நெற்றி விழியானும் நிகரில்லானும்:

சுந்தரரின் திருமண நிகழ்வில் சிவபெருமான் முதிய வேதியவர் வடிவில் தோன்றி 'நம்மிருவருக்கும் இடையேயொரு வழக்கொன்று உள்ளது, அதனை முடித்த பின்னர் நீ உன் மண வேள்வியினைச் செய்ய முயலுக' என்று கூறுகின்றார். அதற்கு நம் சுந்தரனாரும் 'அவ்வாறாயின் அவ்வழக்கை முடிக்காமல் யான் மணம் புரியேன்' என்று  மறுமொழி கூறுவதாகத் தெய்வச் சேக்கிழார் பின்வரும் திருப்பாடலை அமைக்கின்றார்,  

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 182)
நெற்றி விழியான் மொழிய நின்ற நிகரில்லான்
உற்றதொர் வழக்குஎனிடை நீஉடையதுண்டேல்
மற்றது முடித்தலது யான் வதுவை செய்யேன்
முற்றஇது சொல்லுகென எல்லை முடிவில்லான்.

மேற்குறித்துள்ள திருப்பாடலின் முதல் வரி அற்புதத் தன்மை வாய்ந்தது, ஆதிப் பரம்பொருளான சிவபெருமானையும்; அப்பெருமான் அடிமை கொள்ள வரும் சுந்தரரையும் ஒரே வரியில் குறிக்க வரும் சேக்கிழார் பெருமான், சிவமூர்த்தியை 'நெற்றி விழியான்' என்று மட்டுமே குறித்துப் பின் சுந்தரனாரையோ 'நின்ற நிகரில்லான்' என்று போற்றுகின்றார். 

பொதுவில் இருவேறு அடியவர்களின் சந்திப்பினைக் குறிக்கையிலோ அல்லது சுந்தரனார் புரிந்துள்ள ஏதேனுமொரு அற்புத நிகழ்வினை விவரிக்கையிலோ இவ்விதம் குறித்திருந்தால் அது புரிந்து கொள்ளக் கூடியதே, இங்கோ ஒரு புறத்தில் அண்ட சராசரங்களுக்கெல்லாம் தனிப்பெரும் தெய்வமாய் விளங்கி அருளும் இறையனாரையும் மற்றொரு புறத்தில் அவருடைய அடித்தொண்டரையும் ஒருசேர நிறுத்தி, அடியார்க்கு அடியாராக விளங்கும் நம் சுந்தரனாரை 'நிகரில்லான்' என்று போற்ற வேண்டுமாயின் வன்தொண்டரின் சிறப்பினை வார்த்தைகளால் விவரிக்கவும் இயலுமோ? (இறைவரோ தொண்டருள் ஒடுக்கம்)!!

No comments:

Post a Comment