திருஞானசம்பந்தர் (திருக்கோலக்காவில் தாளம் பெற்ற அற்புத நிகழ்வு):

அம்மையப்பரிடமிருந்து ஞானப்பாலுண்ட நிகழ்வினையடுத்து சம்பந்த மூர்த்தி சீர்காழி ஆலயத்துள் சென்று "நறவ நிறை வண்டறை' எனும் மற்றொரு திருப்பதிகத்தால் சிவமூர்த்தியைத் தொழுதுப் பின் தந்தையாருடன் இல்லம் வந்தடைகின்றார். அன்றிரவு சிவபெருமானின் திருவருளினை இடையறாது நினைந்தவாறே துயில்கின்றார். பொழுது புலர்ந்ததும், கணநேரமும் தாமதிக்காது, நியமங்களை முடித்துப் பின்னர் தொண்டர் குழாமும் உடன்வர, தந்தையாருடன் சீர்காழிக்கு அருகிலுள்ள திருக்கோலக்கா எனும் தலத்திற்குச் செல்கின்றார். ஆலயத்தை வலம் வந்துக் கருவறையில் அற்புதமாய் எழுந்தருளி இருக்கும் சப்தபுரீஸ்வரரைப் பணிகின்றார்.

'மடையில் வாளைபாய' எனும் முதல் திருப்பாடலைத் தம்முடைய கரங்களால் தாளமிட்டவாறே பாடுகின்றார், சிவஞானக் குழந்தையின் பிஞ்சுப் பொற்கரங்கள் நோக, சிவபெருமானும் அம்பிகையும் பொறுப்பரோ! சம்பந்த மூர்த்தியின் கரங்களில் திருஐந்தெழுத்து பொறிக்கப் பெற்ற பொன்னாலாகிய தாளமொன்று வந்து சேர்கின்றது. திருவருளை வியந்து போற்றியவாறே சிவப்பிரசாதமான அத்தாளத்தை முழக்கித் திருப்பதிகத்தின் மற்ற திருப்பாடல்களையும் நிறைவு செய்கின்றார்.

முக்கண் முதல்வர் அருளிய தாளத்தில் எழும் சிவநாதத்தினைக் கேட்டு விண்ணவரும், நாரதரும், தும்புருவும் வியந்து போற்றிப் பணிகின்றனர். சீகாழிக்கு மீண்டும் திருப்பாதங்கள் நோக நடந்து செல்ல முனையும் சம்பந்தச் செல்வரைத் தந்தையார் தம்முடைய தோள்மீது சுமந்துச் செல்கின்றார்.

மடையில் வாளை பாய மாதரார்
குடையும் பொய்கைக் கோலக்காஉளான்
சடையும் பிறையும் சாம்பல் பூச்சும்கீள்
உடையும் கொண்ட உருவம்என்கொலோ!!!

No comments:

Post a Comment