திருநாவுக்கரசர் (அப்பூதி அடிகளுடன் ஒரு நெகிழ்விக்கும் சந்திப்பு):

திங்களூர் தலத்திற்கு வருகை புரியும் நாவுக்கரசு சுவாமிகள் அங்கு 'இறைவர் முன்னர் தமக்கு அருளியிருந்த திருப்பெயரைக் கொண்டு' பல்வேறு அறச் செயல்கள் நடந்தேறி வருவதைக் காண்கின்றார். அப்பூதி அடிகள் எனும் உத்தமத் தொண்டரே அவைகளைப் புரிந்து வருகின்றார்' என்பதை அறிந்து கொண்டு, அவர்தம் இல்லத்திற்கு எழுந்தருளிச் செல்கின்றார். 

சிவனடியாரொருவர் வருகை புரிந்துள்ளார் என்றறியும் அப்பூதி அடிகள் விரைந்து சுவாமிகளின் திருவடிகளைப் பணிய, அதற்கு முன்னமே சுவாமிகள் அப்பூதி அடிகளை வணங்குகின்றார். அப்பூதி நாயனார் இனிய மொழிகூறி வரவேற்க, சுவாமிகளும் 'அரனடியார்க்கு உதவும் பொருட்டு நீங்கள் அமைத்துள்ள தண்ணீர்ப் பந்தலின் முகப்பில் உங்கள் பெயரல்லாது பிறிதொரு பெயரை முன்னெழுத காரணம் யாதோ? என்று வினவுகின்றார். 

அப்பூதி அடிகள் துணுக்குற்றுப் பதறி, 'கொடிய சமணர்கள் மற்றும் பல்லவனின் சூழ்ச்சியினைத் தம்முடைய திருத்தொண்டின் திறத்தினால் வென்றருளிய அப்பரம குருநாதரின் திருப்பெயரையா வேறொரு பெயர் என்று கூறுகின்றீர்?. சைவ மெய்த் திருக்கோலம் பூண்டிருந்தும் இவ்விதச் சொற்களைக் கூறும் நீங்கள் யார்? உடன் கூறுங்கள்' என்று வெகுண்டு வினவுகின்றார். 

(1)
மெய்யன்பின் வடிவமான வாகீசப் பெருந்தகையார் அப்பூதியாரின் மேன்மையினை உணர்ந்தவராய், 'சமணமாகிய பர சமயக் குழியினின்றும் கரையேற இறைவரால் முன்னர் சூலைநோய் அருளப் பெற்றுப் பின் ஆட்கொள்ளவும் பெற்ற, மெய்ப்பொருளை உள்ளவாறு அறியும் உணர்விலா சிறியேன் யான்' என்று மறுமொழி புகல்கின்றார். 
-
(பெரிய புராணம் - அப்பூதி அடிகள் புராணம் - திருப்பாடல் 16)
திருமறையோர் அதுமொழியத் திருநாவுக்கரசர் அவர்
பெருமையறிந்(து) உரை செய்வார்; பிறதுறையினின்(று) ஏற
அருளு பெரும் சூலையினால் ஆட்கொள்ள அடைந்துய்ந்த
தெருளும் உணர்வில்லாத சிறுமையேன் யான் என்றார்

(2)
'மனமெய் வாக்கினாலே அனுதினமும் உபாசித்து வரும் ஒப்புவமையில்லா பரம குருநாதரே தம் இல்லத்திற்கு எழுந்தருளி வந்துள்ளார்' என்றுணரப் பெறும் அப்பூதியாரின் கரமலர்கள் தாமாக உச்சி கூப்புகின்றன; கண்ணீர் ஆறாகப் பெருகி வர, ஏதொன்றும் பேச இயலாது உரை குழறுகின்றது; திருமேனி எங்கும் புளகமுற, நிலமிசை வீழ்ந்து வணங்கி சுவாமிகளின் திருவடிகளைத் தன் சென்னிமிசை சூடிக் கொள்கின்றார், 
-
(பெரிய புராணம் - அப்பூதி அடிகள் புராணம் - திருப்பாடல் 17)
அரசறிய உரைசெய்ய அப்பூதி அடிகள்தாம்
கர கமல மிசைகுவியக் கண்ணருவி பொழிந்திழிய
உரைகுழறி உடம்பெல்லாம் உரோம புளகம் பொலியத்
தரையின்மிசை வீழ்ந்(து) அவர்தம் சரண கமலம் பூண்டார்

(3)
திருத்தொண்டின் தனியரசர் அப்பூதி அடிகளை எதிர்வணங்கி அவரை நில மிசையினின்று எடுத்தருள, பெருஞ்செல்வம் பெற்ற வறியவர் போல் அப்பூதியார் களிப்புறுகின்றார்; சுவாமிகளின் திருமுன்பு ஆனந்தக் கூத்தாடுகின்றார்; அதீத நெகிழ்ச்சியினால் செயலறியாது அங்குமிங்குமாய் ஓடுகின்றார்; பாடுகின்றார்.  
-
(பெரிய புராணம் - அப்பூதி அடிகள் புராணம் - திருப்பாடல் 18)
மற்றவரை எதிர்வணங்கி வாகீசர் எடுத்தருள
அற்றவர்கள் அருநிதியம் பெற்றார் போல் அருமறையோர்
முற்றஉளம் களிகூர முன்னின்று கூத்தாடி
உற்ற விருப்புடன் சூழ ஓடினார் பாடினார்.

(4)
தன்வயமற்றவராய் பெருமகிழ்ச்சியுடன் இல்லத்திற்குள் சென்று தன் மனைவியார்; பிள்ளைகள் மற்றும் சுற்றத்தினருக்குச் சுவாமிகள் எழுந்தருளி வந்திருக்கும் மங்கலச் செய்தியினைத் தெரிவித்து அவர்களுடன் மீண்டும் வாயிலுக்கு விரைகின்றார், 
-
(பெரிய புராணம் - அப்பூதி அடிகள் புராணம் - திருப்பாடல் 19)
மூண்டபெரு மகிழ்ச்சியினால் முன் செய்வதறியாதே
ஈண்டமனை அகத்தெய்தி இல்லவர்க்கும் மக்களுக்கும்
ஆண்ட அர(சு) எழுந்தருளும் ஓகை உரைத்(து) ஆர்வமுறப்
பூண்டபெரும் சுற்றமெலாம் கொடுமீளப் புறப்பட்டார்

(5)
அனைவரையும் சுவாமிகளின் திருவடிகளைப் பணிந்து ஆசிபெறச் செய்து, சுவாமிகளை இல்லத்திற்குள் எழுந்தருளச் செய்து, தக்கதோர் ஆசனத்தில் அமர்வித்து அவர்தம் திருப்பாதங்களை நறுமணம் பொருந்திய நன்னீரால் விளக்கி பூசை செய்து, அப்புண்ணிய நீரினை தங்களின் மீது தெளித்துக் கொண்டு அதனை உட்கொள்ளவும் செய்கின்றார், 
-
(பெரிய புராணம் - அப்பூதி அடிகள் புராணம் - திருப்பாடல் 20)
மனைவியாருடன் மக்கள் மற்றுமுள்ள சுற்றத்தோர்
அனைவரையும் கொண்டிறைஞ்சி ஆராத காதலுடன்
முனைவரைஉள் எழுந்தருளுவித்(து) அவர்தாள் முன்விளக்கும்
புனைமலர்நீர் தங்கள்மேல் தெளித்(து) உள்ளும் பூரித்தார்

No comments:

Post a Comment