திருஞானசம்பந்தர் (வைகையாற்றில் சமணர்களுடன் புனல் வாதம்):

பாண்டிய மன்னனின் வெப்பு நோயை நீக்குதல் மற்றும் அனல் வாதம் ஆகிய இரு நிகழ்வுகளிலும் ஞானசம்பந்தப் பெருமானிடம் தோல்வியுற்ற சமணர்கள் நடுக்கத்தினை வெளிக்காட்டாது இறுதி முயற்சியாய் 'அவரவர் சமய ஏடுகளை ஆற்றினில் இடுவோம், ஆற்றின் போக்கிற்கு எதிரேறிச் செல்லும் சமயத்தைச் சார்ந்தோரே வென்றவராவர்' என்று கொக்கரிக்கின்றனர். சிவஞானச் செல்வரும் அதற்கு இசைந்துச் சிவிகையில் ஆரோகணித்து, வேந்தனும்; குலச்சிறையாரும் மற்றோரும் பின்தொடர, வையையாற்றின் கரையினை அடைகின்றார். 

முதலில் சமணர்கள் 'அத்தி - நாத்தி' (உண்டு; இல்லை) எனும் பொய்ப்பொருளைப் பதிந்திருந்த தங்களது சமய ஏட்டினை ஆற்றினில் இடுகின்றனர். மறுகணமே அவை ஆற்றின் ஓட்டத்தில் அடித்துச் செல்லப் படுவது கண்டு வெட்கித் தலைகவிழ்ந்து நிற்கின்றனர்.
-
(பெரிய புராணம்: திருஞானசம்பந்தர் புராணம்: திருப்பாடல் 814):
படுபொருளின்றி நெல்லில் பதடிபோல் உள்ளிலார்மெய்
அடுபவர் பொருளை அத்தி நாத்தி என்றெழுதி ஆற்றில்
கடுகிய புனலைக் கண்டும் அவாவினால் கையிலேடு
விடுதலும் விரைந்து கொண்டு வேலைமேல் படர்ந்ததன்றே.

சிவஞானமுண்ட சைவச் செல்வர் சிவபெருமானின் திருவருளை நினைந்து 'வாழ்க அந்தணர்' எனும் திருப்பதிகத்தினைப் பாடிப் பின் யாவரும் காணுமாறு அதனைச் சுவடியொன்றில் எழுதித் தன் திருக்கரங்களால் ஆற்றினில் இடுகின்றார். 'வேந்தனும் ஓங்குக' என்று காழி வேந்தரின் திருவாக்கினின்று வெளிப்பட்ட ஆணையினால் பாண்டிய மன்னனின் கூன் அக்கணமே நிமிர்ந்து 'நின்ற சீர் நெடுமாற நாயனாராக' மிளிர்கின்றார்.   
-
வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயது எல்லாம் அரன் நாமமே
சூழ்க வையகமும் துயர் தீர்கவே!!

'எவ்விதம் நல்ல தவமுடைய அடியவர்களின் உள்ளம் பிறவியாகிய பெருங்கடலை எதிர்த்துச் செல்லுமோ அது போன்று சம்பந்தப் பிள்ளையார் இட்ட திருமுறைச் சுவடிகள் வேகமாய்ப் பாயும் வையை ஆற்றின் போக்கினை எதிர்த்துக் கிழித்துக் கொண்டு, சிவபெருமானே முழுமுதற்பொருள் என்று யாவரும் அறியுமாறு எதிர்த் திசையில் முன்னேறிச் செல்கின்றது' என்று சேக்கிழார் பெருமான் அற்புதமாய் இந்நிகழ்வினைப் பதிவு செய்துப் போற்றுகின்றார்.

(பெரிய புராணம்: திருஞானசம்பந்தர் புராணம்: திருப்பாடல் 846):
திருவுடைப் பிள்ளையார் தம் திருக்கையால் இட்ட ஏடு
மருவிய பிறவியாற்றில் மாதவர் மனம் சென்றாற் போல்
பொருபுனல் வைகைஆற்றில் எதிர்ந்துநீர் கிழித்துப் போகும்
இருநிலத்தோர்கட்கு எல்லாம் இதுபொருளென்று காட்டி.

இவ்வற்புத நிகழ்வு கண்டு பெருமகிழ்வு எய்தும் நெடுமாற நாயனாரும், குலச்சிறையாரும் மற்றுள்ளோரும் சம்பந்தச் செல்வரின் திருவடிகளைப் பணிந்துப் போற்றுகின்றனர்.

No comments:

Post a Comment