சுந்தரர் (சேரமான் பெருமாள் நாயனாருக்குச் சுந்தரரை அறிவித்தல்):

சேரமான் பெருமாள் நாயனார், மலைநாடான கேரளத்தில், வழிவழியாய் சேர மரபினர் கோலோச்சி வரும் கொடுங்களூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வருகின்றார். திருஅஞ்சைக்களம் எனும் திருத்தலம் அமையப் பெற்றுள்ள இப்பகுதியை 'மகோதை' என்றும் குறிப்பர். இதன் பொருட்டே சேரமான் நாயனார் 'பெருமாக்கோதையார்' எனும் திருநாமத்தால் குறிக்கப் பெறுகின்றார். 

சேரனார் அனுதினமும் அகம் குழைந்துக் காதலோடு அம்பலவாணரைப் பூசிக்கும் பண்பினர். அப்பூசையின் முடிவில் ஆடல்வல்லான் தன் குஞ்சித பாதத்தினின்றும் சிலம்பொலி கேட்குமாறு அருள் புரிவார். ஒரு சமயம் அவ்வோசை கேட்கப் பெறாமையால் துடிதுடித்து, 'பொன்னார் திருவடிக்கு யாது பிழை புரிந்தேனோ?' என்று கதறியழுது, 'ஆடல்வல்லானின் திருவருள் பேற்றினையிழந்து இனியும் வாழ்வதில் பயனில்லை' என்று உடைவாளெடுத்துத் தன் இன்னுயிரைப் போக்கத் துணிய, சிற்சபேசப் பரம்பொருள் விரைவுடன் சிலம்போசையை மிகுதியாக ஒலிக்குமாறு அருள் புரிகின்றார். 

(சேரமான் பெருமாள் நாயனார் புராணம்: திருப்பாடல் 42):
பூசை கடிது முடித்து அடியேன் என்னோ பிழைத்ததெனப் பொருமி
ஆசை உடம்பால் மற்றினி வேறடையும் இன்பம் யாதென்று
தேசின் விளங்கும் உடைவாளை உருவித் திருமார்பினில் நாட்ட
ஈசர் விரைந்து திருச்சிலம்பின் ஒசை மிகவும் இசைப்பித்தார்

அத்திரு ஓசையால் அகமெலாம் குளிர்ந்து, உடைவாளினை விரைந்தகற்றி, உச்சி கூப்பிய கையினராய்ப் போற்றி செய்து, மண்மிசை வீழ்ந்துத் தொழுதெழுந்து, தெய்வங்களும் உணர்தற்கரிய பொன்னம்பலப் பரம்பொருளே, 'முன்னமே அடியவனுக்கு அருளாத காரணம் அறியலாமோ?' என்று விண்ணப்பிகின்றார். நடராஜ மூர்த்தியும், தில்லையில் நம் கூத்தினை வன்தொண்டன் ஒருமையுற்ற உணர்வினால் போற்றிப் பாடிய பதிகத்தினைக் கேட்டிருந்தமையால் இவ்விடம் வரத் தாமதமானது' என்று அசரீரியாய் நம்பிகள் குறித்து சேரர்கோனுக்கு நினைவூட்டிப் பேரருள் புரிகின்றார். 

(சேரமான் பெருமாள் நாயனார் புராணம்: திருப்பாடல் 44):
என்ற பொழுதில் இறைவர்தாம் எதிர் நின்றருளாது எழுமொலியால்
மன்றினிடை நம் கூத்தாடல் வந்து வணங்கி வன்தொண்டன்
ஒன்றும் உணர்வால் நமைப்போற்றி உரைசேர் பதிகம் பாடுதலால்
நின்று கேட்டு வரத்தாழ்த்தோம் என்றார் அவரை நினைப்பிப்பார்

சேரமான் நாயனார் 'ஆ, நம் இறைவர் அடியார்க்கு அருளும் பேரருட் திறம் தான் என்னே!' என்று விம்மிதமுற்று வணங்கித் 'தில்லை சென்று கூத்தர் பிரானைப் பணிந்துப் பின் திருவாரூரில் தன்னிகரில்லா திருத்தொண்டரான வன்தொண்டரையும் தரிசித்து வணங்குவேன்' என்று உறுதி கொள்கின்றார்.

No comments:

Post a Comment