திருஞானசம்பந்தர் (நாவுக்கரசு சுவாமிகளுடன் நெஞ்சினை நெகிழ்விக்கும் அற்புதமான முதல் சந்திப்பு):

ஞானசம்பந்த மூர்த்தியும், நாவுக்கரசு சுவாமிகளும் மும்முறை  வெவ்வேறு சமயங்களில் சந்தித்துக் கொண்டதாகப் பெரிய புராணம் பதிவு செய்கின்றது. அவற்றுள் முதல் சந்திப்பினைச் சேக்கிழார் பெருமான்,  திருநாவுக்கரசு சுவாமிகள் பகுதியில் ஒரு பரிமாணத்திலும், திருஞானசம்பந்தர் பகுதியில் மற்றொரு பரிமாணத்திலும் அற்புத அற்புதமான திருப்பாடல்களால் பதிவு செய்துப் போற்றுகின்றார். அவற்றுள் அப்பர் அடிகள் புராணப் பகுதியில் விவரிக்கப் பெறும் திருப்பாடல்களை இப்பதிவினில் சிந்தித்து மகிழ்வோம்.

நாவுக்கரசு சுவாமிகள் தில்லையில் வழிபாடு புரிந்து வரும் காலத்தில், சீர்காழியில், சிவபெருமானின் திருவருளால் அம்பிகையிடம் சிவஞானப் பாலினை அருந்தி, அற்புதமான திருப்பதிகங்களைப் பாடிவரும் திருஞானசம்பந்தரைப் பற்றிக் கேள்வியுறுகின்றார், அதிசயமும் காதலும் மேலிடச் சீர்காழி அண்ணலின் பிஞ்சுப் பொற்பாதங்களைப் பணிவதற்குப் பெருவிருப்பம் கொள்கின்றார். 

அடியவர்களும் உடன் வர, சிதம்பரத்திலிருந்துப் புறப்பட்டுச் சீர்காழித் தலத்தினை வந்தடைகின்றார். திருவதிகை இறைவரால் தடுத்தாட்கொள்ளப் பெற்ற நாவுக்கரசு சுவாமிகள் சீர்காழிக்கு வருகை புரிவதனை அறியும் சம்பந்த மூர்த்தியும் பெரிதும் மகிழ்ந்து சுவாமிகளை எதிர்கொண்டழைக்க விரைகின்றார்.

சீர்காழி எல்லையில் இரு புறமும் தொண்டர் கூட்டம் சந்தித்துக் கலக்க, நாவுக்கரசு சுவாமிகள் பெருங் காதலுடன், அழுது இப்புவியினை உய்வித்த சீர்காழி வேந்தரின் திருவடி மலர்களை வணங்கி மகிழ, சுவாமிகளைத் தாங்கிப் பிடித்து எதிர் வணங்கும் சம்பந்தப் பெருமான் 'அப்பரே' என்று அமிழ்தினும் இனியதொரு  திருநாமத்தால் அழைக்கின்றார். திருத்தொண்டின் அரசரும் 'அடியேன்' என்று பணிகின்றார். இவ்வற்புத சங்கமத்தினைத் தரிசித்துப் பெரிதும் மகிழும் தொண்டர் திருக்கூட்டத்தினர் எழுப்பும் 'ஹர ஹர' எனும் சிவகோஷம் விண்ணினை எட்டி எதிரொலிக்கின்றது. 

(பெரிய புராணம்: திருநாவுக்கரசு நாயனார் புராணம்: திருப்பாடல் 182):
தொழுதணைவுற்று ஆண்ட அரசு அன்புருகத் தொண்டர் குழாத்திடையே சென்று 
பழுதில் பெரும் காதலுடன் அடிபணியப் பணிந்தவர்தம் கரங்கள் பற்றி 
எழுதரிய மலர்க்கையால் எடுத்திறைஞ்சி விடையின்மேல் வருவார் தம்மை 
அழுதழைத்துக் கொண்டவர்தாம் அப்பரே எனஅவரும் அடியேன் என்றார்.

'சிவஞானப் பிள்ளையாரின் திருவடிகளை வணங்கும் பேறு பெற்றேன்' என்று அப்பர் அடிகள் பேருவகை எய்த, நாவுக்கரசு சுவாமிகளை வணங்கப் பெற்றமைக்குச் சம்பந்தச் செல்வரும் பேரானந்தம் கொள்ள, இருபெரும் குருநாதர்களும் உள்ளத்தால் ஒன்றுபட்டுக் கலந்துப் பின் சீர்காழி மேவும் திருத்தோணியப்பரைத் தரிசித்துப் பாமாலைகளால் போற்றுகின்றனர். 

(பெரிய புராணம்: திருநாவுக்கரசு நாயனார் புராணம்: திருப்பாடல் 184):
பிள்ளையார் கழல்வணங்கப் பெற்றேன்என்று அரசு உவப்பப் பெருகு ஞான
வள்ளலார் வாகீசர் தமைவணங்கப் பெற்றதற்கு மகிழ்ச்சி பொங்க
உள்ளநிறை காதலினால் ஒருவர் ஒருவரில் கலந்த உண்மையோடும்
வெள்ளநீர்த் திருத்தோணி வீற்றிருந்தார் கழல் வணங்கும் விருப்பின் மிக்கார்.

No comments:

Post a Comment