சுந்தரர் (திருப்புகலூரில் செம்பொன் கட்டிகளாக மாறிய செங்கற்கள்):

சுந்தரர், ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருநாளன்று பரவையார் புரிந்து வரும் திருத்தொண்டிற்குப் பொன் வேண்டிப் பெறும் கருத்துடன் திருப்புகலூருக்குச் செல்கின்றார். 

ஆலயத்துள் புகலூர் இறைவரைத் தரிசித்துத் தம்முடைய உள்ளக் குறிப்பையும் விண்ணப்பித்துப் பணிகின்றார்.  பின் கருவறையினின்றும் வெளிப்பட்டு ஆலயத்தின் முற்பகுதியினை அடைகின்றார். திருவருட் செயலால் களைப்பு தோன்ற, சிறிது ஓய்வு கொள்ள முனைகின்றார். திருப்பணிக்கென ஆலயத்தில் அடுக்கி வைக்கப் பட்டிருந்த செங்கற்கள் சிலவற்றை எடுத்து அதன் மீது மேலாடையை விரித்துத் துயில் கொள்கின்றார். 

துயில் நீங்கியெழுகையில், அச்செங்கற்கள் யாவும் செம்பொன் கட்டிகளாகத் திகழ்வதைக் கண்ணுற்றுத் திருவருள் திறத்தினை வியந்து போற்றித் திருப்பதிகம் பாடுகின்றார்,  
தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும் சார்கினும் தொண்டர் தருகிலாப்
பொய்மையாளரைப் பாடாதே எந்தை புகலூர் பாடுமின் புலவீர்காள்
இம்மையே தரும் சோறும் கூறையும் ஏத்தலாம் இடர் கெடலுமாம்
அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.

No comments:

Post a Comment