திருநாவுக்கரசர் (திருப்பூவணத்தில் பெற்ற சிவ தரிசனக் காட்சி):

நம் அப்பர் சுவாமிகள் சிவபெருமானை (பிரத்யட்சமாக, சுய உருவுடன்) நேரில் தரிசித்தது மூன்று திருத்தலங்களில். முதல் தரிசனம் திருவாய்மூரில் (இந்நிகழ்வில் ஞானசம்பந்தப் பெருமானும் உடனிருக்கின்றார்), பின்னர் திருவையாறில் (திருக்கயிலைக் காட்சி பெறும் சமயத்தில்), இறுதியாக திருப்பூவண ஷேத்திரத்தில். இனி இப்பதிவில் திருப்பூவண தரிசன நிகழ்வினைச் சிந்தித்து மகிழ்வோம். 

திருத்தொண்டின் அரசர் 'திருஆலவாய்' எனும் மதுரை மாநகரினின்றும் புறப்பட்டு, சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள திருப்பூவணம் எனும் திருத்தலத்தினை வந்தடைகின்றார் (தற்கால வழக்கில் திருப்புவனம்). இங்கு ஆலமுண்டருளும் ஆதி முதல்வர் 'புஷ்பவனேஸ்வரர்' எனும் திருநாமத்தில் எழுந்தருளி இருக்கின்றார். 

சுவாமிகள் ஆலயத்துள் புகுந்து சென்று திருக்கருவறையில் அருவுருவில் எழுந்தருளி இருக்கும் புஷ்பவனேஸ்வரப் பரம்பொருளைத் தொழுது நிற்க, அடிமுடி அறியவொண்ணா திருப்பூவண அண்ணல் வெளிப்பட்டுத் தோன்றுகின்றார், 

(பெரிய புராணம் - திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் - திருப்பாடல் 407)
கொடிமாடம் நிலவு திருப்பூவணத்துக் கோயிலினுள்
நெடியானுக்(கு) அறிவரியார் நேர்தோன்றக் கண்டிறைஞ்சி
வடிவேறு திரிசூலத் தாண்டகத்தால் வழுத்திப் போய்ப்
பொடிநீடு திருமேனிப் புனிதர்பதி பிற பணிவார்

நாவுக்கரசு சுவாமிகள் அகமெலாம் குழைந்துருக, கண்ணருவி ஆறாய்ப் பெருக, உச்சி கூப்பிய கையினராய் முக்கண் முதல்வரைப் பன்முறை பணிந்தெழுகின்றார். தன்வயமற்றுச் சிவமாம் பெருவெள்ளத்தில் கரைந்தவராய்க் காண்பதற்கரிய அத்திருக்கோல வடிவத்தினை 11 திருப்பாடல்களில் பதிவு செய்து போற்றுகின்றார்,

(திருப்பூவணம் - அப்பர் தேவாரம் - திருப்பாடல் 1)
வடியேறு திரிசூலம் தோன்றும் தோன்றும்
    வளர்சடைமேல் இளமதியம் தோன்றும் தோன்றும்
கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றும் 
    காதில்வெண் குழைதோடு கலந்து தோன்றும்
இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும்
    எழில்திகழும் திருமுடியும் இலங்கித் தோன்றும்
பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும்
    பொழில்திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே!!

No comments:

Post a Comment