திருஞானசம்பந்தர் (பாண்டிய மன்னரின் அரண்மனையில் அற்புதமான ஒரு அறிமுகக் காட்சி, ஒரு வீர முழக்கம், மற்றுமொரு நெகிழ்விக்கும் காட்சி):

திருஞானசம்பந்தரின் திருமடங்களுக்குச் சமணர்கள் தீயிட்ட சிவ அபராதச் செயலுக்குத் துணை நின்ற காரணத்தால் பாண்டிய மன்னரைக் கடும் வெப்பு நோய் பற்றுகின்றது. வெம்மையின் தீவிரம் கணத்திற்குக் கணம் அதிகரிக்க, எவரொருவரும் நெருங்க இயலாத தன்மையில் அனலின் வெம்மை பல்கிப் பெருகுகின்றது, மூடர்களான சமணர்கள் மந்திரித்துத் தடவும் மயிற்பீலியும் பிரம்பும் நொடியில் கருகிச் சாம்பலாகின்றன. இந்நிலையில் பாண்டிமா தேவியான மங்கையர்க்கரசியார் மற்றும் அமைச்சர் குலச்சிறையாரின் விண்ணப்பத்தினை ஏற்றுச் சம்பந்தச் செல்வர் அரண்மனைக்கு வருகை புரிகின்றார். 

சிவசூரியனாய் அங்குத் தோன்றிய சம்பந்த மூர்த்தியைத் தரிசிக்கும் பாண்டிய மன்னரின் கரங்கள் தாமாக உச்சி கூப்பித் தொழுகின்றன ('கண்ட அப்பொழுதே வேந்தன் கையெடுத்தெய்த' என்பார் தெய்வச் சேக்கிழார்). உயர்ந்த பொன்னாசனத்தில் சீர்காழி வேந்தரை அமர்வித்து 'தம்முடைய ஊர் எது?' என்று பாண்டிய மன்னர் பணிவுடன் வினவ, சம்பந்தப் பிள்ளையாரும் சீர்காழி தலத்தின் 12 திருப்பெயர்களைப் பட்டியலிட்டுப் பின்வரும் பாடலோடு துவங்கும் திருப்பதிகமொன்றைப் பாடுகின்றார்,
-
பிரமனூர் வேணுபுரம் புகலி வெங்குருப் பெருநீர்த் தோணி
புரமன்னு பூந்தராய் பொன்னஞ் சிரபுரம் புறவம் சண்பை
அரன்மன்னு தண்காழி கொச்சைவயம் உள்ளிட்டங்கு ஆதியாய
பரமனூர் பன்னிரண்டாய் நின்ற திருக்கழுமலநாம் பரவும் ஊரே

அறிவிலிகளான சமணர்கள் எண்ணற்றோர் சம்பந்தப் பெருமானைச் சூழ்ந்து கொண்டு, உரத்த குரலில் பலவாறும் பிதற்றிக் கதறத் துவங்குகின்றனர். அது கண்டு 'அரனருள் பெற்ற இவர் சிறுவராயிற்றே' என்று தாயினும் சாலப் பரிவுடன் அஞ்சி நிற்கும் அரசியாரிடம் சிவஞானச் செல்வர் 'பாண்டி மாதேவியே, பாலன் என்று நம்மையெண்ணி இரக்கம் கொள்ள வேண்டாம், ஆலவாய் இறைவர் அரனாய் நின்று காப்பதால், பிறர்க்குப் பல துன்பங்களை விளைவிக்கின்ற இழிந்த இச்சமணர்களுக்கு நான் எளியவன் அல்லேன்' என்று சைவச் சிம்மமென முழங்குகின்றார், 
-
மானின் நேர்விழி மாதராய் வழுதிக்கு மாபெருந்தேவி கேள்
பானல் வாயொரு பாலன் ஈங்கிவனென்று நீ பரிவெய்திடேல்
ஆனைமாமலை ஆதியாய இடங்களிற்பல அல்லல்சேர்
ஈனர்கட்கு எளியேன் அலேன் திருஆலவாய்அரன்நிற்கவே.

இறுதியாய் சம்பந்தச் செல்வரின் பேரருளால் மன்னரின் வெப்பு நோய் முற்றிலும் நீங்கிய பின்னர், மங்கையற்கரசியாரும் குலச்சிறையாரும் சீகாழிப் பெருமானின் திருவடிகளில் பணிந்துக் கண்ணீர் பெருக்கி 'தங்கள் அருளால் நாங்கள் பெருமை பெற்றோம், உய்வு பெறுமாறு இன்றே பிறந்தோம், மன்னவரும் இனியொருப் பிறப்புமற்ற பெருவாழ்வு எய்தினார்' என்று சிவானந்தம் எய்துகின்றனர், 
-
(பெரிய புராணம்: திருஞானசம்பந்த மூர்த்தி புராணம்: திருப்பாடல் 771):
கொற்றவன் தேவியாரும் குலச்சிறையாரும் தீங்கு
செற்றவர் செய்ய பாதத் தாமரை சென்னி சேர்த்துப்
பெற்றனம் பெருமைஇன்று பிறந்தனம் பிறவா மேன்மை
உற்றனன் மன்னன் என்றே உளங்களித்துவகை மிக்கார்.

பாண்டிய மன்னரும் உச்சி கூப்பிய கையினராய் ஆளுடைப் பிள்ளையாரின் திருவடிகளில் வீழ்ந்துப் பணிந்து 'அடியவன் உய்ந்தேன்' என்று போற்றுகின்றார்,
-  
(பெரிய புராணம்: திருஞானசம்பந்த மூர்த்தி புராணம்: திருப்பாடல் 772):
மீனவன் தன்மேல் உள்ள வெப்பெலாம் உடனே மாற
ஆன பேரின்பம்எய்தி உச்சிமேல் அங்கை கூப்பி
மானமொன்றில்லார் முன்பு வன்பிணி நீக்க வந்த
ஞானசம்பந்தர் பாதம் நண்ணிநான் உய்ந்தேன் என்றான்.

No comments:

Post a Comment