திருஞானசம்பந்தர் (ஈன்ற தாயும் பணிந்துப் போற்றும் சிவஞானக் குழந்தை):

திருஞானசம்பந்தர் திருநெல்வாயில் அரத்துறையில் சிவபெருமானின் பேரருளைப் பெற்றுச் சீர்காழி திரும்பும் அற்புத நிகழ்வினைத் தெய்வச் சேக்கிழார் பின்வருமாறு காட்சிப் படுத்துகின்றார். ஆங்காங்கேயுள்ள மறையோர்கள் யாவரும் காழிப் பிள்ளையாரின் திருவடிகளை வணங்கி நிற்க, திருமாளிகையின் வாயிலில் மகளிர் நிறைகுடங்களையும்; தீபங்களையும் ஏந்தி நின்று வரவேற்க, சம்பந்தச் செல்வரை ஈன்ற பகவதியம்மையார் சிவபெருமானின் திருநீற்றினைச் சிவஞானச் செல்வருக்குக் காப்பாகச் சாற்றிப் பின் பணிந்துப் போற்றினார் என்று சேக்கிழார் பெருமான் பதிவு செய்கின்றார் ('இறைவர் திருநீற்றுக் காப்பேந்தி முன்சென்று ஈன்ற தாயார்சாத்தி இறைஞ்சி ஏத்த' எனும் வரிகள் அற்புதமானவை).

(பெரிய புராணம்: திருஞானசம்பந்தர் புராணம்: திருப்பாடல் 262):
மறையவர்கள் அடிபோற்றத் தந்தையாரும்
மருங்கணைய மாளிகையில்அணையும் போதில்
நிறைகுடமும் மணிவிளக்கும் முதலாயுள்ள
நீதிமறைக் குலமகளிர் நெருங்கி ஏந்த
இறைவர் திருநீற்றுக் காப்பேந்தி முன்சென்று 
ஈன்ற தாயார் சாத்தி இறைஞ்சிஏத்த
முறைமை அவர்க்கருள்செய்து மடத்தில் புக்கார்
முதல்வர்பால் மணிமுத்தின் சிவிகை பெற்றார்.

உலகியலில் 'தாய்' எக்காலத்திலும் எந்நிலையிலும் போற்றி வணங்கத் தக்கவரே எனினும் இங்கு அம்மையார், சிவபரம்பொருளினால் பரிபூரணமாய் ஆட்கொள்ளப் பெற்ற 'தனித்தலைமைக் குருநாதர்' எனும் அருளியல் நோக்கில், ஞானமுண்ட வள்ளலைப் பணிந்துப் போற்றினாராம். எத்தகு பெருநிலையில் பகவதி அம்மையார் விளங்கியிருக்கின்றார் என்று எண்ணுந்தோறும் உள்ளம் நெகிழுமன்றோ!! திருப்பாடலின் இறுதி வரிகளில் சம்பந்த மூர்த்தி இல்லத்திற்குள் எழுந்தருளிச் சென்றதை 'மடத்தில் புக்கார்' என்று மடத்திற்குள் சென்ற நிலையிலேயே சேக்கிழார் பெருமான் பதிவு செய்திருக்கும் அற்புதத் தன்மையினையும் சிந்தித்து மகிழ்தல் வேண்டும்.

No comments:

Post a Comment