திருஞானசம்பந்தர் (சைவச் செல்வரின் திருஅவதாரம்):

சமணமும் பௌத்தமும் ஆதிக்கம் பெற்று எங்கும் புறச்சமய இருள் சூழ்ந்திருந்த 7ஆம் நூற்றாண்டு கால கட்டம். சமணர்கள் அந்தந்த பகுதிகளில் கோலோச்சும் அரசர்களைச் சமண நெறிக்கு உட்படுத்தி, அதன் வாயிலாக வைதீக மரபிற்கும், சைவ சமயத்திற்கும் எண்ணற்ற இடையூறுகளை விளைவித்து வருகின்றனர். சைவச் சின்னங்களும், வழிபாட்டு முறைகளும் பரிகசிக்கப் படுகின்றன, சமண பௌத்தக் கொள்கைகள் திணிக்கப் படுகின்றன, திருக்கோயில்களிலும் எவ்விதத் திருப்பணிகளும் நடந்தேறாத நிலை நிலவி வருகின்றது. 

சீர்காழியில் வாழ்ந்து வரும் 'சிவபாத இருதயர்' என்பார் இச்சூழலைக் கண்டு உளம் வெதும்புகின்றார், அனுதினமும் நியமத்துடன் தவமியற்றி 'பரசமய இடர் நீக்கித் திருநீற்று நெறியினைப் பரவச் செய்யும் ஒரு தவப் புதல்வனைத் தந்து அருள் புரிவாய் ஐயனே!' என்று சிவபெருமானிடம் விண்ணப்பித்து வருகின்றார்.

சீர்காழி மேவும் திருத்தோணியப்பரின் திருவருளால் 'சிவபாதர் - பகவதியார்' தம்பதியருக்கு, ஒரு ஆதிரைத் திருநாளில், வைதீகமும் சைவமும் எண்திசைகளிலும் தழைத்தோங்கவும், பரசமய இடர் நீங்கவும், அடியவர்கள் வாழ்வு செழிக்கவும், தமிழ் வழக்கம் ஏற்றம் பெற்றுச் சிறக்கவும், குருநாதர்களுக்கெல்லாம் குருநாதராக, சைவச் செம்மலென சிவம் பெருக்கும் சம்பந்தப் பிள்ளையார் திருக்குமாரராய் அவதரிக்கின்றார்.

(பெரிய புராணம்: திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம்: திருப்பாடல் 1)
வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறை விளங்கப்
பூதபரம்பரை பொலியப் புனிதவாய் மலர்ந்தழுத
சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர்
பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்.

No comments:

Post a Comment