சுந்தரர் (திருவாரூரில் குவிந்த நெல்மலைகள்)

சுந்தரனார் திருவமுது செய்தற் பொருட்டு, செந்நெல்; பருப்பு வகைகள்; சர்க்கரை முதலிய பல்வேறு வளங்களை பன்னெடு நாட்களாய்ப் பரவையாரின் திருமாளிகைக்கு அனுப்புவித்து வரும் குண்டையூர் கிழார் என்பாரின்  திருத்தொண்டு மழையின்மையால் தடையுறுகின்றது. பெரிதும் வருந்திப் பரிதவிக்கும் கிழாரின் கனவினில் தோன்றும் சிவபெருமான் 'சுந்தரனின் பொருட்டு உனக்கு நெல் தந்தோம்' என்றருள, சிவமூர்த்தியின் ஏவலால் குபேரன் குண்டையூர் முழுவதும் நெல்மலைகளைக் குவிக்கின்றார்.  

சிவபெருமான் அறிவிக்க இதனையறியும் சுந்தரரும் குண்டையூர் சென்றடைந்து, நெல்மலைகளைக் கண்ணுற்று வியக்கின்றார். அருகிலுள்ள கோளிலி ஆலயம் சென்று, 'அந்நெற்குன்றுகளைத் திருவாரூரில் சேர்ப்பிக்க ஆணையிடுமாறு' வேண்டிப் பாடுகின்றார், 
நீள நினைந்தடியேன் உனை நித்தலும் கைதொழுவேன்
வாளன கண்மடவாள் அவள்வாடி வருந்தாமே
கோளிலி எம்பெருமான் குண்டையூர்ச்சில நெல்லுப் பெற்றேன்
ஆளிலை எம்பெருமான் அவைஅட்டித் தரப்பணியே.
பிறைமதிப் பரம்பொருளின் திருவருளால், சிவபூத கணங்கள் அன்றிரவே அந்நெல் மலைகளைத் திருவாரூர் முழுவதும் நிறையுமாறு குவித்துச் செல்கின்றன. திருவருட் திறத்தினை வியந்து போற்றும் பரவையார், அவரவர் இல்லத்தின் எல்லையிலுள்ள நெற்கதிர்களை அவரவர்களே கொள்ளுமாறு பறையறிவிக்கச் செய்கின்றார். பின்னர், இவ்வற்புதங்கள் யாவும் நடந்தேறக் காரணமான, தம் கணவரான சுந்தரரை வணங்கி மகிழ்கின்றார்.

No comments:

Post a Comment