சுந்தரர் (சிவவேதியர் வடிவில் வருகை புரிந்தது இறைவரே என்றுணர்ந்து பரவையார் வருந்துதல்):

(1)
திருவாரூர் இறைவர் மறைமுனிவரின் திருவடிவில் எழுந்தருளி வந்து, சுந்தரரின் சார்பாக பல்வேறு வகைகளில் எடுத்துக் கூறியும், பரவையார் மறுத்துரைத்து, 'இவ்விடம் விட்டுச் சென்று விடுங்கள்' என்று இறைவரைக் கடிந்துரைத்து அனுப்பி விடுகின்றார். 

(2)
பின்னர், 'மறையவராய் எழுந்தருளியது மறைநாயகரான வீதிவிடங்கப் பெருமானாக இருக்குமோ?' என்று உள்ளுணர்வு தோன்ற, 'ஆ கெட்டேன்! எந்த இறைவரின் திருவடிகளுக்கு அடிமைத் திறம் பூண்டிருந்தேனோ, அத்தலைவரான தியாகேசப் பரம்பொருளின் கூற்றுக்கு எதிர்மொழி கூறும் குற்றமிழைத்தேனே' என்று தவித்துப் பதறுகின்றார், 

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம் - திருப்பாடல் 359)
மதிநுதல் பரவையார் தாம் மறையவர் போன பின்பு
முதிர்மறை முனியாய் வந்தார் அருளுடை முதல்வராகும்
.அதிசயம் பலவும் தோன்ற அறிவுற்றே அஞ்சிக் கெட்டேன்
எதிர்மொழி எம்பிரான் முன் என்செய மறுத்தேன் என்பார்

(3)
'தோழருக்காக எழுந்தருளிய ஆதிமுதல்வரின் மொழிகளை உள்ளத்தில் கொள்ளாது போனேனே, பாவியேன் என் செய்வேன்?' என்று தோழியரிடம் அரற்றுகின்றார். செயலொன்றும் அறியாதவராய், 'எமை ஆளுடைய இறைவர் மீண்டும் எழுந்தருளக் கூடும்' என்றெண்ணி, இறைவர் சென்றருளிய திசையையே எதிர்நோக்கி இருக்கின்றார், 

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம் - திருப்பாடல் 360)
கண்துயில் எய்தார் வெய்ய கையற(வு) எய்தி ஈங்குஇன்று
அண்டர்தம் பிரானார் தோழர்க்காக அர்ச்சிப்பார் கோலம்
கொண்டணைந்தவரை யான்உட்கொண்டிலேன் பாவியேன் என்(று)
ஒண்சுடர் வாயிலே பார்த்(து) உழையரோ(டு) அழியும் போதில்

No comments:

Post a Comment