சுந்தரர் (சங்கிலியாரைத் தந்தருளுமாறு ஒற்றியூர் இறைவரிடம் விண்ணப்பித்தல்)

(1)
சுந்தரனார் ஒற்றியூர் திருக்கோயிலின் மலர் மண்டபத்தில் சிவஞானச் செல்வியாரான சங்கிலிப் பிராட்டியாரைக் கண்டு காதல் கொள்கின்றார். 'எதுவாயினும் இறைவரிடம் நேரடியாக முறையிட்டு விண்ணப்பித்துக் கொள்வதொன்றே' ஆரூரர் அறிந்துணர்ந்த உத்தம நெறியாகும். ஆதலின் சங்கிலியாரை வேண்டிப் பெறும் குறிப்புடன் ஆதிபுரீஸ்வரப் பரம்பொருளின் திருமுன்பாகச் செல்கின்றார். 

(2)
எனினும் நம்பிகள் உளத்திலோ 'இறைவர், நாம் பரவையை முன்னரே உனக்கு அருளியிருந்தோமே, இப்பொழுது மீண்டுமென்ன காதல் விண்ணப்பம்?' என்று அருளாது போய்விடின் என்ன செய்வது?' எனும் ஐயமும் எழுகின்றது. 

ஆதலின் ஒற்றியூர் முதல்வரிடம் 'இடபாகத்தில் உமையன்னையாகிய காதலியாரைக் கொண்டருளும் நிலையிலும், திருமுடியில் கங்கையெனும் மற்றொரு நங்கையை மறைத்து வைத்தருளும் அரியதொரு காதலுடையீர், முழுமதி போலும் சங்கிலியைத் தந்து அடியவனின் வாட்டத்தைப் போக்கியருள்வீர்' என்று நயம்பட விண்ணப்பித்து இறைஞ்சுகின்றார், 

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 232):
மங்கைஒருபால் மகிழந்ததுவும் அன்றி மணிநீள் முடியின்கண்
கங்கை தன்னைக் கரந்தருளும் காதலுடையீர் அடியேனுக்(கு) 
இங்கு நுமக்குத் திருமாலை தொடுத்தென் உள்ளத் தொடையவிழ்த்த
திங்கள் வதனச் சங்கிலியைத் தந்தென் வருத்தம் தீருமென

(3)
மேலும் படம்பக்க அண்ணலாரிடம் பல்வேறு வகைகளில் தன் உள்ளக் குறிப்பையும்; காதலுணர்வையும் இனிய மொழிகளால் எடுத்துரைத்துப் பின் சன்னிதியினின்றும் வெளிப்பட்டு வருகின்றார். உள்ளத்திலோ, 'ஐயனே! மன; மெய்; வாக்கினால் உமக்கு அடிமை செய்வதொன்றையே கொள்கையெனக் கொண்டிருந்த அடியேனின் உள்ள உறுதியைக் கணநேரத்தில் இக்காரிகை சிதறச் செய்து விட்டாளே! இனிச் செயலொன்றும் அறியேன், அருள் புரிவீர்' என்று மிகவும் தளர்வுற்று வருந்துகின்றார்,

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 233):
அண்ணலார்முன் பலவும்அவர் அறிய உணர்த்திப் புறத்தணைந்தே
எண்ணமெல்லாம் உமக்கடிமை ஆமாறெண்ணும் என்னெஞ்சில்
திண்ணமெல்லாம் உடைவித்தாள் செய்வதொன்றும் அறியேன் யான்
தண்ணிலா மின்னொளிர் பவளச் சடையீர் அருளும் எனத் தளர்வார்

No comments:

Post a Comment