ஆலகால விடத்தைக் கையிலெடுத்துக் கொணர்ந்த ஆலால சுந்தரர் (கந்தபுராணம் விவரிக்கும் அற்புத நிகழ்வு):

'நம் சுந்தரனார், பாற்கடல் கடையும் நிகழ்வு சமயத்தில் வெளிப்பட்டெழுந்த ஆலகால விடத்தை, சிவபெருமானின் ஆணையினால், தம்முடைய கரங்களில் ஏந்திக் கொணர்ந்து சிவமூர்த்தியிடம் அளித்ததாக' பல்வேறு ஆன்மீக விரிவுரைகளிலும், வலைத்தளங்களிலும், முகநூல் பதிவுகளிலும் கேட்டும் படித்துமிருப்போம். 

எனினும் பெரியபுராணமோ சுந்தரரின் வரலாற்றினை, 'ஆலால சுந்தரர் திருக்கயிலையில் சிவபெருமானுக்கு அணுக்கத் தொண்டு புரிந்து வருகின்றார்' எனும் இடத்திலிருந்தே விவரிக்கத் துவங்குகின்றது. எனில், 'மேற்குறித்துள்ள நிகழ்விற்கு அகச்சான்றுகள் தான் என்ன?' என்று பெரிதும் ஏங்கித் தவித்திருப்போருக்குத் தம்முடைய தேனினும் இனிய கந்தபுராணத் திருப்பாடல்கள் வாயிலாக நம் கச்சியப்ப சிவாச்சாரியார் விடை பகர்கின்றார், 

கீழ்க்குறித்துள்ள திருப்பாடலின் இறுதி இரு வரிகளில் சிவபரம்பொருள் தம்மருகே நின்றிருக்கும் அணுக்கத் தொண்டரான நம் சுந்தரரைப் பார்த்து, 'அக்கொடிய விடத்தை இவ்விடத்தே கொண்டு வருக' என்று பணித்து அருள் புரிகின்றார், 
-
(தக்ஷ காண்டம்: ததீசி உத்தரப் படலம் - திருப்பாடல் 353)
வண்டமர் குழலெம் அன்னை மற்றிவை இசைத்தலோடும்
அண்டரு மகிழ்ச்சி எய்தி ஆதியம் கடவுள் தன்பால்
தொண்டு செய்தொழுகுகின்ற சுந்தரன் தன்னை நோக்கிக்
கொண்டிவண் வருதியால் அக்கொடுவிடம் தன்னை என்றான்

நம் சுந்தரனார், முப்பத்து முக்கோடி தேவர்களையும் தகித்துப் பதற வைத்த, இன்னதென்று கூற இயலாத தன்மையில் விண்ணுக்கும் மண்ணுக்குமாய்ப் பெருகியிருந்த அக்கொடிய ஆலகால விடத்தைத் திருவருளின் துணை கொண்டு, தம்முடைய கரங்களில் சிறு நாவல்பழம் போலும் திரட்டிக் கொணர்ந்து சிவபெருமானிடம் அளித்துப் பணிகின்றார்,  
-
(தக்ஷ காண்டம்: ததீசி உத்தரப் படலம் - திருப்பாடல் 354)
என்றலும் இனிதே என்னா இறைஞ்சினன் ஏகி யாண்டும் 
துன்றிய விடத்தைப் பற்றிச் சுந்தரன் கொடு வந்துய்ப்ப
ஒன்றொரு திவலையே போல் ஒடுங்குற மலர்க்கை வாங்கி
நின்றிடும் அமரர் தம்மை நோக்கியே நிமலன் சொல்வான்
*
ஆலகால விடத்தை ஏந்திக் கொணர்ந்த காரணத்தால் அதுமுதல் 'ஆலால சுந்தரர்' எனும் திருநாமத்தாலும் நம் சுந்தரனார் குறிக்கப் பெற்று வருகின்றார் (வாழி திருநாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி)!!!

No comments:

Post a Comment