திருநாவுக்கரசர் (சமணர்களால் நஞ்சுணவு ஊட்டப் பெறுதல்):

நாவுக்கரசு சுவாமிகள் சமணம் துறந்துச் சைவம் தழுவிய நிகழ்வினைத் தொடர்ந்து, அறிவிலிகளான சமணர்களும்; பல்லவ மன்னனும் 4 வெவ்வேறு வழிகளில் சுவாமிகளின் இன்னுயிரைப் போக்க முனைகின்றனர். முதலாவதாக சுவாமிகளைக் கடும் வெப்பம் பொருந்திய நீற்றறையில் 7 நாட்கள் அடைக்கின்றனர், திருநாவின் தனியரசரோ திருவருளின் துணை கொண்டு அதனின்று மீள்கின்றார். 

(1)
அதுகண்டு உளம் வெதும்பும் அறிவிலிச் சமணர்கள் 'இவர் நம் சமண மந்திரங்களைப் பலகாலும் சாதகம் புரிந்திருந்த தன்மையினால் நீற்றறையிலும் தீங்கின்றி இருந்தனர். இனி இவரைக் கொடிய விடம் அருந்தச் செய்து கொல்வோம்' என்று வேந்தனிடம் பொய்யுரைக்கின்றனர்,

(பெரிய புராணம் - திருநாவுக்கசர் புராணம்: திருப்பாடல் 102)
அதிசயம் அன்றிதுமுன்னை அமண் சமயச் சாதகத்தால்
இதுசெய்து பிழைத்திருந்தான் எனவேந்தற்(கு) உரைசெய்து
மதி செய்வ(து) இனிக் கொடிய வல்விடம் ஊட்டுவதென்று
முதிரவரும் பாதகத்தோர் முடைவாயால் மொழிந்தார்கள்

(2)
சமணர்களின் தொடர்பால் கெடுமதி கொண்டிருந்த அப்பல்லவ மன்னனும் 'அவ்வாறே செய்வோம்' என்றுரைக்க, திருத்தொண்டின் வேந்தரான சுவாமிகளுக்குக் கொடிய நஞ்சூட்டப் பெற்ற பால்சோற்றினை உட்கொள்ளுமாறு அளிக்கின்றனர், 

(பெரிய புராணம் - திருநாவுக்கசர் புராணம்: திருப்பாடல் 103)
ஆங்கது கேட்டலும் கொடிய அமண் சார்பால் கெடுமன்னன்
ஓங்குபெரு மையலினால் நஞ்சூட்டும் எனஉரைப்பத்
தேங்காதார் திருநாவுக்கரசரை அத்தீய விடப்
பாங்குடைய பாலடிசில் அமுதுசெயப் பண்ணினார்

(3)
சிவபரம்பொருளின் பேரருள் திறத்தினை இவ்வுலகோர்க்குத் தெளிவுற விளக்கவல்ல நம் சுவாமிகளும், 'எங்கள் இறைவரின் அடியவர்க்கு நஞ்சும் அமுதமாய் நலம் பயக்குமன்றோ' என்றருளி, நஞ்சு கலந்த அச்சோற்றினை உண்டு தீங்கேதுமின்றி இனிது எழுந்தருளி இருக்கின்றார்,  

(பெரிய புராணம் - திருநாவுக்கசர் புராணம்: திருப்பாடல் 104)
நஞ்சும் அமுதாம் எங்கள் நாதன் அடியார்க்கென்று
வஞ்சமிகு நெஞ்சுடையார் வஞ்சனையாம் படியறிந்தே
செஞ்சடையார் சீர்விளக்கும் திறலுடையார் தீவிடத்தால்
வெஞ்சமணர் இடுவித்த பாலடிசில் மிசைந்திருந்தார்

(4)
'முன்னர் அண்ட சராசரங்கள் அழிந்துபடுமாறு பொங்கியெழுந்த ஆலகால விடமே ஆதிமுதற் பொருளான சிவபெருமானுக்கு அமுதமென விளங்குமானால், அம்முதல்வரின் மெய்யடியார்க்கு நஞ்சு கலந்த உணவு அமுதமாவதும் ஒரு அற்புதமோ?' என்று இந்நிகழ்வினை வியந்து போற்றுகின்றார் தெய்வச் சேக்கிழார்,

(பெரிய புராணம் - திருநாவுக்கசர் புராணம்: திருப்பாடல் 105)
பொடியார்க்கும் திருமேனிப் புனிதர்க்குப் புவனங்கள்
முடிவாக்கும் துயர்நீங்க முன்னை விடம் அமுதானால்
படியார்க்கும் அறிவரிய பசுபதியார் தம்முடைய
அடியார்க்கு நஞ்சமுதம் ஆவதுதான் அற்புதமோ

(இறுதிக் குறிப்பு)
(பின்னாளில்) சமணர்களால் நஞ்சூட்டப் பெற்ற நிகழ்வினைப் பின்வரும் திருநனிபள்ளி திருப்பாடலில் சுவாமிகள் அகச் சான்றாகப் பதிவு செய்கின்றார்,

('முற்றுணை ஆயினானை' - திருநனிபள்ளி தேவாரம் - திருப்பாடல் 5)
துஞ்சிருள் காலை மாலை தொடர்ச்சியை மறந்திராதே
அஞ்செழுத்தோதி நாளும் அரனடிக்(கு) அன்பதாகும்
வஞ்சனைப் பால்சோறாக்கி வழக்கிலா அமணர் தந்த
நஞ்சமு(து) ஆக்குவித்தார் நனிபள்ளி அடிகளாரே!!!

No comments:

Post a Comment