சுந்தரர் (கயிலையில் தோன்றிய காதல் - திருமுருக வாரியார் சுவாமிகளின் விளக்கம்):

(திருமுருக வாரியார் சுவாமிகளின் பெரியபுராண விரிவுரை நூலில் இடம் பெற்றுள்ள விளக்கத்திலிருந்து சில வரிகள், பக்கம் 94,95 - குகஸ்ரீ வாரியார் பதிப்பகம்):

காமனை எரித்த ஞான பூமியில் காம எண்ணம் உண்டாகாதன்றோ? நுட்பமாக நுனித்து உணராதார் சுந்தரர் காமுற்று நோக்கினார் என்பர். காம தகனம் புரிந்த இடத்தில காமத்திற்கு வலிமை ஏது? கண்ணுதற் கடவுளது திருவருள் அங்கனம் தூண்டியது. மாதவம் செய்த தென்திசை வாழவும், தீதிலாத் திருத்தொண்டத் தொகை தரவும் போதுவார் அவர்மேல் மனம் போக்கினார். "ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே" இக்கருத்தைச் சேக்கிழார்அடிகள் இனிது கூறுமாறு காண்க,

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 35)
மாதவம்செய்த தென்திசை வாழ்ந்திடத்
தீதிலாத் திருத்தொண்டத் தொகைதரப்
போதுவாரவர் மேல்மனம் போக்கிடக்
காதல் மாதரும் காட்சியிற் கண்ணினார்

அன்றியும் எத்துணைப் பெரியவர்களே ஆயினும் மாதர் மேல் மனம் வைத்தவர் தமது உயர்நிலையினின்றும் தாழ்வுறுவர் என்பதனையும் எம்பெருமான் உணர்த்துவாராயினார். திருக்கைலாய மலையிலிருந்த சுந்தரர் ஒரு கண நேரம் சிறிது பார்வையைப் பாவையர் மீது செலுத்தியதனால் அவ்வுலகை விட்டு இவ்வுலகிற்கு வந்தார் எனின், இவ்வுலகினின்று அங்கனம் செலுத்துவோர் எவ்வுலகிற்கு ஏகுவது என்பதனையும் அன்பர்கள் சிறிது உற்று நோக்குக. ஆவி ஈடேற வேண்டும் என்ற கருத்தும் கவலையும் உடையார்க்கு இது சிந்தனைக்கு வாராமற்  போகாது.

No comments:

Post a Comment