திருஞானசம்பந்தர் (திருமயிலையில் எலும்பைப் பெண்ணாக்கிய அற்புத நிகழ்வு):

திருமயிலையில் வணிக மரபினரான சிவநேசர் என்பார் வாழ்ந்து வருகின்றார். சிவபெருமானிடத்து அடிமைத் திறம் பூண்டிருந்த இவர் குபேரனுக்கு இணையான நிதிவளமும் கொண்டிருந்தார். அரனடியார்க்கு வேண்டுவன அளித்து மகிழ்வார், சீர்காழிச் செல்வர் சிவஞானப் பாலினை உண்ட அற்புதத்தை எண்ணி எண்ணி உருகுவார், காழிப் பிள்ளையாரையே இடையறாது தியானித்து வருவார். 

பன்னெடுங்கால தவப் பயனாய்த் தோன்றும் பெண் மகவிற்குப் பூம்பாவை எனும் பெயரிட்டுச் சிறப்புடன் வளர்த்து வருகின்றார். பூம்பாவைக்கு அப்பொழுது ஏழு வயது, சம்பந்த மூர்த்தி மதுரையில் சமணரை வென்று சைவ சமயத்தினை நிறுவிய திருச்செயலைச் கேள்வியுறும் சிவநேசர் ஆடிப் பாடி மகிழ்கின்றார்; திசை நோக்கித் தொழுது நிலத்தில் வீழ்ந்துப் பணிகின்றார், அச்செய்தியை அறிவித்தோர் யாவருக்கும் பெரும் பொருளினைக் கொடுத்துப் பின் யாவரும் கேட்குமாறு 'சீர்காழிப் பிள்ளையாருக்குப் பூம்பாவை; என் செல்வங்கள் மற்றும் என்னையுமே முழுமையாய்த் தந்து விட்டேன்' என்று அகங்காரம்; மமகாரங்களை அறவே நீக்கியவராய் மிளிர்கின்றார் சிவநேசர்.
-
(பெரிய புராணம்: திருஞானசம்பந்தர் புராணம்: திருப்பாடல் 1053)
சுற்ற நீடிய கிளையெலாம் சூழ்ந்துடன் கேட்பக்
கற்ற மாந்தர்வாழ் காழிநாடு உடையவர்க்கு அடியேன்
பெற்றெடுத்த பூம்பாவையும் பிறங்கிய நிதியும்
முற்றும் என்னையும் கொடுத்தனன் யானென்று மொழிந்தார்.

நந்தவனத்தில் விளையாடும் பூம்பாவை விதிவசத்தால் அரவம் தீண்டி மாண்டு விடுகின்றாள், தாங்கொணாத துயரெய்தும் சிவநேசர் அந்நிலையிலும் 'இவள் சம்பந்தருக்குச் சமர்ப்பிக்கப் பெற்றவள்' என்று ஒருவாறு மனதைத் தேற்றிக் கொண்டு, மகளின் எலும்பு; சாம்பல் இவைகளை ஓர் குடத்திலிட்டுப் பாதுகாத்து, ஞானசம்பந்தரின் திருவடிகளையே எந்நேரமும் தியானித்து வருகின்றார்.

சில வருடங்கள் செல்கின்றன, சம்பந்தச் செல்வர் திருவொற்றியூர் தலத்தினைத் தொழுதுப் பின் திருமயிலை நோக்கி எழுந்தருளி வருவதனை அறியும் சிவநேசர் திருமயிலையிலிருந்து ஒற்றியூர் வரையிலும் நடைக்காவணமிட்டுப் பந்தலமைக்கின்றார்; வழியெங்கும் தோரணங்களை நாட்டிப் பூமாலைகளால் மயிலை நகரை தேவலோகம் போன்று அலங்கரித்துப் பின் பிள்ளையாரை எதிர்கொண்டு பணிய மயிலை வாழ் தொண்டர்களுடன் விரைகின்றார். 

நெடுந்தொலைவில் சம்பந்தச் செல்வரின் சிவிகையைக் கண்ணுற்ற கணத்திலேயே அகமிக உருகிக் கண்ணீர் பெருக்கி, நிலத்தில் வீழ்ந்துப் பணிகின்றார். சிவஞானச் செல்வர் சிவிகையினின்றும் இறங்கி சிவநேசரையும் தொண்டர்களையும் வணங்குகின்றார் ('தொழுது எழுந்தருளி' என்பது தெய்வச் சேக்கிழார் வாக்கு). அங்குள்ளோர் வாயிலாக சிவநேசரின் அடிமைப் பண்பைக் கேள்வியுற்று மகிழ்கின்றார். அனைவருடனும் திருமயிலை ஆலயத்துள் புகுந்து ஆச்சரியமாய் எழுந்தருளியுள்ள கபாலீஸ்வரப் பரம்பொருளைப் போற்றுகின்றார். 

பின் ஆலயத்தினின்றும் வெளி வந்து 'சிவநேசரே! உமது புதல்வியின் எலும்பு நிறைந்த குடத்தினை இவ்விடம் கொணர்வீர்' என்று கூறுகின்றார். சமணர்களும் மற்றோரும் பெருந்திரளெனக் கூடுகின்றனர், பூம்பாவையை உயிர்ப்பிக்கும் குறிப்புடன், யாவரும் காணுமாறு, 'மட்டிட்ட புன்னையம் கானல்' எனும் திருப்பதிகம் பாடுகின்றார். 10ஆம் திருப்பாடலை நிறைவு செய்யும் கணத்தில், மண்ணவரும் விண்ணவரும் வியந்து போற்றுமாறு, அப்பொழுது உள்ள வளர்ச்சியோடும், பேரழகுத் திருத்தோற்றத்துடனும் பூம்பாவை உயிர் பெற்றெழுந்து சம்பந்தச் செல்வரைப் பணிகின்றாள்.  

15 திருப்பாடல்களால் பாதாதி கேசமாய் சிவச் செல்வியாகிய பூம்பாவையின் பேரழகினைத் தெய்வச் சேக்கிழார் வியந்து போற்றுகின்றார், ஞான சம்பந்தப் பெருமானின் பேரருளாலும் சிவபெருமானின் திருவருளாலும் தோன்றிய சிவ ஷ்ருஷ்டி அல்லவா!!

மகளை மணம் புரியுமாறு விண்ணப்பித்த சிவநேசரிடம் 'உமது புதல்வி அரவம் தீண்ட மாண்டாள்! இவள் திருவருளால் எம்மால் தோற்றுவிக்கப் பட்டவள்! ஆதலின் இவள் நமக்குப் புதல்வியாவாள்' என்று அருள் புரிகின்றார் (சிவ சிவ).

No comments:

Post a Comment