சுந்தரர் (சோமாசிமாற நாயனாருடன் தோழமை பேணுதல்):

சோமாசிமாற நாயனாரின் வரலாற்றினை 5 திருப்பாடல்களில் பதிவு செய்து போற்றுகின்றார் தெய்வச் சேக்கிழார். 'அம்பர்' எனும் பதியில் தோன்றிய அருளாளரான இப்பெருமகனார் சிவனடியார்களிடத்து அதீத பக்தியும் ஈடுபாடும் கொண்டிருந்தார். அடியவர்களின் திருவடிகளைப் பணிந்து அவர்கட்குத் திருவமுது செய்வித்து மகிழ்வார். ஆதிப் பரம்பொருளான சிவபெருமானைப் போற்றும் சிவவேள்வியினை நியமம் தவறாது புரிந்து வரும் பெற்றியினால், 'முக்கண் முதல்வரின் திருவடிகளைப் போற்றுதலே உய்வு பெறுதற்குரிய வழி' என்றுணர்ந்து அந்நெறியில் நின்றொழுகுகின்றார். 

'எத்தன்மையராயினும், சமயச் சான்றோர் அறிவுறுத்தியுள்ள சைவ ஒழுக்கத்தினில் நிற்போரே தனை ஆள்பவர்' எனும் சீரிய கருத்தினைக் கொண்டிருந்தார். இவற்றுடன், நியமம் தவறாது சிவமூர்த்தியின் திருநாமமான திருப்பஞ்சாட்சர மந்திரத்தையும் காதலுடன் ஓதி வருகின்றார். 
இந்நிலையில் திருவாரூரில், வன்தொண்டரான சுந்தரரை வணங்கப் பெற்று, ஆளுடைய நம்பிகளுடன் அன்பால் சாரும் தோழமையும் சிறக்கப் பெறுகின்றார். சுந்தரனார் பாலுள்ள அதீத பக்தியினால் திருவாரூர் தலத்தையே தம்முடைய வசிப்பிடமாக மாற்றிக் கொண்டு, தம்பிரான் தோழரின் பிறவிப் பிணி போக்கும் திருவடிகளையே பற்றுக் கோடெனக் கொள்ளத் துவங்குகின்றார். 

(சோமாசி மாற நாயனார் புராணம் - திருப்பாடல் 4)
சீரும் திருவும் பொலியும் திருவாரூர் எய்தி
ஆரம் திகழ்மார்பின் அணுக்க வன்தொண்டர்க்கு அன்பால்
சாரும் பெருநண்பு சிறப்ப அடைந்து தங்கிப்
பாரும் விசும்பும் பணியும் பதம் பற்றியுள்ளார்.

ஐம்புலன்களை வென்று, காமம் முதலிய அறுவகை குற்றங்களையும் களைந்தொழிந்து நன்னெறி சேர்தற்குரிய உத்தம மார்க்கம் 'சுந்தர மூர்த்தி நாயனாரின் திருவடிகளைத் தொழுவதொன்றே' என்று தெளிந்து அந்நெறியில் நின்றொழுகுகின்றார். பெறற்கரிய அப்பேற்றினால், என்றுமே அழிவிலாத திருக்கயிலைப் பதம் பெற்று இன்புறுகின்றார். 

(சோமாசிமாற நாயனார் புராணம் - திருப்பாடல் 5)
துன்றும் புலன் ஐந்துடன்ஆறு தொகுத்த குற்றம்
வென்றிங்கிது நன்னெறி சேரும் விளக்கமென்றே
வன்தொண்டர் பாதம் தொழுதான சிறப்பு வாய்ப்ப
என்றும் நிலவும் சிவலோகத்தில் இன்பமுற்றார்

(குறிப்பு: ஒரு செவிவழிச் செய்தியும் உண்டு, சோமாசி மாற நாயனார் சுந்தரனாருக்கு அனுதினமும் தூதுவளைக் கீரை கொடுத்து வந்ததாகவும், அதன் மூலம் வன்தொண்டரின் தோழமையைப் பெற்றதாகவும் செய்தியொன்று உலவி வருகின்றது. எனினும் பெரிய புராணத்திலோ, 19ஆம் நூற்றாண்டில் திரு.மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களால் இயற்றப் பெற்றுள்ள 'திருஅம்பர் புராணம்' எனும் தல புராணத்திலோ இது தொடர்பாக யாதொரு குறிப்புமில்லை).

No comments:

Post a Comment