திருநாவுக்கரசர் (புகலூரில் சிவஜோதியில் கலந்த அற்புத நிகழ்வு)

நாவுக்கரசு சுவாமிகள் பாண்டி நாட்டுத் தலங்கள் பலவும் தரிசித்துப் பரவியவாறு சோழ தேசத்திலுள்ள திருப்புகலூரைச் சென்றடைகின்றார். இது சுவாமிகளின் 2ஆம் புகலூர் வருகை, அவதார நிறைவிற்கான யாத்திரை.  

இச்சமயத்தில் சுவாமிகள் கைத்தொண்டுகள் பலவும் புரிந்தவாறு, பல்வேறு தமிழ்மாலைகளை அருளிச் செய்துள்ள குறிப்புகளைச் சேக்கிழார் பெருமானார் பதிவு செய்கின்றார். அடிகள் புகலூரில் பாடியருளிய திருப்பதிகங்கள் மொத்தம் 24, அவற்றுள் 5 புகலூர் தலத்திற்கானவை, மீதமுள்ளவை பொதுப் பனுவல்கள்,

1. செய்யர் வெண்ணூலர்
2. பகைத்திட்டார் புரங்கள்
3. துன்னக் கோவண
4. தன்னைச் சரணென்று 
5. எண்ணுகேன் என்சொல்லி

(பொது)
6. இரு நிலனாய்த் தீயாகி 
7. அப்பன்நீ அம்மைநீ
8. தில்லைச் சிற்றம்பலமும்
9. வென்றிலேன் புலன்கள் ஐந்தும்
10. தம்மானம் காப்பதாகி
11. தொண்டனேன் பட்டதென்னே
12. மருளவா மனத்தனாகி
13. கடும்பகல் நட்டமாடி  
14. முத்தினை மணியை 
15. எட்டாம் திசைக்கும் 
16. பருவரை ஒன்று 
17. பற்றற்றார் சேர் 
18. சிவனெனும் ஓசை 
19. சாம்பலைப் பூசி 
20. விடையும் விடை 
21. வெள்ளிக் குழை 
22. பவளத் தடவரை 
23. அண்டம் கடந்த 
24. பொய்ம்மாயப் பெருங்கடலில் 

இவ்வாறு இருந்து வரும் நிலையில், புகலூருறைப் பரம்பொருளின் திருவருள் பரிபூரணமாய்க் கூடி வர, சிவபதம் பெற இருப்பதைத் திருவருட் குறிப்பினால் சுவாமிகள் உணரப் பெறுகின்றார். 'புகலூர் மேவும் புண்ணியனே, புகலொன்றிலா அடியேனுக்கு உன் திருவடி நிலைகளை அருள்வாய் ஐயனே' என்று அகம் குழைந்துருகிப் பாடுகின்றார்,  

(திருப்புகலூர் - அப்பர் தேவாரம் - திருப்பாடல் 1)
எண்ணுகேன் என்சொல்லி எண்ணுகேனோ
    எம்பெருமான் திருவடியே எண்ணினல்லால்
கண்ணிலேன் மற்றோர் களைகண் இல்லேன்
    கழலடியே கைதொழுது காணின் அல்லால்
ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்
    ஒக்க அடைக்கும் போதுஉணர மாட்டேன்
புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன்
    பூம்புகலூர் மேவிய புண்ணியனே

சித்திரைச் சதய நன்னாளொன்றில் நாம் வாழ, இவ்வையம் சிறக்க, சைவ நெறி செழித்தோங்க, திருத்தொண்டின் திறம் வாழ, திருக்கூட்டம் செம்மையுற்று விளங்க இப்புவிமிசை அவதரித்தருளிய நம் சுவாமிகள் திருக்கருவறையுள் தோன்றும் சிவஜோதியில் சென்று கலந்து, சிவமாம் பெருவாழ்வினைப் பெறுகின்றார்.

No comments:

Post a Comment