சுந்தரர் (திருத்தொண்டர் தொகை: பாராயணமும், பலன்களும்):

நம் சுந்தரனார் திருத்தொண்டர் தொகையைப் பாடிய பெரிய புராண நிகழ்வுகளை அறிந்து கொள்வதோடு நிறுத்தி விடாமல் அதனைப் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து, அனுதினமும் அத்திருப்பதிகத்தைப் பாராயணம் புரிவதால், ஆன்மீக ஏற்றம் மற்றும் உலகியல் சார்ந்த அனைத்து நற்பலன்களையும் பெற்று மகிழலாம் என்பது திண்ணம். 

இத்திருப்பதிகம் பாடுவதையே 'சுந்தரரின் பிரதான அவதார நோக்கமாக' நம் தெய்வச் சேக்கிழார் குறித்துள்ளார் எனில் இதன் சிறப்பினை மேலும் விவரிக்கவும் வேண்டுமோ? திருத்தொண்டர்களைப் போற்றும் இப்பனுவலைப் பாடிய மேன்மை ஒன்றினாலேயே நம் தம்பிரான் தோழருக்கு, 'வேறெந்த அருளாளர்களுக்கும் கிட்டாத, வெள்ளை யானை வரவேற்புடன் திருக்கயிலை செல்லும் பெறற்கரிய பேறு சித்திக்கப் பெற்றது' என்பதனை உள்ளத்து இருத்தி இப்பனுவலைக் காதலுடன் ஓதி வருவோம். 

(திருப்பாடல் 1):
தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
திருநீல கண்டத்துக் குயவனார்க்கடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
இளையான்தன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக்கடியேன்
விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற்கடியேன்
அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக்கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்காளே

(திருப்பாடல் 2):
இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தற்கடியேன்
ஏனாதி நாதன்தன் அடியார்க்கும் அடியேன்
கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பற்கடியேன்
கடவூரிற் கலயன்தன் அடியார்க்கும் அடியேன்
மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ்சாறன்
எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்
அலைமலிந்த புனல்மங்கை ஆனாயற்கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்காளே

(திருப்பாடல் 3):
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்
முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன்
செம்மையே திருநாளைப் போவாற்கும் அடியேன்
திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன்
மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க
வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த
அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக்கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்காளே

(திருப்பாடல் 4):
திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட
திருநாவுக்கரையன் தன் அடியார்க்கும் அடியேன்
பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கும் அடியேன்
பெருமிழலைக் குறும்பற்கும் பேயார்க்கும் அடியேன்
ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்
ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கற்கடியேன்
அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்காளே

(திருப்பாடல் 5):
வம்பறா வரிவண்டு மணம் நாற மலரும்
மதுமலர் நற்கொன்றையான் அடியலாற் பேணா
எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்
ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்
நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்
நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கற்கும் அடியேன்
அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்காளே

(திருப்பாடல் 6):
வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே
மறவாது கல்லெறிந்த சாக்கியற்கும் அடியேன்
சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்
செங்காட்டங்குடி மேய சிறுத்தொண்டற்கடியேன்
கார்கொண்ட கொடைக் கழறிற்றறிவாற்கும் அடியேன்
கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்
ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்காளே

(திருப்பாடல் 7):
பொய்யடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன்
பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழற்கடியேன்
மெய்யடியான் நரசிங்க முனையரையற்கடியேன்
விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தற்கடியேன்
கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்
கழற்சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன்
ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்காளே

(திருப்பாடல் 8):
கறைக்கண்டன் கழலடியே காப்புக் கொண்டிருந்த
கணம்புல்ல நம்பிக்கும் காரிக்கும் அடியேன்
நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற
நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்
துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றும் சோதித்
தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்
அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவாற்கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்காளே

(திருப்பாடல் 9):
கடல்சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான்
காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்
மடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்கும் தஞ்சை
மன்னவனாம் செருத்துணைதன் அடியார்க்கும் அடியேன்
புடைசூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடி
பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன்
அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்காளே

(திருப்பாடல் 10):
பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்
பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்
திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்
முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கடியேன்
முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்
அப்பாலும் அடிச்சார்ந்தார் அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்காளே

(திருப்பாடல் 11):
மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல்
வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்
தென்னவனாய் உலகாண்ட செங்கணாற்கடியேன்
திருநீல கண்டத்துப் பாணனார்க்கடியேன்
என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்
இசைஞானி காதலன் திருநாவலூர்க் கோன்
அன்னவனாம் ஆரூரன் அடிமை கேட்டுவப்பார்
ஆரூரில் அம்மானுக்கன்பர் ஆவாரே

No comments:

Post a Comment