திருஞானசம்பந்தர் (திருவோத்தூரில் ஆண் பனைகள் பெண் பனைகளான அற்புத நிகழ்வு):

ஞானசம்பந்தர் தல யாத்திரையாகச் செல்லும் வழியில், திருவண்ணாமலை மாவட்டம் - செய்யாறு வட்டத்தில் அமைந்துள்ள திருவோத்தூர் எனும் தலத்தினை அடைகின்றார். அங்குள்ள அடியவர்கள் வாழைகளை நாட்டியும், தோரணங்களால் அலங்கரித்தும், திருவிளக்குகளை ஏற்றியும், நிறை குடம் ஏந்தியும் சிவஞானச் செல்வரை வரவேற்றுப் பணிகின்றனர். 

சீர்காழிச் செல்வர் ஆலயத்தினை வலமாக வந்து வணங்கிக் காதலுடன் உட்ச்சென்று, ஆச்சரியமான திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ள வேதபுரீஸ்வரப் பரம்பொருளைக் கண்ணீர் பெருக்கித் தொழுதுப் பன்முறை பணிந்தெழுந்துப் பாமாலைகளால் போற்றி செய்கின்றார். பின்னர் அப்பதியிலேயே சில காலம் தங்கியிருந்து மறைகள் போற்றும் முதல்வரை முப்போதும் போற்றித் துதித்து வருகின்றார். 

ஒரு சமயம் அத்தலத்தில் வசித்து வரும் சிவனடியார் ஒருவர் சம்பந்த மூர்த்தியின் திருவடி தொழுது 'பெருமானே! சுவாமிக்கு நிவேதனமாகும் பொருட்டு பனைகள் பலவற்றை ஆர்வத்துடன் வளர்த்து வந்தேன். அவையனைத்தும் ஆண் பனைகளாகிக் காய்க்காது ஒழிந்தன. அது குறித்து இங்குள்ள சமணர்கள் பலகாலும் பரிகசிக்கின்றனர். தாங்களே இந்நிலையை மாற்றி அருள வேண்டும்' என்று மனமிக வருந்தி விண்ணப்பிக்கின்றார். 

அடியவரின் தூய அன்பு கண்டு பரிவெய்தும் சைவச் செல்வர் ஆலயத்துள் புகுந்து, முக்கண் மூர்த்தியின் திருமுன்பு பணிந்துப் 'பூத்தேர்ந்தாயன' என்று துவங்கும் திருப்பதிகத்தினால் போற்றித் துதித்து விண்ணப்பிக்கின்றார். திருக்கடைகாப்புப் பாடலில் 'குரும்பை ஆண்பனை ஈன்குலை ஓத்தூர்' என்று துவங்கிய மறுகணமே, அங்கிருந்த ஆண்பனைகள் யாவும் திருவருளால், நிறைந்த குலைகளையுடைய பெண் பனைகளாக மாற, யாவரும் அதிசயித்துக் காழிப் பிள்ளையாரின் திருவடியினைப் போற்றிப் பணிந்து இன்புறுகின்றனர். 
-
குரும்பை ஆண்பனை ஈன்குலை ஓத்தூர்
அரும்பு கொன்றை அடிகளைப்
பெரும் புகலியுள் ஞானசம்பந்தன் சொல்
விரும்புவார் வினை வீடே.
*
மேலும் சிவஞானச் செல்வருடைய திருவாக்கின் சம்பந்தத்தால் குலைகளை ஈன்ற அப்பனைகளில் பொருந்தியுள்ள ஆன்மாக்கள் யாவும், எண்ணில் பல கோடிப் பிறவிகளாய் சேர்த்து வந்துள்ள தத்தமது சஞ்சித வினைகள் யாவும் நீங்கப் பெற்று, அப்பிறவியின் ஆயுட்காலம் முடிவுற்றதும், மற்றொரு பிறப்பின்றிச் சிவமுத்திப் பேறு பெற்று மகிழ்ந்தன என்று பதிவு செய்கின்றார் சேக்கிழார் பெருமான். 

(பெரிய புராணம்: திருஞானசம்பந்த மூர்த்தி புராணம்: திருப்பாடல் 983):
பிள்ளையார்தம் திருவாக்கில் பிறத்தலால் அத்தாலம்முன்பு 
உள்ள பாசம் விட்டகலஒழியாப் பிறவிதனை ஒழித்துக்
கொள்ளு நீர்மைக் காலங்கள் கழித்துச் சிவமே கூடினவால்
வள்ளலார் மற்றுஅவரருளின் வாய்மை கூறின் வரம்பென்னாம்

பனைகளாக ஓரறிவுப் பிறவியெடுத்திருந்த ஆன்மாக்கள் சம்பந்தப் பெருமானின் திருவாக்கில் ஒருமுறை இடம் பெற்ற காரணத்தினாலேயே சிவமுத்தி பெறுமாயின் சீர்காழி வள்ளலின் அருட்திறத்திற்கு எல்லையுமுண்டோ? என்று அதிசயித்துப் போற்றுகின்றார் சேக்கிழார் பெருமான், ஞானசம்பந்த மூர்த்தியின் திருப்பதிகங்களை அனுதினமும் காதலுடன் ஓதி நாமும் சிவகதி சார்ந்து உய்வு பெறுவோம் (சிவாய நம).

No comments:

Post a Comment