திருநாவுக்கரசர் (தில்லைத் திருவீதியைப் புரண்டு வலமாய் வந்த நிகழ்வு):

நாவுக்கரசு சுவாமிகள் தில்லைத் திருத்தலத்தில் சிற்சபேசப் பரம்பொருளை முப்போதும் பாமாலைகளால் பணிந்தேத்தியவாறும், உழவாரத் தொண்டுகள் புரிந்தவாறும் சிறிது காலம் தங்கியிருக்கின்றார். 

(1)
இந்நிலையில் ஒரு சமயம், சீர்காழியில் கோயில் கொண்டுள்ள திருநிலை நாயகி அம்மையின் (சிவஞானமாகிய) திருமுலைப் பாலை உட்கொண்டு, மூலமுதற் பொருளான திருத்தோணியப்பரை 'பரம்பொருள் இம்மூர்த்தியே' என்று செந்தமிழ்ப் பாக்களால் உறுதிகூற வல்ல ஞானசம்பந்த வள்ளலைப் பற்றிக் கேள்வியுறுகின்றார். அதிசயமும் காதலும் மேலிட ஆளுடைப் பிள்ளையாரின் பிஞ்சுப் பொற்பாதங்களைப் பணிவதற்குப் பெருவிருப்பம் கொள்கின்றார். 

(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம்: திருப்பாடல் 178)
ஆழிவிடம் உண்டவரை அம்மைதிரு முலைஅமுதம் உண்ட போதே
ஏழிசைவண் தமிழ்மாலை இவன்எம்மான் எனக்காட்டி இயம்பவல்ல
காழிவரும் பெருந்தகைசீர் கேட்டலுமே அதிசயமாம் காதல் கூர
வாழியவர் மலர்க்கழல்கள் வணங்குதற்கு மனத்தெழுந்த விருப்பு வாய்ப்ப

(2)
அப்பொழுதே சென்று ஆடல்வல்லானின் பொற்கழல்களைப் பணிந்து அவர்தம் பேரருளைப் பெற்றுப் பின்னர் பிறவிப் பிணி போக்கும் தில்லைத் திருவீதியினைத் தன் திருமேனி முழுவதும் நிலத்தில் பொருந்துமாறு புரண்டு வலமாய் வந்து வணங்கிப் பின் சீர்காழிப் பதியினை நோக்கிப் பயணித்துச் செல்கின்றார்,
 
(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம்: திருப்பாடல் 179)
அப்பொழுதே அம்பலத்துள் ஆடுகின்ற கழல்வணங்கி அருள்முன் பெற்றுப்
பொய்ப்பிறவிப் பிணியோட்டும் திருவீதி புரண்டுவலம் கொண்டு போந்தே
எப்புவனங்களும் நிறைந்த திருப்பதியின் எல்லையினை இறைஞ்சி ஏத்திச்
செப்பரிய பெருமையினார் திருநாரையூர் பணிந்து பாடிச் செல்வார்

No comments:

Post a Comment