சுந்தரர் (சீர்காழி எல்லையில் கயிலைத் திருக்கோலக் காட்சி):

சுந்தரர், திருவாரூர் செல்லும் வழியில் சீர்காழி தலத்தின் எல்லையை அடைகின்றார். திருஞானசம்பந்தர் பேரருள் பெற்றுள்ள புண்ணியப் பதி ஆதலின் அதனுள் பாதம் பதிக்கவும் அஞ்சி, எல்லையை வணங்கியவாறு வலமாகச் செல்லுகையில், அம்பிகை பாகத்து அண்ணலான திருத்தோணிபுர இறைவர் எதிர்க்காட்சி தந்தருள் புரிகின்றார், 

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 258):
பிள்ளையார் திருவவதாரம்செய்த பெரும்புகலி
உள்ளுநான் மிதியேன் என்றூர்எல்லைப் புறம்வணங்கி
வள்ளலார் வலமாக வரும்பொழுதின் மங்கையிடம் 
கொள்ளு மால்விடையானும் எதிர்காட்சி கொடுத்தருள

அகம் குளிர்ந்து, பெருகும் காதலுடன், கண்ணருவி பாய, உச்சி கூப்பிய கையினராய் உமையொரு பாகனாரைப் பணிந்து, 'திருத்தோணிபுரப் பெருமானைத் திருக்கயிலையில் எழுந்தருளியிருக்கும் திருக்கோலத்தில் இவ்விடத்தே கண்டு கொண்டேன்' என்று தீந்தமிழ்ப் பனுவலால் போற்றிப் பரவுகின்றார், 

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 259):
மண்டிய பேரன்பினால் வன்தொண்டர் நின்றிறைஞ்சித்
தெண்திரைவேலையில் மிதந்த திருத்தோணிபுரத்தாரைக்
கண்டுகொண்டேன் கயிலையினில் வீற்றிருந்த படியென்று
பண்டரும் இன்னிசைபயின்ற  திருப்பதிகம் பாடினார்

(சுந்தரர் தேவாரம் - திருக்கழுமலம் - திருப்பாடல் 1)
சாதலும் பிறத்தலும் தவிர்த்தெனை வகுத்துத்
தன்னருள் தந்த எம்தலைவனை, மலையின்
மாதினை மதித்தங்கோர் பால்கொண்ட மணியை,
வருபுனல் சடையிடை வைத்த எம்மானை,
ஏதிலென் மனத்துக்கோர் இரும்புண்ட நீரை,
எண்வகை ஒருவனை, எங்கள் பிரானை,
காதில் வெண்குழையனைக் கடல்கொள மிதந்த
கழுமல வளநகர்க் கண்டு கொண்டேனே!!

No comments:

Post a Comment