திருஞானசம்பந்தர் (சமணர்களுடன் அனல் வாத நிகழ்வு):

பாண்டிய மன்னனின் வெப்பு நோயினைப் போக்க இயலாது கொடும் சமணர்கள் தோல்வியினைத் தழுவ, ஞானசம்பந்தர் திருநீற்றுப் பதிகத்தினால் அந்நோயினை அகற்றி வெல்கின்றார். பின் அறிவிலிகளான அச்சமணர்கள் 'இனி இரு சாராரும் தத்தம் சமய உண்மையினை நெருப்பிலிடுவோம், தீயினின்று மீளும் சமயத்தைச் சார்ந்தோரே வென்றவராவர்' என்று அச்சத்தினை மறைத்தவாறு கூறுகின்றனர். வேந்தனும் இசைய, அவையின் முன் ஓரிடத்தில் தீயினை அமைக்கின்றனர். 

சீர்காழி அண்ணல் திருவருளைச் சிந்தித்தவாறுத் திருமுறைச் சரட்டிலிருந்து பதிகச் சுவடியொன்றினை எடுக்க, அது 'போகமார்த்த பூண்முலையாள்' என்று துவங்கும் திருநள்ளாற்றுத் திருப்பதிகமாக அமைகின்றது. அது கண்டு மகிழ்ந்து, 'எனை ஆளுடைய சிவபரம்பொருளின் திருநாமமே என்றென்றும் நிலைபெற்று நிற்கும் மெய்ப்பொருள்' என்று காட்டுமாறு 'இச்சுவடி தீயில் வேகாது இருக்கட்டும்' என்று உறுதி கூறி, நள்ளாற்றுப் பெருமானைப் போற்றும் 'தளிரிள வளரொளி' எனும் புதியதொரு திருப்பதிகத்தையும் பாடிப் பின் அச்சுவடியினை யாவரும் காணுமாறு வெந்தழலில் இடுகின்றார். 
-
(பெரிய புராணம்: திருஞானசம்பந்தர் புராணம்: திருப்பாடல் 784):
நன்மை உய்க்கும் மெய்ப் பதிகத்தின் நாதன் என்றெடுத்தும்
என்னை ஆளுடை ஈசன்தன் நாமமே என்றும்
மன்னும் மெய்ப்பொருளாம் எனக் காட்டிட வன்னி
தன்னிலாகெனத் தளிரிள வளரொளி பாடி.
-
(பெரிய புராணம்: திருஞானசம்பந்தர் புராணம்: திருப்பாடல் 785):
செய்ய தாமரை அகஇதழினும் மிகச் சிவந்த
கையிலேட்டினைக் கைதவன் பேரவை காண
வெய்ய தீயினில் வெற்றரைஅவர்சிந்தை வேவ
வையம் உய்ந்திட வந்தவர் மகிழ்ந்துமுன் இட்டார்.
*
அம்பிகையை இடபாகத்து உடைய முக்கண் முதல்வரை முதற்பொருளாக உடைய அச்சுவடி தீயில் ஒருசிறிதும் சிதைவுறாமல் முன்னினும் மேம்பட்ட பொலிவுடன் பசுமையாய் விளங்கி இருக்கின்றது. 
*
(பெரிய புராணம்: திருஞானசம்பந்தர் புராணம்: திருப்பாடல் 786):
இட்ட ஏட்டினில் எழுதிய செந்தமிழ்ப் பதிகம்
மட்டுலாம் குழல் வனமுலை மலைமகள் பாகத்து 
அட்டமூர்த்தியைப் பொருளென உடைமையால் அமர்ந்து
பட்ட தீயிடைப் பச்சையாய் விளங்கியதன்றே

சமணர்கள் நிச்சயமற்ற தன்மையில் 'எது நேருமோ' என்றஞ்சியவாறு 'அத்தி நாத்தி (உண்டு இல்லை)' எனும் பொருளற்ற சமண மந்திரம் பொறித்த தங்கள் ஏட்டினைத் தீயிலிடுகின்றனர், கணநேரத்தில் ஏடுகள் யாவும் வெந்து சாம்பலாகின்றன. குறிப்பிட்ட நாழிகை அளவு கடந்ததும், சிவஞானச் செல்வர் திருமுறைச் சுவடிகளை தீயினின்றும் எடுத்து யாவரும் காணுமாறு காண்பித்து அருள் புரிகின்றார் (ஞாலம் நின் புகழே மிகவேண்டும் தென்ஆலவாயில் உறையும் எம் ஆதியே)!!!

No comments:

Post a Comment