சுந்தரர் (சேரனார் கவரி வீச யானை மீதிலொரு அற்புத பவனி):

சேரமான் நாயனார், திருவாரூரிலிருந்து மலைநாட்டிற்குத் தன்னுடன் பயணித்து வருகை புரிந்திருந்த சுந்தரனாருக்கு முதலில் திருஅஞ்சைக்களத் திருக்கோயிலைத் தரிசனம் செய்விக்கின்றார். பின்னர் ஆலயத்தினின்றும் வெளிவந்து, நன்கு அணி செய்யப் பெற்றிருக்கும் யானையொன்றின் மீது நம்பிகளை எழுந்தருளுளச் செய்து, அவருக்குப் பின்னாகத் தாமும் அமர்ந்து மணிச் சாமரம் வீசியவாறே தம்முடைய திருமாளிகைக்கு அழைத்துச் செல்கின்றார். 

(சேரமான் பெருமாள் நாயனார் புராணம்: திருப்பாடல் 147):
தொழுது திளைத்துப் புறம்போந்து தோன்றப் பண்ணும் பிடிமேல்பார்
முழுதும் ஏத்த நம்பியை முன்பேற்றிப் பின்பு தாம்ஏறிப்
பழுதின் மணிச்சாமரை வீசிப் பைம்பொன் மணிமாளிகையில் வரும்
பொழுது மறுகில் இருபுடையும் இடைந்தார் வாழ்த்திப் புகல்கின்றார்

திருவீதிகளின் இருமருங்கிலும் கூடியிருந்த அப்பதி வாழ் மக்கள் இவ்வரிய திருக்காட்சியினை வியந்து போற்றுகின்றனர், 'நம் மன்னர் பெருமானுக்கு இவர் நல்ல தோழர்' என்பார், 'தம்பிரான் தோழராகிய இவரைத் தொழுதற்கு என்ன தவம் புரிந்தோமோ?' என்று நெகிழ்ந்து பணிவார், 'வன்தொண்டனாரை இங்கு வரப்பெற்ற நம் மலை நாட்டிற்கு இனிப் பெற வேண்டிய செல்வமும் உளதோ?' என்று போற்றுவார், 'நம் மன்னர் பெருமானார் தம்முடைய தோழருக்குச் சாமரம் வீசும் மாண்பிணைப் புகழ வார்த்தைகளாலும் கூடுமோ?' என்று உள்ளம் உருகுவார். 

(சேரமான் பெருமாள் நாயனார் புராணம்: திருப்பாடல் 148):
நல்ல தோழர் நம்பெருமாள் தமக்கு நம்பி இவரென்பார்
எல்லையில்லாத் தவம்முன்பென் செய்தோம் இவரைத் தொழவென்பார்
செல்வம் இனியென் பெறுவது நம் சிலம்பு நாட்டுக்கென உரைப்பார்
சொல்லும் தரமோ பெருமாள்செய் தொழிலைப் பாரீர் எனத்தொழுவார்

மலர்களையும்; பொறிகளையும்; பொன் துகள்களையும் தூவிப் பணிவர் சிலர், 'ஒப்புவமையில்லாத இத்திருத்தொண்டரை அவதரிக்கப் பெற்றமையால் சோழ தேசமே இந்நிலவுலகம் முழுவதற்கும் திலகமெனத் திகழ்கின்றது' என்று பெரிதும் வியந்து உச்சி கூப்பிய கையினராய்ப் போற்றி செய்வர். இவ்வாறு திசைகளெங்கும் போற்றியுரைகளும், வாழ்த்தொலிகளும் நிறையுமாறு, சேரமான் நாயனார் நம்பிகளுடன் தம்முடைய திருமாளிகையைச் சென்றடைகின்றார்.   

(சேரமான் பெருமாள் நாயனார் புராணம்: திருப்பாடல் 149):
பூவும் பொரியும் பொற் துகளும் பொழிந்து பணிவார் பொருவில்இவர்
மேவும் பொன்னித் திருநாடே புவிக்குத் திலதம் எனவியப்பார்
பாவும் துதிகள் எம்மருங்கும் பயில வந்து மாளிகையின்
மாவும் களிறும் நெருங்கு மணிவாயில் புகுந்து மருங்கிழிந்தார்

No comments:

Post a Comment