திருநாவுக்கரசர் (சமணர்களால் நீற்றறையில் அடைக்கப் பெறுதல்):

நாவுக்கரசு சுவாமிகள் திருவதிகை இறைவரால் தடுத்தாட்கொள்ளப் பெற்றுச் சமணம் விட்டொழிந்து, சைவப் பெருஞ்சமயம் பேணிய நிகழ்வினைச் சமணர்கள் கேள்வியுறுகின்றனர். 'பல்லவ மன்னனுக்கு இச்செய்தி எட்டுமாயின் நம் சமயப் பொய்யுரைகளை உணர்ந்து கொள்வான்; அவனும் சைவத்தைத் தழுவி நின்று நம்மையும் அழித்தொழிப்பான்' என்று அஞ்சி, வஞ்சக திட்டமொன்றினைத் தீட்டுகின்றனர். 

'கொல்லாமை' எனும் கொள்கையைப் பெயரளவில் முன்னிறுத்தி அதன் பின்னணியில் கொடுஞ்செயல்கள் பலவும் புரிந்து வரும் அறிவிலிகளான அச்சமணர்கள் அரசனிடம் சென்று 'இது வரையிலும் நம் சமய நெறியைக் கைக்கொண்டிருந்த தருமசேனர் சூலையுற்றது போல் நடித்துச் சைவ சமயம் சார்ந்தார், இனி நம் மதத்தை அழிக்கவும் முனைவார்' என்று திரித்துக் கூறுகின்றனர். பல்லவனும் மதியிழந்து 'அங்கனமாயின் அவரை இவ்விடம் அழைத்து வரச் செய்து தண்டிப்போம்' என்று ஆணையிடுகின்றான்.

சுவாமிகள், காவலர்களும் உடன்வர, திருவருளை நினைந்தவாறு; மெய்யன்பே ஒரு வடிவமென அரசவைக்கு எழுந்தருளி வருகின்றார். பல்லவ அரசன் வீணர்களான சமணர்களின் ஆலோசனைப்படி சுவாமிகளைப் 'பெருந்தீயுடன் கொழுந்து விட்டெறியும் நீற்றறையில்' அடைக்குமாறு செய்கின்றான். இதுவோ கொல்லாமை?

நம் சுவாமிகளோ அம்பலத்தாடும் தில்லைப் பரம்பொருளின் பொன்போலும் திருவடிகளை உள்ளத்திருத்தி 'சிவமூர்த்தியின் அடியவர்க்கு இடரும் உளவோ' என்று திருப்பதிகம் பாடியவாறு இனிது வீற்றிருக்கின்றார். அனலேந்தும் ஆதிமூர்த்தியின் திருவருளால் அப்பெரு வெப்பமும் இளவேனில் காலத்துத் தென்றலெனக் குளிர்கின்றது சுவாமிகளுக்கு. 

(திருப்பாடல் 1)
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே

(திருப்பாடல் 2)
நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்
நமச்சிவாயவே நானறி விச்சையும்
நமச்சிவாயவே நா நவின்றேத்துமே
நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே

ஏழு நாட்கள் இவ்விதமே செல்கின்றது. பல்லவ வேந்தன் 'இனி நீங்கள் நீற்றறையைத் திறந்து அங்குள்ள நிலையைக் கண்டு வாருங்கள்' என்றுரைக்க, அகத்தே இருளுடைய அச்சமணர்களும் நீற்றறையின் கதவினைத் திறக்கின்றனர். 

சுவாமிகள் ஆடல்வல்லானின் திருவடி நிலைகளாகிய அமுதினைப் பருகிச் சிவமாம் பேரின்ப வெள்ளத்தில் மூழ்கித் திளைத்தவாறு வீற்றிருக்கின்றார். கொடும் சமணர்கள் இதுகண்டு 'தீங்கேதுமின்றி இருக்கின்றனரே, இது என்ன அதிசயம்' என்று உளம் வெதும்புகின்றனர்.

(பெரிய புராணம் - திருநாவுக்கசர் புராணம்: திருப்பாடல் 101)
ஆனந்த வெள்ளத்தின் இடைமூழ்கி அம்பலவர்
தேனுந்து மலர்ப்பாதத்(து) அமுதுண்டு தெளிவெய்தி
ஊனந்தான் இலராகி உவந்திருந்தார் தமைக்கண்டு
ஈனம் தங்கிய(து) இலதாம் என்ன அதிசயம் என்றார்

No comments:

Post a Comment