திருஞானசம்பந்தர் (திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனாருடன் ஒரு நெகிழ்வான சந்திப்பு):

ஞானசம்பந்த மூர்த்தியைத் தரிசித்து வணங்கும் பொருட்டு திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனாரும் அவர்தம் திருத்துணைவியார் மதங்க சூளாமணியாரும் சீர்காழியை வந்தடைகின்றனர். சீர்காழி வேந்தர் அவர்களை எதிர்கொண்டு வரவேற்க, தம்பதியர் இருவரும் சிவஞானக் குழந்தையின் திருவடிகளில் வீழ்ந்துப் பணிகின்றனர். ஞானப் பாலுண்ட வள்ளலும் 'பாணரே! தாம் இங்கு வருகை புரியும் பெரும் பேற்றினை யாம் பெற்றோம்' என்றொரு அமுத மொழி பகர்கின்றார். 

பாணருக்குத் தோணியப்பரைத் தரிசனம் செய்வித்து 'உங்கள் பெருமானைப் பாடுவீர்' என்று கூற, பாணரும் மதங்க சூளாமணியாரும் மிக இனிமையாக யாழினில் இசை மீட்டிப் பிறைமதிப் பரம்பொருளைப் போற்றி செய்கின்றனர். அச்சிவ கானத்தைக் கேட்டுச் சம்பந்தச் செல்வர் பெரிதும் மகிழ்கின்றார். பின்னர் பாணரை நன்முறையில் உபசரித்துத் திருமடம் ஒன்றில் தங்குவித்து அமுது செய்விக்கின்றார். பாணர் ஞானப் பிள்ளையாரின் தேவாரப் பனுவல்களைக் கேட்டுப் பெரிதும் மகிழ்ந்து அதனை இனிமையாய் யாழினில் மீட்டிப் பாடுகின்றார்.

நெகிழ்வான அத்தருணத்தில் பாணர் 'சம்பந்தப் பெருமானே! தாம் தலங்கள் தோறும் சென்றுத் திருப்பதிகங்கள் பாடும் பொழுது அப்பண்ணினை யாழினில் மீட்டி இசைக்கும் திருத்தொண்டினையும், தம்மை விட்டு என்றுமே பிரியாது சேவித்திருக்கும் பேற்றினையும் தந்து அருள வேண்டும்' என்று உளமுருகி விண்ணப்பிக்கின்றார். கருணைக் கடலான சம்பந்தச் செல்வரும் 'அவ்வண்ணமே ஆகுக' என்று அருள் புரிகின்றார்.
-
(பெரிய புராணம்: திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம்: திருப்பாடல் 140)
சிறியமறைக் களிறளித்த திருப்பதிக இசையாழின்
நெறியிலிடும் பெரும்பாணர் பின்னுநீர் அருள்செய்யும்
அறிவரிய திருப்பதிக இசை யாழில் இட்டடியேன்
பிறிவின்றிச் சேவிக்கப் பெறவேண்டும் எனத்தொழுதார்.
-
(பெரிய புராணம்: திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம்: திருப்பாடல் 141)
மற்றதற்குப் பிள்ளையார் மனமகிழ்வுற்று இசைந்தருளப்
பெற்றவர்தாம் தம்பிரான் அருளிதுவே எனப்பேணிச்
சொற்றமிழ் மாலையின் இசைகள் சுருதியாழ் முறைதொடுத்தே
அற்றைநாள் போலென்றும் அகலா நண்புடன் அமர்ந்தார்.

No comments:

Post a Comment