திருஞானசம்பந்தர் (திருமண நிகழ்வில் தோன்றிய சிவ ஜோதியும், அவதார நிறைவும்):

அப்பொழுது ஞானசம்பந்த மூர்த்திக்கு 16 வயது நிறைவுறும் சமயம், தந்தையார் சிவபாதரும், சுற்றத்தினரும் சம்பந்தச் செல்வரிடம் 'வேத நெறியின் வழி நிற்றலான இல்லறத்தின் மேன்மையினை உணர்த்தும் பொருட்டுத் தாம் திருமண நிகழ்விற்கு அவசியம் இசைதல் வேண்டும்' என்று ஒருசேர விண்ணப்பிக்க, முதலில் மறுத்துரைத்தாலும் பின் திருவருளை நினைந்தவாறு இசைகின்றார். 

ஆச்சாள்புரம் எனும் திருநல்லூர் பெருமணத்திலுள்ள நம்பாண்டார் நம்பி என்பாரின் தவப்புதல்வியுடன் திருமணம் நிகழ்வதாக நிச்சயிக்கப் பெறுகின்றது. திருநீலநக்க நாயனார் மற்றும் அவரின் திருத்துணைவியார், திருமுருக நாயனார், திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் மற்றும் அவரின் திருத்துணைவியார் ஆகியோரும், மற்றோரும் தத்தமது சுற்றத்தினருடன் இவ்வற்புத நிகழ்வினைத் தரிசிக்கக் கூடுகின்றனர். 

குறிப்பிட்ட சுபயோக சுபதினத்தில் திருநல்லூர் பெருமணத்திலுள்ள சிவலோகத் தியாகர் ஆலயத்திற்கு அருகிலுள்ள திருமடமொன்றில் திருமண வைபவம் சிறப்புற நடந்தேறுகின்றது. திருநீலநக்க நாயனார் வேத விதிப்படி சிவவேள்வி வளர்த்துச் சடங்குகளைச் செய்விக்கின்றார், சீர்காழி அரசர் துணைவியாரின் மலர்க்கரம் பற்றி 'இனி இவளுடன் சிவபெருமானின் திருவடிகளைச் சேர்வேன்' என்று எண்ணியவாறு வேள்வித் தீயினைச் சிவமாகவே கண்டும் உணர்ந்தும் வலம் வருகின்றார்.

பின் யாவரும் உடன்வர, சிவலோகத் தியாகரின் திருமுன்பு வீழ்ந்துப் பணிகின்றார். தன் திருமண நிகழ்விற்கென அங்கு கூடியுள்ள அனைவரும் வினை நீக்கம் பெறுதலையும், தன் அவதார நோக்கம் நிறைவுறுதலையும் குறிப்பெனக் கொண்டு ''நல்லூர் பெருமணத்தில் மேவும் ஆதிப் பரம்பொருளே, பிறைமதிப் புண்ணியனே, உன் பொன்னார் திருவடிகளை வந்தடையும் தக்கதொரு பருவம் இதுவன்றோ, அருள் புரிவாய் ஐயனே!' என்று பாமாலையால் பணிந்தேத்துகின்றார், 

(பெரிய புராணம்: திருஞானசம்பந்த மூர்த்தி புராணம்: திருப்பாடல் 1245):
காதல்மெய்ப் பதிகம் கல்லூர்ப் பெருமணம் எடுத்துக் கண்டோர்
தீதுற பிறவிப் பாசம் தீர்த்தல்செம் பொருளாக் கொண்டு
நாதனே நல்லூர் மேவும் பெருமண நம்பனே உன்
பாதமெய்ந் நீழல் சேரும் பருவம் ஈதென்று பாட.

கருணைப் பெருங்கடலான முக்கண் முதல்வரும் அசரீரியாய் 'சம்பந்தா! நீயும் உன் மனைவியும் மற்றுமுன் புண்ணிய மணத்தினைத் தரிசித்தார் யாவரும் நமது சிவசோதியில் புகுந்து வருக' என்று பேரருள் புரிகின்றார். 

(பெரிய புராணம்: திருஞானசம்பந்த மூர்த்தி புராணம்: திருப்பாடல் 1246):
தேவர்கள் தேவர் தாமும் திருவருள் புரிந்து நீயும்
பூவையன்னாளும் இங்குன் புண்ணிய மணத்தின் வந்தார்
யாவரும் எம்பாற் சோதி இதனுள் வந்தெய்தும் என்று
மூவுலகொளியால் விம்ம முழுச்சுடர்த் தாணுவாகி.

முருக நாயனார், திருநீலநக்கர், திருநீலகண்ட யாழ்ப்பாணர், சிவபாதர், நம்பாண்டார் நம்பி, திருச்சிவிகை சுமந்தோர், முத்துச் சின்னங்கள் ஊதியோர் மற்றும் அங்கு கூடியிருந்த திருத்தொண்டர் யாவரும் தத்தம் இல்லத்தினருடன், சஞ்சித வினைகள் யாவும் நீங்கப் பெற்றுச் சிவசோதியுள் புகுந்துக் கிடைத்தற்கரிய சிவமுத்திப் பேற்றினைப் பெறுகின்றனர்.

இறுதியாய் இவ்வையம் வாழ வந்துதித்த சீர்காழித் தோன்றலான நம் சம்பந்தப் பெருமான் நமசிவாயத் திருப்பதிகம் பாடியருளிப் பின் காதலியாரின் கரம் பற்றிச் சிவசோதியுள் புகுந்து செல்ல, சோதி மறைந்து ஆலயம் முன்பு போலத் தோற்றுகின்றது. 

காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கிலும் மெய்ப் பொருளாவது
நாதன் நாமம் நமசிவாயவே!!!

ஆண்டு தோறும், சிதம்பரம் அருகிலுள்ள திருநல்லூர்ப் பெருமணத்தில் வைகாசி மூலமன்று, சம்பந்த மூர்த்தியின் திருமண உற்சவத்தையும் அதனைத் தொடர்ந்து அதிகாலையில் நடந்தேறும் ஐக்கிய உற்சவத்தினையும் தரிசிப்போர் யாவரும் சம்பந்தச் செல்வரின் திருவடி பலத்தால் சிவமுத்திப் பேறு பெற்று உய்வு பெறுவர் என்பது திண்ணமன்றோ (பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி)!!

No comments:

Post a Comment