சுந்தரர் (வெள்ளை யானையில் நிறைவுத் திருப்பதிகம், சேரமான் நாயனாருடன் திருஅணுக்கன் வாயிலை அடைதல்):

சுந்தரனார், தேவர்கள் முன்னாகப் போற்றியவாறு செல்ல, கூப்பிய கரங்களுடன்,  சிவஞானச் சுடராய் அயிராவணத்தில் ஆரோகணித்தவாறு விண்மிசை திருக்கயிலைக்கு நோக்கிச் செல்கின்றார். வழியில், சிவபெருமானின் பெருங்கருணையை நினைந்து நெகிழ்ந்துருகி, 'தானெனை முன் படைத்தான்' எனும் திருப்பதிகத்தினைப் பாடத் துவங்குகின்றார்.  

திருக்கயிலை மூர்த்தி, அடியேனைப் பாடுவிக்கும் திருக்குறிப்புடன் நிலவுலகில் தோற்றுவித்து அருளினான். அப்பெருமானின் குணப் பெருங்கடலையும், திருவடிச் சிறப்பினையும் மிகச் சிறிய அளவிலேயே திருப்பாடல்களாகச் செய்தேன். அக்குறைபாட்டினையும், தகுதியின்மையையும் திருவுள்ளத்தில் கொள்ளாது, நாயினேனையும் ஒரு பொருளாகக் கொண்டு, வானவர்கள் எதிர்கொள்ள, அடியவனின் தகுதிக்கு மிகவும் அப்பாற்பட்ட வெள்ளானையொன்றை அனுப்புவித்து அருளி, உடலோடு இன்னுயிருக்கு ஏற்றம் நல்கிய அப்பெருமானின் திருவருளை என்னென்று போற்றுவது? என்று உளமுருகித் துதிக்கின்றார். 

(சுந்தரர் தேவாரம் - திருக்கயிலை  - திருப்பாடல் 1)
தானெனை முன்படைத்தான் அதறிந்துதன் பொன்னடிக்கே
நானென பாடல்அந்தோ நாயினேனைப் பொருட்படுத்து
வானெனை வந்தெதிர்கொள்ள மத்த யானை அருள்புரிந்து
ஊனுயிர் வேறுசெய்தான் நொடித்தான்மலை உத்தமனே

8ஆம் திருப்பாடலில், இந்த யாத்திரையில் தேவர்களுக்கு வாணன் எனும் சிவகணத் தலைவன் வழிகாட்டியவாறு சென்ற நிகழ்வினைப் பதிவு செய்கின்றார் ('வரமலி வாணன்வந்து வழி தந்தெனக்கு').

9ஆம் திருப்பாடலின் துவக்கத்தில், அஞ்சைக்களத்தில் தன்னை எதிர்கொள்ள வந்தவர்களைப்  பட்டியலியிடுகின்றார் ('இந்திரன் மால் பிரமன் எழிலார்மிகு தேவரெல்லாம் வந்தெதிர் கொள்ள'). மேலும் இந்த யாத்திரை சமயத்தில் திருக்கயிலையில், ததீசி; மரீசி முதலிய தவ முனிவோர் பலரும் முக்கண் முதல்வரிடம், 'சுவாமி, வெள்ளை யானையில் எழுந்தருளி வரும் இவர் யார்?' என்று விண்ணப்பிக்க, கருணைப் பெருங்கடலான கயிலையுறைப் பரம்பொருளும், 'அவன் நம்மவன்; நமக்குறவான ஆரூரன்;' என்றொரு அமுத மொழியினை அருளிச் செய்கின்றார். இதனைத் திருவருட் குறிப்பினால் உணரப் பெறும் நம் நம்பிகள் என்புருகிக் கண்ணீர் பெருக்கித் தன் திருப்பாடலில் இதனைப் பதிவு செய்து நெகிழ்கின்றார் ('நம்தமர் ஊரன்என்றான் நொடித்தான்மலை உத்தமனே'). 

தமை வணங்கிப் போற்றியவாறு அருகில் நின்றிருந்த வருண தேவனிடம், தம்முடைய நிறைவுத் திருப்பதிகத்தை அஞ்சைக்களப் பெருமானிடம் சேர்ப்பிக்குமாறு அளிக்கின்றார். இச்செய்தியினை இறுதித் திருப்பாடலில் பதிவும் செய்கின்றார். 
சேரமான் நாயனார் முன்னதாகவே தெற்கு வாயிலைச் சென்றடைந்து காத்திருக்க, வன்தொண்டரும் வெள்ளை யானையில் அவ்விடத்திற்கு எய்துகின்றார். சேரனாருக்குத் தெற்கு வாயிலில் தடைகளேதுமில்லை, நம்பிகளும்; சேரமான் நாயனாரும் அங்கிருந்து நெடுந்தூரம் பயணித்துச் சென்று திருஅணுக்கன் வாயிலை அடைகின்றனர், 

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 40)
மாசில் வெண்மைசேர் பேரொளி உலகெலாம் மலர்ந்திட வளர்மெய்ம்மை
ஆசில் அன்பர்தம் சிந்தைபோல் விளங்கிய அணிகிளர் மணிவாயில்
தேசு தங்கிய யானையும் புரவியும் இழிந்து சேணிடைச் செல்வார்
ஈசர் வௌள்ளி மா மலைத்தடம் பலகடந்தெய்தினர் மணிவாயில்
இறைவரின் அருளாணை இல்லாமையால் சேரனார் திருஅணுக்கன் வாயிலில் தடையுற்று நிற்க, நாவலூர் மன்னரான நம் நம்பிகள் திருவருளை நினைந்தவாறு அவ்வாயிலுள் புகுந்து, திருக்கயிலைப் பரம்பொருளின் திருச்சன்னிதி நோக்கி முன்னேறிச் செல்கின்றார்.  

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 41)
அங்கண் எய்திய திருஅணுக்கன் திருவாயிலின் அடற்சேரர்
தங்கள் காவலர் தடையுண்டு நின்றனர் தம்பிரான் அருளாலே
பொங்கு மாமதம் பொழிந்த வெள்ளானையின் உம்பர் போற்றிடப் போந்த
நங்கள் நாவலூர்க் காவலர் நண்ணினார் அண்ணலார் திருமுன்பு

No comments:

Post a Comment