திருஞானசம்பந்தர் (திருவீழிமிழலையில் பெற்ற சீர்காழிக் காட்சி):

ஞானசம்பந்த மூர்த்தியும், நாவுக்கரசு சுவாமிகளும் தல யாத்திரையாகச் செல்லும் வழியில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருவீழிமிழலையை அடைகின்றனர். இரு வேறு திருமடங்களில் அடியவர் குழாத்துடன் சிறிது காலம் தங்கியிருந்து வீழிமிழலை இறைவரை முப்போதும் பாமாலைகளால் போற்றி வருகின்றனர். இந்நிலையில் சீர்காழி வாழ் அந்தணர்கள் வீழிமிழலைக்குச் சென்று சிவஞானச் செல்வரைத் தொழுது 'தாம் சீர்காழிக்கு மீண்டும் எழுந்தருளி வந்து சிறிது காலம் தங்கியிருக்கும் பேற்றினை எங்களுக்கு அருள வேண்டும்' என்று விண்ணப்பிக்கின்றனர். சீர்காழி வேந்தரும் அவர்கள் அன்பிற்கு மகிழ்ந்து 'நாளை வீழிநாதரின் அருளைப் பெற்று உம்முடன் வருவோம்' என்று அருள் புரிகின்றார்.  

அன்றிரவு சம்பந்தப் பிள்ளையாரின் கனவினில் சீர்காழி இறைவர் தோன்றி 'நாளை வீழிமிழலை ஆலயத்திலேயே தோணிபுரமான சீர்காழியில் நாம் எழுந்தருளியுள்ள திருக்கோலக் காட்சியினைக் காட்டுவோம்' என்று அறிவித்துப் பேரருள் புரிகின்றார். உடன் கண் விழிக்கும் சைவச் செல்வர் அதிசயமுற்றுத் திருவருள் திறத்தினை வியந்து போற்றி, அருகிலுள்ள அடியவர்களுக்கும் இறைவரின் அருட் குறிப்பினைத் தெரிவித்து மகிழ்கின்றார்.   

வைகறைப் பொழுதில் நியமம் முடித்து அடியவர்களுடன் ஆலயத்திற்கு உச்சி கூப்பிய கையினராய் விரைகின்றார். ஆலய விமானத்திற்கு அருகில் கோடி சூர்ய பிரகாசமாய் சீர்காழி இறையவர் அம்பிகையுடன் தோணி மீது எழுந்தருளித் திருக்காட்சி அளித்து அருள் புரிகின்றார். சிவஞானம் உண்ட காழி வேந்தர் உள்ளம் உருகிக் கண்ணீர் பெருக்கி 'முக்கண் முதல்வனே! ஆதிப் பரம்பொருளே, புகலி மேவிய புண்ணியனே, எமை ஆட்கொண்ட கருணைக் கடலே, அடியேனின் பொருட்டு வீழிமிழலையில் தோன்றினாயோ?' என்று திருப்பதிகத்தினால் போற்றுகின்றார், 
-
மைம்மரு பூங்குழல் கற்றைதுற்ற வாணுதல் மான்விழி மங்கையோடும்
பொய்ம் மொழியா மறையோர்கள் ஏத்தப் புகலி நிலாவிய புண்ணியனே
எம்இறையே இமையாத முக்கண்ஈச என்நேச இதென்கொல் சொல்லாய்
மெய்ம்மொழி நான்மறையோர் மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே!!!

பின்னர் சீர்காழி மறையவர்களிடம் இறைவரின் திருவுள்ளக் குறிப்பினைத் தெரிவித்து 'நீங்கள் புகலிக்குத் திரும்பிச் செல்லுங்கள்' என்று கட்டளையிட்டு அருள் புரிகின்றார். அந்தணர்களும் அதனை ஏற்றுத் திருவடி தொழுது, வையம் வாழ வந்துதித்த கவுணியர் குலத் தோன்றலைப் பிரிய மனமில்லாதவராய் ஒருவாறு திருமபிச் செல்கின்றனர்.

No comments:

Post a Comment