திருஞானசம்பந்தர் (உபநயன நிகழ்வும், முதல் நமசிவாயப் பதிகமும்):

ஞான சம்பந்த மூர்த்திக்கு உபநயனப் பருவம் எய்துகின்றது. அந்தணர்கள் கூடி, வைதீக முறைப்படி சடங்குகளைப் புரிந்து, சைவச் செல்வரின் முன்பு நின்று "மறை நான்கினையும் தந்தோம்' என்று வேத மந்திரங்களை ஓதுகின்றனர். சிவஞானமுண்ட வள்ளல் மான் தோலுடன் கூடிய முப்புரி நூலினைத் தரித்துப் பின் எண்ணிறந்த வேத மந்திரங்களை மடை திறந்த வெள்ளம் போன்று தாமாகவே ஓதுகின்றார். அதுகேட்டு பெரிதும் வியக்கும் அந்தணர்கள் 'சிவபெருமானின் பரிபூரணத் திருவருளைப் பெற்று, வேத நெறி தழைத்தோங்கவும்; சைவத் துறை விளங்கவும் வந்துதித்த அவதார மூர்த்தி இவரே' என்று சித்தம் தெளிந்து ஞானசம்பந்தரின் பிறவிப் பிணி போக்கும் திருவடி மலர்களைப் பணிகின்றனர்.

நான்மறைகளான ரிக்; யஜுர்; சாம; அதர்வண வேதங்களில் தங்களுக்கிருந்த ஐயப்பாடுகளை சம்பந்தப் பிள்ளையாரிடம் கேட்டுத் தெளிவுறுகின்றனர். அத்தருணத்தில் சீகாழி வேந்தர் 'மந்திரங்கள் யாவினுக்கும் ஆதிமூலமாகத் திகழ்வது ஸ்ரீபஞ்சாட்சரம் எனும் திருஐந்தெழுத்து மந்திரமே' என்று அந்தணர்களுக்கு உபதேசித்து, அற்புதத் தன்மை வாய்ந்த முதல் நமசிவாயத் திருப்பதிகத்தினைப் பாடி அருள் புரிகின்றார்.

துஞ்சலும் துஞ்சல் இல்லாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்
வஞ்சகம் அற்று அடி வாழ்த்த வந்த கூற்று
அஞ்ச உதைத்தன அஞ்செழுத்துமே!!!

No comments:

Post a Comment