திருஞானசம்பந்தர் (திருநனிபள்ளி யாத்திரை):

திருநனிபள்ளி எனும் தலத்தில் வாழும் அன்பர்கள் பலரும் ஒன்று கூடிச் சீர்காழி சென்று ஞானசம்பந்த மூர்த்தியை வணங்கி 'தாம் எங்கள் தலத்திற்கு வருகை புரிந்து அங்கு எழுந்தருளியுள்ள நற்றுணையப்பரை வணங்குதல் வேண்டும்' என்று விண்ணப்பிக்கின்றனர். ஞானசம்பந்தரை ஈன்ற பகவதி அம்மையாரின் அவதாரத் தலம் 'நனிபள்ளி', சீர்காழியிலிருந்து 17 கி.மீ பயணத் தொலைவில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சம்பந்தரும் அதற்கு இசைந்துத் தந்தையாரின் தோள்களில் அமர்ந்தவாறே, தொண்டர்களும் உடன்வர நனிபள்ளி நோக்கிப் பயணிக்கின்றார். 

நனிபள்ளியின் எல்லையை நெருங்கிய நிலையில், 'இரு மருங்கிலும் விண்ணுயர் மலர்ச்சோலைகளோடு அழகுற அமைந்துள்ள இத்தலத்தின் பெயர் என்ன?' என்று 3 வயது ஞானக் குழந்தையான சம்பந்தச் செல்வர் வினவ, தந்தையாரான சிவபாதரும் பெருமகிழ்வுடன் 'இதுவே நனிபள்ளி' என்று சுட்டுகின்றார். உடன் அந்நிலையிலேயே, தந்தையாரின் தோள் மீது அமர்ந்த வண்ணம் 'காரைகள் கூகை' என்று துவங்கும் திருப்பதிகத்தினால் நனிபள்ளி இறைவரைப் போற்றுகின்றார், 
-
காரைகள் கூகைமுல்லை களவாகை ஈகை படர்தொடரி கள்ளி கவினிச்
சூரைகள் பம்மிவிம்மும் சுடுகாடமர்ந்த சிவன்மேய சோலை நகர்தான்
தேரைகள் ஆரைசாய மிதிகொள்ள வாளை குதிகொள்ள வள்ளை துவள
நாரைகள்ஆரல் வாரி வயன்மேதி வைகும் நனிபள்ளி போலும் நமர்காள்.

'ஆணை நமதே' என்று ஞானசம்பந்தர் நிறைவு செய்தருளிய நான்கு திருப்பதிகங்களுள் நனிபள்ளியும் ஒன்றாகும் (மற்றவை கோளறு பதிகம், திருவேதிகுடி மற்றும் திருக்கழுமலத் திருப்பதிகங்கள்).

பின்னர் ஆலயத்தினை அடைந்து, உட்சென்று, நனிபள்ளி நாதரைக் காதலுடன் தொழுதுப் போற்றி செய்துப் பின் அத்தலத்திலேயே சிறிது காலம் தங்கி இருக்கின்றார். 

No comments:

Post a Comment