திருஞானசம்பந்தர் (திருப்பாச்சிலாச்சிராமத்தில் நோய் தீர்த்த அற்புத நிகழ்வு):

திருச்சி மாவட்டத்தில் காவிரியின் வடகரையில் அமைந்துள்ளது திருப்பாச்சிலாச்சிராமம் (தற்கால வழக்கில் திருவாசி). பிறைமதிப் பரம்பொருள் மாற்றுரை வரதீஸ்வரர் எனும் திருநாமத்தில் இங்கு எழுந்தருளி இருக்கின்றார். இத்தலத்தில் கொல்லி மழவன் எனும் தனவந்தன் வாழ்ந்து வருகின்றான், வழி வழியாய் முக்கண் முதல்வரை வணங்கும் மரபினனான இம்மழவனின் புதல்வி முயலகன் எனும் நோயினால் அவதியுற்று, யாதொரு மருத்துவ முறையும் பயனளிக்காத  நிலையில் அசைவற்றிருந்து வருகின்றாள்.

இறுதி முயற்சியாய்ப் புதல்வியைச் சிவாலயத்தில், இறையவரின் திருமுன்பு கிடத்தி 'ஆலமுண்டருளும் ஆதிப்பரம்பொருளே! இவளைக் காப்பது நின் கடன்' என்று அழுது தொழுது நின்றிருக்கும் நிலையில், 'சீர்காழி வேந்தர் வருகின்றார்! ஞானப்பாலுண்ட வள்ளல் வருகின்றார்!' என்று வெளிப் பிரகாரத்திலிருந்து எழும் மங்கலச் சொற்களைச் செவி மடுக்கின்றான். உடன் புதல்வியின் சிந்தனையை விடுத்து, நகரினை அலங்கரிக்கவும்; திருவிளக்கேற்றவும்; பூரண கும்பம் அமைக்கவும் ஆணையிட்டுச் சம்பந்தப் பிள்ளையாரை எதிர்கொண்டு பணிய விரைகின்றான்.

சைவச் செல்வரின் சிவிகையினைக் கண்ணுற்ற கணத்திலேயே அகம் குழைந்துக் கண்ணீர் பெருக்கிக்  காதலுடன் மண்ணில் வீழ்ந்து பணிகின்றான், சம்பந்த மூர்த்தி 'எழுக' என்று அருள் புரிகின்றார். நெகிழ்வுடன் எழுந்து உச்சி கூப்பிய கையினனாய் ஞானத் தமிழ் வேந்தரை ஆலயத்திற்கு அழைத்துச் செல்கின்றான். 

(பெரிய புராணம்: திருஞானசம்பந்த மூர்த்தி புராணம்: திருப்பாடல் 315):
பிள்ளையார் எழுந்தருளப் பெற்றேன் என்றானந்தம் பெருகு காதல்
வெள்ளநீர் கண்பொழியத் திருமுத்தின் சிவிகையின்முன் வீழ்ந்தபோது
வள்ளலார் எழுகவென மலர்வித்த திருவாக்கால் மலர்க்கை சென்னி
கொள்ள மகிழ்ந்துடன்சென்று குலப்பதியின் மணிவீதி கொண்டு புக்கான்.

ஆளுடைப் பிள்ளையார் ஆலயத்தினை வலமாக வந்துக் கருவறையை நெருங்கிய நிலையில், மயங்கிய நிலையிலுள்ள கன்னியினைக் கண்ணுற்று, மழவனிடமிருந்து அது குறித்த விவரமும் கேட்டறிகின்றார். உளம் கனிந்து, இறையவரின் திருமுன்பு சென்று 'ஒளி பொருந்திய சிவந்த செஞ்சடையில் பிறைமதி சூடியருளும் ஆதியே, மணிநீல கண்டத்தினனாய் ஆச்சரியமாய் பாச்சிலாச்சிராமத்தில் எழுந்தருளியுள்ள முக்கண்ணுடைப் பெருமானே, இம்மங்கையினை இவ்விதம் வாடச் செய்வது தான் உமது திருவுள்ளமோ? இவளின் நிலையினை மாற்றி அருள்வாய் ஐயனே!' என்று திருப்பதிகத்தினால் பணிந்தேத்துகின்றார். 

துணிவளர்திங்கள் துளங்கிவிளங்கச் சுடர்ச்சடை சுற்றிமுடித்துப்
பணிவளர்கொள்கையர் பாரிடம்சூழ வாரிடமும் பலிதேர்வர்
அணிவளர் கோலமெலாம் செய்து பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
மணிவளர்கண்டரோ மங்கையைவாட மயல்செய்வதோ இவர்மாண்பே!!!

உமையொரு பாகனாரின் திருவருளால் அம்மங்கை நல்லாள் நோய் நீங்கி நலமெலாம் பெற்றெழுகின்றாள். அகமிக மகிழும் மழவன் தன் தவப் புதல்வியுடன், சீர்காழிச் செல்வரின் பிறவிப் பிணி போக்கும் திருவடிகளை நன்றிப் பெருக்குடன் பன்முறை பணிந்துப் போற்றுகின்றான். சிவஞானம் உண்ட சம்பந்தச் செல்வரோ கருவறையில் அருவுருவமாய் விளங்கியருளும் மாற்றுரை வரதீஸ்வரப் பரம்பொருளைப் போற்றி செய்துப் பணிகின்றார், அடியவர்கள் 'ஹர ஹர' எனும் சிவகோஷம் எழுப்பி மகிழ்கின்றனர். 

No comments:

Post a Comment