார்.   

(1)
சுவாமிகள் கோபுரத்தினை முதற்கண் தொழுது, வெளிப் பிரகாரத்தினை வலமாக வந்து பணிந்து, கொடிமரத்திற்கு அருகில் வீழ்ந்து வணங்குகின்றார். அச்சமயம் திருவருளால் வீரட்டாணேஸ்வர முதல்வரைப் பாமாலையால் போற்றி செய்யும் மெய்யுணர்வு தோன்றப் பெறுகின்றார்,

(பெரிய புராணம்: திருநாவுக்கசர் புராணம் - திருப்பாடல் 69)
திரைக்கெடில வீரட்டானத்(து) இருந்த செங்கனக
வரைச் சிலையார் பெருங்கோயில் தொழுதுவலம் கொண்டிறைஞ்சித்
தரைத் தலத்தின் மிசைவீழ்ந்து தம்பிரான் திருவருளால்
உரைத்தமிழ் மாலைகள் சாத்தும் உணர்வுபெற உணர்ந்துரைப்பார்

(2)
'கூற்றாயினவாறு' எனும் ஒப்புவமையற்ற தேவாரப் பனுவலை அருளிச் செய்து, 'ஐயனே, இச்சூலை வந்தெய்த அடியவன் புரிந்த கொடுமையை உள்ளவாறு அறியேன். இனி உன் திருவடிகளுக்கு அடிமைத் தொண்டு புரிவதையே உறுதியெனக் கொண்டு வாழ்வேன். ஒருக்காலும் பிழையேன்! பெருமானே, வயிற்றைப் புரட்டிப் போட்டு வாட்டும் இவ்வலியை இனியொருக் கணமும் தாங்க இயலாது துடிக்கின்றேனே, காத்தருள்வது நின் கடனன்றோ' என்று முறையிட்டுக் கதறுகின்றார்,

(திருவதிகை தேவாரம் - திருப்பாடல் 1)
கூற்றாயினவாறு விலக்ககிலீர் கொடுமைபல செய்தன நான்அறியேன்
ஏற்றாய் அடிக்கே இரவும்பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன் அதிகைக்கெடில வீரட்டானத்துறை அம்மானே!!!

(3)
வீரட்டானம் மேவும் தேவதேவரின் திருவருள் பரிபூரணமாய்க் கூடி வர, சுவாமிகள் அக்கணமே பெருவெப்பு நீங்கப் பெறுகின்றார். அப்பேரருட் செயல் கண்டு சுவாமிகளின் திருமேனியெங்கும் புளகமுறுகின்றது, கண்களினின்றும் அருவியென நீர் பொழிகின்றது. பெருமகிழ்ச்சியுற்றுச் செயலொன்றும் அறியாதவராய் நிலத்தின் மீது அங்குமிங்குமாய்ப் புரண்டு நெகிழ்கின்றார். 'இத்தனை ஆண்டு காலம் உன் திருவடிக்குப் பிழை புரிந்திருந்தும் இத்தகு பெருங்கருணையா?' என்று சிவானந்தப் பெருவெள்ளத்தில் முழுவதுமாய் மூழ்கித் திளைக்கின்றார்.   

(பெரிய புராணம்: திருநாவுக்கசர் புராணம் - திருப்பாடல் 72)
அங்கங்கள் அடங்க உரோமமெலாம் அடையப் புளகம்கண் முகிழ்த்தலரப்
பொங்கும்புனல் கண்கள் பொழிந்திழியப் புவிமீது விழுந்து புரண்டயர்வார்
இங்கென்செயல் உற்ற பிழைப்பதனால் ஏறாத பெருந்திடர் ஏறிடநின்
தங்கும் கருணைப்பெரு வெள்ளமிடத் தகுமோஎன இன்னன தாமொழிவார்

(4)
சொலற்கரிய தன்மையில் சுவாமிகள் போற்றிசைத்த பாமாலையால் திருவுள்ளம் பெரிதும் மகிழ்ந்தருளும் திருவதிகை முதல்வர் விண்ணொலியாய் 'இனி உன் நாமம் திருநாவுக்கரசு என்று ஏழுலகிலும் அன்புடன் அழைக்கப் பெற்று நிலை பெறுவதாகுக' என்று யாவரும் கேட்டு வியக்கும் தன்மையில் அருளிச் செய்கின்றார். 

(பெரிய புராணம்: திருநாவுக்கசர் புராணம் - திருப்பாடல் 74)
மேவுற்ற இவ்வேலையில் நீடியசீர் வீரட்டம் அமர்ந்த பிரானருளால்
பாவுற்றலர் செந்தமிழின் சொல்வளப் பதிகத்தொடை பாடிய பான்மையினால்
நாவுக்கரசென்(று) உலகேழினும் நின் நன்னாமம் நயப்புற மன்னுகஎன்(று)
யாவர்க்கும் வியப்புற மஞ்சுறை வானிடையேஒரு வாய்மை எழுந்ததுவே

திருநாவுக்கரசர் (நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்):

(1)
நாவுக்கரசு சுவாமிகள் திருவதிகை மேவும் இறைவரால் தடுத்தாட்கொள்ளப் பெற்றுச் சமணம் விட்டொழிந்து, சைவ சமயம் பேணுகின்றார். இதனைக் கேளிவியுறும் சமணர்கள் அச்சமுற்று, பல்லவ வேந்தனிடம் 'நம்முடனிருந்த தருமசேனர் சூலையெனும் பொய் கூறிச் சைவம் சார்ந்துள்ளார், இனி நம் மதத்தையும் அழிக்க முனைவார்' என்று திரித்துக் கூறுகின்றனர்.

(2)
பல்லவனும் மதியிழந்து, 'அங்கனமாயின் அவரை இவ்விடம் அழைத்து வரச் செய்து தண்டிப்போம்' என்று ஆணையிடுகின்றான். உடன் அங்கிருந்த அமைச்சர்கள் படைகளுடன் விரைந்து, திருவதிகையிலுள்ள நாவுக்கரசு சுவாமிகளிடம்  சென்று அரசாணையைத் தெரிவிக்கின்றனர்.

(3)
நம் சுவாமிகளோ 'மூலமுதற் பொருளான சிவபெருமானின் திருவடிகளைச் சரணாகப் பற்றியுள்ளேன், ஆதலின் உங்கள் அரசரின் ஏவலுக்கு செவிசாய்க்கும் நிலையில் நாமின்று இல்லை' என்று சைவச் சிம்மமென முழங்குகின்றார். அச்சமயம் அடிகள் அருளிச் செய்த மறுமாற்றுத் திருத்தாண்டகம், 

(திருவதிகை தேவாரம் - திருப்பாடல் 1)
நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்
    நரகத்தில் இடர்ப்படோம்; நடலை இல்லோம்
ஏமாப்போம் பிணியறியோம்; பணிவோம் அல்லோம்
    இன்பமே எந்நாளும் துன்பமில்லை
தாமார்க்கும் குடியல்லாத் தன்மையான
    சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதில் 
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
    கொய்ம்மலர்ச் சேவடிஇணையே குறுகினோமே

(4)
சுவாமிகளின் சிவஞானப் பெருநிலையையும்; அதீத தெய்வத் தன்மையையும் உணரப் பெறும் பல்லவ அமைச்சர்கள் அடிகளின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி, 'உங்களை அழைத்து வரத் தவறினால் அரச தண்டனைக்கு உள்ளாவோம், ஆதலின் தயவு கூர்ந்து உடன் வர வேண்டும்' என்று விண்ணப்பித்துக் கொள்கின்றனர். கருணையே வடிவான நம் அடிகளும், 'இனி நிகழஇருக்கும் செயல்களுக்கு நமை ஆளுடைய திருவதிகை முதல்வரின் திருவருள் துணை நிற்கும்' என்றிசைந்து, அவர்களுடன் செல்கின்றார்,

(திருநாவுக்கரசர் புராணம் - திருப்பாடல் 94)
ஆண்ட அரசு அருள்செய்யக் கேட்டவரும் அடிவணங்கி
வேண்டி அவர்க் கொண்டேக, விடையுகைத்தார் திருத்தொண்டர்
ஈண்டுவரும் வினைகளுக்கு எம்பிரான்உளன் என்றிசைந்திருந்தார்
மூண்டசினப் போர்மன்னன் முன்அணைந்தங்கு அறிவித்தார்

திருநாவுக்கரசர் (சமணர்களால் நீற்றறையில் அடைக்கப் பெறுதல்):

நாவுக்கரசு சுவாமிகள் திருவதிகை இறைவரால் தடுத்தாட்கொள்ளப் பெற்றுச் சமணம் விட்டொழிந்து, சைவப் பெருஞ்சமயம் பேணிய நிகழ்வினைச் சமணர்கள் கேள்வியுறுகின்றனர். 'பல்லவ மன்னனுக்கு இச்செய்தி எட்டுமாயின் நம் சமயப் பொய்யுரைகளை உணர்ந்து கொள்வான்; அவனும் சைவத்தைத் தழுவி நின்று நம்மையும் அழித்தொழிப்பான்' என்று அஞ்சி, வஞ்சக திட்டமொன்றினைத் தீட்டுகின்றனர். 

'கொல்லாமை' எனும் கொள்கையைப் பெயரளவில் முன்னிறுத்தி அதன் பின்னணியில் கொடுஞ்செயல்கள் பலவும் புரிந்து வரும் அறிவிலிகளான அச்சமணர்கள் அரசனிடம் சென்று 'இது வரையிலும் நம் சமய நெறியைக் கைக்கொண்டிருந்த தருமசேனர் சூலையுற்றது போல் நடித்துச் சைவ சமயம் சார்ந்தார், இனி நம் மதத்தை அழிக்கவும் முனைவார்' என்று திரித்துக் கூறுகின்றனர். பல்லவனும் மதியிழந்து 'அங்கனமாயின் அவரை இவ்விடம் அழைத்து வரச் செய்து தண்டிப்போம்' என்று ஆணையிடுகின்றான்.

சுவாமிகள், காவலர்களும் உடன்வர, திருவருளை நினைந்தவாறு; மெய்யன்பே ஒரு வடிவமென அரசவைக்கு எழுந்தருளி வருகின்றார். பல்லவ அரசன் வீணர்களான சமணர்களின் ஆலோசனைப்படி சுவாமிகளைப் 'பெருந்தீயுடன் கொழுந்து விட்டெறியும் நீற்றறையில்' அடைக்குமாறு செய்கின்றான். இதுவோ கொல்லாமை?

நம் சுவாமிகளோ அம்பலத்தாடும் தில்லைப் பரம்பொருளின் பொன்போலும் திருவடிகளை உள்ளத்திருத்தி 'சிவமூர்த்தியின் அடியவர்க்கு இடரும் உளவோ' என்று திருப்பதிகம் பாடியவாறு இனிது வீற்றிருக்கின்றார். அனலேந்தும் ஆதிமூர்த்தியின் திருவருளால் அப்பெரு வெப்பமும் இளவேனில் காலத்துத் தென்றலெனக் குளிர்கின்றது சுவாமிகளுக்கு. 

(திருப்பாடல் 1)
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே

(திருப்பாடல் 2)
நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்
நமச்சிவாயவே நானறி விச்சையும்
நமச்சிவாயவே நா நவின்றேத்துமே
நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே

ஏழு நாட்கள் இவ்விதமே செல்கின்றது. பல்லவ வேந்தன் 'இனி நீங்கள் நீற்றறையைத் திறந்து அங்குள்ள நிலையைக் கண்டு வாருங்கள்' என்றுரைக்க, அகத்தே இருளுடைய அச்சமணர்களும் நீற்றறையின் கதவினைத் திறக்கின்றனர். 

சுவாமிகள் ஆடல்வல்லானின் திருவடி நிலைகளாகிய அமுதினைப் பருகிச் சிவமாம் பேரின்ப வெள்ளத்தில் மூழ்கித் திளைத்தவாறு வீற்றிருக்கின்றார். கொடும் சமணர்கள் இதுகண்டு 'தீங்கேதுமின்றி இருக்கின்றனரே, இது என்ன அதிசயம்' என்று உளம் வெதும்புகின்றனர்.

(பெரிய புராணம் - திருநாவுக்கசர் புராணம்: திருப்பாடல் 101)
ஆனந்த வெள்ளத்தின் இடைமூழ்கி அம்பலவர்
தேனுந்து மலர்ப்பாதத்(து) அமுதுண்டு தெளிவெய்தி
ஊனந்தான் இலராகி உவந்திருந்தார் தமைக்கண்டு
ஈனம் தங்கிய(து) இலதாம் என்ன அதிசயம் என்றார்

திருநாவுக்கரசர் (சமணர்களால் நஞ்சுணவு ஊட்டப் பெறுதல்):

நாவுக்கரசு சுவாமிகள் சமணம் துறந்துச் சைவம் தழுவிய நிகழ்வினைத் தொடர்ந்து, அறிவிலிகளான சமணர்களும்; பல்லவ மன்னனும் 4 வெவ்வேறு வழிகளில் சுவாமிகளின் இன்னுயிரைப் போக்க முனைகின்றனர். முதலாவதாக சுவாமிகளைக் கடும் வெப்பம் பொருந்திய நீற்றறையில் 7 நாட்கள் அடைக்கின்றனர், திருநாவின் தனியரசரோ திருவருளின் துணை கொண்டு அதனின்று மீள்கின்றார். 

(1)
அதுகண்டு உளம் வெதும்பும் அறிவிலிச் சமணர்கள் 'இவர் நம் சமண மந்திரங்களைப் பலகாலும் சாதகம் புரிந்திருந்த தன்மையினால் நீற்றறையிலும் தீங்கின்றி இருந்தனர். இனி இவரைக் கொடிய விடம் அருந்தச் செய்து கொல்வோம்' என்று வேந்தனிடம் பொய்யுரைக்கின்றனர்,

(பெரிய புராணம் - திருநாவுக்கசர் புராணம்: திருப்பாடல் 102)
அதிசயம் அன்றிதுமுன்னை அமண் சமயச் சாதகத்தால்
இதுசெய்து பிழைத்திருந்தான் எனவேந்தற்(கு) உரைசெய்து
மதி செய்வ(து) இனிக் கொடிய வல்விடம் ஊட்டுவதென்று
முதிரவரும் பாதகத்தோர் முடைவாயால் மொழிந்தார்கள்

(2)
சமணர்களின் தொடர்பால் கெடுமதி கொண்டிருந்த அப்பல்லவ மன்னனும் 'அவ்வாறே செய்வோம்' என்றுரைக்க, திருத்தொண்டின் வேந்தரான சுவாமிகளுக்குக் கொடிய நஞ்சூட்டப் பெற்ற பால்சோற்றினை உட்கொள்ளுமாறு அளிக்கின்றனர், 

(பெரிய புராணம் - திருநாவுக்கசர் புராணம்: திருப்பாடல் 103)
ஆங்கது கேட்டலும் கொடிய அமண் சார்பால் கெடுமன்னன்
ஓங்குபெரு மையலினால் நஞ்சூட்டும் எனஉரைப்பத்
தேங்காதார் திருநாவுக்கரசரை அத்தீய விடப்
பாங்குடைய பாலடிசில் அமுதுசெயப் பண்ணினார்

(3)
சிவபரம்பொருளின் பேரருள் திறத்தினை இவ்வுலகோர்க்குத் தெளிவுற விளக்கவல்ல நம் சுவாமிகளும், 'எங்கள் இறைவரின் அடியவர்க்கு நஞ்சும் அமுதமாய் நலம் பயக்குமன்றோ' என்றருளி, நஞ்சு கலந்த அச்சோற்றினை உண்டு தீங்கேதுமின்றி இனிது எழுந்தருளி இருக்கின்றார்,  

(பெரிய புராணம் - திருநாவுக்கசர் புராணம்: திருப்பாடல் 104)
நஞ்சும் அமுதாம் எங்கள் நாதன் அடியார்க்கென்று
வஞ்சமிகு நெஞ்சுடையார் வஞ்சனையாம் படியறிந்தே
செஞ்சடையார் சீர்விளக்கும் திறலுடையார் தீவிடத்தால்
வெஞ்சமணர் இடுவித்த பாலடிசில் மிசைந்திருந்தார்

(4)
'முன்னர் அண்ட சராசரங்கள் அழிந்துபடுமாறு பொங்கியெழுந்த ஆலகால விடமே ஆதிமுதற் பொருளான சிவபெருமானுக்கு அமுதமென விளங்குமானால், அம்முதல்வரின் மெய்யடியார்க்கு நஞ்சு கலந்த உணவு அமுதமாவதும் ஒரு அற்புதமோ?' என்று இந்நிகழ்வினை வியந்து போற்றுகின்றார் தெய்வச் சேக்கிழார்,

(பெரிய புராணம் - திருநாவுக்கசர் புராணம்: திருப்பாடல் 105)
பொடியார்க்கும் திருமேனிப் புனிதர்க்குப் புவனங்கள்
முடிவாக்கும் துயர்நீங்க முன்னை விடம் அமுதானால்
படியார்க்கும் அறிவரிய பசுபதியார் தம்முடைய
அடியார்க்கு நஞ்சமுதம் ஆவதுதான் அற்புதமோ

(இறுதிக் குறிப்பு)
(பின்னாளில்) சமணர்களால் நஞ்சூட்டப் பெற்ற நிகழ்வினைப் பின்வரும் திருநனிபள்ளி திருப்பாடலில் சுவாமிகள் அகச் சான்றாகப் பதிவு செய்கின்றார்,

('முற்றுணை ஆயினானை' - திருநனிபள்ளி தேவாரம் - திருப்பாடல் 5)
துஞ்சிருள் காலை மாலை தொடர்ச்சியை மறந்திராதே
அஞ்செழுத்தோதி நாளும் அரனடிக்(கு) அன்பதாகும்
வஞ்சனைப் பால்சோறாக்கி வழக்கிலா அமணர் தந்த
நஞ்சமு(து) ஆக்குவித்தார் நனிபள்ளி அடிகளாரே!!!

திருநாவுக்கரசர் (சமணர்கள் மத யானையைக் கொல்ல ஏவுதல்)

நாவுக்கரசு சுவாமிகள் சமணம் துறந்து சைவம் பேணிய நிகழ்வினைத் தொடர்ந்து, கொடிய சமணர்களும் பல்லவ மன்னனும் பல்வேறு விதங்களில் சுவாமிகளை மாய்த்து விட முனைகின்றனர். நீற்றறையில் அடைத்தல் மற்றும் நஞ்சூட்டுதல் எனும் முதலிரு முயற்சிகளிலும் தோல்வியைத் தழுவ, மற்றொரு முயற்சியாக சுவாமிகளை மதயானையைக் கொண்டு இடறச் செய்ய முயல்கின்றனர். 

கொடிய மதம் கொண்டிருந்த அவ்வேழமானது வழியெங்கும் பெரும் சேதத்தை விளைவித்தவாறும், இடி முழக்கமென பெருவொலி எழுப்பியவாறும், கூற்றுவனைப் போன்று சுவாமிகளை நிறுத்தியிருக்கும் நிலப் பரப்பிற்கு விரைந்தோடி வருகின்றது. சுவாமிகள் ஆனையுரி போர்த்தருளும் முக்கண் முதல்வரின் திருவடிகளையே நினைந்தவாறு நின்றிருக்கின்றார்.

(1)
எவரொருவரும் அஞ்சிப் பதறியோடும் தன்மையில் அம்மத யானை வெகுண்டு எதிரில் வர, சுவாமிகள் ஒருசிறிதும் சலனமின்றி 'அஞ்சுவது யாதொன்றுமில்லை' எனும் அற்புதப் பாமாலையொன்றினை மகிழ்வுடன் பாடுகின்றார். 

(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம்: திருப்பாடல் 115)
அண்ணல் அருந்தவ வேந்தர் ஆனைதம் மேல்வரக் கண்டு
விண்ணவர் தம் பெருமானை விடைஉகந்தேறும் பிரானைச்
சுண்ணவெண் சந்தனச் சாந்து தொடுத்த திருப்பதிகத்தை
மண்ணுலகுய்ய எடுத்து மகிழ்வுடனே பாடுகின்றார்

(2)
'பவள வண்ணத் திருமேனியில் துலங்கும் வெண்மையான திருநீறு, திருமுடியில் பிறைச்சந்திரன்; திருஇடையில் புலித்தோல்; ஆரோகணிக்கவொரு வன்மையான காளை; திருமார்பில் விரவியோடும் பாம்புகள்; கெடில நதி இவைகளுடன் எழுந்தருளி இருக்கும் திருவதிகைப் பரம்பொருளின் திருவடிக்கு ஆட்பட்ட அடியவர்கள் நாம். ஆதலின் எதன் பொருட்டும் நாங்கள் அஞ்சுவதும் இல்லை, எங்களை அச்சமூட்டவல்ல யாதொன்றும் இனி தோன்றப் போவதுமில்லை' என்று உறுதிபட முழங்குகின்றார் சுவாமிகள், 

(திருவதிகை தேவாரம் - திருப்பாடல் 1)
சுண்ணவெண் சந்தனச் சாந்தும்; சுடர்த்திங்கள் சூளாமணியும்
வண்ண உரிவை உடையும்; வளரும் பவள நிறமும்
அண்ணல் அரண் முரணேறும்; அகலம் வளாய அரவும்
திண்ணன் கெடிலப் புனலும்; உடையார் ஓருவர் தமர்நாம்
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை!

(3)
வேத முதல்வரான சிவபெருமானின் திருவடிகளையே சரணமெனப் பற்றி, மெய்யன்பையே ஒரு கொள்கையாகக் கொண்டிருந்த நாவுக்கரசு சுவாமிகளை அம்மத வேழம் வலமாய் வந்து, எத்திசையுளோரும்  கண்டு வியக்குமாறு நிலத்தில் வீழ்ந்து வணங்குகின்றது,

(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம்: திருப்பாடல் 117)
தண்டமிழ் மாலைகள் பாடித் தம்பெருமான் சரணாகக்
கொண்ட கருத்தில் இருந்து குலாவிய அன்புறு கொள்கைத்
தொண்டரை முன் வலமாகச் சூழ்ந்தெதிர் தாழ்ந்து நிலத்தில்
எண்திசையோர்களும் காண இறைஞ்சி எழுந்தது வேழம்

(4)
'ஆளுடைய அரசுகள்' என்று போற்றப் பெறும் நம் சுவாமிகளை அவ்வேழம் வணங்கி விலக, மீண்டும் அதனைச் சுவாமிகளின் மீது ஏவ முயன்ற காவலர்களையும்; உடனிருந்த சமணர்களையும் அம்மத யானை கொன்று குவிக்கத் துவங்குகின்றது,

(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம்: திருப்பாடல் 118)
ஆண்ட அரசை வணங்கி அஞ்சி அவ்வேழம் பெயரத்
தூண்டிய மேன்மறப் பாகர் தொடக்கி அடர்த்துத் திரித்து
மீண்டும் அதனை அவர்மேல் மிறைசெய்து காட்டிட வீசி
ஈண்டவர் தங்களையே கொன்(று) அமணர்மேல் ஓடிற்(று) எதிர்ந்தே

திருநாவுக்கரசர் (சமணர்கள் கல்லில் பிணைத்துக் கடலில் தள்ளுதல்):

(1)
நாவுக்கரசு சுவாமிகள் சிவபெருமானால் தடுத்தாட்கொள்ளப் பெற்றுச் சைவம் பேணிய தன்மையினால், அறிவிலிகளான சமணர்களும்; பல்லவ மன்னனும் சுவாமிகளை மாய்த்து விட பல்வேறு விதங்களில் முயன்று அவையனைத்திலும் தோல்வியையே தழுவுகின்றனர். இறுதியாய் நம் சுவாமிகளைக் கல்லொன்றில் பிணைத்துக் கட்டிக் கடலில் தள்ளுகின்றனர். 

(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம்: திருப்பாடல் 123)
ஆங்கது கேட்ட அரசன் அவ்வினை மாக்களை நோக்கித்
தீங்கு புரிந்தவன் தன்னைச் சேமம் உறக்கொடு போகிப்
பாங்கொரு கல்லில் அணைத்துப் பாசம் பிணித்தோர் படகில்
வீங்கொலி வேலையில் எற்றி வீழ்த்துமின் என்று விடுத்தான்

(2)
அன்பின் திருவுருவான வாகீசப் பெருந்தகையார் 'எத்தகு நிலை வரினும் எம் தலைவரான சிவபரம்பொருளின் திருவருள் துணை நிற்கும்' எனும் உறுதியுடன், 'சொற்றுணை வேதியன்' எனும் சொலற்கரிய சீர்மை பொருந்திய நமசிவாயத் திருப்பதிகத்தினை அருளிச் செய்கின்றார், 

(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம்: திருப்பாடல் 125)
அப்பரி(சு) அவ்வினை முற்றி அவர் அகன்றேகிய பின்னர்
ஒப்பரும் ஆழ்கடல் புக்க உறைப்புடை மெய்த்தொண்டர் தாமும்
எப்பரிசாயினுமாக ஏத்துவன் எந்தையை என்று
செப்பிய வண்தமிழ் தன்னால் சிவன் அஞ்செழுத்தும் துதிப்பார்

(3)
முக்கண் முதல்வரின் திருவருளால் அடிகளைப் பிணைத்திருந்த கல் தெப்பமென மிதக்கின்றது. பிணைத்திருந்த கயிறுகளும் தாமாக அறுபட, அக்கல்லின் மீது மெய்த்தொண்டராம் ஆளுடைய அரசுகள் இனிது எழுந்தருளித் தோன்றுகிறார்,

(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம்: திருப்பாடல் 128)
அப்பெரும் கல்லும்அங்(கு) அரசு மேல்கொளத்
தெப்பமாய் மிதத்தலில் செறித்த பாசமும்
தப்பிய(து) அதன்மிசை இருந்த தாவில்சீர்
மெய்ப்பெரும் தொண்டனார் விளங்கித் தோன்றினார்

(4)
கடலரசனான வருணதேவன் முன்செய் தவத்தால் நம் சுவாமிகளைத் தாங்கும் பெரும்பேறு பெற்றுத் திருநாவின் தனியரசரைத் திருப்பாதிரிப்புலியூருக்கு அருகாமையிலுள்ள கரையில் சேர்க்கின்றான்,  

(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம்: திருப்பாடல் 131)
வாய்ந்தசீர் வருணனே வாக்கின் மன்னரைச்
சேர்ந்தடை கருங்கலே சிவிகை ஆயிட
ஏந்தியே கொண்(டு) எழுந்தருளுவித்தனன்
பூந் திருப்பாதிரிப்புலியூர்ப் பாங்கரில்

(5)
பாதிரிப்புலியூர்க் கரைக்கு எழுந்தருளி வரும் திருத்தொண்டின் வேந்தரை அப்பகுதியிலுள்ள மெய்த்தொண்டர் குழாத்தினர் பெருமகிழ்வுடன் எதிர்கொண்டு வணங்கிப் போற்றுகின்றனர், அப்பெருமக்கள் எழுப்பும் 'ஹர ஹர' எனும் ஆர்ப்பொலியால் அப்பகுதியே நிறைந்து விளங்குகின்றது, 

(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம்: திருப்பாடல் 132)
அத்திருப்பதியினில் அணைந்த அன்பரை
மெய்த்தவக் குழாமெலாம் மேவி ஆர்த்தெழ
எத்திசையினும் அரவென்னும் ஓசைபோல்
தத்துநீர்ப் பெருங்கடல் தானும் ஆர்த்ததே

திருநாவுக்கரசர் (தில்லைத் திருவீதியைப் புரண்டு வலமாய் வந்த நிகழ்வு):

நாவுக்கரசு சுவாமிகள் தில்லைத் திருத்தலத்தில் சிற்சபேசப் பரம்பொருளை முப்போதும் பாமாலைகளால் பணிந்தேத்தியவாறும், உழவாரத் தொண்டுகள் புரிந்தவாறும் சிறிது காலம் தங்கியிருக்கின்றார். 

(1)
இந்நிலையில் ஒரு சமயம், சீர்காழியில் கோயில் கொண்டுள்ள திருநிலை நாயகி அம்மையின் (சிவஞானமாகிய) திருமுலைப் பாலை உட்கொண்டு, மூலமுதற் பொருளான திருத்தோணியப்பரை 'பரம்பொருள் இம்மூர்த்தியே' என்று செந்தமிழ்ப் பாக்களால் உறுதிகூற வல்ல ஞானசம்பந்த வள்ளலைப் பற்றிக் கேள்வியுறுகின்றார். அதிசயமும் காதலும் மேலிட ஆளுடைப் பிள்ளையாரின் பிஞ்சுப் பொற்பாதங்களைப் பணிவதற்குப் பெருவிருப்பம் கொள்கின்றார். 

(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம்: திருப்பாடல் 178)
ஆழிவிடம் உண்டவரை அம்மைதிரு முலைஅமுதம் உண்ட போதே
ஏழிசைவண் தமிழ்மாலை இவன்எம்மான் எனக்காட்டி இயம்பவல்ல
காழிவரும் பெருந்தகைசீர் கேட்டலுமே அதிசயமாம் காதல் கூர
வாழியவர் மலர்க்கழல்கள் வணங்குதற்கு மனத்தெழுந்த விருப்பு வாய்ப்ப

(2)
அப்பொழுதே சென்று ஆடல்வல்லானின் பொற்கழல்களைப் பணிந்து அவர்தம் பேரருளைப் பெற்றுப் பின்னர் பிறவிப் பிணி போக்கும் தில்லைத் திருவீதியினைத் தன் திருமேனி முழுவதும் நிலத்தில் பொருந்துமாறு புரண்டு வலமாய் வந்து வணங்கிப் பின் சீர்காழிப் பதியினை நோக்கிப் பயணித்துச் செல்கின்றார்,
 
(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம்: திருப்பாடல் 179)
அப்பொழுதே அம்பலத்துள் ஆடுகின்ற கழல்வணங்கி அருள்முன் பெற்றுப்
பொய்ப்பிறவிப் பிணியோட்டும் திருவீதி புரண்டுவலம் கொண்டு போந்தே
எப்புவனங்களும் நிறைந்த திருப்பதியின் எல்லையினை இறைஞ்சி ஏத்திச்
செப்பரிய பெருமையினார் திருநாரையூர் பணிந்து பாடிச் செல்வார்

திருநாவுக்கரசர் (நல்லூரில் கிடைக்கப் பெற்ற திருவடி தீட்சை)

(1)
நாவுக்கரசு சுவாமிகள் தல யாத்திரையாகச் செல்லும் வழியில், தஞ்சாவூர் மாவட்டம் - பட்டீஸ்வரத்திற்கு அருகிலுள்ள திருச்சத்திமுற்றத்தினைச் சென்றடைகின்றார். ஆலயக் கருவறையில் எழுந்தருளியுள்ள சிவக்கொழுந்தீஸ்வரப் பரம்பொருளைத் தொழுது, 'என் இன்னுயிர் நீங்குமுன்னர் சிவஞானமேயான உனது திருவடி மலர்களை அடியவனின் சென்னிமிசை பொறித்து அருள்புரிவாய் ஐயனே' என்று உளமுருகி விண்ணப்பித்துப் பணிகின்றார், 
-
(திருச்சத்திமுத்த தேவாரம் - திருப்பாடல் 1)
கோவாய் முடுகி அடுதிறல் கூற்றம் குமைப்பதன்முன்
பூவார் அடிச்சுவடு என்மேல் பொறித்துவை போகவிடில்
மூவா முழுப்பழி மூடும் கண்டாய் முழங்கும் தழற்கைத்
தேவா திருச்சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே.

(2)
இத்தலத் திருப்பதிகத்தின் 6ஆம் திருப்பாடலில், தன் நெஞ்சின் மீதும் திருவடி சூட்டுமாறு இறைவரிடம் வேண்டுகின்றார்,
-
(திருச்சத்திமுத்த தேவாரம் - திருப்பாடல் 6)
வெம்மை நமன்தமர் மிக்கு விரவி விழுப்பதன்முன்
இம்மையுன் தாள்எந்தன் நெஞ்சத்(து) எழுதிவை ஈங்கிகழில்
அம்மை அடியேற்(கு) அருளுதி என்பதிங்(கு) ஆரறிவார்
செம்மை தரு சத்திமுற்றத்(து) உறையும் சிவக்கொழுந்தே.

(3)
சத்திமுற்றத்துறை முதல்வரும் 'நல்லூருக்கு வருக' என்று அசரீரியாய் அறிவித்து அருள் புரிகின்றார், 
-
(பெரிய புராணம் - திருநாவுக்கசர் புராணம் - திருப்பாடல் 194)
நாதன் தானும் நல்லூரில் வாவா என்றே அருள்செய்ய

(4)
ஆளுடைய அரசுகளும் அகமிக மகிழ்ந்து அங்கிருந்துப் புறப்பட்டு நல்லூரைச் சென்றடைகின்றார். ஆலமுண்டருளும் ஆதிமூர்த்தி இத்தலத்தில் கல்யாண சுந்தரேஸ்வரர்; பஞ்சவர்ணேஸ்வரர் எனும் திருநாமங்களோடு எழுந்தருளி இருக்கின்றார். சுவாமிகள் இறைவரின் திருமுன்பு சென்று தொழுது நிற்கையில், நல்லூர் முதல்வர் 'உன்னுடைய நினைப்பதனை முடிக்கின்றோம்' என்று என்றருளி, அடிகளின் சென்னிமிசை தன் திருவடி மலர்களைச் சூட்டிப் பேரருள் புரிகின்றார். 

திருநாவின் தனியரசர் இறைவரின் இவ்வருட் செயலால் அகமெலாம் குழைந்துருகி; கண்ணீர் பெருக்கி; நிலமிசை வீழ்ந்தெழுந்து, திருவருள் வெள்ளத்தில் அமிழ்ந்து தன்னிறைவு பெற்றவராய் நல்லூருறை முதற்பொருளைப் போற்றி செய்கின்றார்,
-
(நல்லூர் தேவாரம் - திருப்பாடல் 1)
நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார்
நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்
சினந்திருகு களிற்றுரிவைப் போர்வை வைத்தார்
செழுமதியின் தளிர்வைத்தார் சிறந்து வானோர்
இனந்துருவி மணிமகுடத் தேறத் துற்ற
இனமலர்கள் போதவிழ்ந்து மதுவாய்ப் பில்கி
நனைந்தனைய திருவடியென் தலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்லவாறே!!!

(5)
பின்னாளில் பல்வேறு தல யாத்திரை சமயங்களில், சுவாமிகள் இந்நிகழ்வினை நினைவு கூர்ந்து; நன்றி பாராட்டிப் போற்றியுள்ளார், 

('ஓசைஒலியெலாம் ஆனாய் நீயே' - திருவையாறு தேவாரம்: திருப்பாடல் 2)
அடியான்என் அடியென்மேல் வைத்தாய் நீயே

('காலனை வீழச் செற்ற' - திருநெய்த்தான தேவாரம்: திருப்பாடல் 1)
காலனை வீழச் செற்ற கழலடி இரண்டும் வந்தென்
மேலவா இருக்கப் பெற்றேன்

('நீறேறு திருமேனி உடையான் கண்டாய்' - திருமழபாடி தேவாரம்: திருப்பாடல் 5)
மலர்ந்தார் திருவடிஎன் தலைமேல் வைத்த
    மழபாடி மன்னு மணாளன் தானே

('இடர்கெடுமாறு எண்ணுதியேல்' - திருவாரூர் தேவாரம்: திருப்பாடல் 10)
நலங்கொளடி என்தலைமேல் வைத்தாய் என்றும்

திருநாவுக்கரசர் (திங்களூர் வருகை)

தஞ்சாவூர் மாவட்டத்தில், நவகிரக சிவத் தலங்களுள் சந்திரனுக்குரிய அம்சமாக, சந்திர தேவன் சிவபரம்பொருளை வழிபட்டுப் பேறுபெற்ற திங்களூர் எனும் திருத்தலம் அமையப் பெற்றுள்ளது. சிவமூர்த்தி கைலாசநாதராகவும், உமையன்னை பெரியநாயகியாகவும் எழுந்தருளியுள்ள இப்புண்ணிய ஷேத்திரத்தில் அப்பூதி அடிகள் எனும் திருத்தொண்டர் வாழ்ந்து வருகின்றார். 

சிவபிரானிடத்து அடிமைத்திறம் பூண்டிருந்த இப்பெருமகனார் நாவுக்கரசு சுவாமிகளின் மீதும் அதீத பக்தியும் ஈடுபாடும் கொண்டிருந்தார். சுவாமிகளின் அருட்செயல்களை நினைந்துருகுவார், அவர்தம் திருப்பெயரினைக் காதலுடன் ஓதி மகிழ்வார். சுவாமிகளின் திருவடிகளையும் திருப்பெயரையுமே பற்றுக்கோடாகக் கொண்டொழுகி, தம்முடைய புதல்வர்கள்; வீட்டிலுள்ள அளத்தல் கருவிகள்; இல்லப் பிராணிகள் மற்றும் காட்சிப் பொருள் யாவினுக்கும் சுவாமிகளின் திருப்பெயரைச் சூட்டிச் சிவானந்தம் எய்துவார். 

நேரில் தரிசிக்கப் பெறாவிடினும், சுவாமிகளுடைய திருத்தொண்டின் மாண்பையும்; இறைவரால் தடுத்தாட்கொள்ளப் பெற்ற மேன்மையையும் கேள்வியுற்று, அவர்தம் திருப்பெயரைக் கொண்டு திருமடம்; தண்ணீர் பந்தல் முதலிய நிலைத்த அறச் செயல்கள் பலவும் அத்திங்களூர்ப் பதியில் புரிந்து வருவார்.  

இந்நிலையில் நாவுக்கரசு சுவாமிகள் திருப்பழனம் எனும் திருத்தலத்தினைத் தரிசித்துப் பரவியவாறே திங்களூரின் எல்லையினை வந்தடைகின்றார். அப்பதியில் இறைவர் முன்னர் தமைஅழைத்தருளிய திருப்பெயரில் பல்வேறு திருப்பணிகள் நடந்தேறி வருவதைக் கண்ணுற்று பெருவியப்பு கொள்கின்றார். வழியில் குளுமை பொருந்திய தண்ணீர் பந்தலொன்றையும் அதனுள் அமுதமாம் தன்மையில் தண்ணீரும் இருப்பது கண்டு அவ்விடத்திற்குச் செல்கின்றார். 

அங்குள்ள அன்பர்களிடம் 'இப்பந்தலை இப்பெயரிட்டு இங்கு அமைத்தவர் யார்?' என்று சுவாமிகள் வினவ, பண்பிற் சிறந்த அவர்களும் 'ஆளுடைய அரசுகளின் திருப்பெயரால் இப்பந்தல் மட்டுமல்லாது, இவ்வூரிலுள்ள சாலை; திருக்குளம்; சோலைகள் என்று இவையாவையும் அமைத்தவர் சொலற்கரிய பெருமை பொருந்திய அப்பூதி அடிகளாவார். இவ்வூரைச் சேர்ந்தவரான அவர் இப்பொழுது தான் தம்முடைய இல்லம் சென்று சேர்வதைக் கண்டோம், அவருடைய மனை இங்கிருந்து மிக அருகிலேயே அமைந்துள்ளது' என்று தன்மையோடு பகர்கின்றனர்,

(பெரிய புராணம் - அப்பூதி அடிகள் புராணம் - திருப்பாடல் 7)
இப்பந்தர் இப்பெயரிட்(டு) இங்கமைத்தார் யார்என்றார்க்(கு)
அப்பந்தர் அறிந்தார்கள் ஆண்ட அரசெனும் பெயரால்
செப்பரும்சீர் அப்பூதி அடிகளார் செய்தமைத்தார்
தப்பின்றி எங்குமுள சாலைகுளம் காஎன்றார்

(பெரிய புராணம் - அப்பூதி அடிகள் புராணம் - திருப்பாடல் 8 )
என்றுரைக்க அரசு கேட்(டு) இதற்கென்னோ கருத்தென்று
நின்றவரை நோக்கி அவர் எவ்விடத்தார் என வினவத்
துன்றியநூல் மார்பரும் இத்தொல்பதியார் மனையின்கண்
சென்றனர் இப்பொழு(து) அதுவும் சேய்த்தன்று நணித்தென்றார்

திருநாவுக்கரசர் (அப்பூதி அடிகளுடன் ஒரு நெகிழ்விக்கும் சந்திப்பு):

திங்களூர் தலத்திற்கு வருகை புரியும் நாவுக்கரசு சுவாமிகள் அங்கு 'இறைவர் முன்னர் தமக்கு அருளியிருந்த திருப்பெயரைக் கொண்டு' பல்வேறு அறச் செயல்கள் நடந்தேறி வருவதைக் காண்கின்றார். அப்பூதி அடிகள் எனும் உத்தமத் தொண்டரே அவைகளைப் புரிந்து வருகின்றார்' என்பதை அறிந்து கொண்டு, அவர்தம் இல்லத்திற்கு எழுந்தருளிச் செல்கின்றார். 

சிவனடியாரொருவர் வருகை புரிந்துள்ளார் என்றறியும் அப்பூதி அடிகள் விரைந்து சுவாமிகளின் திருவடிகளைப் பணிய, அதற்கு முன்னமே சுவாமிகள் அப்பூதி அடிகளை வணங்குகின்றார். அப்பூதி நாயனார் இனிய மொழிகூறி வரவேற்க, சுவாமிகளும் 'அரனடியார்க்கு உதவும் பொருட்டு நீங்கள் அமைத்துள்ள தண்ணீர்ப் பந்தலின் முகப்பில் உங்கள் பெயரல்லாது பிறிதொரு பெயரை முன்னெழுத காரணம் யாதோ? என்று வினவுகின்றார். 

அப்பூதி அடிகள் துணுக்குற்றுப் பதறி, 'கொடிய சமணர்கள் மற்றும் பல்லவனின் சூழ்ச்சியினைத் தம்முடைய திருத்தொண்டின் திறத்தினால் வென்றருளிய அப்பரம குருநாதரின் திருப்பெயரையா வேறொரு பெயர் என்று கூறுகின்றீர்?. சைவ மெய்த் திருக்கோலம் பூண்டிருந்தும் இவ்விதச் சொற்களைக் கூறும் நீங்கள் யார்? உடன் கூறுங்கள்' என்று வெகுண்டு வினவுகின்றார். 

(1)
மெய்யன்பின் வடிவமான வாகீசப் பெருந்தகையார் அப்பூதியாரின் மேன்மையினை உணர்ந்தவராய், 'சமணமாகிய பர சமயக் குழியினின்றும் கரையேற இறைவரால் முன்னர் சூலைநோய் அருளப் பெற்றுப் பின் ஆட்கொள்ளவும் பெற்ற, மெய்ப்பொருளை உள்ளவாறு அறியும் உணர்விலா சிறியேன் யான்' என்று மறுமொழி புகல்கின்றார். 
-
(பெரிய புராணம் - அப்பூதி அடிகள் புராணம் - திருப்பாடல் 16)
திருமறையோர் அதுமொழியத் திருநாவுக்கரசர் அவர்
பெருமையறிந்(து) உரை செய்வார்; பிறதுறையினின்(று) ஏற
அருளு பெரும் சூலையினால் ஆட்கொள்ள அடைந்துய்ந்த
தெருளும் உணர்வில்லாத சிறுமையேன் யான் என்றார்

(2)
'மனமெய் வாக்கினாலே அனுதினமும் உபாசித்து வரும் ஒப்புவமையில்லா பரம குருநாதரே தம் இல்லத்திற்கு எழுந்தருளி வந்துள்ளார்' என்றுணரப் பெறும் அப்பூதியாரின் கரமலர்கள் தாமாக உச்சி கூப்புகின்றன; கண்ணீர் ஆறாகப் பெருகி வர, ஏதொன்றும் பேச இயலாது உரை குழறுகின்றது; திருமேனி எங்கும் புளகமுற, நிலமிசை வீழ்ந்து வணங்கி சுவாமிகளின் திருவடிகளைத் தன் சென்னிமிசை சூடிக் கொள்கின்றார், 
-
(பெரிய புராணம் - அப்பூதி அடிகள் புராணம் - திருப்பாடல் 17)
அரசறிய உரைசெய்ய அப்பூதி அடிகள்தாம்
கர கமல மிசைகுவியக் கண்ணருவி பொழிந்திழிய
உரைகுழறி உடம்பெல்லாம் உரோம புளகம் பொலியத்
தரையின்மிசை வீழ்ந்(து) அவர்தம் சரண கமலம் பூண்டார்

(3)
திருத்தொண்டின் தனியரசர் அப்பூதி அடிகளை எதிர்வணங்கி அவரை நில மிசையினின்று எடுத்தருள, பெருஞ்செல்வம் பெற்ற வறியவர் போல் அப்பூதியார் களிப்புறுகின்றார்; சுவாமிகளின் திருமுன்பு ஆனந்தக் கூத்தாடுகின்றார்; அதீத நெகிழ்ச்சியினால் செயலறியாது அங்குமிங்குமாய் ஓடுகின்றார்; பாடுகின்றார்.  
-
(பெரிய புராணம் - அப்பூதி அடிகள் புராணம் - திருப்பாடல் 18)
மற்றவரை எதிர்வணங்கி வாகீசர் எடுத்தருள
அற்றவர்கள் அருநிதியம் பெற்றார் போல் அருமறையோர்
முற்றஉளம் களிகூர முன்னின்று கூத்தாடி
உற்ற விருப்புடன் சூழ ஓடினார் பாடினார்.

(4)
தன்வயமற்றவராய் பெருமகிழ்ச்சியுடன் இல்லத்திற்குள் சென்று தன் மனைவியார்; பிள்ளைகள் மற்றும் சுற்றத்தினருக்குச் சுவாமிகள் எழுந்தருளி வந்திருக்கும் மங்கலச் செய்தியினைத் தெரிவித்து அவர்களுடன் மீண்டும் வாயிலுக்கு விரைகின்றார், 
-
(பெரிய புராணம் - அப்பூதி அடிகள் புராணம் - திருப்பாடல் 19)
மூண்டபெரு மகிழ்ச்சியினால் முன் செய்வதறியாதே
ஈண்டமனை அகத்தெய்தி இல்லவர்க்கும் மக்களுக்கும்
ஆண்ட அர(சு) எழுந்தருளும் ஓகை உரைத்(து) ஆர்வமுறப்
பூண்டபெரும் சுற்றமெலாம் கொடுமீளப் புறப்பட்டார்

(5)
அனைவரையும் சுவாமிகளின் திருவடிகளைப் பணிந்து ஆசிபெறச் செய்து, சுவாமிகளை இல்லத்திற்குள் எழுந்தருளச் செய்து, தக்கதோர் ஆசனத்தில் அமர்வித்து அவர்தம் திருப்பாதங்களை நறுமணம் பொருந்திய நன்னீரால் விளக்கி பூசை செய்து, அப்புண்ணிய நீரினை தங்களின் மீது தெளித்துக் கொண்டு அதனை உட்கொள்ளவும் செய்கின்றார், 
-
(பெரிய புராணம் - அப்பூதி அடிகள் புராணம் - திருப்பாடல் 20)
மனைவியாருடன் மக்கள் மற்றுமுள்ள சுற்றத்தோர்
அனைவரையும் கொண்டிறைஞ்சி ஆராத காதலுடன்
முனைவரைஉள் எழுந்தருளுவித்(து) அவர்தாள் முன்விளக்கும்
புனைமலர்நீர் தங்கள்மேல் தெளித்(து) உள்ளும் பூரித்தார்

திருநாவுக்கரசர் (மாண்ட பாலகன் மீண்டெழுந்த அற்புத நிகழ்வு):

தம் இல்லத்திற்கு எழுந்தருளி வந்த நாவுக்கரசு சுவாமிகளிடம் அப்பூதியார் அமுது செய்யுமாறு விண்ணப்பிக்க, சுவாமிகளும் அதற்கிசைகின்றார். ஆளுடைய அரசுகள் அவர்தம் திருமாளிகையுள் சிவயோகத்தில் வீற்றிருக்க, அப்பூதியாரின் திருத்துணைவியார் பெரும் ஆர்வத்துடன் வகை வகையான திருவமுதினை விரைவுடன் அமைக்கின்றார்.

(1)
தோட்டத்திற்கு இலை பறிக்கச் செல்லும் அப்பூதியாரின் குமாரனை விதிவசத்தால் அரவம்தீண்டி விடுகின்றது. அப்பாலகனோ அதனை ஒருசிறிதும் பொருட்படுத்தாமல், விரைந்து சென்று சுவாமிகளுக்கான இலையினைத் தாயிடம் சேர்ப்பித்து மறுகணமே தன் இன்னுயிரையும் துறக்கின்றான். இது கண்ட அப்பூதியார் 'ஆ கேட்டோம், இதனை அறிந்தால் நம் குருநாதர் அமுது செய்ய இசையார்' என்று பதறியவாறு அச்சடலத்தினை மறைக்கின்றனர். 

(பெரிய புராணம் - திருநாவுக்கசர் புராணம் - திருப்பாடல் 206)
தீயவிடம் தலைக்கொள்ளத் தெருமந்து செழும்குருத்தைத்
தாயர் கரத்தினில் நீட்டித் தளர்ந்து தனைத் தழல்நாகம்
மேயபடி உரைசெய்யான்; விழக்கண்டு கெட்டொழிந்தேம்
தூயவர் இங்(கு) அமுதுசெயத் தொடங்கார் என்றது ஒளித்தார்

(2)
பின்னர் அப்பூதியார் தன் உணர்வுகளை முழுவதுமாய் மறைத்துக் கொண்டு சுவாமிகளைத் திருவமுது செய்தருள விண்ணப்பிக்க, சுவாமிகளோ திருவருள் குறிப்பினால் அவர்தம் உள்ளத் தடுமாற்றத்தினை அறியப் பெற்று அத்துன்பத்தினைப் போக்க விழைகின்றார், 

(பெரிய புராணம் - திருநாவுக்கசர் புராணம் - திருப்பாடல் 207)
தம்புதல்வன் சவம் மறைத்துத் தடுமாற்றம் இலராகி
எம்பெருமான் அமுதுசெய வேண்டுமென வந்திறைஞ்ச
உம்பர் பிரான் திருத்தொண்டர் உள்ளத்தில் தடுமாற்றம்
நம்பர் திருவருளாலே அறிந்தருளி நவைதீர்ப்பார்

(3)
'புதல்வன் மரணத்தையும் மறைத்து அடியவர்க்கு அமுது செய்விக்க விழைகின்றனரே' என்று சுவாமிகள் அவர்கள் மீது அளவிறந்த கருணை கொண்டவராய், அருகிலுள்ள சிவாலயத்திற்கு முன்பாக அப்பாலகனின் சடலத்தினைக் கொணர்விக்கச் செய்கின்றார். பின்னர் 'ஒன்றுகொலாம்' எனும் திருப்பதிகமொன்றினை சுவாமிகள் அமைத்துப் பாட, முக்கண் முதல்வரின் திருவருளால் மாண்ட குமாரன் உயிர்பெற்று எழுகின்றான், 

(பெரிய புராணம் - திருநாவுக்கசர் புராணம் - திருப்பாடல் 208)
அன்றவர்கள் மறைத்ததனுக்(கு) அளவிறந்த கருணையராய்க்
கொன்றைநறும் சடையார்தம் கோயிலின்முன் கொணர்வித்தே
ஒன்றுகொலாம் எனப்பதிகம் எடுத்(து) உடையான் சீர்பாடப்
பின்றைவிடம் போய்நீங்கிப் பிள்ளை உணர்ந்தெழுந்(து) இருந்தான்

(4)
அருமைச் செல்வன் உயிர் பெற்றதற்கு ஒருபுறம் மகிழ்ந்தாலும், 'நம் குருநாதரான சுவாமிகள் இன்னமும் அமுது செய்யாத நிலை உருவாகிற்றே' என்று அப்பூதியார் மிகத் தளர்வெய்தி, சொல்லொணாத் துயரத்திற்கு உள்ளாகின்றார். இந்நிலை அறியும் சுவாமிகளும் அவர்தம் இல்லத்திற்கு விரைந்து எழுந்தருளிச் சென்று அனைவருடனும் அமுது செய்து மகிழ்கின்றார். சில காலம் அப்பதியிலேயே அப்பூதியாருடன் எழுந்தருளி இருக்கின்றார், 

(பெரிய புராணம் - திருநாவுக்கசர் புராணம் - திருப்பாடல் 209)
அருந்தனயன் உயிர்பெற்ற அதுகண்டும் அமுதுசெயா(து)
இருந்ததற்குத் தளர்வெய்தி இடர்உழந்தார் துயர்நீங்க
வருந்தும்அவர் மனைப்புகுந்து வாகீசத் திருமுனிவர்
விருந்தமுது செய்தருளி விருப்பினுடன் மேவுநாள்

(5)
பின்னர் அப்பூதியாரும் உடன்வர, சுவாமிகள் திருப்பழனத் தலத்திற்கு மீண்டுமொரு முறை யாத்திரை மேற்கொண்டு, 'சொல்மாலை பயில்கின்ற குயிலினங்காள்' எனும் திருப்பதிகத்தினால் திருப்பழனப் பரம்பொருளைப் போற்றி செய்கின்றார். இதன் இறுதித் திருப்பாடலில், அப்பூதியாரின் சிவவேள்வித் திருத்தொண்டினை 'அஞ்சிப்போய்க் கலிமெலிய அழலோம்பும் அப்பூதி' என்று சிறப்பித்துப் பாடுகின்றார்,  

(பெரிய புராணம் - திருநாவுக்கசர் புராணம் - திருப்பாடல் 210)
திங்களூர் தனில்நின்றும் திருமறையோர் பின்செல்லப்
பைங்கண் விடைத் தனிப்பாகர் திருப்பழனப் பதிபுகுந்து
தங்குபெரும் காதலொடும் தம்பெருமான் கழல்சார்ந்து
பொங்கிய அன்பொடு வணங்கி முன்னின்று போற்றிசைப்பார்

திருநாவுக்கரசர் (திருவாரூரில் ஓர் அற்புத வரவேற்பு):

(1)
வாகீசப் பெருந்தகையார் பெருவேளூர்; விளமர் முதலிய தென்கரைத் தலங்களைத் தரிசித்துப் பரவியவாறே திருவாரூரின் எல்லையினை வந்தடைகின்றார். 
-
(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம்: திருப்பாடல் 217)
பெருவாச மலர்ச்சோலைப் பெருவேளூர் பணிந்தேத்தி
முருகாரும் மலர்க் கொன்றை முதல்வனார் பதிபிறவும்
திருவாரும் விளமருடன் சென்றிறைஞ்சி வாகீசர்
மருவாரூர் எரித்தவர் தம் திருவாரூர் வந்தடைந்தார்

(2)
ஆளுடைய அரசுகள் எழுந்தருளி வருவதனை அறியப் பெறும் ஆரூர் வாழ் திருத்தொண்டர்கள், மாளிகைகள்; திருவீதிகள் இவைகளை நன்கு அணி செய்து; தோரணங்களை நாட்டி, திருவிளக்கு வரிசைகளால் நகரெங்கும் பொலிவுறச் செய்கின்றனர்,
-
(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம்: திருப்பாடல் 218)
ஆண்டஅர(சு) எழுந்தருள ஆரூரில் அன்பர்கள்தாம்
நீண்டசடை முடியார்பால் நிறைந்தஅருள் பெற்றுடையார்
காண்தகு மாளிகைமாடம் கவின் சிறந்தோங்கிட எங்கும் 
சேண்திகழ் வீதிகள் பொலியத் திருமலி மங்கலம் செய்தார்

(3)
'சமணர்களின் கொடுஞ்செயல்களை திருவருள் திறத்தால் வென்று, பெருங்கடலில் கல்லொன்றையே தெப்பமாகக் கொண்டு சைவக் கரையேறிய தனிப்பெரும் குருநாதர் நம்மிடையே எழுந்தருளி வரப் பெற்றோம்' எனும் பெருங்களிப்பு மீதுர, நகர எல்லையில் திருநாவின் தனியரசரை எதிர்கொண்டு வணங்குகின்றனர். திருத்தொண்டின் வேந்தரும் அப்பெருமக்களை எதிர்வணங்கித் தொழுது, அவர்களுடன் இனிமையாய்க் கூடி மகிழ்ந்தவாறே நகருக்குள் எழுந்தருளிச் செல்கின்றார், 
-
(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம்: திருப்பாடல் 219)
வல்அமண் குண்டர்தம் மாயை கடந்து மறிகடலில்
கல்லே மிதப்பாகப் போந்தவர் வந்தார் எனும் களிப்பால்
எல்லையில் தொண்டர் எயிற்புறம் சென்றெதிர் கொண்டபோது
சொல்லின் அரசர் வணங்கித் தொழு(து)உரை செய்தணைவார்

(4)
'பாதகச் சமணர்களுடன் பலகாலும் தொடக்குற்றுப் பின்னர் அதிகைப் பரம்பொருளின் திருவருளால் அப்பிணியினின்றும் நீங்கி உய்ந்த அடியவனுக்கு, இத்தொண்டர்க்கெல்லாம் தொண்டராகும் பெரும்பேறு சித்திக்கப் பெறுமோ?' என்று உளத்துள் நினைந்துருகியவாறே திருவீதிக்குள் மேலும் முன்னேறிச் செல்கின்றார் சுவாமிகள்,  
-
(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம்: திருப்பாடல் 220)
பற்றொன்றிலா வரும் பாதகர் ஆகும் அமணர்தம்பால்
உற்ற பிணியொழிந்(து) உய்யப் போந்தேன் பெறலாவ(து) ஒன்றே
புற்றிடம் கொண்டான்தன் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமென்(று)
அற்ற உணர்வொடும் ஆரூர்த் திருவீதி உள்ளணைந்தார்
-
(இச்சமயத்தில் நம் அப்பர் சுவாமிகள் அருளிய திருவாரூர் தேவாரம் - திருப்பாடல் 1)
குலம்பலம்பா வரு குண்டர் முன்னே நமக்குண்டு கொலோ
அலம்பலம்பா வரு தண்புனல் ஆரூர் அவிர்சடையான்
சிலம்பலம்பா வரு சேவடியான் (தி)ருமூலட்டானம்
புலம்பலம்பா வரு தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே

(இறுதிக் குறிப்பு):
பின்னாளில் திருவாரூருக்கு வருகை புரியும் நம் சுந்தரனாருக்கும், அப்பர் சுவாமிகளுக்குத் தோன்றிய இதே உணர்வு தோன்றுவது, நினைவு கூர்ந்து மகிழத்தக்கவொரு ஒற்றுமை. தம்பிரான் தோழர் தேவாசிரிய மண்டபத்தைக் கடந்து செல்லுகையில், அங்கு வீற்றிருக்கும் அடியவர்களை 'இவர்க்(கு)யான் அடியான்ஆகப் பண்ணு நாள் எந்நாளோ?' என்று உளத்துள் தொழுதவாறே செல்லும் நிகழ்வினைப் பின்வரும் திருப்பாடலில் தெய்வச் சேக்கிழார் பதிவு செய்து போற்றுகின்றார், 
-
(பெரிய புராணம் - திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 355)
கண்ணுதல் கோயில் தேவாசிரியனாம் காவணத்துள்
விண்ணவரொழிய மண்மேல் மிக்க சீரடியார் கூடி
எண்ணிலார் இருந்த போதில் இவர்க்(கு)யான் அடியான்ஆகப்
பண்ணு நாள் எந்நாளென்று பரமர்தாள் பரவிச் சென்றார்

திருநாவுக்கரசர் (திருவாரூர் தரிசனமும், தேவாசிரியன் மண்டபத்தில் ஏற்பட்ட மன வருத்தமும்):

நாவுக்கரசு சுவாமிகள், திருத்தொண்டர்களும் உடன்வர ஆரூர் ஆலயத்துள் செல்கின்றார். தேவாசிரியன் மண்டபத்தினைப் பணிந்திறைஞ்சிப் பின் பூங்கோயில் எனும் ஆரூர்ப் பரம்பொருளின் திருச்சன்னிதியைச் சென்றடைகின்றார்.  

(1)
புற்றிடம் கொண்ட புராதனரின் திருமுன்பு சென்று கண்களாரத் தரிசிக்கின்றார். விதிர்விதிர்த்து வீழ்ந்து பணிந்து, திருமேனி முழுதும் புளகமுற எழுந்து தொழுகின்றார். திருமூலட்டான முதல்வரின் மீதுற்ற மெய்யன்பு பல்கிப் பெருகிய வண்ணமிருக்க, அதீத நெகிழ்ச்சியால் கண்ணருவி பாய, அப்பெருநிலையில் ஆரூருறைப் பரம்பொருளின் திருவடிகளைப் போற்றி செய்கின்றார், 

(திருவாரூர் தேவாரம் - திருப்பாடல் 1)
கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி
    கழலடைந்தார் செல்லும் கதியே போற்றி
அற்றவர்கட்(கு) ஆரமுதமானாய் போற்றி
    அல்லலறுத்(து) அடியேனை ஆண்டாய் போற்றி
மற்றொருவர் ஒப்பில்லா மைந்தா போற்றி
    வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி
செற்றவர்தம் புரமெரித்த சிவனே போற்றி
    திருமூலட்டானனே போற்றி போற்றி

(2)
பின்னர் அச்சன்னிதியினின்றும் அரிதின் நீங்கி, பூங்கோயிலை வலம் வந்து வணங்கியவாறு தேவாசிரியன் மண்டபத்தினை மீண்டும் வந்தடைகின்றார். இச்சமயத்தில் சுவாமிகள் தாங்கொணா வேதனையால் உளம் வெதும்புகின்றார், 'இத்தன்மையரான இறைவரை; கருணைப் பெருங்கடலான முதல்வரை; அடியேனுக்குற்ற தனிப்பெரும் தலைவரை; வார்த்தைகளால் விளக்கவொண்ணா பெற்றி பொருந்திய திருவாரூர் தேவதேவரை, இதுநாள் வரையிலும் தொழாது பொழுதை அவமே போக்கினேனே' என்று வருந்தி, பழமொழிகளோடு முடிவுறும் 10 திருப்பாடல்களைக் கொண்ட பனுவலொன்றினால் தன் வேதனையை வெளிப்படுத்துகின்றார்,

(திருவாரூர் தேவாரம் - திருப்பாடல் 1)
மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த மேனியான் தாள் தொழாதே
உய்யலாம் என்றெண்ணி உறிதூக்கி உழிதந்(து) என்உள்ளம் விட்டுக்
கொய்யுலா மலர்ச்சோலைக் குயில்கூவ மயிலாலும் ஆரூரரைக்
கையினால் தொழாதொழிந்து கனியிருக்கக் காய் கவர்ந்த கள்வனேனே!!

(மற்ற 9 திருப்பாடல்களின் இறுதி வரிகள்)
ஆரூரர்தம்
முன்பிருக்கும் விதியின்றி முயல்விட்டுக் காக்கைப்பின் போனவாறே!!

ஆரூரர்தம்
அருகிருக்கும் விதியின்றி அறமிருக்க மறம்விலைக்குக் கொண்டவாறே!!

ஆரூரரைப் 
பண்டெலாம் அறியாதே பனிநீரால் பாவை செயப் பாவித்தேனே!!

ஆருரரை
என்ஆகத்(து) இருத்தாதே ஏதன்போர்க் காதனாய் அகப்பட்டேனே!!!

ஆருரரை
எப்போதும் நினையாதே இருட்டறையின் மலடு கறந்(து) எய்த்தவாறே!!

ஆரூரில் வார் தேனை வாய்மடுத்துப் பருகி உய்யும்
விதியின்றி மதியிலியேன் விளக்கிருக்க மின்மினித் தீக்காய்ந்தவாறே!!

ஆரூரரைப் 
பாவியேன் அறியாதே பாழூரில் பயிக்கம்புக்(கு) எய்த்தவாறே!!

சாராதே தவமிருக்க அவஞ்செய்து தருக்கினேனே

ஆரூரில் அம்மானை ஆலாலம் உண்டு கண்டம்
கறுத்தானைக் கருதாதே கரும்பிருக்க இரும்பு கடித்(து) எய்த்தவாறே!!

திருநாவுக்கரசர் (சமணர்கள் மறைத்த சிவாலயத்தை வெளிப்படச் செய்த அற்புத நிகழ்வு):

(1)
நாவுக்கரசு சுவாமிகள் தலயாத்திரையாகச் செல்லும் வழியில் தஞ்சை மாவட்டத்திலுள்ள பழையாறையைச் சென்றடைகின்றார். நெறியற்ற சமணர்கள் அங்குள்ள 'வடதளி' எனும் சிவாலய விமானத்தின் மீது பொய்மையான சமண விமானமொன்றினை எழுப்பியதோடு, மூலக் கருவறையில் எழுந்தருளியிருந்த சிவலிங்கத் திருமேனியையும் மறைத்திருந்த நிகழ்வினைக் கேள்வியுற்று உளம் வெதும்புகின்றார், 

(பெரிய புராணம் - திருநாவுக்கசர் புராணம் - திருப்பாடல் 294)
செய்ய சடையார் பழையாறை எய்த அதனில் செல்பொழுதின்
மையல் அமணர் மறைத்த வடதளியில் மன்னும் சிவனாரைக்
கைகள் கூப்பித் தொழுதருளக் கண்டவாற்றால் அமணர்கள்தம்
பொய்கொள் விமானம் எனக்கேட்டுப் பொறாத உள்ளம் மிகப்புழுங்கி

(2)
முக்கண் முதல்வரின் திருவருளை நினைந்து 'எந்தையே! உனது திருமேனி வெளிப்படவும், இக்கொடுஞ்செயல் புரிந்த சமணர்களின் திறம் அழிந்துபடவும் அருள் புரிவாய் ஐயனே!' என்று விண்ணப்பித்து, 'அது வரையிலும் அடியேன் இவ்விடத்தை விட்டு அகலாது உண்ணா நோன்பினையும் மேற்கொள்வேன்' என்று உறுதி கொள்கின்றார். வடதளி மேவும் அண்ணலார் அடிகளின் கருத்தினை முற்றுவிக்கத் திருவுள்ளம் கொண்டு அப்பகுதி வேந்தனின் கனவில் எழுந்தருளிச் செல்கின்றார், 

(பெரிய புராணம் - திருநாவுக்கசர் புராணம் - திருப்பாடல் 296)
வண்ணம் கண்டு நான்உம்மை வணங்கிஅன்றிப் போகேன்என்(று)
எண்ணமுடிக்கும் வாகீசர் இருந்தார் அமுது செய்யாதே
அண்ணலாரும் அதுவுணர்ந்தங்(கு) அரசு தம்மைப் பணிவதற்குத்
திண்ணமாக மன்னனுக்குக் கனவில் அருளிச் செய்கின்றார் 

(3)
'அறிவிலிகளாகிய சமணர்கள் மறைக்க நாம் மறைந்திருந்தோம்! நாவரசன் நமை வணங்கும் பொருட்டு நம் திருமேனியை வெளிக்கொணர்ந்து, நன்னெறி ஒழுகா சமணர்களைத் தண்டித்து முற்றிலுமாய் அவ்விடம் விட்டு அகற்றுவாய்' என்று மன்னவனுக்குக் கட்டளையிட்டு மறைகின்றார். உடன் கண்விழிக்கும் அரசன் திருவுளக் குறிப்பை உணர்ந்து, உச்சிக் கூப்பிய கையினனாய்ப் பழையாறைப் பரம்பொருளை இறைஞ்சுகின்றான், 

(பெரிய புராணம் - திருநாவுக்கசர் புராணம் - திருப்பாடல் 297)
அறிவில் அமணர் நமைமறைப்ப இருந்தோம் என்றங்(கு) அடையாளக்
குறிகள் அறியச் செய்தருளி நம்மை அரசு கும்பிடுவான்
நெறியில் அமணர் தமையழித்து நீக்கிப் போக்கென்றருள் புரியச்
செறிவில் அறிவுற்(று) எழுந்தவனும் செங்கை தலைமேல் குவித்திறைஞ்சி

(4)
பின்னர் மந்திரிகளுக்கு இறைக் கட்டளையைத் தெரிவித்து, அனைவரும் உடன்வர வடதளி ஆலயம் நோக்கி விரைகின்றான். இறைவர் அருளியிருந்த குறிப்பின் வழிநின்று, ஆலய மறைப்பினை நீக்கிச் சிவலிங்கத் திருமேனியை வெளிப்படச் செய்கின்றான். அச்சமணப் பள்ளியிலிருந்த ஆயிரம் சமணர்களையும் தண்டித்துத் தூரறுக்கின்றான். பொய்மையான சமண விமானத்தையும் இடித்தொழித்து, மதியும் அரவும் சூடும் பழையாறை முதல்வருக்குப் புதியதொரு விமானமொன்றைப் புதுக்குகின்றான். 

சிவாகம முறைப்படி நித்ய நைமித்திக பூசனைகள் சிறப்புற நடந்தேற நிபந்தங்களை அமைத்துப் பின்னர் நாவுக்கரசு சுவாமிகளின் திருவடி தொழுது நடந்தேறிய நிகழ்வுகளைத் தெரிவிக்கின்றான். 

(5)
திருநாவின் தனியரசர் அகமிகக் குளிர்ந்து புரவலனுக்கு ஆசி கூறி, ஆறாக் காதலுடன் வடதளி ஆலயத்துள் செல்கின்றார். திருக்கருவறையில் விளக்கமாய் எழுந்தருளியுள்ள பழையாறைப் பரஞ்சுடரைத் தொழுதிறைஞ்சிப் பாமாலையால் போற்றி செய்கின்றார், 

(பழையாறை வடதளி தேவாரம் - திருப்பாடல் 1)
தலையெலாம் பறிக்கும் சமண் கையருள்
நிலையினான் மறைத்தால் மறைக்கொண்ணுமே
அலையினார் பொழிலாறை வடதளி
நிலையினான் அடியே நினைந்து உய்மினே!!


திருநாவுக்கரசர் (திருப்பைஞ்ஞீலி இறைவரால் பசி நீங்கப் பெற்ற அற்புத நிகழ்வு):

நாவுக்கரசு சுவாமிகள் திருச்சிராப்பள்ளி; திருக்கற்குடி; திருப்பராய்த்துறை உள்ளிட்ட தென்கரைத் தலங்கள் பலவும் தரிசித்துப் போற்றியவாறே, காவிரியின் வடகரையிலுள்ள திருப்பைஞ்ஞீலியின் எல்லையை வந்தடைகின்றார். 

(1)
நெடுந்தூரம் பயணித்து வந்த தன்மையாலும்; வெம்மையினாலும் கடும் பசி மற்றும் தாகம் மேலிட, சுவாமிகளின் உடல் தளர்வுறுகின்றது ('அழிவாம் பசி வந்தணைந்திட' என்கின்றார் தெய்வச் சேக்கிழார்). இருப்பினும் உளம் தளராதவராய் ஆலயம் நோக்கி முன்னேறிச் செல்கின்றார். மெய்த்தொண்டர் பசித்திருக்க ஞீலிவன முதல்வர் பொறுப்பரோ! நாவரசரின் மெய்வருத்தம் போக்கிட இறைவர் திருவுளம் பற்றுகின்றார், 
-
(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம்: திருப்பாடல் 304)
வழிபோம் பொழுது மிகஇளைத்து வருத்தம் உறநீர் வேட்கையொடும்
அழிவாம் பசி வந்தணைந்திடவும் அதற்குச் சித்தம் அலையாதே
மொழிவேந்தரு(ம்) முன் எழுந்தருள முருகார் சோலைப் பைஞ்ஞீலி
விழியேந்திய நெற்றியினார் தம்தொண்டர் வருத்தம் மீட்பாராய்!

(2)
சுவாமிகள் வரும் மார்க்கத்தில் புதியதோர் சோலை மற்றும் குளமொன்றினைத் தோற்றுவித்து, திருநீறு துலங்கும் அந்தணரின் வடிவு தாங்கி, பொதிசோறுடன் அடியவராம் வாக்கின் மன்னவரை எதிர்நோக்கி இருக்கின்றார், 
-
(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம்: திருப்பாடல் 305)
காவும் குளமும் முன்சமைத்துக் காட்டி வழிபோம் கருத்தினால்
மேவும் திருநீற்(று) அந்தணராய் விரும்பும் பொதிசோறும் கொண்டு
நாவின் தனி மன்னவர்க்கெதிரே நண்ணி இருந்தார் விண்ணின்மேல்
தாவும் புள்ளும் மண்கிழிக்கும் தனிஏனமும் காண்பரியவர் தாம்!!!

(3)
ஆளுடைய அரசுகள் அருகில் எழுந்தருளி வரவும், வேதியர் வடிவிலிருந்த விடையவர் 'மிகவும் களைப்புற்று வருந்தி இருக்கின்றீர். நம்மிடமுள்ள இப்பொதிசோற்றினை உண்டு இங்குள்ள குளத்து நீரையும் பருகிச் சற்று இளைப்பாறிச் செல்வீர்' என்று தாயினும் சாலப் பரிவுடன் கூறி அருள் புரிகின்றார்,
-
(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம்: திருப்பாடல் 306)
அங்கண் இருந்த மறையவர்பால் ஆண்ட அரசும் எழுந்தருள
வெங்கண் விடை வேதியர் நோக்கி மிகவும் வழிவந்(து) இளைத்திருந்தீர்
இங்கென் பாலே பொதிசோ(று) உண்டிதனை உண்டு தண்ணீர்இப்
பொங்கு குளத்தில் குடித்(து) இளைப்புப் போக்கிப் போவீர் எனப் புகன்றார்!
-
'சுவாமிகள் ஞீலிவனப் பரம்பொருளின் திருவருள் இது போலும்' என்றெண்ணி, மறுமொழி கூறாமல் சிவப்பிரசாதமான அச்சோற்றினை உண்டு, குளத்து நீரையும் பருகி மெய் வருத்தம் தீரப் பெறுகின்றார். பின்னர் மறையவரான வேத முதல்வர் சுவாமிகளிடம் பைஞ்ஞீலி செல்வதைக் கேட்டறிந்து, தாமும் அவ்விடமே செல்வதாகக் கூறி உடன் செல்கின்றார். 

(4)
ஆலயத்தை நெருங்கும் தருணத்தில் இறைவர் திருவுருவம் மறைத்தருள, சுவாமிகள் சற்றுத் திகைப்புற்றுப் பின் உடன் வந்தது ஞீலிவன இறைவரே என்றுணரப் பெறுகின்றார். அகமெலாம் குழைந்துருக 'அடியவனையும் ஒரு பொருளெனக் கொண்டு பெருங்கருணை புரிந்தனையே' என்று கண்ணருவி பொழிந்து அவ்விடத்திலேயே வீழ்ந்து வணங்கி எழுகின்றார், 
-
(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம்: திருப்பாடல் 309)
கூட வந்து மறையவனார் திருப்பைஞ்ஞீலி குறுகியிட
வேடம் அவர்முன் மறைத்தலுமே மெய்ம்மைத் தவத்து மேலவர்தாம்
ஆடல் உகந்தார் அடியேனைப் பொருளா அளித்த கருணை எனப்
பாடல் புரிந்து விழுந்தெழுந்து கண்ணீர் மாரி பயில்வித்தார்

(5)
ஆலயத்துள் புகுந்து கருவறையில் விளக்கமாய் எழுந்தருளி இருக்கும் ஞீலிவனப் பரஞ்சுடரைப் பாமாலையால் போற்றி செய்கின்றார், 
-
(திருப்பைஞ்ஞீலி தேவாரம் - திருப்பாடல் 1)
உடையர் கோவணம் ஒன்றும் குறைவிலர்
படைகொள் பாரிடம் சூழ்ந்த பைஞ்ஞீலியார்
சடையில் கங்கை தரித்த சதுரரை
அடைய வல்லவர்க்கு இல்லை அவலமே!!

திருநாவுக்கரசர் (திருவண்ணாமலை தரிசன அனுபவமும், தல தரிசனப் பயன்களும்):

நாவுக்கரசு சுவாமிகள் தல யாத்திரையாகச் செல்லும் வழியில், பஞ்சபூதத் தலங்களுள் அக்கினி ஷேத்திரமாகப் போற்றப் பெறும் திருவண்ணாமலையைச் சென்றடைகின்றார். 

(1)
தொலைவிலிருந்தே மலையுருவில் எழுந்தருளியுள்ள அண்ணாமலைப் பரம்பொருளை உச்சி கூப்பிய கையினராய்த் தொழுகின்றார். பின்னர் ஆலயத்துள் சென்று திருச்சன்னிதியினை வலமாய் வந்து, அடிமுடி அறியவொண்ணா அண்ணாமலைப் பரஞ்சுடரின் திருமுன்பு வீழ்ந்து பணிகின்றார். அண்ணாமலையாரின் திருக்கோல தரிசன இன்பத்தில் மூழ்கித் திளைக்கின்றார். 'இப்பெருமானை இத்தன்மையில் தரிசித்துப் பணியும் சிவானுபவமானது சிவமுத்திப் பேற்றினும் மேலானதன்றோ' என்று வியந்து போற்றி செய்கின்றார். 
-
(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம்: திருப்பாடல் 312)
செங்கண் விடையார் திருவண்ணாமலையைத் தொழுது வலம்கொண்டு
துங்க வரையின் மிசையேறித் தொண்டர் தொழும்புக்(கு) எதிர்நிற்கும்
அங்கன் அரசைப் பணிந்தெழுந்து திளைத்துத் திருநாவுக்கரசர்
தங்கு பிறப்பே வீட்டினுக்கு மேலாம் பெருமை சாதித்தார்
-
(குறிப்பு: சுவாமிகளுக்கு முன்னர் தில்லையிலும் இவ்வகையிலான அனுபவம் சித்திக்கப் பெற்று 'மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே' என்று போற்றியுள்ளது இவ்விடத்தில் நினைவு கூரத் தக்கது) 

(2)
இவ்வற்புத தரிசன சமயத்தில் அப்பர் சுவாமிகள் மலையுருவிலும் திருக்கருவறையிலும் இருவேறு திருவடிவங்களில் எழுந்தருளியுள்ள அண்ணாமலை ஆதியைக் கைதொழுவதால் விளையும் நற்பலன்களைப் பின்வரும் திருப்பதிகப் பாடல்களில் பட்டியலிடுகின்றார்,
-
(திருவண்ணாமலை தேவாரம் - திருப்பாடல் 1)
பட்டி ஏறுகந்தேறிப் பல இ(ல்)லம்
இட்டமாக இரந்துண்(டு) உழிதரும்
அட்ட மூர்த்தி அண்ணாமலை கைதொழக்
கெட்டுப் போம்வினை கேடில்லை காண்மினே!!
 -
(மற்ற 9 திருப்பாடல்களின் இறுதி வரிகள்)
அற்றம் தீர்க்கும் அண்ணாமலை கைதொழ
நற்றவத்தொடு ஞானத்திருப்பரே

அல்லல் தீர்க்கும் அண்ணாமலை கைதொழ
நல்லவாயின நம்மை அடையுமே

ஆடிப் பாடி அண்ணாமலை கைதொழ
ஓடிப் போகும் நம் மேலை வினைகளே

ஆடிப் பாடி அண்ணாமலை கைதொழ
ஓடிப்போம் நம(து) உள்ள வினைகளே

அட்ட மூர்த்தி அண்ணாமலை மேவிய
நட்டமாடியை நண்ண நன்காகுமே

ஆணிப் பொன்அன அண்ணாமலை கைதொழப்
பேணி நின்ற பெருவினை போகுமே

அண்டத்தோங்கும் அண்ணாமலை கைதொழ
விண்டு போகு(ம்) நம் மேலை வினைகளே

..அண்ணாமலை
சிந்தியா எழுவார் வினை தீர்த்திடும்
கந்த மாமலர் சூடும் கருத்தனே

...அண்ணாமலை கைதொழப்
பறையும் நாம்செய்த பாவங்களானவே

திருநாவுக்கரசர் (காளத்தியில் கண்ணப்ப நாயனாரின் அற்புத தரிசனம்):

நாவுக்கரசு சுவாமிகள் தலயாத்திரையாகச் செல்லும் வழியில், ஆந்திர மாநிலத்திலுள்ள திருக்காளத்தியை வந்தடைகின்றார் (தற்கால வழக்கில் ஸ்ரீகாளஹஸ்தி). பஞ்ச பூத ஷேத்திரங்களுள் வாயுவின் அம்சமாய் போற்றப் பெறும் இத்தலத்தின் மலைக்கோயிலில் முக்கண் முதல்வர் 'காளத்தீஸ்வரர்; காளத்தியப்பர்' எனும் திருநாமங்களிலும், உமையன்னை ஞானப் பிரசன்னாம்பிகையாகவும் ஆச்சரியமாய் எழுந்தருளி இருக்கின்றனர்.

கருவறைச் சன்னிதியின் உட்புறத்தில், இறைவரின் திருமுன்னர், சிவலிங்கத் திருமேனியின் வலதுபுறத்தில், சிவபிரானிடத்து கொள்ளும் மெய்யன்பு ஒரு திருவடிவம் தாங்கி வந்தது போல், கூப்பிய கரங்களுடன் அற்புதமான நின்ற திருக்கோலத்தில் கண்ணப்ப நாயனார் எழுந்தருளி இருக்கின்றார். 

காண்பதற்கரிய தரிசனம் இது. பொதுவில் கருவறைச் சன்னிதிக்கு வெளியிலிருந்தே தரிசனம் அனுமதிக்கப் படுவதால், அங்கிருந்து காளத்தி இறைவரை மட்டுமே தரிசிக்க இயலும். எனினும் அபிஷேகம்; சிறப்பு அர்ச்சனைகள் அல்லது விசேட நாட்கள் அல்லாத காலங்களில் உட்சென்று தரிசிக்க அனுமதி உண்டு. அன்பர்கள் எவ்விதமேனும் பிரயத்தனம் மேற்கொண்டு கண்ணப்ப நாயனாரைத் தரிசித்து வருதல் வேண்டும்.

(1)
இனி இவ்விசேட தரிசனம் தொடர்பாகத் திருஞானசம்பந்தர் வரலாற்றில் இடம்பெறும் அற்புதக் குறிப்பொன்றினை முதற்கண் சிந்தித்துப் பின்னர் அப்பர் அடிகளின் வரலாற்றிற்குள் செல்வோம், 
-
பின்வரும் திருப்பாடலில் 'காளத்தி இறைவரின் தரிசனப் பயனாக ஞானசம்பந்த மூர்த்திக்குக் கண்ணப்ப நாயனாரின் தரிசனப் பேறு கிட்டியது' ('கும்பிட்ட பயன் காண்பார் போல் மெய்வேடர் பெருமானைக் கண்டு வீழ்ந்தார்') என்று தெய்வச் சேக்கிழார் குறிக்கின்றார், 

[பெரிய புராணம் - திருஞானசம்பந்தர் புராணம்: திருப்பாடல் 1022)
...
சூழ்ந்துவலம் கொண்(டு) இறைவர் திருமுன்பெய்தித்
தொழுதுதலை மேற்கொண்ட செங்கை போற்றி
வீழ்ந்தெழுவார்; கும்பிட்ட பயன் காண்பார் போல்
மெய்வேடர் பெருமானைக் கண்டு வீழ்ந்தார்

எத்தகைய வரிகள்! சிவபுண்ணியங்களின் உறைவிடமாகவும், சைவ சமயத்தின் தனித்தலைமைக் குருமூர்த்தியாகவும் விளங்கும் நம் சம்பந்தப் பெருமானுக்கே 'காளத்தி இறைவரின் தரிசனப் பயனால் தான் கண்ணப்பரின் தரிசனப் பேறு கிட்டுகின்றதாம்'. எனில் மேருமலையினும் மேம்பட்ட கண்ணப்ப நாயனாரின் மெய்யன்பை எங்கனம் போற்றுவது? 

(2)
இனி அப்பர் சுவாமிகளின் வரலாற்றிற்குள் செல்வோம்,

திருத்தொண்டின் வேந்தர் காளத்தி மலையுறைப் பரம்பொருளைக் கண்களாரத் தரிசித்து 'என் கண்ணுளான்' எனும் திருத்தாண்டகத்தால் இறைவரைப் போற்றி செய்கின்றார்,

(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - திருப்பாடல் 345)
காதணிவெண் குழையானைக் காளத்தி மலைக்கொழுந்தை
வேதமொழி மூலத்தை விழுந்திறைஞ்சி எழுந்துபெரும் 
காதல்புரி மனங்களிப்பக் கண்களிப்பப் பரவசமாய்
நாதனைஎன் கண்ணுளான் எனும் திருத்தாண்டகம் நவின்றார்

பின்னர் இறைவரின் திருமுன்பாக எழுந்தருளியுள்ள கண்ணப்ப நாயனாரின் திருப்பாதங்களில் வீழ்ந்து வணங்கிக் கண்ணருவி பாய; உச்சி கூப்பிய கையினராய்க் கருவறையினின்றும் வெளிப்பட்டு வருகின்றார், 

(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - திருப்பாடல் 346)
மலைச்சிகரச் சிகாமணியின் மருங்குற முன்னே நிற்கும்
சிலைத் தடக்கைக் கண்ணப்பர் திருப்பாதம் சேர்ந்திறைஞ்சி
அலைத்துவிழும் கண்ணருவி ஆகத்துப் பாய்ந்திழியத்
தலைக்குவித்த கையினராய்த் தாழ்ந்துபுறம் போந்தணைந்தார்

திருநாவுக்கரசர் (திருக்கயிலையில் அருள் பெற்ற நிகழ்வு):

நாவுக்கரசு சுவாமிகள் வாரணாசியினின்றும் தனியே புறப்பட்டுத் திருக்கயிலை நோக்கிச் செல்கின்றார். எவருமே செல்ல அஞ்சும் கானக மார்க்கத்தில் இரவும் பகலும் சிவசிந்தையுடன் முன்னேறிச் செல்கின்றார். ஒரு நிலையில் காய்; கனிகள்; நீர் என்றிவற்றையும் தவிர்த்துச் சரீர சிந்தையொழித்துத் திருவருளை வழுத்தியவாறு பயணிக்கின்றார். பாதங்கள் கணுக்கால் வரையில் தேய்கின்றது, கரங்களின் உதவி கொண்டு முன்னேறிச் செல்கின்றார். 

மணிக்கட்டு வரையில் தசைகள் தேய்கின்றன. எனினும் அன்பு குன்றாதவராய் மார்பினால் தேய்த்துச் செல்கின்றார். மார்பின் தசைகளும் அழிந்து பட்டு எலும்புகளும் முறிகின்றன. திருவருளை நினைத்தவாறே புரண்டு செல்லத் துவங்குகின்றார். அதுவும் ஒரு நிலையில் இயலாது போக, அந்நிலையிலேயே அசைவற்று இருக்கின்றார். 

(1)
கயிலை முதல்வர் 'சுவாமிகளைக் கொண்டு மேலும் சில தேவாரப் பனுவல்களைப் பாடுவிக்கத் திருவுள்ளம் கொண்டிருந்த காரணத்தால், அடிகளை இதற்கு மேல் கயிலையை நெருங்க அருளாதவராய்', குளம் ஒன்றினைத் தோற்றுவித்து, முனிஒருவரின் உருவில் அங்கு எழுந்தருளித் தோன்றுகின்றார், 

(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - திருப்பாடல் 361)
அன்ன தன்மையர் கயிலையை அணைவதற்(கு) அருளார்
மன்னு தீந்தமிழ் புவியின்மேல் பின்னையும் வழுத்த
நன்னெடும் புனல் தடமும் ஒன்றுடன்கொடு நடந்தார்
பன்னகம் புனை பரமரோர் முனிவராம் படியால்

முனிவரான முதல்வர் 'திருக்கயிலையை அடைவது அரிது' என்று எடுத்துரைத்தும், அப்பர் அடிகள் உளஉறுதியோடு 'திருக்கயிலை நாதரைத் தரிசிக்காமல் மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன்' என்று உறுதிபடப் புகல்கின்றார். 

(2)
இறைவர் திருவுருவம் மறைத்து அசரீரியாய் 'ஓங்கு நாவுக்கரசனே எழுக' என்றருள் புரிய, தாண்டக வேந்தர் ஒளிமிகு தேகநலம் பெற்றெழுகின்றார், 

(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - திருப்பாடல் 367)
ஆங்கு மற்றவர் துணிவறிந்(து) அவர்தமை அறிய
நீங்கு மாதவர் விசும்பிடைக் கரந்துநீள் மொழியால்
ஓங்கு நாவினுக்கரசனே எழுந்திர் என்றுரைப்பத்
தீங்கு நீங்கிய யாக்கை கொண்டெழுந்(து) ஒளி திகழ்வார்

அடிகள் அகம் குழைந்துருகி, 'அண்ணலே, விண்மிசை மறைந்து அருள் புரிகின்ற முதல்வா, உன் கயிலைக் கோலத்தினை காட்டியருள் புரிவாய் ஐயனே' என்று பணிய, இறைவரும் 'இங்குள்ள பொய்கையில் மூழ்கித் திருவையாறில் நமது கயிலைக் கோலம் காண்பாய்' என்றருள் புரிகின்றார்.

(3)
சுவாமிகள் கண்ணருவி பாய, உச்சி கூப்பிய கையினராய் 'வேற்றாகி விண்ணாகி' எனும் போற்றித் திருத்தாண்டகத்தால் கயிலைப் பரம்பொருளைத் தொழுதேத்திப் பின்னர் திருஐந்தெழுத்தை உள்ளத்து இருத்தியவாறே அப்பொய்கையுள் மூழ்குகின்றார்,

(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - திருப்பாடல் 370)
ஏற்றினார்அருள் தலைமிசைக் கொண்டெழுந்(து) இறைஞ்சி
வேற்றுமாகி விண்ணாகி நின்றார் மொழி விரும்பி
ஆற்றல் பெற்றவர் அண்ணலார் அஞ்செழுத்தோதிப்
பால்தடம்புனல் பொய்கையில் மூழ்கினார் பணியால்

(குறிப்பு: திருக்கயிலைக்கான மற்ற இரு போற்றித் திருத்தாண்டகங்களைத் திருவையாறில் கயிலைக்கோல தரிசன சமயத்தில் சுவாமிகள் பாடியதாக சேக்கிழார் பெருமானார் பதிவு செய்கின்றார்)

திருநாவுக்கரசர் (திருவையாறு குளத்திலிருந்து வெளிப்பட்ட அற்புத நிகழ்வு)

(1)
முக்கண் முதல்வரின் ஆணையை ஏற்று, இறைவர் கயிலையில் தோற்றுவித்த குளத்தில் மூழ்கி, மறுகணமே திருவையாற்றுத் திருக்குளத்தினின்றும் வெளிப்பட்டு வருகின்றார் நம் அப்பர் சுவாமிகள். 'ஆதிப் பரம்பொருளான சிவபெருமானின் திருவருள் பெருமையை யாரே அறிந்துணர வல்லார்?' என்று இந்நிகழ்வினை வியந்து போற்றுகின்றார் தெய்வச் சேக்கிழார்.  

(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - திருப்பாடல் 371)
ஆதி தேவர்தம் திருவருள் பெருமை யார்அறிவார்
போத மாதவர் பனிவரைப் பொய்கையில் மூழ்கி
மாதொர் பாகனார் மகிழும் ஐயாற்றிலோர் வாவி
மீது தோன்றி வந்தெழுந்தனர் உலகெலாம் வியப்ப

(2)
சுவாமிகள் கரைக்கு வந்து 'கயிலை நாயகரின் திருவருளும் இதுவோ?' என்று விழிநீர் பெருக்கி நெகிழ்கின்றார் ('இறைவர் தன் அருளினால் கயிலையில் ஒரு குளத்தைத் தோற்றுவிக்க, நம் சுவாமிகளோ இங்கு அன்பினால் பெருகும் கண்ணீரினால் மற்றொரு பொய்கையைத் தோற்றுவிக்கின்றார்' என்றிதனைச் சேக்கிழார் பெருமான் நயம்பட விவரித்துப் போற்றுகின்றார்).   

(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - திருப்பாடல் 372)
வம்புலா மலர் வாவியின் கரையில் வந்தேறி
உம்பர் நாயகர் திருவருள் பெருமையை உணர்வார்
எம்பிரான் தரும் கருணைகொல் இதுஎன இருகண்
பம்பு தாரைநீர் வாவியில் படிந்தெழும் படியார்

(3)
குளக்கரையிலிருந்து திருவையாறு திருக்கோயில் நோக்கிச் செல்லுகையில், யானை; கோழி; குயில்; பேடை; மயில்; பகன்றில்; மான்; நாரை; கிளி; காளை இவைகள் யாவும் தத்தமது துணையோடு விளங்கியிருக்கக் காண்கின்றார். 

(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - திருப்பாடல் 373)
மிடையும் நீள்கொடி வீதிகள் விளங்கிய ஐயா(று)
உடைய நாயகர் சேவடி பணிய வந்துறுவார்
அடைய அப்பதி நிற்பவும் சரிப்பவுமான
புடை அமர்ந்ததம் துணையொடும் பொலிவன கண்டார்

(4)
காட்சி யாவும் சிவசக்தி மயமாய் விளங்கக் காண்கின்றார். எத்திசையிலும், எவ்வுயிரிலும் சிவசக்தியர் உயிர்க்குயிராய் எழுந்தருளி இருப்பதை காட்சி பூர்வமாகவும், அனுபவ பூர்வமாகவும் தரிசித்தும் உணர்ந்தும் சிவானந்தம் எய்தியவாறே, ஐயாறு ஆலய வாயிலை வந்தடைகின்றார். 

(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - திருப்பாடல் 374)
பொன் மலைக் கொடியுடன்அமர் வெள்ளியம் பொருப்பில்
தன்மையாம் படி சத்தியும் சிவமுமாம் சரிதைப்
பன்மை யோனிகள் யாவையும் பயில்வன பணிந்தே
மன்னு மாதவர் தம்பிரான் கோயில்முன் வந்தார்

திருநாவுக்கரசர் (திருவையாறில் கண்ட கயிலைக் காட்சி):

அப்பர் சுவாமிகள் கயிலை நாதரின் ஆணையினை ஏற்று, கயிலையில் இறைவர் தோற்றுவித்திருந்த குளத்தில் மூழ்கித் திருவருளால் திருவையாற்றுத் திருக்குளத்தினின்றும் வெளிப்பட்டு ஐயாறு ஆலய வாயிலை வந்திடைகின்றார். 

(1)
அக்கணமே ஐயாறு திருக்கோயில் மறைந்து, திசைகள் யாவிலும் திருக்கயிலைக் காட்சி நிறைந்து தோன்றுகின்றது. அங்கு அஷ்டலக்ஷ்மி நாயகரான ஸ்ரீமன் நாராயண மூர்த்தி; நான்முகக் கடவுள்; தேவேந்திரன் ஆகியோர் கயிலைப் பரம்பொருளான சிவமூர்த்தியைப் போற்றி செய்து வணங்கியிருக்கவும், ரிக்; யஜுர்; சாம; அதர்வணமாகிய நான்மறைகள் தனித்தனியே முழங்கியிருக்கவும் காண்கின்றார். 

(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம்: திருப்பாடல் 375)
காணும் அப்பெரும் கோயிலும் கயிலைமால் வரையாய்ப்
பேணு மால்அயன் இந்திரன் முதற்பெரும் தேவர்
பூணும் அன்பொடு போற்றிசைத்தெழும் ஒலி பொங்கத்
தாணு மாமறை யாவையும் தனித்தனி முழங்க

மேலும் தேவர்; தானவர்; சித்தர்; விச்சாதாரர்; இயக்கர்; மாதவ முனிவர்கள் ஆகிய எண்ணிறந்தோர் இருமருங்கிலும் நிறைந்து விளங்கிப் போற்றியிருக்கவும், தேவ அரம்பையர்கள் நடமிடவும், முழவொலி முழங்கியிருக்கவும், கங்கை உள்ளிட்ட நதி தேவதைகள் யாவும் வணங்கியிருக்கவும், சிவகணத் தலைவர்கள் பணிந்திருக்கவும், பூத வேதாள கணங்கள் சிவவாத்தியங்களை முழக்கியவாறு போற்றியிருக்கவும், இடப வாகனம் நின்றிருக்கவும், திருநந்திதேவர் அங்குள்ளோரை முறைப்படுத்தியிருக்கவும் பெருவியப்புடன் காண்கின்றார்.  

(2)
இறுதியாய் அவ்வெள்ளி மாமலையின் மிக உயர்ந்ததோர் பீடத்தில், இறைவரின் இடபாகத்து உரிமையுடைய; மரகதக் கொடி போலும்; உலகீன்ற நம் உமையன்னை அருகில் வீற்றிருக்க, பவளமலை போல் எழுந்தருளி இருக்கும்; ஆதிமுதற்பொருளான கயிலை மன்னவரைத் தரிசிக்கப் பெறுகின்றார் (வாக்கின் தனிஅரசரான) நம் சுவாமிகள். 
-
(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம்: திருப்பாடல் 379)
வெள்ளி வெற்பின்மேல் மரகதக் கொடியுடன் விளங்கும்
தெள்ளு பேரொளிப் பவள வெற்பென இடப்பாகம்
கொள்ளு மாமலையாளுடன் கூட வீற்றிருந்த
வள்ளலாரை முன் கண்டனர் வாக்கின் மன்னவனார்

(3)
அம்மையப்பரின் தரிசனமாகிய அப்பேரின்பக் கடலைத் தன் இருவிழிகளாலும் முகர்ந்து முகர்ந்து பருகித் திளைக்கின்றார். உச்சி கூப்பிய கையினராய் எதிர் வீழ்ந்து பணிகின்றார். அகம் குழைந்துருக; மெய்யுணர்வினால் உடல் விதிர்விதிர்க்க, அச்சிவானந்தப் பெருநிலையில் சுவாமிகள் ஆடுகின்றார்; பாடுகின்றார்; அழுகின்றார்; தொழுகின்றார். 'இதற்கு மேல் சுவாமிகளுக்கு அங்கு நிகழ்ந்தவற்றை யாரே விளக்க வல்லார்? என்று நெகிழ்கின்றார் தெய்வச் சேக்கிழார். 

(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம்: திருப்பாடல் 380)
கண்ட ஆனந்தக் கடலினைக் கண்களால் முகந்து
கொண்டு கைகுவித்(து) எதிர் விழுந்தெழுந்து மெய்குலைய
அண்டர் முன்பு நின்றாடினார் பாடினார் அழுதார்
தொண்டனார்க்(கு) அங்கு நிகழ்ந்தன யார்சொல வல்லார்

(4)
சுவாமிகள் இச்சமயத்தில் 'பொறையுடைய பூமிநீரானாய் போற்றி'; 'பாட்டான நல்ல தொடையாய் போற்றி' எனும் இரு போற்றித் திருத்தாண்டகங்களை அருளிச் செய்கின்றார் ('வேற்றாகி விண்ணாகி' திருத்தாண்டகத்தை சுவாமிகள் கயிலையிலேயே அருளிச் செய்து விட்டதாகத் தெய்வச் சேக்கிழார் பதிவு செய்கின்றார்)

(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம்: திருப்பாடல் 381)
முன்பு கண்டு கொண்(டு), அருளின்ஆர் அமுதுண்ண மூவா
அன்பு பெற்றவர்; அளவிலா ஆர்வம்முன் பொங்கப்
பொன் பிறங்கிய சடையரைப் போற்று தாண்டகங்கள்
இன்பம் ஓங்கிட ஏத்தினார்; எல்லையில் தவத்தோர்
-
(இறுதிக் குறிப்பு: கயிலைக் காட்சி மறைந்த பின்னரே 'மாதர்பிறைக் கண்ணியானை' திருப்பதிகத்தை நம் சுவாமிகள் பாடியதாகவும் சேக்கிழார் பெருமான் குறிக்கின்றார்)

திருநாவுக்கரசர் (திருப்பூவணத்தில் பெற்ற சிவ தரிசனக் காட்சி):

நம் அப்பர் சுவாமிகள் சிவபெருமானை (பிரத்யட்சமாக, சுய உருவுடன்) நேரில் தரிசித்தது மூன்று திருத்தலங்களில். முதல் தரிசனம் திருவாய்மூரில் (இந்நிகழ்வில் ஞானசம்பந்தப் பெருமானும் உடனிருக்கின்றார்), பின்னர் திருவையாறில் (திருக்கயிலைக் காட்சி பெறும் சமயத்தில்), இறுதியாக திருப்பூவண ஷேத்திரத்தில். இனி இப்பதிவில் திருப்பூவண தரிசன நிகழ்வினைச் சிந்தித்து மகிழ்வோம். 

திருத்தொண்டின் அரசர் 'திருஆலவாய்' எனும் மதுரை மாநகரினின்றும் புறப்பட்டு, சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள திருப்பூவணம் எனும் திருத்தலத்தினை வந்தடைகின்றார் (தற்கால வழக்கில் திருப்புவனம்). இங்கு ஆலமுண்டருளும் ஆதி முதல்வர் 'புஷ்பவனேஸ்வரர்' எனும் திருநாமத்தில் எழுந்தருளி இருக்கின்றார். 

சுவாமிகள் ஆலயத்துள் புகுந்து சென்று திருக்கருவறையில் அருவுருவில் எழுந்தருளி இருக்கும் புஷ்பவனேஸ்வரப் பரம்பொருளைத் தொழுது நிற்க, அடிமுடி அறியவொண்ணா திருப்பூவண அண்ணல் வெளிப்பட்டுத் தோன்றுகின்றார், 

(பெரிய புராணம் - திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் - திருப்பாடல் 407)
கொடிமாடம் நிலவு திருப்பூவணத்துக் கோயிலினுள்
நெடியானுக்(கு) அறிவரியார் நேர்தோன்றக் கண்டிறைஞ்சி
வடிவேறு திரிசூலத் தாண்டகத்தால் வழுத்திப் போய்ப்
பொடிநீடு திருமேனிப் புனிதர்பதி பிற பணிவார்

நாவுக்கரசு சுவாமிகள் அகமெலாம் குழைந்துருக, கண்ணருவி ஆறாய்ப் பெருக, உச்சி கூப்பிய கையினராய் முக்கண் முதல்வரைப் பன்முறை பணிந்தெழுகின்றார். தன்வயமற்றுச் சிவமாம் பெருவெள்ளத்தில் கரைந்தவராய்க் காண்பதற்கரிய அத்திருக்கோல வடிவத்தினை 11 திருப்பாடல்களில் பதிவு செய்து போற்றுகின்றார்,

(திருப்பூவணம் - அப்பர் தேவாரம் - திருப்பாடல் 1)
வடியேறு திரிசூலம் தோன்றும் தோன்றும்
    வளர்சடைமேல் இளமதியம் தோன்றும் தோன்றும்
கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றும் 
    காதில்வெண் குழைதோடு கலந்து தோன்றும்
இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும்
    எழில்திகழும் திருமுடியும் இலங்கித் தோன்றும்
பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும்
    பொழில்திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே!!

திருநாவுக்கரசர் (புகலூரில் சிவஜோதியில் கலந்த அற்புத நிகழ்வு)

நாவுக்கரசு சுவாமிகள் பாண்டி நாட்டுத் தலங்கள் பலவும் தரிசித்துப் பரவியவாறு சோழ தேசத்திலுள்ள திருப்புகலூரைச் சென்றடைகின்றார். இது சுவாமிகளின் 2ஆம் புகலூர் வருகை, அவதார நிறைவிற்கான யாத்திரை.  

இச்சமயத்தில் சுவாமிகள் கைத்தொண்டுகள் பலவும் புரிந்தவாறு, பல்வேறு தமிழ்மாலைகளை அருளிச் செய்துள்ள குறிப்புகளைச் சேக்கிழார் பெருமானார் பதிவு செய்கின்றார். அடிகள் புகலூரில் பாடியருளிய திருப்பதிகங்கள் மொத்தம் 24, அவற்றுள் 5 புகலூர் தலத்திற்கானவை, மீதமுள்ளவை பொதுப் பனுவல்கள்,

1. செய்யர் வெண்ணூலர்
2. பகைத்திட்டார் புரங்கள்
3. துன்னக் கோவண
4. தன்னைச் சரணென்று 
5. எண்ணுகேன் என்சொல்லி

(பொது)
6. இரு நிலனாய்த் தீயாகி 
7. அப்பன்நீ அம்மைநீ
8. தில்லைச் சிற்றம்பலமும்
9. வென்றிலேன் புலன்கள் ஐந்தும்
10. தம்மானம் காப்பதாகி
11. தொண்டனேன் பட்டதென்னே
12. மருளவா மனத்தனாகி
13. கடும்பகல் நட்டமாடி  
14. முத்தினை மணியை 
15. எட்டாம் திசைக்கும் 
16. பருவரை ஒன்று 
17. பற்றற்றார் சேர் 
18. சிவனெனும் ஓசை 
19. சாம்பலைப் பூசி 
20. விடையும் விடை 
21. வெள்ளிக் குழை 
22. பவளத் தடவரை 
23. அண்டம் கடந்த 
24. பொய்ம்மாயப் பெருங்கடலில் 

இவ்வாறு இருந்து வரும் நிலையில், புகலூருறைப் பரம்பொருளின் திருவருள் பரிபூரணமாய்க் கூடி வர, சிவபதம் பெற இருப்பதைத் திருவருட் குறிப்பினால் சுவாமிகள் உணரப் பெறுகின்றார். 'புகலூர் மேவும் புண்ணியனே, புகலொன்றிலா அடியேனுக்கு உன் திருவடி நிலைகளை அருள்வாய் ஐயனே' என்று அகம் குழைந்துருகிப் பாடுகின்றார்,  

(திருப்புகலூர் - அப்பர் தேவாரம் - திருப்பாடல் 1)
எண்ணுகேன் என்சொல்லி எண்ணுகேனோ
    எம்பெருமான் திருவடியே எண்ணினல்லால்
கண்ணிலேன் மற்றோர் களைகண் இல்லேன்
    கழலடியே கைதொழுது காணின் அல்லால்
ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்
    ஒக்க அடைக்கும் போதுஉணர மாட்டேன்
புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன்
    பூம்புகலூர் மேவிய புண்ணியனே

சித்திரைச் சதய நன்னாளொன்றில் நாம் வாழ, இவ்வையம் சிறக்க, சைவ நெறி செழித்தோங்க, திருத்தொண்டின் திறம் வாழ, திருக்கூட்டம் செம்மையுற்று விளங்க இப்புவிமிசை அவதரித்தருளிய நம் சுவாமிகள் திருக்கருவறையுள் தோன்றும் சிவஜோதியில் சென்று கலந்து, சிவமாம் பெருவாழ்வினைப் பெறுகின்றார்.

திருநாவுக்கரசர் (திருவீழிமிழலை தரிசன அனுபவம் - படிக்காசு பெற்று வறுமை போக்குதல்):

(1)
சோழ நாட்டின் காவிரித் தென்கரையில், திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது திருவீழிமிழலை. தல யாத்திரையாக செல்லும் வழியில் ஞானசம்பந்த மூர்த்தியும், நாவுக்கரசு சுவாமிகளும் வீழிமிழலையைச் சென்றடைகின்றனர். அங்குள்ள சிவ வேதியர்களும், அடியவர் பெருமக்களும் சைவத்துறை சிறக்கத் தோன்றிய இருபெரும் குருநாதர்களை எதிர்கொண்டு வரவேற்றுப் பணிகின்றனர். 

(2)
சம்பந்தப் பெருமானாரும் உடன்வர, அப்பர் சுவாமிகள் ஆலயத்துள் புகுந்து, திருச்சன்னிதியை வலமாகச் சென்று வணங்கி, இறைவரின் திருமுன்பாக வீழ்ந்து பணிந்து எழுகின்றார், அதீத நெகிழ்ச்சியினால் அகம் குழைந்துருகி விம்முகின்றார்,

(திருநாவுக்கரசர் புராணம் - திருப்பாடல் 252)
சென்றுள் புகுந்து திருவீழிமிழலை அமர்ந்த செங்கனகக்
குன்ற வில்லியார் மகிழ்ந்த கோயில் வலமா வந்து, திரு
முன்றில் வணங்கி முன்னெய்தி முக்கண் செக்கர்ச் சடைமவுலி
வென்றி விடையார் சேவடிக்கீழ் விழுந்தார் எழுந்தார் விம்மினார்

(3)
உச்சி கூப்பிய கையினராய், இறைவரின் பால் கொண்டுள்ள அன்பு மென்மேலும் பெருகிய வண்ணமிருக்க, கண்ணருவி பாய, 'திருவீழிமிழலையானைச் சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே' எனும் கருத்தமைந்த திருப்பதிகத்தினால் வீழிமிழலைப் பரம்பொருளைப் போற்றி செய்கின்றார், 

(திருநாவுக்கரசர் புராணம் - திருப்பாடல் 253)
கைகள் குவித்துக் கழல்போற்றிக் கலந்த அன்பு கரைந்துருக
மெய்யில் வழியும் கண்ணருவி விரவப் பரவும் சொல்மாலை
செய்ய சடையார் தமைச்சேரார் தீங்கு நெறி சேர்கின்றார் என்று 
உய்யு நெறித் தாண்டகம் மொழிந்தங்கு ஒழியாக் காதல் சிறந்தோங்க

(திருவீழிமிழலை - அப்பர் தேவாரம் - திருப்பாடல் 1)
போரானை ஈருரிவைப் போர்வையானைப்
    புலியதளே உடையாடை போற்றினானைப்
பாரானை மதியானைப் பகல்ஆனானைப்
    பல்லுயிராய் நெடுவெளியாய்ப் பரந்து நின்ற
நீரானைக் காற்றானைத் தீயானானை
    நினையாதார் புரமெரிய நினைந்த தெய்வத்
தேரானைத், திருவீழிமிழலையானைச்
    சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே

(4)
சில தினங்கள் அப்பதியிலேயே தனித்தனி திருமடங்களில் எழுந்தருளியிருந்து, வீழிமிழலை முதல்வரை முப்போதும் போற்றி வருகின்றனர். அச்சமயம் அப்பகுதி முழுவதிலும் மழையின்மையால் கடும் பஞ்சம் நிலவத் துவங்குகின்றது, அனைவரும் வறுமையினால் வாட்டமுறுகின்றனர். 

(5)
அன்றிரவு இரு சமயக் குரவர்களின் கனவிலும் வீழிமிழலை அண்ணலார் எழுந்தருளிச் சென்று 'இவ்வறுமையின் தீமை உங்களை அண்டாது எனினும் உம்மை வழிபடும் அடியவர்களின் பொருட்டு நாள்தோறும் பொற்காசு தருவோம்' என்றருளிச் செய்கின்றார்,  

(திருநாவுக்கரசர் புராணம் - திருப்பாடல் 257)
கால நிலைமையால் உங்கள் கருத்தில் வாட்டமுறீர் எனினும்
ஏல உம்மை வழிபடுவார்க்கு அளிக்க அளிக்கின்றோம் என்று
கோலம் காண எழுந்தருளிக் குலவும் பெருமை இருவர்க்கும்
ஞாலம் அறியப் படிக்காசு வைத்தார் மிழலை நாயகனார்

(6)
அன்று முதல் அருளாளர்கள் இருவரும், திருக்கோயிலின் இருவேறு பலி பீடங்களின் மீது இறைவர் அருளும் பொற்காசினைக் கொண்டு, தத்தமது திருமடங்களில் அன்பர்கள் அனைவருக்கும் உணவளித்து அருள் செய்கின்றனர்.

திருநாவுக்கரசர் (கருவறையில் கண்ணீர்மழை பொழிய வழிபட்ட திருத்தலங்கள்):

நாவுக்கரசு சுவாமிகளின் வரலாற்று நிகழ்வுகளை 429 பெரிய புராணத் திருப்பாடல்களில் தெய்வச் சேக்கிழார் விவரித்துப் போற்றியுள்ளார். இவற்றுள் சுவாமிகள் கருவறை தரிசன சமயத்தில் கண்ணருவி பொழிய வழிபட்டுள்ள திருத்தலங்களை இப்பதிவில் சிந்திப்போம். இத்திருப்பாடல்களின் பொருளினைக் கற்றறிகையில், சுவாமிகளுக்கு எத்தகைய அற்புத அனுபவம் இத்தலங்களில் கிட்டியுள்ளது என்பதோடு, நாம் எவ்வித மனநிலையில் உளமுருகி ஆலய வழிபாடு புரிதல் வேண்டும் என்பதும் தெள்ளென விளங்கும்,  

(1) தில்லை: (திருநாவுக்கசர் புராணம் - திருப்பாடல் 167)
கையும் தலைமிசை புனை அஞ்சலியன கண்ணும் பொழிமழை ஒழியாதே
பெய்யும் தகையன கரணங்களுமுடன் உருகும் பரிவின பேறெய்தும்
மெய்யும் தரைமிசை விழுமுன்(பு) எழுதரும் மின்தாழ் சடையொடு நின்றாடும்
ஐயன் திருநடம் எதிர் கும்பிடும்அவர் ஆர்வம் பெருகுதல் அளவின்றால்

(2) சீர்காழி (திருநாவுக்கசர் புராணம் - திருப்பாடல் 186) 
பண்பயில் வண்டறை சோலை சூழும் காழிப்
பரமர்திருக் கோபுரத்தைப் பணிந்துள் புக்கு
விண்பணிய ஓங்குபெரு விமானம் தன்னை
வலம்கொண்டு தொழுது விழுந்தெழுந்த எல்லைச்
சண்பைவரு பிள்ளையார் அப்பர் உங்கள்
தம்பிரானாரைநீர் பாடீர் என்னக்
கண்பயிலும் புனல்பொழிய அரசும் வாய்மைக்
கலைபயிலும் மொழிபொழியக் கசிந்து பாடி

(3) திருவாரூர் (திருநாவுக்கசர் புராணம் - திருப்பாடல் 222)
கண்டு தொழுது விழுந்து கர சரணாதிஅங்கம் 
கொண்ட புளகங்களாக எழுந்தன்பு கூரக் கண்கள்
தண்டுளி மாரி பொழியத் திருமூலட்டானர் தம்மைப்
புண்டரிகக் கழல் போற்றித் திருத்தாண்டகம் புனைந்து

(4) புகலூர் (திருநாவுக்கசர் புராணம் - திருப்பாடல் 238)
அத்திரு மூதூர் மேவிய நாவுக்கரசும் தம்
சித்தம் நிறைந்தே அன்பு தெவிட்டும் தெளிவெள்ளம்
மொய்த்திழி தாரைக் கண்பொழி நீர்மெய்ம் முழுதாரப்
பைத்தலை நாகப் பூண் அணிவாரைப் பணிவுற்றார்

(5) திருவீழிமிழலை (திருநாவுக்கசர் புராணம் - திருப்பாடல் 253)
கைகள் குவித்துக் கழல்போற்றிக் கலந்த அன்பு கரைந்துருக
மெய்யில் வழியும் கண்ணருவி விரவப் பரவும் சொல்மாலை
செய்ய சடையார் தமைச்சேரார் தீங்கு நெறி சேர்கின்றார் என்(று)
உய்யு நெறித் தாண்டகம் மொழிந்தங்(கு) ஒழியாக் காதல் சிறந்தோங்க

(6) திருவோத்தூர் (திருநாவுக்கசர் புராணம் - திருப்பாடல் 316)
செக்கர்ச் சடையார் திருவோத்தூர்த் தேவர் பிரானார் தம்கோயில்
புக்கு வலம் கொண்டெதிர் இறைஞ்சிப் போற்றிக் கண்கள் புனல்பொழிய
முக்கட் பிரானை விரும்புமொழித் திருத்தாண்டகங்கள் முதலாகத்
தக்க மொழி மாலைகள் சாத்திச் சார்ந்து பணி செய்தொழுகுவார்

(7) திருக்கச்சி ஏகம்பம் (திருநாவுக்கசர் புராணம் - திருப்பாடல் 323)
வார்ந்து சொரிந்த கண்ணருவி மயிர்க்கால் தோறும் வரும்புளகம்
ஆர்ந்த மேனிப் புறம்பலைப்ப அன்பு கரைந்(து) என்புள் அலைப்பச்
சேர்ந்த நயனம் பயன்பெற்றுத் திளைப்பத் திருஏகம்பர் தமை
நேர்ந்த மனத்தில் உறவைத்து நீடும் பதிகம் பாடுவார்

(8) திருவொற்றியூர் (திருநாவுக்கசர் புராணம் - திருப்பாடல் 335)
எழுதாத மறைஅளித்த எழுத்தறியும் பெருமானைத்
தொழு(து) ஆர்வமுற நிலத்தில் தோய்ந்தெழுந்தே அங்கமெலாம்
முழுதாய பரவசத்தின் முகிழ்த்த மயிர்க்கால் மூழ்க
விழுதாரை கண்பொழிய விதிர்ப்புற்று விம்மினார்

(9) திருக்காளத்தி (திருநாவுக்கசர் புராணம் - திருப்பாடல் 346)
மலைச்சிகரச் சிகாமணியின் மருங்குற முன்னேநிற்கும்
சிலைத்தடக்கைக் கண்ணப்பர் திருப்பாதம் சேர்ந்திறைஞ்சி
அலைத்துவிழும் கண்ணருவி ஆகத்துப் பாய்ந்திழியத்
தலைக்குவித்த கையினராய்த் தாழ்ந்துபுறம் போந்தணைந்தார்

(10) - திருப்பூந்துருத்தி (திருநாவுக்கசர் புராணம் - திருப்பாடல் 387)
சேர்ந்து விருப்பொடும் புக்குத் திருநட மாளிகை முன்னர்ச்
சார்ந்து வலம் கொண்டிறைஞ்சித் தம்பெருமான் திருமுன்பு
நேர்ந்த பரிவொடும் தாழ்ந்து நிறைந்தொழியா அன்பு பொங்க
ஆர்ந்த கண்ணீர்மழை தூங்க அயர்வுறும் தன்மையரானார்

(இறுதிக் குறிப்பு)
கருவறை தரிசனம் அல்லாத பிற சமயங்களில் சுவாமிகள் திருவருளை நினைந்து கண்ணீர்மழை பொழிந்துள்ள திருத்தலங்கள் (திருவதிகை - சூலை நோய் நீங்கப் பெறுகையில், தூங்கானை மாடம் - இடப சூல முத்திரை பொறிக்கப் பெறுகையில், தில்லை - உழவாரத் தொண்டு புரிகையில், திருப்பைஞ்ஞீலி - ஆலய வாயிலில் இறைவர் திருவுருவம் மறைத்த சமயத்தில், ஐயாறு - குளத்தினின்று வெளிவருகையில் மற்றும் கயிலைக் காட்சி பெறுகையில்)