திருஞானசம்பந்தர் (திருமருகலில் மாண்ட வணிகனை மீண்டெழச் செய்த அற்புத நிகழ்வு):

திருஞானசம்பந்தர் தொண்டர் குழாத்துடன், திருச்செங்காட்டங்குடியிலிருந்துப் புறப்பட்டுத் திருமருகல் எனும் தலத்தினைச் சென்றடைகின்றார்.  அங்கு எழுந்தருளியுள்ள இரத்தினகிரீஸ்வரப் பரம்பொருளை முப்போதும் போற்றியவாறு சிறிது காலம் அப்பதியிலேயே தங்கியிருக்கின்றார். 

இந்நிலையில் ஒரு சமயம் வணிகனொருவன் தான் மணம் புரியவிருக்கும் காரிகை ஒருத்தியுடன் மருகல் வழியாக பயணிக்கின்றான், அந்திப் பொழுதான படியால் ஆலயத்திற்கருகிலுள்ள மடமொன்றினுள் இருவரும் தங்குகின்றனர். பின்னிரவு வேளையில் அரவமொன்று வணிகனைத் தீண்டி விட அக்காரிகை செய்வதறியாது கதியற்றுப் புலம்புகின்றாள். அவளது கூக்குரல் கேட்டு அவ்விடம் வந்தோர் பல்வேறு மருத்தவ முறைகளையும் மந்திரங்களையும் முயல்கின்றனர், அதிகாலைப் பொழுது வரையிலும் விடம் இறங்காத நிலையில் வணிகனின் உயிர் பிரிகின்றது. வணிகனை நோக்கிச் சிறிது நேரம் புலம்பி அரற்றியிருந்த அம்மங்கையோ பின்னர் கூர்த்த மதியினளாய்த் திருக்கோயிலிருந்த திசை நோக்கித் துதிக்கின்றாள்.

(பெரிய புராணம்: திருஞானசம்பந்த மூர்த்தி புராணம்: திருப்பாடல் 476):
அடியாராம் இமையவர்தம் கூட்டம் உய்ய
    அலைகடல்வாய் நஞ்சுண்ட அமுதே, செங்கண்
நெடியானும் நான்முகனும் காணாக் கோல
    நீல விட அரவணிந்த நிமலா, வெந்து
பொடியான காமன்உயிர் இரதி வேண்டப்
    புரிந்தளித்த புண்ணியனே, பொங்கர் வாசக்
கடியாரும் மலர்ச்சோலை மருங்கு சூழும்
    கவின் மருகல் பெருமானே! காவாய் என்றும் 

இக்கட்டான இச்சூழலிலும், இறைவரைக் குறைகூறி நிந்திக்காமல் சிவபெருமானின் அருட் செயல்களைப் பட்டியலிட்டுப் போற்றிப் பின் தன்நிலையினை முறையிட்டுக் கதறும் இப்பாவையின் திடபக்தி போற்றுதற்குரியது. 

அதிகாலையில் வழிபடும் பொருட்டு அவ்விடத்து வருகை புரியும் சம்பந்தச் செல்வர் 'அம்மா! நீ அஞ்ச வேண்டாம்! உன் துன்பம் என்னவென்று கூறுவாய்?' என்று பரிவோடு வினவுகின்றார். அப்பெண்ணின் நல்லாள் சீர்காழிச் செல்வரின் திருவடிகளில் வீழ்ந்துப் பணிந்து 'ஐயனே! உறவு வழியில் மருமகனான இவருக்கு என்னைத் தருவதாக வாக்களித்துப் பின் பொருளாசையால் பிறிதொருவருக்கு மணமுடிக்க முயன்ற என் பெற்றோரின் அறமற்ற செயலால் இவரே புகலென்றுப் புறப்பட்டேன். இச்சமயம் இவரும் அரவு தீண்டி மாண்டதால் கதியற்று அபலையாய் நிற்கின்றேன்! எனது சுற்றத்தினர் போன்று ஆறுதல் மொழியுரைத்து என் துயரெலாம் நீங்குமாறு அருள் செய்தீர்' என்று நெகிழ்ந்து கூறுகின்றாள்.

கருணைக் கடலான சம்பந்தப் பிள்ளையார் உளம் கனிந்து, மருகல் மேவும் பரம்பொருளே! இப்பெண், 'செஞ்சடை இறைவனே; விடையேறும் முதல்வனே, நீயே எனக்குப் புகல்' என்று அச்சத்துடன் அழுது அரற்றி மயங்கி வீழ்கின்றாள், 'இனியும் இப்பேதையினை வருந்தச் செய்வது தகுமோ ஐயனே? அருள் புரிவாய்!' என்று திருப்பதிகத்தினால் விண்ணப்பித்துத் தொழுகின்றார். மருகல் மேவும் மணிகண்டரின் திருவருளால் வணிகன் உயிர் பெற்று எழுகின்றான், அக்காரிகை அகமிக உருகி நன்றிப் பெருக்குடன் சீர்காழிச் செல்வரின் பொன்போலும் திருவடிகளை வீழ்ந்து வணங்குகின்றாள். சம்பந்த மூர்த்தி அவ்விருவருக்கும் ஆலயத்திலேயே திருமணம் செய்வித்து அருள் புரிகின்றார்.

சடையா எனுமால் சரண் நீயெனுமால்
விடையா எனுமால் வெருவா விழுமால்
மடையார் குவளை மலரும் மருகல்
உடையாய் தகுமோ இவள்உண் மெலிவே.

No comments:

Post a Comment