சுந்தரர் (ஒற்றியூர் திருக்கோயிலில் ஒரு காதல் திருக்காட்சி):

சுந்தரர் ஒற்றியூர் திருக்கோயிலில் படம்பக்கப் பெருமானைத் தொழுத பின்னர் ஆலய வளாகத்தில் ஆங்காங்கே பல்வேறு திருப்பணிகள் புரிந்திருப்போரை வணங்கியவாறு மலர் மண்டபத்தினை அடைகின்றார். அங்குத் திருமாலைகள் தொடுத்துக் கொண்டிருக்கும் அடியவர்களைத் தொழுது செல்லுகையில், பண்டைய விதிப்பயன் கூட்டுவிக்க, திரையைக் விலக்கி, முக்கண் முதல்வருக்கு அதுவரை தொடுத்திருந்த திருமாலைகளைக் கொடுத்துப் பின் மின்னலென மறையும் சங்கிலியாரைக் கண்டு அக்கணமே காதல் கொள்கின்றார்.  

'மலர்களோடு என் இன்னுயிரையும் சேர்த்துப் பிணைக்கும் இவளை இறைவரிடமே வேண்டிப் பெறுவேன்' என்று மீண்டுமொரு முறை திருச்சன்னிதியுள் சென்று, 'இடபாகத்தில் உமையன்னையோடு மகிழ்ந்துறையும் நிலையிலும், கங்கையெனும் மற்றொரு நங்கையை திருமுடியில் வைத்துள்ள காதலுடையீர், முழுமதி போலும் சங்கிலியைத் தந்து அடியவனின் வருத்தத்தை மாற்றி அருள்வீர்' என்று நயம்பட விண்ணப்பித்துப் பணிகின்றார்.  

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 232):
மங்கைஒருபால் மகிழந்ததுவும் அன்றி மணிநீள் முடியின்கண்
கங்கை தன்னைக் கரந்தருளும் காதலுடையீர் அடியேனுக்கு 
இங்கு நுமக்குத் திருமாலை தொடுத்தென் உள்ளத் தொடைஅவிழ்த்த
திங்கள் வதனச் சங்கிலியைத் தந்தென் வருத்தம் தீருமென

No comments:

Post a Comment