திருநாவுக்கரசர் (திருக்கயிலையில் அருள் பெற்ற நிகழ்வு):

நாவுக்கரசு சுவாமிகள் வாரணாசியினின்றும் தனியே புறப்பட்டுத் திருக்கயிலை நோக்கிச் செல்கின்றார். எவருமே செல்ல அஞ்சும் கானக மார்க்கத்தில் இரவும் பகலும் சிவசிந்தையுடன் முன்னேறிச் செல்கின்றார். ஒரு நிலையில் காய்; கனிகள்; நீர் என்றிவற்றையும் தவிர்த்துச் சரீர சிந்தையொழித்துத் திருவருளை வழுத்தியவாறு பயணிக்கின்றார். பாதங்கள் கணுக்கால் வரையில் தேய்கின்றது, கரங்களின் உதவி கொண்டு முன்னேறிச் செல்கின்றார். 

மணிக்கட்டு வரையில் தசைகள் தேய்கின்றன. எனினும் அன்பு குன்றாதவராய் மார்பினால் தேய்த்துச் செல்கின்றார். மார்பின் தசைகளும் அழிந்து பட்டு எலும்புகளும் முறிகின்றன. திருவருளை நினைத்தவாறே புரண்டு செல்லத் துவங்குகின்றார். அதுவும் ஒரு நிலையில் இயலாது போக, அந்நிலையிலேயே அசைவற்று இருக்கின்றார். 

(1)
கயிலை முதல்வர் 'சுவாமிகளைக் கொண்டு மேலும் சில தேவாரப் பனுவல்களைப் பாடுவிக்கத் திருவுள்ளம் கொண்டிருந்த காரணத்தால், அடிகளை இதற்கு மேல் கயிலையை நெருங்க அருளாதவராய்', குளம் ஒன்றினைத் தோற்றுவித்து, முனிஒருவரின் உருவில் அங்கு எழுந்தருளித் தோன்றுகின்றார், 

(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - திருப்பாடல் 361)
அன்ன தன்மையர் கயிலையை அணைவதற்(கு) அருளார்
மன்னு தீந்தமிழ் புவியின்மேல் பின்னையும் வழுத்த
நன்னெடும் புனல் தடமும் ஒன்றுடன்கொடு நடந்தார்
பன்னகம் புனை பரமரோர் முனிவராம் படியால்

முனிவரான முதல்வர் 'திருக்கயிலையை அடைவது அரிது' என்று எடுத்துரைத்தும், அப்பர் அடிகள் உளஉறுதியோடு 'திருக்கயிலை நாதரைத் தரிசிக்காமல் மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன்' என்று உறுதிபடப் புகல்கின்றார். 

(2)
இறைவர் திருவுருவம் மறைத்து அசரீரியாய் 'ஓங்கு நாவுக்கரசனே எழுக' என்றருள் புரிய, தாண்டக வேந்தர் ஒளிமிகு தேகநலம் பெற்றெழுகின்றார், 

(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - திருப்பாடல் 367)
ஆங்கு மற்றவர் துணிவறிந்(து) அவர்தமை அறிய
நீங்கு மாதவர் விசும்பிடைக் கரந்துநீள் மொழியால்
ஓங்கு நாவினுக்கரசனே எழுந்திர் என்றுரைப்பத்
தீங்கு நீங்கிய யாக்கை கொண்டெழுந்(து) ஒளி திகழ்வார்

அடிகள் அகம் குழைந்துருகி, 'அண்ணலே, விண்மிசை மறைந்து அருள் புரிகின்ற முதல்வா, உன் கயிலைக் கோலத்தினை காட்டியருள் புரிவாய் ஐயனே' என்று பணிய, இறைவரும் 'இங்குள்ள பொய்கையில் மூழ்கித் திருவையாறில் நமது கயிலைக் கோலம் காண்பாய்' என்றருள் புரிகின்றார்.

(3)
சுவாமிகள் கண்ணருவி பாய, உச்சி கூப்பிய கையினராய் 'வேற்றாகி விண்ணாகி' எனும் போற்றித் திருத்தாண்டகத்தால் கயிலைப் பரம்பொருளைத் தொழுதேத்திப் பின்னர் திருஐந்தெழுத்தை உள்ளத்து இருத்தியவாறே அப்பொய்கையுள் மூழ்குகின்றார்,

(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - திருப்பாடல் 370)
ஏற்றினார்அருள் தலைமிசைக் கொண்டெழுந்(து) இறைஞ்சி
வேற்றுமாகி விண்ணாகி நின்றார் மொழி விரும்பி
ஆற்றல் பெற்றவர் அண்ணலார் அஞ்செழுத்தோதிப்
பால்தடம்புனல் பொய்கையில் மூழ்கினார் பணியால்

(குறிப்பு: திருக்கயிலைக்கான மற்ற இரு போற்றித் திருத்தாண்டகங்களைத் திருவையாறில் கயிலைக்கோல தரிசன சமயத்தில் சுவாமிகள் பாடியதாக சேக்கிழார் பெருமானார் பதிவு செய்கின்றார்)

No comments:

Post a Comment