சுந்தரர் (மலைநாட்டிலிருந்து திருவாரூரை நினைந்து பாடுதல்):

சுந்தரர் மலைநாட்டிலுள்ள கொடுங்களூரில் சேரமான் நாயனாருடன் நட்பால் கூடி மகிழ்ந்திருக்கும் நாட்களில், ஆரூர் மேவும் அற்புதக் கடவுளை நெடு நாட்கள் பிரிந்திருந்த ஆற்றாமையினால், 'ஆரூரானை மறக்கலுமாமே' என்று உளமுருகப் பாடுகின்றார், தோழமை தந்தருளிய பெருமானன்றோ!!!

(சேரமான் பெருமாள் நாயனார் புராணம்: திருப்பாடல் 156):
நாவலர்தம் பெருமானும் திருவாரூர் நகராளும்
தேவர்பிரான் கழல்ஒருநாள் மிகநினைந்த சிந்தையராய்
ஆவியை ஆரூரானை மறக்கலுமாமே என்னும்
மேவியசொல் திருப்பதிகம் பாடியே வெருவுற்றார்

(சுந்தரர் தேவாரம் - திருவாரூர் - திருப்பாடல் 1):
பொன்னும் மெய்ப்பொருளும் தருவானைப்
போகமும் திருவும் புணர்ப்பானைப்
பின்னை என் பிழையைப் பொறுப்பானைப்
பிழையெலாம் தவிரப் பணிப்பானை
இன்ன தன்மையன் என்றறிவொண்ணா
எம்மானை எளி வந்த பிரானை
அன்னம் வைகும் வயல் பழனத்தணி
ஆரூரானை மறக்கலுமாமே

(சுந்தரர் தேவாரம் - திருவாரூர் - திருப்பாடல் 4):
செத்த போதினில் முன்னின்று நம்மைச்
சிலர்கள் கூடிச் சிரிப்பதன் முன்னம்
வைத்த சிந்தையுண்டே மனமுண்டே
மதியுண்டே விதியின் பயனுண்டே
முத்தன் எங்கள் பிரானென்று வானோர்
தொழ நின்ற திமில் ஏறுடையானை
அத்தன் எந்தை பிரான் எம்பிரானை
ஆரூரானை மறக்கலுமாமே

No comments:

Post a Comment