சுந்தரர் தேவாரத்தில் நாவுக்கரசு சுவாமிகள் பற்றிய இனிய குறிப்புகள்:

(1)
(திருவாரூர் - திருத்தொண்டர் தொகை - திருப்பாடல் 4)
திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட
    திருநாவுக்கரையன் தன் அடியார்க்கும் அடியேன்

(2)
வீழிமிழலையில் ஞானசமபந்த மூர்த்தி மற்றும் அப்பர் சுவாமிகளுக்கு இறைவர் படிக்காசு நல்கியருளிய நிகழ்வு,

(திருவீழிமிழலை - 'நம்பினார்க்கு அருள்' எனும் திருப்பதிகம் - திருப்பாடல் 8)
இருந்து நீர் தமிழோடு இசைகேட்கும்
    இச்சையால் காசு நித்தல் நல்கினீர்
அருந்தண் வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுதிரே

(3)
மற்றுமொரு முறை அப்பர் சுவாமிகள் படிக்காசு பெற்ற நிகழ்வு,

(திருநாகைக்காரோணம் - 'பத்தூர் புக்கிரந்துண்டு' எனும் திருப்பதிகம் - திருப்பாடல் 7)
நேசமுடை அடியவர்கள் வருந்தாமை அருந்த
    நிறை மறையோர் உறைவீழி மிழலைதனில் நித்தல்
காசருளிச் செய்தீர் இன்றெனக்கருள வேண்டும் 
    கடல்நாகைக் காரோணம் மேவியிருந்தீரே

(4)
(திருவலிவலம் - 'ஊனங்கத்து உயிர்ப்பாய்' எனும் திருப்பதிகம் - திருப்பாடல் 5)
நல்லிசை ஞானசம்பந்தனும் நாவினுக்கு 
    அரையனும் பாடிய நற்றமிழ் மாலை
சொல்லியவே சொல்லி ஏத்துகப்பானை

(5)
இத்திருப்பாடலில் சுந்தரனார் 8 நாயன்மார்களின் திருப்பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்கள் புரிந்த ஓரோர் செயல் உலகியல் பார்வையில் குற்றமாகக் கருதப் பெறினும், அதனைக் குணமெனக் கொண்டருளும் இறைவரின் பேரருளை வியந்து போற்றுகின்றார். அப்பர் சுவாமிகளை எய்திய குற்றமாக வன்தொண்டர் குறிப்பது 'முற்பகுதியில் புறச்சமயமான சமணத்தில் தொடக்குண்டது',

(திருப்புன்கூர் - 'அந்தணாளன்' எனும் திருப்பதிகம் - திருப்பாடல் 4)
நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன்
    நாவினுக்கரையன் நாளைப் போவானும்
கற்ற சூதன் நற்சாக்கியன் சிலந்தி
    கண்ணப்பன் கணம்புல்லன் என்றிவர்கள்
குற்றம் செய்யினும் குணமெனக் கருதும் 
    கொள்கை கண்டுநின் குரைகழல் அடைந்தேன்
பொற்திரள் மணிக்கமலங்கள் மலரும்
    பொய்கைசூழ் திருப்புன்கூர் உளானே

(6)
இத்திருப்பாடலில் சுந்தரனார் 'நம் அப்பர் சுவாமிகள் 4900 பனுவல்களை அருளிச் செய்ததாக' குறிக்கின்றார், இதனை 4900 பாடல்கள் - 490 திருப்பதிகங்கள் என்று பொருள் கொள்வோரும் உளர், 4900 திருப்பதிகங்கள் என்று கூறுவோரும் உளர்,

(திருநின்றியூர் - 'திருவும் வண்மையும்' எனும் திருப்பதிகம் - திருப்பாடல் 2)
இணைகொள் ஏழெழு நூறிரும் பனுவல்
    ஈன்றவன் திருநாவினுக்கு அரையன்
கணைகொள் கண்ணப்பன் என்றிவர் பெற்ற
    காதல் இன்னருள் ஆதரித்து அடைந்தேன்
திணைகொள் செந்தமிழ் பைங்கிளி தெரியும் 
    செல்வத் தென்திரு நின்றியூரானே

(7)
(திருக்கேதாரம் - 'வாழ்வாவது மாயம்' எனும் திருப்பதிகம் - திருப்பாடல் 10)
நாவின்மிசை அரையன்னொடு தமிழ்ஞானசம்பந்தன்
யாவர் சிவனடியார்களுக்கு அடியான் அடித் தொண்டன்
தேவன் திருக்கேதாரத்தை ஊரன் உரை செய்த
பாவின் தமிழ் வல்லார் பரலோகத்து இருப்பாரே

No comments:

Post a Comment