திருஞானசம்பந்தர் (சிவஞானப் பாலினை அருந்திய அற்புத நிகழ்வு):

அப்பொழுது சம்பந்த மூர்த்திக்கு 2 ஆண்டுகள் நிறைவுற்று 3ஆம் வயது துவங்கியிருந்தது. அன்று அதிகாலை வழக்கம் போல் சிவபாதர் தோணியப்பர் ஆலயத்திற்குப் புறப்பட முனைகின்றார். சம்பந்தர் தானும் உடன் வருவதாகத் தன் பிஞ்சுப் பொற்பாதங்களை மண்ணில் உதைத்து அடம் பிடிக்க, சிவபாதரும் சிவச்செல்வரைத் தோளில் சுமந்தவாறு ஆலயம் நோக்கிச் செல்கின்றார். பிரம்ம தீர்த்தப் படித்துறையில் பிள்ளையை அமர வைத்து, கோபுர சிகரத்தை நோக்கி 'ஆலமுண்ட பரம்பொருளே! நீயே இப்பிள்ளைக்குக் காவல்' என்று விண்ணப்பித்துப் பின் மந்திர உச்சாடனம் புரிய நீரில் மூழ்குகின்றார்.

சிறிது நேரம் செல்கின்றது, தந்தையைக் காணாத நிலையில் சம்பந்தர் சில கணங்களுக்குப் பிற இடங்களைப் பார்த்து அழுகின்றார். பின் இறுதியாய்த் தோணிபுர கோபுர உச்சியினை நோக்கி 'அம்மே! அப்பா!' என்று அழைத்தவாறே, கண்மலர்களில் நீர் ததும்ப, கை மலர்களால் பிசைந்துப் பொருமி அழத் துவங்குகின்றார். 
-
(பெரிய புராணம்: திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம்: திருப்பாடல் 63)
மெய்ம்மேல்கண் துளிபனிப்ப வேறெங்கும் பார்த்தழுவார்
தம்மேலைச் சார்புணர்ந்தோ சாரும் பிள்ளைமை தானோ
செம்மேனி வெண்ணீற்றார் திருத்தோணிச் சிகரம்பார்த்து
அம்மே அப்பா என்றென்று அழைத்தருளி அழுதருள!!!

திருவருள் கூடும் வேளையும் நெருங்க, சீர்காழி மேவும் செம்மேனிப் பரம்பொருளும் அம்பிகையும், கருவறையினின்றும் நீங்கி, இடபவாகனத்தில், பிரம்மதீர்த்தக் கரையருகில் எழுந்தருளி வருகின்றனர். உலகீன்ற உமையவள் சிவஞானப் பாலினை ஓர் பொற்கிண்ணத்தில் இட்டு 'குழந்தாய் இதனை அருந்துவாய்' என்று சம்பந்தப் பிள்ளையாரின் பிஞ்சுக் கரங்களில் அளித்துப் பேரருள் புரிகின்றாள்.

அதனை அருந்தும் சம்பந்தருக்கு அக்கணமே அருந்தவ முனிவர்களுக்கும்; தேவர்களுக்கும் கிடைத்தற்கரிய சிவஞானம் சித்திக்கப் பெறுகின்றது. நடந்தேறிய நிகழ்வுகள் எவையும் அறியாத நிலையில் சிவபாதர் நியமம் முடித்துக் கரைக்கு வருகின்றார். பேரருள் பெற்று நிற்கும் சிவமழலையின் திருவாயில் ஞானப் பாலின் மிச்சத்தினைக் கண்டு கோபம் கொள்வார் போல் 'யார் தந்த பால் இது' என்று கையில் சிறிய கோலொன்றினை அடிப்பது போல் ஓங்குகின்றார்.

சிவானந்த வெள்ளத்தில் அமிழ்ந்திருக்கும் ஞானக் குழந்தையோ, கண்ணீர் பெருக்கியவாறு, புளகமுற்று, மற்றெவரும் அறியாவண்ணம் விண்மிசை விடைமீது பவளக் குன்றென எழுந்தருளி இருக்கும் உமையொரு பாகனை, வேதங்களாலும் இன்னதென்று சுட்டஇயலாத தேவாதி தேவனை, தெய்வங்களும் தொழுதேத்தும் தனிப்பெரும் தெய்வத்தை, பிறைமதிப் பரம்பொருளை 'இதோ இப்பெருமானே எனை ஆட்கொண்டு அருளியது' என்று அண்மைப் பொருளில் சுட்டுகின்றார்.

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடைய சுடலைப்பொடி பூசியென் உள்ளம்கவர் கள்வன்
ஏடுடைய மலரால் முனை நாள் பணிந்தேத்த அருள்செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே!

No comments:

Post a Comment